Pages

Sunday, June 12, 2011

எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி


ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த இடுகை. ஒவ்வொரு நண்பர்களின் ஊர்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது. நன்றி ஸாதிகா அக்கா.

திருநெல்வேலி என்று சொன்னாலே உங்களுக்கு அல்வா என்றுதான் ஞாபகத்தில் வரும். இங்கு தயாரிக்கப்படும்அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் நெல்லை டவுணில் உள்ளஇருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும்
ருசியே தனிதான். அந்த கடையில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என்ற பெயர். கூட்டம் அலைமோதும் அந்த கடையில் வியாபாரம் ஓஹோ. திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கே அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.

திருநெல்வேலிக்கு பெயர்க்காரணம் இந்துமத நம்பிக்கையின்படி, ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றான தாமிரபரணி வளம்கொழிக்கும் நெல்லைக்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. நம்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பல வீரர்களை வித்திட்டபூமின்னு சொல்லலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கான்சாகிப், வாஞ்சிநாதன், ..சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஊமைத்துரை மற்றும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாதவர்களும் வாழ்ந்த ஊர்ன்னு சொல்லலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பேசப்படும் வட்டாரமொழிகளில் நெல்லைத்தமிழும் பிரசித்தி பெற்றது. நெல்லையும் தூத்துக்குடியும் பிரிக்கப்பட்டாலும் இன்னும் இங்குள்ள மக்களின் சகோதரத்துவமும் பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறன்றன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, கடையந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பை (அம்பாசமுத்திரம்), சேரன்மகாதேவி, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய நகரங்கள் உண்டு.

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவனங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.

நெல்லை ஜங்சனில் ஆசியாவில் முதல் ஈரடுக்கு மேம்பாலம் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் காக்கிறது.

இங்குள்ள மக்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்களும் பெருமளவில் இந்து சமுதாயத்தவரும் நிறைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலபகுதி மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இங்கு உண்டு. ‌பேட்டை, மேலப்பாளையம் மற்றும் சில ஊர்களில் உள்ள பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கு பெற்றோர் தயவை எதிர்பார்க்காமல் தம்மால் இயன்றளவுக்கு பொருளீட்டி சம்பாதிக்கின்றனர்.

நெல்லையில் சுற்றிப்பார்க்க நெல்லையப்பர் கோவில், அறிவியல் மையம், ஜூன் ஜூலை மாதங்களில் அரசு சார்பிலும் தனியாரும் பொருட்காட்சி நடத்துவார்கள். சில சமயங்களில் சர்க்கஸ்ம் நடத்துவார்கள். மக்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். தங்களுடைய ஓய்வு நேரங்களில் இதுமாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள ஜங்சன் பகுதி, கோபாலசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆற்றுக்கு குடும்பத்தினரோடு சென்று பொழுதை கழிப்பார்கள்.

இதுபோக பாபநாசம், குற்றாலம் அருவிகளுக்கும் மற்றைய சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.

இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அதெல்லாம் அப்போ... என்று சொல்லுமளவுக்கு இன்று எங்கும் விளைநிலங்கள் மனைகளாகவும் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது வேதனைக்குரியது. எங்கு பார்த்தாலும் அங்கே இத்தன சென்ட் நிலம் குறைவான தொகை, இங்கே இவ்வளவு தொகை என்று கூவிகூவி மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் விளம்பரம். காண சகிக்கலை.

இது நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும்தான்.

***************


அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!

நெல்லையில் வருகிற 17ம்தேதி வெள்ளிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு பதிவர் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளார்கள்.

வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி.

ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.

பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு உங்களுடைய அனுபவங்களையும் பகிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!..

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்