Pages

Tuesday, April 27, 2010

வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?..


இது எனது 150 வது இடுகை. வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன். உங்கள் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடையாய் இந்த பதிவு. நம் மனைவி, மக்கள், பெற்றோர் சொந்தபந்தங்களை விட்டு அந்நிய மண்ணில் வாழும் பிரஜைகள் நாம். உள்ளமோ குடும்பத்தை நினைத்து வாட உதடுகளோ சிரிக்கும் ஒரு ஜீவன் நாம்.

என்ன செய்வது?.. எல்லாம் நம் பெரியகைகள் செய்த கொடையினால் நாம் எல்லோரும் இப்போது வெளிநாட்டில் அடுத்தவனுக்கு அடிமையாக. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்.. என்ற பாட்டு கேட்க மட்டுமே உதவும். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது. வெளிநாட்டுக்கு விமானம் ஏறும்போதே நம் ஆசை, விருப்புவெறுப்பு, சுதந்திர கனவெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுதான் ஏறவேண்டும். இங்கே ( அந்தந்த நாட்டு ) வந்தபின் இந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும். மீறும் போது கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகும் சூழ்நிலை.

இதே நம்நாடு என்றால் வெளிநாட்டு பயணிகளுக்கு நாம் தரும்மரியாதையே தனிதான். வெளிநாட்டுகாரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கிடைக்கும். ஆனால் இங்கே அப்படியே நிலைமை தலைகீழ். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தன்நாட்டுக்காரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கொடுப்பார்கள். அவங்க நாட்டு குடிமகனுக்கு ஒருசட்டம்; வெளிநாட்டுக்காரனுக்கு ஒரு சட்டம்.

அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு. அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது.. இப்படி எண்ணற்ற துன்பங்கள் கொடுக்கின்றனர். இப்படிதான் எங்க ஏரியாவில் சிலநாட்களுக்கு முன்னால், சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை இரும்புகம்பியை கொண்டு தலையிலும் முதுகிலும் பலமாக தாக்கி சென்றுள்ளனர். அவர் இப்போது ஆஸ்பத்திரியில். இந்தியாவுக்கு சென்று மருத்துவம் பார்க்கப்போகிறார். ஏன் தடுக்ககூடாதா என்று நீங்கள் கேட்கலாம்?. தாக்குபவர்கள் காரில் வந்துகொண்டிருக்கும்போதே தாக்கிவிட்டு வேகமாக சென்றுவிடுவார்கள்.

அப்படியே அவர்களை பிடித்தாலும் இந்த நாட்டுக்காரர்கள் கண்டும்காணாததுபோல இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதுபோல இதே நாம் அவர்களை தாக்கினால் நிலைமையே வேற.. அவ்வளவுதான் எப்படிடா எங்கஆளை நீ அடிக்கலாம்.. உனக்கென்ன உரிமை இருக்கு?.. வா போலீஸுக்கு.. உனக்கு சவுக்கடி தண்டனை வாங்கித்தராமல் விடமாட்டேன்., என்று கர்ஜிக்கும் சிங்கங்களுக்கு மத்தியில் நாம். என்ன செய்ய அமைதியாக இருக்கவேண்டிய நிலை.

இது மட்டுமல்ல.. இவங்க கார் ஓட்டுற ஸ்டைலே தனிதான். இங்க சின்ன பையன்கூட அழகாக திறமையா ஓட்டுவான். இருந்தும் என்ன பயன்?.. நம்மள ரோட்டை கடக்கவிடமாட்டாங்க.. ரொம்ப வேகமா ஓட்டுவாங்க.. சிட்டிக்குள்ளே 120 கி.மீ/ஹ ஸ்பீடுல வருவாங்கன்னா பாத்துக்கோங்க.. இதனால் நிறைய ஆக்ஸிடன்டுகள் நடக்கும். ஆனா இவங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. இவங்களுக்காக வேண்டியே காரை தரமா தயாரித்திருப்பார்கள்.

இப்படித்தான் போனவருஷம் நானும், அக்பரும், அக்பரின்தம்பியும் பர்சேசிங் பண்ணபோயிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன்; வீதியெங்கும் நல்ல ஜனநெருக்கடி, சரியான கூட்டம். சாலையில் வரிசையாக கார்கள் வந்துகொண்டிருந்தன. நாங்கள் சாலையை கடந்து அந்தபக்கம் செல்லவேண்டும். நாங்களும் பொறுமையாக நின்று சாலையை கடப்பதற்காக காத்து நின்றோம்.

எங்களுக்கு கொஞ்சதூரத்தில் சிலர் சாலையை கடப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கடக்கும்நேரத்தில் நாமும் கடந்துவிடலாம் என்று சாலையை கடக்க எத்தனித்தோம். சாலையை கடந்து வந்துகொண்டிருக்கும்போது அதற்குள் ட்ராபிக் ஜாமாகிவிட்டது. நாங்கள் சாலையின் பாதியில் நின்றுகொண்டிருந்தோம். சரியாக மாட்டிக்கொண்டோம். பின்னாலும் வரமுடியாது. முன்னால் செல்லலாம் என்று நினைக்கும்போது ஒரு கார் வந்துகொண்டிருந்தது. காரில் உள்ள சவுதிக்கு எரிச்சலாகி என்னடா நம்மை போகவிடாதபடி கடந்து கொண்டிருக்கிறார்களே என்ற கோபம். அந்த கோபத்தில் எங்களை இடிக்கும் அளவுக்கு வந்தார்...

அக்பர், அக்ப‌ர்தம்பியைவிட நான் கொஞ்சம் பருமன். எனது மூளை சுறுசுறுப்பாகி எங்கே இடித்துவிடுவானோ என்று சிறிதும் தாமதிக்காமல் ஒரு நொடியில் திடீரென அந்த சவுதியின் காரை முந்தி அந்த பக்கம் கடகடவென ஓடி மறுபக்கம் கடந்து சென்றுவிட்டேன். அக்பரும் அக்பர்தம்பியும் இரண்டு கார்களுக்கு மத்தியில். ரொம்ப குறுகி நின்றுகொண்டிருந்தார்கள். ஒரு இம்மி அளவு அவர்கள் அசைந்தாலும் முன்னால் சென்ற கார் மோதியிருக்கும். நான் மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் சட்னிதான்.

அப்பாடி.. ஆண்டவன் கிருபையினால் அன்று தப்பி பிழைத்தோம்.


இது உலகம்பூராவும் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சூழ்நிலை.. உண்டா இல்லையா சொல்லுங்கள் நண்பர்களே?...

இது மட்டுமல்லாமல் இங்கே நிலவும் தட்பவெப்பநிலை. ஆறு மாதம் கடும்வெயில் கடும் குளிர், பாலைவன மணற்காற்று, புயல்காற்று இப்படி இயற்கை சீற்றங்களுக்கும் தலைவணங்க வேண்டிய சூழ்நிலை..


ஆனால் நாம் இங்கு இருப்பது பற்றி நம்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கும் பிம்பமே வேற... குறிப்பாக நம்ம சொந்தக்காரங்களின் நினைப்பே தனிதான். ஆஹா வெளிநாட்டில் வேலை செய்யுறான்; கைநிறைய சம்பாதிக்கிறான்; ஏயப்பா வீடெல்லாம் கட்டிட்டான்.. வசதியா இருக்கான்; அவனுக்கென்ன கவலை.., இப்படி அவர்கள் அவங்க இஷ்டத்துக்கு மனக்கோட்டை கட்டி வச்சிருப்பாங்க.. ஆனா இங்க நாம கஷ்டப்படுறது நமக்கும் நம்ம குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்.

அதுமட்டுமல்லாமல் அவங்க நம்மிடம் ஏப்பா எனக்கு வரும்போது அத வாங்கிட்டுவா இத வாங்கிட்டுவா.. எனக்கு ஒரு விசாப்பாரு நானும் அங்க வரலாம்முன்னு நினைக்கிறேன்.. என்று நம் சக்திக்குமீறி கேட்கும்போது நம்மால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாத சூழ்நிலையில் மௌனமாகதான் இருக்கவேண்டியுள்ளது.

ஒரு போன் பண்ணமுடியல.. அவங்க பிள்ளைக்கு பிறந்தநாளுன்னு வாழ்த்து சொல்ல போன் பண்ணுனது தப்பா போச்சி.. போன் பண்ணுன உடனே எப்பா எனக்கு விசா பாரேன்.. எனக்கு வரும்போது அந்த சாமான் வாங்கிட்டுவந்திரு.. நீ நல்லாருக்கியான்னு ஒரு வார்த்தை மனசுல இருந்து வரட்டுமே பாப்போம்.. நீ நல்லாரு நல்லாரு நல்லாரு... இந்த வார்த்தைய கேட்கும்போது வாழ்த்துறமாதிரி தெரியல.. வயித்தெரிச்சல்ல சொல்றமாதிரி இருக்கு.. எவ்வளவு மனசு கஷ்டமாகுன்னு ஏன் அவங்களுக்கு தெரியல.. ஏன்ப்பா இவ்வளவு நாளா போனே பண்ணல.. இப்படி நீங்களெல்லாம் சொன்னா எப்படி போன் பண்ண மனசு வரும்?... சொல்லுங்க பாப்போம் மனச தொட்டு..

வெளிநாட்டுக்கு வரணும் என்றகனவு நல்ல கனவுதான். ஆனால் நாம் சில சூழ்நிலைகளை சந்தித்தே ஆகவேண்டும்.

இந்தியாவிலேயே நல்ல வேலை நல்ல வருமானம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் இங்கே வந்து கஷ்டப்படணும். மனைவி மக்களுடன் குடும்பத்துடன் சந்தோசமாக இந்தியாவிலே வாழலாமே...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Saturday, April 24, 2010

சாமி என்ன காப்பாத்து...

நான் இன்று காலை டிவியில் ஒளிபரப்பட்ட ஒரு பழைய படத்தின் காட்சியை பார்த்ததும் ரொம்ப வருத்தமாக இருந்தது. இது கன்னட மொழி படம். அதனை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காட்டுக்குள் சுள்ளிபொறுக்க சென்ற ஒரு சிறுவனை பாம்பு கடித்து விடுகிறது.

இந்த சம்பவத்துக்கு, அந்த படத்தில் சொல்லப்பட்ட காட்சியினை இங்கே விவரிக்கிறேன்.

அதாவது ஒரு சிறுவன் தன் நண்பர்களுடன் காட்டுக்குள் சுள்ளிபொறுக்க செல்கிறான். எங்குமே சரியான விறகு குச்சிகள் கிடைக்கவில்லை. அவன் அங்கிங்கு தேடி அலைகிறான். ஒரு இடத்தில் மந்திர தந்திரத்தால் ஒரு பாம்பு புத்தை சுற்றி செடி புட்புதர் திடிரென முளைக்கிறது. அந்த இடத்துக்கு வரும் சிறுவன் மகிழ்ச்சியடைந்து பாம்புபுத்துக்கு அருகில் சென்று குச்சி ஒடிக்கிறான். அந்த நேரம்பார்த்து பாம்பு கடித்துவிடுகிறது.

உடனே அவன் அய்யோ அம்மா அப்பா என்று சத்தமிட்டு கதறுகிறான். சத்தம் கேட்டு அவன்கூட சென்றவர்கள் வந்து பார்க்கும்போது பாம்பு கடித்து வலியால் துடிப்பதை பார்க்கிறார்கள். டேய் என்னடா ஆச்சி.. என்னாச்சி என்னாச்சி.. சொல்லுடா என்று கேட்கிறார்கள். வலியால் அவனால் பேசமுடியாததால் அவன் கையை காட்டுகிறான். கை காட்டும் திசையில் ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது. இவர்கள் அந்த காட்சியை கண்டு உடனே அந்த பையனை அதே இடத்தில் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

தன் மகனை காணாது இவர்கள் மட்டும் வருவதை கண்ட அந்த பையனின் தாய் கேட்கிறார் " எங்கடா என் பையனை" . சிறிது நேர மௌனத்துக்கு பின்னர் அவர்களில் ஒருவன் உங்க பையனை பாம்பு கடித்துவிட்டது. என்று சொல்கிறான். பாம்பு கடிபட்ட அந்த பையனின் அம்மா ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறார். உடனே அவன் தாய் அந்த பணக்கார எஜமானி அம்மாவிடம் என் பையனை பாம்பு கடித்துவிட்டது. நான் போக வேண்டும் என்று கேட்கிறார். கொடுமைக்கார எஜமானி அதெல்லாம் முடியாது.. நீ போகக்கூடாது.. இங்குள்ள வேலையெல்லாம் யார் செய்வா.. முடியவேமுடியாது என்று கர்ஜிக்கிறாள். இந்தம்மா கெஞ்சுகிறார். இதனை பார்த்த எஜமானியின் கணவன் பாவம் அவங்க போகட்டும் என்று சொல்கிறார். அதெல்லாம் முடியாது என்று மறுக்கிறாள் எஜமானி. அவர் வலுக்கட்டாயமாக பாம்பு கடித்த பையனின் அம்மாவை அனுப்பிவிடுகிறார்.

பாம்பு கடித்த இடத்துக்குவரும் தாய் மகனை பார்த்து அய்யோ என் மகனே என்னடா ஆச்சி.. என்று கேட்கிறார். உடனே அந்த பையன் அம்மா என்னை பாம்பு கடித்து விட்டது என்று பேசமுடியாமல் மெதுவாக சொல்கிறான். அய்யோ என்ன செய்வேன் என் ஒரே மகனை பாம்பு கடித்துவிட்டதே இனி நான் என்ன செய்வேன். என்று அழுது அரற்றுகிறாள். இதற்குள் அந்த பையனின் வாயிலிருந்து நுரைதள்ளி மெல்ல மெல்ல அந்த பையன் இறந்துபோகிறான்.

விதியினால் அந்த பையன் பாம்பு கடித்து இறந்து போய்விட்டானாம். பின்னர் அந்த தாய் அழுதுபுலம்பி சாமியிடம் மன்றாடி பாட்டுப்பாடி அழுதுஅழுது மயங்கி விழுகிறாள். உடனே சாமியிடமிருந்து அருள் பெற்று அந்த பையன் மீண்டும் உயிர்த்தெழும்புகிறான்.

இதுதான் அந்த படத்தில் சொல்லப்பட்ட ஒரு காட்சி.

இந்த படக்காட்சியில் எத்தனை எத்தனை லாஜிக்மீறல்கள். எவ்வளவு மூடநம்பிக்கைகள்.

பாம்பு கடிபட்ட அந்த பையன்மேல் எந்தவிதமான குறையே இல்லை. முதலில் பாம்புபுத்தை சுற்றி ஒரே நிமிடத்தில் புதர் வளர்வது என்பது சாத்தியமானதா சொல்லுங்கள். ஒரு நிமிசத்தில் புதர் வளர்வது அதிசயத்திலும் அதிசயம். எந்த உலகத்தில் நடக்கும்?. பையன் அறியாவயசு அவன் ஆர்வத்தில் பாம்புபுத்துக்கு அருகில் சென்று குச்சி ஒடிக்கும்போது பாம்பு கடித்துவிடுகிறது.

அடுத்தது அவன்கூட வந்தசிறுவர்கள் பாம்பு கடிபட்டவனை எந்த முதலுதவியும் செய்யாமல் சென்றுவிடுகிறார்கள். ஏன் அந்த பையனுக்கு மருந்து மூலீகைகளை பறித்து கட்டு போட்டு விஷம் தலைக்கு ஏறாமல் இருக்குமாறு செய்யலாம். அல்லது ஈரத்துணியை நன்றாக இறுக்கி காலில் கட்டு போட்டு விடலாம். அல்லது இவர்களுக்கு இதெல்லாம் தெரியலைன்னா ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்துவந்து காப்பாத்தி இருக்கலாம். அவர்கள் அந்த பையனின் அம்மாவிடம் போய் சொல்லுகிறார்கள் எந்தவிதமான பதட்டமோ அக்கறையோ இல்லாமல்..

அடுத்தது, இதனை கேட்ட பையனின் அம்மா பதறித்துடிக்காமல் உடனே மகனை பார்க்க செல்லாமல் அவளது எஜமானியிடம் போய் அனுமதி கேட்கிறாள். இதில் என்ன வருத்தம் என்றால் எந்ததாயாவது பிள்ளைக்கு பாம்பு கடித்துவிட்டது என்றால் எஜமானியிடம் போய் அனுமதி கேட்பாளா... சொல்லுங்கள். தன்குழந்தைக்கு எதாவது ஒன்று சிறுதலைவலியோ காய்ச்சலோ என்றால் உடனே மருத்துவரை பார்க்க ஓடுவார்கள். இதுதான் தாய் பிள்ளையின் மேல் வைத்திருக்கும் பாசம். யாரும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டார்கள். இதற்கெல்லாம் அனுமதி கேட்டுதான் போகவேண்டுமா?...


அடுத்தது, அந்த எஜமானி அம்மாவோ ரொம்ப ஈனஇரக்கம் மனிதாபிமானம் இல்லாமல் அனுமதி கொடுக்க மறுக்கிறாளே.. இதே அவள் பிள்ளைக்கு என்றால் சும்மா இருப்பாளா.. என்னதான் கொடுமைக்காரி என்றாலும் அவளும் ஒருதாய்தானே ஏன் மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது?...

அடுத்தது, பாம்புகடிபட்ட சிறுவனை பார்க்க அவன் தாய் செல்கிறாள். ஏன் வைத்தியரிடம் விஷயத்தை சொல்லி அழைத்து அல்லவா சென்றிருக்கவேண்டும்...

அடுத்தது, சிறுவன் உயிர்பிரியும் தருணத்தில் வாயில்நுரையாக வருகிறது. அப்போது அவன் தாய் அவனை மடியில் இட்டு வசன‌ங்களா பேசித் தள்ளுகிறாள். ஒரு தடவைகூட ஞாபகமில்லையா பையனை காப்பாற்றவேண்டுமென்று?.. அவள் அப்போதும் எந்த முதலுதவியோ மருத்துவத்தை அணுகவோ தெரியலியா.. எந்ததாயாவது இப்படி வசன‌ங்கள் பேசுவாளா.. சாகிறது விதின்னா அதை மாற்றமுடியாதுதான். அதற்கு முன்னால் நம்மால் முடிந்த அளவுக்கு விதியின் தடுக்கலாமே.. சாவிலிருந்து காப்பாற்றி இருக்கலாமே..

கடவுள் அருள் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம். துன்பத்திலிருந்து நம்மை இறைவன் காப்பாற்றுவார். ஆனால் மூட நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் இறைவன் எப்போதும் விரும்புவதில்லை. ஒரு உயிர் 15 நிமிடத்துக்கும் மேல் போராடிக்கொண்டிருக்கிறது. ஒரு 5 நிமிடத்தில் அந்த பையனை காப்பாற்றி இருக்கலாமே அவன் பிழைத்து இருப்பானே.. யாருக்குமே தோன்றவில்லையே என்பதுதான் எனது கருத்து. அப்போதும் எக்கேடுகெட்டு போனா என்ன?.. கடவுள் அருள் அவனுக்கு கிடைக்கும்; அவன் பிழைப்பான் என்று மூட நம்பிக்கையுடன் இருந்தால் எப்படி பிழைக்கமுடியும். நம்மால் ஆன முயற்சிகளை மேற்க்கொண்டு இறைவனிடம் வேண்டினால் இறைவன் நம் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பான்.

எந்தமுயற்சியுமே இல்லாமல் கடவுளே காப்பாத்து காப்பாத்து.. என்று முட்டிமுட்டி அழுதால் எப்படி நடக்கும்?

இதேமாதிரி எத்தனை படங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அத்தனையும் மூடநம்பிக்கைகளை போதிப்பதாக உள்ளது. இந்தமாதிரி படங்கள் மக்களை மூடனாக ஆக்குவது வருந்ததக்கது.

எனவே மூடநம்பிக்கைகளை விட்டுடொழியுங்கள். கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். அவர் நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவார்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, April 20, 2010

செல்லாத நிமிடங்கள்...


நல்லா யோசனை
செய்தேன் நீ அம்மா
வீட்டுக்கு போவதற்கு
பெண்ணே உனக்கு
சந்தோசமென்றால்
எனக்கும் ஓகே
என் யோசனை
நேரம் ஒரே நிமிடம்


அழைத்தேன் உன்னை
எங்கம்மா வீட்டுக்கு
எனக்கு சந்தோசம்
ஏற்பட; ஆனால்
உன் யோசனை
நேரமோ பல நிமிடங்கள்

யோசிக்க யோசிக்க
நிறைய வழிகள்
தோன்றலாம் உனக்கு
ஆனால் எனக்கோ
உன் யோசனை
நல்லதாக வேண்டுகிறேன்
குழப்பம் ஏற்படாமல்..


மேலே நான் உயர
உன் விருப்பம்
வாய்ப்புகளை தேடி நான்..
விருட்சமாய் நீ தந்த
நம்பிக்கையுடன் நான்..

நேரம் காலம் பார்க்காமல்
எல்லாம் உன் நினைவுகள்
நேரத்தோடு நான்
செய்ய நினைக்கும்
வேலைகளை மறந்து...

கவி எழுதினேன்
உன் நினைவுகளோடு
வித்யாசம் எதுவும்
தெரியல எனக்கு..
விழிகள் மூடிய
இரவினில்..


வருவாய் என நீயும்
காத்திருப்பது எனக்காக‌
உன்னை நோகடிக்காமல்
சாக்குபோக்கு சொல்ல
மனம் நாடவில்லை
காலநேரம் கூடி
வருதா என‌
கடிகாரத்தை
நோக்குகிறேன் தினமும்..


,


Post Comment

Saturday, April 17, 2010

கரகர மொறுமொறு - 17/4/2010

நாய் துரத்தலும் கிரிக்கெட்டும்


நாங்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலையில் பாகிஸ்தான் டீமுடன் மேட்ச் போடுவது வழக்கம்.. அப்படித்தான் நேற்று காலையில் நானும், அக்பரும், அக்பர் தம்பி, உறவினர், கேரளா நண்பர்களும் உபி நண்பரும் விளையாடுவதற்கு பாகிஸ்தான் நண்பர்களின் இருப்பிடம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம். எல்லோரும் முன்னாடி சென்று கொண்டிருந்தார்கள்.

நான் வீட்டில் இருந்து போன்வந்ததால் பேசிக்கொண்டும் மிஸ்டுகால்கள் கொடுத்துக்கொண்டும் சென்றுகொண்டிருந்தேன். நண்பர்கள் அனைவரும் முன்னால் ஒரு 20மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தனர். நான் பின்னால் வந்து கொண்டிருந்தேன். இங்கே சவூதியில் நாய்கள் மிக குறைவு. நாயை பார்ப்பது அபூர்வம். நாங்கள் செல்லும்வழியில் நாய் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நம்ம ஆட்கள்தான் நாயைக் கண்டால் கல்லெடுத்து அடிக்கணும் என்பது எழுதப்படாத விதியா என்று தெரியலை.

நாயை பார்த்ததும் முன்னால் போய்க்கொண்டிருந்த கேரளா நண்பன் ஒருவன் கல்லைக் கொண்டு நாயின்மேல் எறிந்தான். அது விருட்டென திரும்பி பார்த்தது. நான் அதன்அருகில் கொஞ்சதூரத்தில் சென்று கொண்டிருந்ததால் நாந்தான் அதன்மேல் எறிந்துவிட்டேனென என்னை பார்த்து குரைத்துக்கொண்டே என்னை நோக்கி வந்தது. நான் இதைக்கண்டு ஓட ஆரம்பித்தேன். நாய் என்னை துரத்தியதால் வேகமாக ஓடினேன்.

நான் ஓடுவதைபார்த்த பக்கத்துல இருந்த சவுதி நாயை விரட்டி திசை திருப்பினார். அப்பாடி என்று சவுதிக்கு நன்றி சொன்னேன்.

நாங்கள் டாஸ் வென்று பாகிஸ்தானிகளை முதலில் பேட் செய்ய சொன்னோம். முதலில் பந்துவீசிய உபி நண்பர் கட்டுகோப்பாக பந்துவீசினார். பின்னர் அக்பரின்தம்பியும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அவர்களின் ரன்விகிதம் மெதுவாகவே உயர்ந்தது. 15 ஓவருக்கு பாகிஸ்தானிகள் 100 ரன்கள் எடுத்தனர்.

நான் ஒருஓவர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 2 ரன்கொடுத்து 1 விக்கெட் சாய்த்தேன். அக்பரின் தம்பி 3 விக்கெட் சாய்த்தார். உபி நண்பர் 2 விக்கெட் சாய்த்தார். கேரளா நண்பர் 2 விக்கெட் சாய்த்தார். கட்டுக்கோப்பாக பந்துவீசிய அக்பருக்கு இந்தமுறை விக்கெட் கிடைக்கவில்லை.

பின்னர் களம் இறங்கிய நாங்கள் தொடக்கம்முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தோம். முதலில் இற‌ங்கிய கேரளா நண்பர் சிறப்பாக 25 ரன் அடித்து தொடக்கம் அமைத்துகொடுத்தார். பின்னர் இறங்கிய அக்பரின் தம்பி அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார்.மேலும் ஒரு விக்கெட் விழ அக்பர் இறங்கினார். இருவரும் ரன் விகிதத்தை அதிகரித்தனர். தம்பி 24 எடுத்த நிலையில் அவுட் ஆனார். அக்பர் தொடர்ந்து ஆடி ஒரு நான்கு அடித்து ஆட்டத்தை வெற்றி பெற செய்தார். அவர் எடுத்தது 24 ரன்கள்.

பொதுவா பாகிஸ்தானிகள் நல்ல வலுவானவர்கள். அவர்களின் வேகப்பந்துவீச்சுக்கு நாங்கள் ஆரம்பத்தில் தோத்ததுண்டு. அவர்களிடம் தொடர்ந்து விளையாடி நல்ல அனுபவங்களை பெற்றதால்‌‌ இப்போதெல்லாம் நாங்கள் ஒன்று ஜெயித்தால் அவர்கள் ஒன்று ஜெயிப்பார்கள்.

*******************************

இதோ வந்திட்டேன் உங்கள் ஸ்டார்ஜன்.

நான் வலைச்சரத்தில் எழுதிக்கொண்டிருக்கும் இந்தவாரத்தில் கதையின் மூலம் பதிவர்களை அறிமுகப்படுத்துவதற்கு அமோகஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் உங்கள் எல்லோருடைய பதிவையும் என்னால் படிக்கமுடியவில்லை. ஆயினும் எனக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு தொடர்ந்து ஆதரவைத் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

‌********************************

பதிவர் சந்திப்பு

நேற்று நண்பர் சரவணக்குமார் ஊரிலிருந்து வந்தபின் இங்கே எங்களை சந்திப்பதற்கு வந்திருந்தார். மேலும் விவரங்களுக்கு அக்பரின் பதிவை படிங்க. நாங்கள் மூவரும் கலந்துரையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

********************************

கேள்விக்கு என் பதில் 6

கேள்வி 6:

சினிமா/சீரியல்கள் பெண்களுக்கு முன்னேற்றம் அமைத்துக் கொடுக்கிறதா இல்லை இழிவுபடுத்துகிறதா...


இந்த கேள்வி பெண்கள் சிந்திக்கவேண்டிய கேள்வி. இந்த கேள்விக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

சினிமா/சீரியல்களில் பெண்களை இழிவுபடுத்தாத காட்சிகளே இல்லை எனலாம். அந்தகாலத்திலிருந்து இந்தகாலம்வரை பெண்களை மையப்படுத்தாத திரைப்படங்களே இல்லையெனலாம். அந்தகாலத்திலிருந்து சினிமாக்களில் கவர்ச்சிபொருளாகவும் மோகப்பொருளாகவும் வியாபாரநோக்கோடும் பெண்கள் இன்றுவரை ஆக்கப்பட்டிருக்கின்றனர். அப்போது கவர்ச்சி ஆட்ட நடிகைகள் மூலம் கவர்ச்சி பாடல்கள் வைத்து தங்கள் படங்களை காண்பித்து பணம் சம்பாதித்தனர். ஆனால் அந்த வேலையை இன்றைய கதாநாயகிகளை செய்யவைத்து பணம் ஈட்டுகின்றனர்.

மாமியார் மருமகள் சண்டை பிரதானமாக உள்ள சினிமாக்கள் மக்கள் ஆர்வமுடன் ரசித்துபார்த்தனர். கணவன் கொடுமை, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை இப்படி நிறைய கொடுமைகளை கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் உலாவரத் தொடங்கின. இதனை பார்த்து எத்தனை எத்தனை குடும்பங்களில் குழப்பம் உண்டாயின எனபதை படம் எடுத்தவர்கள் என்னைக்காவது நினைத்து பார்த்ததுண்டா?..

இந்தமாதிரி படங்களை மக்கள் சினிமாவா நினைக்காமல் தங்கள் வாழ்க்கையோடு சம்பந்தபடுத்தி நிஜத்திலும் அப்படித்தான் இருக்கவேண்டும்போல மாயபிம்பம் உருவாகத்தொடங்கியது. இந்த படங்களின் ஹீரோ அவர் படங்களில் காட்டப்படும் குடும்பங்களில் உள்ள பிரச்ச்னையை தீர்த்து வைப்பாராம். உடனே படத்துல உள்ள குடும்பம் திருந்தி நல்வாழ்வை வாழ தொடங்கினர் என்பதை படத்தின் இறுதியில் காட்டுவார்கள். உண்மையில் இப்படியெல்லாம் ஒரு குடும்பத்திலும் நடக்கவே நடக்காது. மக்கள் இந்த படங்களை பார்த்து நாமும் அப்படி இருக்கவேண்டும், என்று நினைக்கத் தொடங்கினர்.

இதுதான் சீரியலின் ஆரம்பம் என்று சொல்லலாம். பின்னர் காலப்போக்கில் மக்கள் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பது குறைந்து கொண்டே வந்தது. இதனால் சீரியல் என்ற பூதம் ஒவ்வொருவோர் வீட்டிலும் கிளம்பத்தொடங்கியது. இன்று எண்ணற்ற சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கமுடியவில்லை.

எப்படியெல்லாம் குடும்பத்தில் பிரச்ச்னைகளை உண்டுபண்ணலாம் என்று ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது, இந்த சீரியல்கள். இதில் உள்ள உண்மைகளை புரிந்து கொள்ளாமலே பெண்கள் விவாகரத்துவரை செல்லுகின்றனர். இதெல்லாம் பாவமாக தெரியலியா அவர்களுக்கு.. என்னே ஒரு ராஜதந்திரம்.

இதுபோதாதென்று டிவிகளில் வரும் நடனநிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, மற்ற நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் பெண்களை அரைகுறை உடைகளில் உலாவரச் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ரொம்ப கேவலமாக பெண்களை சித்தரிக்கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் கைகளில்தான் உள்ளது. ஆகவே மக்களே பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகள், சினிமாக்கள், சீரியல்களை பாக்காதீங்க. புறக்கணிப்பு செய்துவிடுங்கள்.

மக்களை இந்தநிலையை நீங்கள்தான் மாற்றமுடியும், என்று சொல்லியவனாக நானும் இங்கே என்னுடைய கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்தவாரம் மீண்டும் உங்களை வேறொரு கேள்வியுடன் சந்திக்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Wednesday, April 14, 2010

கேள்விக்கு உங்கள் பதில் 6

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா...

வாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வலைச்சர‌த்தில் பணியாற்றி வருகிறேன். அங்கும் வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி இந்த வார கேள்விக்கு உங்கள் பதில் 6 க்கு செல்வோமா..


கேள்வி 6:

சினிமா/சீரியல்கள் பெண்களுக்கு முன்னேற்றம் அமைத்துக் கொடுக்கிறதா இல்லை இழிவுபடுத்துகிறதா...


சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Sunday, April 11, 2010

வலைச்சரத்தில் மீண்டும் உங்கள் ஸ்டார்ஜன்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

இன்றுமுதல் உங்கள் ஸ்டார்ஜன் மீண்டும் வலைச்சரத்தில் ஒருவார காலம் அலங்கரிக்கப்போகிறேன். திரு.சீனா அய்யா அவர்கள் மீண்டும் எனக்கொரு வாய்ப்பு வழங்கி வலைச்சரத்தில் ஆசிரியராக்கி அழகு பார்த்துள்ளார். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களினால் இன்றுமுதல் ஒருவாரகாலத்துக்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற செல்கிறேன்.

சீனா அய்யாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கொடுத்துவரும் ஆதரவுகளினால் என்னால் மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் புதுபுது விஷயங்களை பற்றி எழுத முடிகிறது.

உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் என்பாதையில் நீங்கள் தூவும் பூக்கள்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


********************************

சென்ற வருடம் என்னால் இந்த வாரத்தை மறக்கமுடியாது. என்னவென்று கேட்கிறீர்களா.. அது நான் இந்தியாவிலிருந்து சவுதிக்கு பயணமானது. ஏப்ரல் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ப்ஹ்ரைன் வழியாக தமாம் செல்லும் கல்ப் ஏர்விமானத்தில் பயணமானேன். இது ரெண்டாவது முறையென்றாலும் இந்த பயண‌ம் புதிய அனுபவமாகும். ஏனென்றால் நான் புதிதாக கல்யாணம் ஆகி 3 மாதத்தில் பயணமாகிறேன் என்றால் சும்மாவா. இப்போது நினைத்தாலும் அந்த நினைவுகள் எப்போதும் பசுமையானது.

அன்று நான் பயணம் கிளம்புவதால் என்னை வழியனுப்ப நெருங்கிய உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு வழியனுப்ப வந்தனர். நான் புதிதாக திருமணம் ஆனதால் திருமதி ஸ்டார்ஜனின் வாப்பா அம்மாவும், அவங்க பெரியம்மா பெரியவாப்பா எங்க தாய்மாமா இருவர் குடும்பத்தினரும் என்று எல்லோரும் வந்திருந்தனர். சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முழுவதும் எல்லோருடனும் சகஜமாக பேசி பிரிவு தெரியாமல் பார்த்துக்கொண்டேன்.

என்னவளுக்கும் பிரிவு துயரம் வாட்டாமல் இருக்க அவ்வப்போது கலகலப்பாக பேசினேன். அவருக்கு ஆறுதல் சொன்னேன். அவருக்கு ரொம்பவே வருத்தம். நான் எவ்வளவுதான் பேசினாலும் என்மனதினுள் பிரிவின்கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணிக்கு மக்ரிப் தொழுகை முடிந்ததும் எல்லோரிடமும் வழிசொல்லிக் கொண்டேன். என்னவளிடமும் வழிசொன்னேன். நாங்கள் இருவரும் கண்களில் நீர் ததும்பியவாறே கண்களாலே வார்த்தைகளை பரிமாறிகொண்டோம்.

அன்றுஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்; நான் நடந்து போகும்போது தெருக்கள் எல்லாம் புதிதாக தெரிந்தன. என்னடா பிறந்ததிலிருந்து சுற்றித் திரிந்த தெருக்கள் இன்று எல்லாமே புதிதாக இருந்தன. என்னுடன் எங்க வாப்பாவும் எங்க மாமா இருவரும் திருவனந்த‌புரம்வரை வந்தனர். என்தம்பிகளும் மாமாபையனும் திருநெல்வேலி பஸ்நிலையம் வரை வந்தனர். அவர்கள் நான் சோகமாக இருப்பதைக்கண்டு அவர்களுக்குள்ளே சிரிப்புகாட்டி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பஸ்பயணத்தில் என்னவளின் நினைப்பு வாட்டியது.

திருவனந்தபுரம் வந்து சரியாக 2மணிக்கு உள்ளேசென்று போர்டிங்பாஸ் வாங்கிக்கொண்டு இருக்கையில் கண்மூடி நினைத்துபார்த்தபடி இருந்தேன். 3 1/2 மணிக்கு பிளைட் உள்ளே அனுமதித்தனர். 4 மணிக்கு பிளைட் கிளம்பியது. ரன்வேயில் ஓடி மேலே பறக்க தயாராகிக் கொண்டிருந்த விமானம் திடிரென மீண்டும் ரன்வேக்கு தரையிறங்கியது.

என்னவென்று விசாரித்ததில் விமானத்தில் முகப்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது சரிசெய்ய ஒரு மணிநேரம் ஆகும் அதனால் ஓய்வெடுங்கள் என்றே பதில் வந்தது. என்னடா இது சோதனை.., மனைவி சொந்தங்கள் அனைவரையும் விட்டு பிரிவு துயரத்தில் இருக்கும்போது இதுவேறையா.. மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தது. ஆனாலும் விமானத்தில் பழுது இன்னும் சரிசெய்யப்படவில்லை. என் வீட்டுக்கு போன் செய்து விவரம் சொன்னேன்; அனைவரும் வருத்தப்பட்டனர்.

எல்லோரும் சேர்ந்து ஏர்போர்ட் மேனேஜரிடம் முறையிட்டோம். அவர் ப்ஹ்ரனிலிருந்து பழுதுநீக்குபவர் வந்து பழுதுநீக்கணும் அதனால் ஒருநாள் தாமதமாக விமானம் செல்லும்; நீங்கள் அனைவரும் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் இன்று தங்கி ஓய்வெடுங்கள் என்று எங்கள் அனைவரையும் ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தார்.

என்னசெய்ய! எல்லாம் நம்ம நேரம் என்று நொந்தபடியே ஹோட்டலுக்கு சென்று தங்கினேன். அப்படியே ஊருக்கு சென்றுவிடலாமா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இரவு 8 மணிக்கு விமானம் தயாராகிவிட்டது என்று அழைத்து சென்ற‌னர். அதன்பின்னரும் மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன. விமானம் பழுது சரிசெய்யவில்லை தாமதமாக செல்லும் என்று நிலையில்லாத பதிலே வந்துகொண்டிருந்தன. பின்னர் எல்லோரும் ஏர்போர்ட் மேனேஜரிடம் முறையிட பின்னர் இரவு 2மணிக்கு விமானம் கிளம்பியது. மறுநாள் கிளம்பும் விமானபயணிகளுடன் எங்களையும் பயணிக்க வைப்பதே அவர்கள் எண்ணமாக இருந்திருக்ககூடும்.

இந்த சூழ்நிலை அக்பருக்கும் தர்மசங்க‌டமானது. ஏனென்றால் நான் உறுதியாகவரும் நேரம் தெரியாததால் என்னை ரிசீவ் செய்ய கார் ஏற்பாடு செய்ய முடியாதநிலை. அக்பர் அன்று இரவுமுழுவதும் தூங்கவில்லை. நான் ப்ஹ்ரைன் வந்ததும் அக்பருக்கு போன்செய்து வந்ததை உறுதி செய்து கொண்டேன்.

அப்பாடி ஒருவழியாக நானும் அக்பரும் எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தோம். இந்த அனுபவத்தை என்னால் மறக்கவேமுடியாது.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Friday, April 9, 2010

கலையாத நிழல்கள்

கலையாத‌ நிழல்கள்

என்னவென்று நான் சொல்ல
வழிநெடுக தோரணம்
தலைவரின் வருகையை
பறைசாற்றியது.

அண்ணார்ந்து பார்த்தேன்
ஏணியிலிருந்து, கீழே
கனவெல்லாம் மேலே உயர‌...

தலைவர் சென்றபின்னாலும்
சண்டை மூண்டது
அவர் உக்கார்ந்த
சேரை தூக்குவதில்..


ஆம்! ஒருசாண்
வயிற்றிலும் களேபரங்கள்
என்னடா என்னை
கவனிக்கவில்லையென்று..

ஏசியும் தன் வேலையை
சரியாக செய்தது..
தலைவரின் சயனத்தில்
இடையூறு இல்லாமல்..

ஆம்! கால்கள் இடம்
மாற மறுத்தன‌
கதிரவனும் தன் வேலையை
சரியாக செய்தது..
மனமோ ஸ்ப்பா என்றது..

திட்டங்கள் எல்லாம்
போட்டதும் வால்களின்
கைகளில் தஞ்சம்..

ஆம்! நாளைக்கு
கிடைக்கும் என்ற
நம்பிக்கையில்
நாளும் நாளும்...


அடுத்த தேர்தலிலும்
தலைவர்தான் வெற்றி!

யார்வந்தா என்ன‌
பணம் நிறைய
கிடைக்குமா?...

,

Post Comment

Wednesday, April 7, 2010

கதை கேளு .. கதை கேளு ...

என்னை ஸ்கூல்ல சேர்க்கிறதுக்கு முன்னாடி நான், எங்க அம்மம்மா வீட்டுல இருப்பேன். எங்க தாத்தாவும் என்மேல ப்ரியமா இருப்பாங்க. ஏன்னா அவங்களுக்கு முதல் பேரப்பிள்ளை நாந்தான். நான் கேட்கிறதெல்லாம் வாங்கி தருவாங்க. நான் சேட்டை பண்ணினா கண்ணுல வெங்காயத்தை ஊத்திருவேன்ன்னு சொல்வாங்க. ஆனா சும்மா பயமுறுத்ததான் அப்படி சொல்றது. நான் நிஜத்துக்குன்னு நினைச்சி பயப்படுவேன்.

அதேமாதிரி எங்க வீட்டுக்கு வரும் டோப்பிக்கும் பயப்படுவேன். ஏன்னா அவரு வெத்தலை பெட்டி வச்சிருப்பாரு. அதுல உள்ள பாக்குவெட்டிய எடுத்து கண்ணுக்கு நேரா காட்டி மூக்கை வெட்டிருவேன்னு பயங்காட்டுவார். நான் இதுக்கெல்லாம் மசியிரா ஆளா. பயப்படுறமாதிரி நடிச்சிட்டு அவர் அங்கிட்டு போனதும் நம்ம சேட்டை ஆரம்பமாயிரும்.

தாத்தா பாட்டி வெளியூர் போனாலும் நான்கூட செல்வேன். எல சேக் சேட்டை பண்ணுனே நிமிட்டாம்பழம் கொடுத்துடுவேன், அதனால ஒழுங்கா இருக்கணும். அதென்ன நிமிட்டாம்பழம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது வேற ஒண்ணும் இல்லை தொடையில் கிள்ளி விடுவதுதான். சில சமயங்கள் நான் நிறைய நிமிட்டாம்பழத்தை வஞ்சனையில்லாம வாங்கிக்குவேன்.

எனக்கு சின்னவயசில‌ கதை கேட்கிறது ரொம்ப பிடிக்கும். அதனால எங்க தாத்தாவும் பாட்டியும் கதை சொல்ல சொல்லி கேட்பேன். ஈனாம்பூச்சி கதை, புலிமச்சான் கதை, நல்லதங்காள் கதை, புட்டு தண்ணியா போன கதை இப்படி நிறைய கதைகள் உண்டு. இவை ரசிக்கும்படியான கதைகள்.

இந்தமாதிரி கதைகள்ல லாஜிக்கெல்லாம் பார்க்கப்படாதுன்னு முன்னாடி சொல்லிபுட்டேன் ஆமா...

எங்க தாத்தா சொன்ன கதைகள்ல ஒரு கதையை இங்கு பார்ப்போம்.

கதை கேளாத நாயி..

ஒரு ஊர்ல ஒரு பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அவர்கள் ஒருநாயை வளர்த்து வந்தனர். அவன் தினமும் காலையில் வேட்டைக்கு செல்லும் போது நாயையும் கூட அழைத்து செல்வான். வேட்டையாடியவற்றை அந்த நாயிடம் கொடுத்து அனுப்புவான். அவன் மனைவி அதை சமைத்து ரெடியாக்கி வைப்பாள். அவன் வேட்டையை முடித்து ஆற்றில் குளித்து விட்டு வருவான். தினமும் இதேமாதிரி வேட்டைக்கு செல்வதும் அவனது வாடிக்கையாகும்.

ஒருநாள் காலையில், அவன் நாயுடன் வேட்டைக்கு கிளம்பினான். வேட்டையில் ஒரு மான் சிக்கியது. அவனுக்கு ரொம்ப சந்தோசம். ஆஹா இன்னிக்கி சரியானவேட்டை, இதை அம்மாவிடம் கொடுத்து கறி சமைத்து வைக்க சொல்லு. நான் வேட்டையை முடித்து குளித்துவிட்டு வருவேன். சீக்கிரம் வீட்டுக்கு போ. நான் வருவேன். என்று நாயிடம் அந்த மானை கொடுத்து அனுப்பினான். நாயும் சரியென தலையாட்டியபடி சென்றது.

நாய் வேகமாக வந்துகொண்டிருந்தது. வழியில் ஒரு மரத்தடியில் நாலுபேர் உக்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தது. நாய் அவர்கள் பேசும் கதையில் லயித்தது. அப்படியே கதை கேட்டுக்கொண்டிருந்ததால் வீட்டுக்கு செல்வதை மறந்தது. எல்லோரும் பேசிமுடிந்ததும் கிளம்பினர். அப்போதுதான் நாயிக்கு ஞாபகம் வந்தது.., ஆஹா வீட்டுக்கு செல்ல மறந்துவிட்டதே என்றெண்ணி வேகமாக வீட்டுக்கு ஓடியது.

வேட்டைக்கு சென்ற பணக்காரன் குளித்துமுடித்து பசியோடு வீட்டுக்கு வந்தான். வீட்டில மனைவி சும்மா இருப்பதைக்கண்டு கோபமாகி சத்தம் போட்டான். நான் நாயிடம் அப்போதே கொடுத்துவிட்டேனே ஏன் இன்னும் சமைக்கலை., என்றான். என்னது நாயிடம் கொடுத்துவிட்டீங்களா நாய் இன்னும் வரவேஇல்லை. நான் என்ன செயவது.. என்றாள் மனைவி. வரட்டும் நாய் ஒரு கை பார்த்திடுதேன் என்று சொன்னான் மன‌தில்.

நாய் மூச்சிரைக்க ஓடிவந்தது. என்ன நாயே உங்கிட்ட அப்போதே கொடுத்துவிட்டேனே., எங்கே போய் தொலைந்தாய். சொல்லு நாயே. என்று அதட்டினான்.

இல்ல வருகிற வழியில் நாலுபேர் மரத்தடியில் உக்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருந்தனர். அவர்கள் கதையில் ஐக்கியமானதால் இவ்வளோ நேரமாயிருச்சி என்றது. அவனுக்கு கோபம் அதிகமானது. ஒரு புளியங்குச்சியை எடுத்து நாயை கதை கேளாத நாயி கதை கேளாத நாயின்னு அடிபின்னிட்டான்.

இப்படி நான் எங்க தாத்தாவிடம் கதை கேட்டுட்டு இருந்தபோது என் முதுகில் அடிவிழுந்தது. என்னன்னு பார்த்தா எங்க தாத்தா சிரிச்சிக்கிட்டே கதை கேளாத நாயின்னு செல்லமா அடித்தார்.

இதுதான் கதை கேளாத நாயோட கதை.


அன்புமிக்க நண்பர்களே!!

எனக்கு ஒரு எண்ணம் இந்த பதிவை தொடரிடுகையாக‌ ஆரம்பிக்கலாம் என்று எண்ணம். இதனை செயல்படுத்துவது உங்கள் கையில் உள்ளது. நண்பர்களே உங்களுக்கு சிறுவயதில் கதை கேட்ட அனுபவங்கள் இருப்பின் அதனை இங்கே
தொடராக எழுதுங்கள்.

என்கருத்து சரிதானே நண்பர்களே..

உங்கள் சின்ன வயதில் கதைகேட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். குறைந்தது ஒரு மூன்று பேரையாவது இந்த தொடரை தொடர்ந்து எழுத அழையுங்கள்.

இந்த தொடரை தொடர இவர்களை அன்போடு அழைக்கிறேன்.

அக்பர்

நிஜாமுதீன்

ஹூசைனம்மா

ஸாதிகா மேடம்

கண்ணா

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Monday, April 5, 2010

ஐயா சாமிகளா.. ஒரு நிமிஷம்

அன்புமிக்க நண்பர்களே!!

கடந்த 2 நாட்களில் என் வலைப்பூவுக்கு வந்த அனைவரும் பார்த்திருப்பீங்க சில மாற்றங்களை. ஆமா டெம்ப்ளேட் மட்டும் மாற்றம் இல்லை. கருத்துரை மட்டுறுத்தலையும் கவனிச்சிங்களா.. ஏன் இந்த மாற்றம்?. வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலாகுது, இதுநாள் வரைக்கும் மட்டுறுத்தலை நான் வைத்ததுகிடையாது.

இதுக்கு காரணம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் என் வலைப்பூவில் சில விஷமிகள் விஷத்தை கக்கி சென்றுள்ளனர். நான் வெள்ளியன்று விருது கொடுத்து வாழ்த்துக்கள் பதிவிட்டிருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த பதிவில் சில கயவர்கள் கெட்டவார்த்தைகளால் கருத்துரை இட்டுவிட்டு சென்றிருக்கின்ற‌னர்.

சொல்லத்தகாத அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் கருத்து போட்டிருந்தனர்.

//!#$^^*&()_++++.... டேய் நாயே... எங்கபோனாலும் உன்னோட மூஞ்சிதான் தெரியுது. எங்கே போனாலும் @!#$$%%^^&&*~+++... வந்திருவியா....@#%$%^&&&*#&_>:::$%*_!#%$%&+++..../// இதில் நான் சொல்லாத பல வார்த்தைகள் அடங்கியுள்ளன.

இதை நான் கவனிக்கவில்லை. சனிக்கிழமை நண்பர் சரவணகுமார் போன் செய்து உங்க பிளாக்ல ஒரு மோசமான கமெண்ட் வந்திருக்கு. அதை உடனே டெலிட் பண்ணுங்க, சீக்கிரம்.., யாரும் பார்த்திடபோறாங்க. என்று சொன்னார். நான் அதை பார்த்ததும் அதிர்ந்து போயிவிட்டேன். ரொம்ப வருத்தமாக இருந்தது.

ஏன் இப்படி எல்லாம் எழுதி என்பெயரைக் கெடுக்க சதிவேலை செய்கின்றனர்?. என் வலைப்பூ லேடீஸ், பெரியவர்கள், நண்பர்கள், என்று எல்லோரும் வந்துபோகக்கூடிய வலைப்பக்கம். இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன?.

இந்த கமெண்ட் போலி பயனர் பெயரில் வந்துள்ளது.
இந்த கமெண்ட் எழுதியிருந்தவர் எழுதி இருந்த கருத்தை பார்க்கும்போது, என்னை பலநாள்கள் கவனித்து இருப்பார்போல. புதிதாக என்பக்கத்துக்கு வர‌கூடியவரும் அல்ல.

நான் ஏதோ என் சிந்தனைக்குட்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒன்றும் தப்பாக அல்லது தனிப்பட்ட எவரையும் தாக்கி, அல்லது கருத்துவேறுபாடு கொண்ட விஷயங்களை பற்றி எழுதவில்லை. இதனை நீங்கள் அனைவருமே அறிவீர்கள்.

எனக்கு பிடித்தவர்களுக்கு அவர்கள் பக்கங்களுக்கு சென்று கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். நான் யாரையும் கேட்டு எழுத‌ வேண்டிய அவசியமில்லை. எல்லாமே என் சொந்தக்கருத்துக்கள்.

என்ன நண்பர்களே!!.. நான் சொல்றது சரிதானே..

என் எழுத்துக்களில் எதாவது குறையிருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

நீங்களும் உங்கள் வலைப்பக்கங்களில் கருத்துரை மட்டுறுத்தலை சேர்த்துகொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Sunday, April 4, 2010

பொண்ணு பார்க்க போறேன் - தொடர்பதிவு

சகோதரி அநன்யா மகாதேவன் என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார். அது பொண்ணு பார்த்த கதையை பற்றி எழுத வேண்டும். அது ஒரு அருமையான காலம்.. இப்ப அந்த காலம் கிடைக்கவே கிடைக்காது.

நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சவூதிக்கு வேலைக்கு வந்துவிட்டேன். சிறிது காலம் சென்றதும் எனக்கு பொண்ணுபார்க்க என்பெற்றோர்கள் தீர்மானித்துவிட்டனர். நானும் பெண் நல்லா இருக்கவேண்டும்;அழகாகவும் கலராகவும் இருக்க வேண்டும், என்னோட உயரத்துக்கு ஏற்றமாதிரி இருக்கவேண்டும், நல்லா என்னைமாதிரி பெண் படித்து இருக்கவேண்டும், இப்படி நிறைய கண்டிஷனெல்லாம் போட்டது கிடையாது.

நான் ஒரே வார்த்தைதான் சொன்னேன்; எப்படி இருந்தாலும் பரவாயில்லை.., உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு போட்டோவை மெயிலில் அனுப்புங்கள் என்றேன். ஆனாலும் என் அப்பாவும் அம்மாவும் மாமாவும் எனக்காக பெண்பார்க்க ஆரம்பித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது பெண் தேடோ தேடென்று தேடினார்கள். பெண் சரியாக அமையவே இல்லை. நிறைய ஊர்களில் பெண் தேடினார்கள். நான் ஊருக்கு வரும் காலமும் நெருங்கிக் கொண்டிருந்தது. என் அப்பாவுக்கு கவலையாக இருந்தது.

ஊருக்கு வந்தவுட‌ன் பெண் அமைந்து கல்யாணம் நடந்து ஒரே மாதத்தில் ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயமானால் என்ன செய்வது என்ற கவலை எங்க எல்லோருக்கும். ஆனால் என்னவள் சீக்கிரம் என்னைத்தேடிவருவாள் என்ற எண்ணமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 2008 ஜூன் மாதம் 8ம் தேதி ஒருபெண் அமைஞ்சது. போன உடனே பெண்பிடித்துவிட்டது. அன்றே பெண்வீட்டில் பேசினார்கள். போட்டோவும் பரிமாறப்பட்டது. மறுநாள் என் தம்பி மெயிலில் போட்டோவை அனுப்பிவைத்தான். எனக்கு ஒரே சந்தோஷம். போட்டோவில் என்னவள் முகம் பார்த்ததும் உடனே பிடித்துபோனது இருவருக்கும்.

நிச்சயதார்த்தம் ஆகஸ்டு 18ம்தேதி என்றும் டிசம்பரில் கல்யாணம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லாம் ஓகே. ஆனால் இன்னும் இருவரும் பேசலியே.. அம்மாவிடம் அவங்க வீட்டு செல்நம்பர் கேட்டேன். அம்மா மறுத்துவிட்டர்கள். கல்யாணத்துக்கு முன்னாடி பேசினால் எதாவது தவறுதலாக பேசி கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிடலாம் என்ற பயம் அவங்களுக்கு.

இப்படியே 2 மாதங்கள் ஓடிவிட்டன. போன் நம்பர் தெரியவேஇல்லை. நிச்சயதார்த்த‌துக்கு 10 நாட்களுக்கு முன்னர் என் மாமா பையனிடம் டேய்மாப்ள அவங்க வீட்டுநம்பர் எப்படியாவது தாடா என்றேன். அவனும் எங்கம்மா செல்போனில் இருந்து அவங்க அப்பா நம்பரும் அவங்க வீட்டு நம்பரும் கொடுத்தான், நிச்சயம் முடியகிறவரைக்கும் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன்.

திங்கள்கிழமை நிச்சயதார்த்தம். வெள்ளிக்கிழமை மாலை அவங்க அப்பாவுக்கு போன் செய்தேன் மனதில் ஒரு குறுகுறுப்புடன்.
ஹலோ நான் சவுதியிலிருந்து ஷேக் பேசுறேன்.. என்றேன்.
எந்த சேக்!! நீங்க யாருன்னு தெரியலியே.. என்றார் மாமா.
உங்க வருங்கால மருமகன் சேக். திருநெல்வேலியிலிருந்து பொண்ணு பார்த்துட்டுபோனாங்களே.. எனக்குதான் பெண் பார்த்தாங்க.. என்றேன்.

அறிமுகம் ஆனதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

நிச்சயதார்த்தமும் இனிதே நல்லமுறையில் நடந்தேறின. அக்பர் ஊருக்கு சென்றிருந்ததால் அக்பரும் என்னுடைய நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் காலை சவூதி நேரம் 9.30 மணிக்கு என்னவள் வீட்டுக்கு போன் செய்தேன்.

ஹலோ நான் சவுதியிலிருந்து சேக் பேசுறேன்.. என்றேன் ம‌னதில் குறுகுறுப்புடன்

ஹலோ யாரு.. ஆ!! நீங்களா நல்லாருக்கீங்களா..நல்லாருக்கீங்களா இருங்க அம்மாட்ட கொடுக்கிறேன். என்ற குரலில் என்னவள் குடியேறினாள் என் இதயத்தில்.

ஹலோ நான் மாமி பேசுறேன்.. நல்லாருக்கீங்களா. என்று பேசினாங்க மாமி.

நலம் விசாரித்ததும் அவங்க வீட்டுல எல்லோரும் பேசினார்கள். என்னவளிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பின்னர் தொடர்பு கொள்கிறேன் என்று வாய் சொல்லியது மனசே இல்லாமல்.

நான் பேசுவேன் பேசுவேன் என்று இரவு முழுவதும் என்னவளை விழிக்கவைத்தது, மனதுக்கு கஷ்டமானது.

தினமும் மிஸ்டுகால்கள் கொடுப்பேன்; அப்பப்ப பேசிக்கொள்வோம்.

இப்படியா நடந்தேறியது ஸ்டார்ஜன் தம்பதியினர் திருமணம்.

இந்த தொடரை தொடர்ந்து எழுத நான் அழைப்பது

அக்பர்

செ.சரவணகுமார்

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Saturday, April 3, 2010

மைக்கேல் ஜாக்சனும் ராஜாவும்

அன்புமிக்க நண்பர்களே!!

எனது அன்புமிக்க சகோதரி ஜலீலா அவர்களும் சகோதரி ஸாதிகா அவர்களும் எனக்கு விருது கொடுத்து சிறப்பித்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு கிடைத்த இந்த விருதுகளை நண்பர்களான உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஸாதிகா கொடுத்த விருது ராஜா பொன்கிரீடம் விருது


இந்த விருதை இவர்களுக்கு அன்போடு பகிர்ந்து கொள்கிறேன்.

சீனா அய்யா வலைச்சரத்தை தடையின்றி அலங்கரிக்க வைப்பதற்காக..

அக்பர் ( வலைச்சரத்தில் மன்னர் மொக்கைவர்மனின் தர்பாரை நடத்துவதால் )

கோவி.கண்ணன் பகுத்தறிவு விவாதங்களை தொடங்கிவைக்கும் ப்திவுகளுக்காக..

டாக்டர் சுரேஷ் பழனியிலிருந்து கலகலக்கவைப்பதற்காக..

அபு அஃப்ஸர் குறைந்த பதிவுகள் இட்டாலும் நச்சென்று பதிவிடுவதற்காக...

டி.வி.ராதாகிருஷ்ணன் அருமையாக பதிவுகளுக்காக

நாடோடி ஸ்டீபன் அருமையான பதிவுகளுக்காக

ஜெகநாதன் பின்நவீனத்துவ பதிவுகளுக்கும் ரசிக்கவைக்கும் பின்னூட்டங்களுக்காக..

சேட்டைகாரன் சேட்டை டிவி ஆரம்பித்திருப்பதால்..

சைவகொத்துப்பரோட்டா ரசிக்கவைக்கும் பதிவுகளுக்காக..


********************************


ஜலீலா கொடுத்த விருது மைக்கேல் ஜாக்ஸன் கூல் ப்ளாக் விருது




இந்த விருதை இவர்களுக்கு அன்போடு பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணா துபாயில் புர்ஜ் கலீபாவை கட்டியதற்காக..

துபாய் ராஜா குட்டிச்சாத்தானை ஓடஓட விரட்டியதற்காக..

ஷங்கி போர்ட்ராய்ட் கவித்துவ கதைகளுக்காக..

பனித்துளி சங்கர் தகவல் களஞ்சியமாக இருப்பதற்காக..

அநன்யா மகாதேவன் மேடம் கலகலக்கும் வைக்கும் பதிவுகளுக்காக..


நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Thursday, April 1, 2010

உழைக்கும் கைகளே.. கேள்விக்கு என் பதில் 5


அன்புமிக்க நண்பர்களே!!

நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி 5 :

குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது யார்கையில் இருக்கிறது?.. அரசாங்கமா இல்லை சமூகமா...



இந்த கேள்விக்கு கருத்துசொல்வது என்பது மிக சிக்கலான விஷயம். அப்படி இருந்தும் நேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக மாப்ள ஜெகநாதன் எனக்கு நிறைய பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுத்தார். இணையத்தில் நிறைய தகவல்கள்தேடித் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவருக்கு என் நன்றிக‌ளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் இந்த பிரச்சனைக்கு அடிப்படைகாரணம் குடும்பங்கள்தான். அரசு என்னதான் சட்டம் போட்டாலும் வேலைக்கு செல்வதை யாராலும் தடுக்கமுடியாது. முதலில் ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம்.

ஒருவன் படித்தால் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம்.ஒரு அப்பா தான் என்னதான் கஷ்டப்பட்டாலும் தன்பிள்ளை படித்து வேலைக்கு சென்று தன்குடும்பத்தை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் அவனை படிக்க வைக்கிறார். அவனும் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கிறான் காத்திருக்கிறான் காத்துக்கொண்டே இருக்கிறான்.

ஏன்னா நம்நாட்டுல வேலை இல்லாத திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறதே.. அதை எப்படி யார்தீர்ப்பது.. விடையில்லா கேள்வியா இருக்கே. இன்றைய அரசியல்வாதிகளை கேளுங்க. வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க என்ன செய்கிறீர்கள் என்று. அவர்களால் பதில் சொல்ல இயலாது. அவர்கள் அப்படியே வேலை கொடுத்தாலும் பணம் உள்ளவன் முந்திக்கிறான் . போட்டிகள் நிறைந்த உலகம் இது. இதுதான் காலம்கால்மாக நடந்து கொண்டிருக்கிறது. ஏன்னா நம்நாட்டில் மக்கள்தொகை பெருக்கம் அதிகம். இப்படியே ஒன்றுதொட்டு ஒன்று தொடர்ந்துகொண்டே செல்கிறது.... இது ஒரு சங்கிலித் தொடர் போல... முடிவே இல்லாமல்..

இப்போது அடுத்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். இப்ப அவன் படிக்காம வேலைக்கு போறான்னு வைத்துக் கொள்வோம். அவன் சின்னவயசிலே வேலைக்கு போவதால் அவனிடம் பணப்புழக்கம் உண்டாகிறது. அவனுடைய தேவையை யாருடைய தயவுமில்லாமல் அவனே பூர்த்தி செய்துகொள்கிறான். இதற்கு என்னகாரணம் குடும்பங்களில் நிலவும் வறுமைதான்.

கஷ்டப்படுகிற குடும்பங்களில் எந்த வகையிலாவது வருமானம் வராதா அதனைக் கொண்டு நம் வறுமை நீங்காதாதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். அதாவது ஒருவன் சின்ன வயசிலே வேலைக்கு போய் சம்பாதிச்சாதான் நீ கல்யாணவயசுல நல்லா இருக்க முடியும்ன்னு ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும்போது அவனால் எப்படி வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியும்.

ஏன்னென்றால் குடும்பத்தில் நிலவும் வறுமை. அவன் ஒரு 21 வயது அடையும்போது அவனிடம் பணப்புழக்கம் இருப்பதினால் அவனுக்கு பெண்கொடுக்க நான்நீன்னு போட்டிப்போடுகிறார்கள். ஒரு 25 வயது கழிந்தவுடன் ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிடுகிறான். அவனால் எந்தஒரு பிரச்சனைக்கும் ஈஸியா தீர்வுகண்டுவிடுவான். அதே படித்தஒருவன் முடிவு எடுக்கமுடியாமல் தடுமாறுவதை பார்க்கத்தான் செய்கிறோம்.

இப்போது அடுத்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். அதாவது வேலைக்கு செல்லும் சிறார்களின் பார்வையில் செல்வோம். குழந்தை தொழிலாளர்கள் எனபவர் யார்? எனபதை முதலில் பார்த்தோமானால் தன் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக சிறுவயதிலே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள். இந்த குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கு முதலில் அடிப்படை காரணம் என்ன? என்பதை பார்த்தோமானால் வறுமை.

இந்த மாதிரி கஷ்டப்பட்ட குடும்பங்களில் ஒன்று அப்பா சரியில்லாம இருக்கணும் இல்லை அப்பா இல்லாமல் குடும்பபொறுப்பை தானே ஏற்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படும் சிறார்கள். இவர்களுக்கும் மற்ற பிள்ளைகளை போல தாமும் படிக்க வேண்டும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவை சிறுவயதிலே புதைத்து ஏக்கமாய் பார்க்கும் பார்வைக்கு அழுத்தம் ஜாஸ்தி. சில குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறனர். அவர்கள் சில சமயங்களில் தப்பான முடிவுக்கு ஆளாகிவிடுகின்றனர். இல்லையென்றால் ஒரு ரவுடியாகவோ இல்லை முரடனாகவோ, இல்லை வேறுமாதிரியாகவோ ஆகிவிடுகின்றனர்

இன்று எத்தனை ஊர்களில் சிறுவயதிலே வேலைக்கு சென்று க‌ஷ்டபடும் குழந்தைகளை நினைக்கும்போது கண்களில் நீர்கோர்க்கிறது. உண்டா இல்லையா சொல்லுங்க...

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கஷ்டத்துக்கு ஆளாகும் குழந்தைகள் நிலையை நாம் எப்படிமாற்றுவது?..

குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுக்க நாம் இதுவரை என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசு திட்டங்கள் எத்தனைதான் கொண்டுவந்தாலும் அதை செயல்படுத்தும்போது பணமுதலைகளின் வாயினுள் அல்லவா சென்றுவிடுகிறது.

இதற்கு பிற்காலத்தில் எதாவது ஒரு மாற்றம் வராமலா போய்விடும். கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புவோமாக..

மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கின்றேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்