Pages

Monday, June 28, 2010

தப்பு தாளம்

தப்பு என்று தெரிந்தும்

யோசிக்கத் தோணுது

தப்பு தப்பாய்...

தப்புசெய்து பழக்கப்பட்ட‌

அவன் திருந்தி

நல்வழியில் செல்கையில்

தவறு செய்யும்போது

வேதனையில் துடித்தான்.

அவனிடம் கேட்டேன்

தப்புக்கும் தவறுக்கும்

உள்ள வித்யாசம்

என்னவென்று..?..

,

Post Comment

Sunday, June 27, 2010

வரும்வரை காத்திரு.. 3 - தொடர்கதை

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க.. வரும்வரை காத்திரு..1 , வரும்வரை காத்திரு..2.

நாங்கள் அனைவரும் சூழ்நிலையறிந்து அவருடைய பின்னால் ஓடினோம்.

அங்கே... அங்கே.. அப்போது என்னோட பிரியா மயக்கமுற்று கிடந்தாள். எல்லோரும் அவளை நினைவுக்கு கொண்டுவர போராடினோம். இதற்குள் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டாங்க.

பிரியாவுக்கு மயக்கம் தெளிந்து கண்ணை திறக்க முயற்சித்தாள் அவளால் கண்திறக்க முடியவில்லை. வலியால் துடித்தாள்..

இதற்குள் காலேஜ் பூராவும் நியூஸ்பரவி பிரின்ஸ்பால் லேப்பில் இன்சார்ஜ்ஜில் இருந்த சாரிடம் "என்னாச்சி சார் எப்படி இது நடந்தது?.." கேட்டார். அப்போது அவர், "சார் அந்தபொண்ணு டெஸ்ட்டியூப்பில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஊற்றும்போது ஆசிட் பொங்கி கண்ணில் தெறித்துவிட்டது. உடனே நாங்கள் அவளை காப்பாற்ற முயற்சித்தோம். அவளால் கண்திறக்க முடியவில்லை" என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். "அடடா.. மாணிக்கம் பொண்ணா!! இதுவெளிய தெரிஞ்சிதுன்னா காலேஜ் இமேஜ் கெட்டுரும். எப்படியாவது அவளை காப்பாற்றியாகணும்" என்று பிரின்ஸ்பாலும் அக்கறை எடுத்துக்கொண்டார்.

ப்ரியாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். நானும் என்நண்பனும் பைக்கில் ஆம்புலன்ஸ்க்கு பின்னால் சென்றோம்.

இந்த தகவல் அவளது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் என்புள்ளைக்கு என்னாச்சி என்னாச்சி என்று கதறியபடி வந்தது மனதை உருக்கும்படியாக இருந்தது. என்நண்பர்களும் மற்றும் பர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் மாணவர்களும் ஆஸ்பத்திரியில் குழுமினோம். எல்லோரும் கவலையுடன் இறைவா ப்ரியாவை காப்பாற்று என்று வேண்டினோம்.

டாக்டர், "சார் ப்ரியா குணமாயிட்டாள். இந்த பொண்ணுக்கு ஆசிட் கண்ணுக்கு மிக அருகாமையில் பட்டிருந்ததால் கண்பார்வைக்கு எந்த பாதிப்புமில்லை. கண்ணில் விழுந்திருந்தால் கண்பார்வையை இழந்திருக்க வேண்டிருக்கும். இப்போது கண்ணை ரொம்ப அழுத்தக்கூடாது; கண்விரித்து பார்க்கக்கூடாது; ஒருமாத புல்ரெஸ்ட்டில் இருக்கவேண்டும். கொஞ்சகாலத்துக்கு கருப்பு கண்ணாடி அணியவேண்டும். இரண்டு நாள் கழித்து டிஸ்சார்ஜ் பண்ணிக்கிருங்க.." என்று டாக்டர் சொன்னதும்தான் அனைவருடைய முகத்தில் சந்தோசம் எட்டிப்பார்த்தது.

சிறிதுநேரம் கழித்து ப்ரியா கண்விழித்தாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் தம்பியும் உள்ளே சென்றதும் நாங்களும் உள்ளே நுழைந்தோம். அவளுடைய பார்வை பக்கத்திலிருந்த அப்பா அம்மாவை பார்த்துட்டு முன்னால் நின்றிருந்த என்பக்கம் திரும்பியது. அவளுடைய கண்களிலிருந்து நீர் எட்டிப்பார்த்தது. நான் பார்வையாலே அவளுக்கு கவலைபடாதே என்று சொன்னேன். எங்களுடைய இருவிழிகளும் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டிருந்தோம்.

அவள் ஆஸ்பத்திரியில் இருந்த இரண்டு நாளும் காலையில் கல்லூரி செல்லும்முன் அவளை பார்த்துவிட்டுதான் செல்வேன். அவள் மனதளவில் பாதிக்கப்படிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி தலையை தடவிவிட்டேன். அப்போது என்னை பற்றி அவங்கம்மா கேட்டதுக்கு என்னுடைய சீனியர் என்று அறிமுகம் செய்துவைத்தாள்.

பின்னர் ஒருமாதம் கழித்து முழுவதுமாக குணமாகி வந்தாள். எங்கள் காதல் ரொம்பவே நெருக்கமாகிருந்தது. ஒருவேளை எங்ககாதல் அவள் வீட்டுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகமாகவே இருந்தது.

எங்கவீட்டுக்கும் என்னுடைய காதல் தெரிந்து அப்பா ரொம்ப சத்தம்போட்டார். "டேய் நாமளே ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டுருக்கோம். இதுல வேற காதல் பண்றானாம் காதல். அவங்கல்லாம் பணக்காரங்கடா; நமக்கெல்லாம் ஒத்துவராதுடா.. நான் எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் உன்னை படிக்கவச்சிருக்கேன். உன்னைய நம்பித்தான் நாங்க எல்லோரும் நம்பிருக்கோம். உனக்கெதுஆனாலும் எங்களால் தாங்கிக்க முடியாது. தயவு செய்து இந்த காதலை மறந்திடுடா.. உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றோம். இதுக்குமேல உன்னோட இஷ்டம்" என்று அப்பா சொன்னதுக்கு, "அப்பா எங்ககாதல் உறுதியானது.. என்ன ஆனாலும் சரி என்காதலிலிருந்து பின்வாங்கமாட்டேன். அதனால கவலைப்படாதீங்கப்பா" என்று உறுதியோடு சொன்னேன். அம்மாவும் "டேய் இந்தகாதல் கத்திரிக்காயெல்லாம் வேணான்டா" என்று வருத்தப்பட்டு சொன்னார். எதனைபற்றி கவலைப்படாமல் எங்கள்காதலில் உறுதியாக இருந்தோம்.

என்ன ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவள்வீட்டுக்கு சென்று அவளுடைய அப்பாவை பார்த்து பேசலாம் என்று கிளம்பினேன்.

ஆனால் அங்கே நடந்தது வேற..


தொடரும்....

,

Post Comment

Thursday, June 24, 2010

வரும்வரை காத்திரு...2 - தொடர்கதை

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க.. வரும்வரை காத்திரு..1.

பஸ்ஸை நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க.. என்றபடி பஸ்ஸின் பின்னால் ஒருவர் ஓடிவருவது தெரிந்தது. உடனே டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி குரல்கொடுத்தேன். டிரைவரும் பஸ்ஸை ஸ்லோ பண்ணினார். ஓடிவருபவர் அருகில் வந்த‌தும் பார்த்தால் அட நம்ம பிரியா.. ஓ..பிரியா.. கைகொடுத்தேன். அவள் ஜம்ப் பண்ணி தொத்தினாள். நான் கைகொடுத்து தூக்கியதும் அவள் என்நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். "என்ன பிரியா ஒருவாரமாக ஆளேக்காணோம்.. என்னாச்சி.," என்றேன் அவளிடம்.

அவள் "என்னை பொண்ணுபார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்க.."என்று சொன்னதும் தூக்கிவாரிபோட்டது.

உடனே அருகில் இருந்த என் நண்பர்கள் மூர்த்தி, இஸ்மாயில், மாரிமுத்து, ஜேம்ஸ், சீனிவாசன் வருத்தத்துடன் என்னை பார்த்தனர். நான் என்னவளின் முகம் பார்த்தேன். காலேஜ் வந்ததும் அனைவரும் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தோம்.

"டேய் என்னடா மாப்ள, இப்படி சொல்லிட்டுபோறா.. இப்ப என்ன செய்யப்போற?.." என்று மூர்த்தி கேட்டதும் "டேய் அவள்.. சும்மா சொல்றாடா; அவளோட கண்ணே காட்டிக்கொடுத்துவிட்டது. அவ என்னையத்தான் லவ் பண்றாடா.., அவளை முதல் தடவை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. அவளும் லவ் பண்றான்னு.." என்று நான் சொன்னதும் "அடப்பாவி., இதெல்லாம் தெரிந்து வச்சிருக்கியா..பயங்கரமான ஆளுதான் நீ" என்ற ஜேம்ஸ் என்னை கட்டிபிடித்தான். ஐந்துபேரும் சேர்ந்து என்னை தூக்கி அவர்கள் என்னோட சந்தோசத்தில் பங்கெடுத்தனர்.

"டேய்.. இரண்டாவது பிரீயட் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு.. ஊர சுத்த போயிராதீங்க..பின்ன வாத்தி பெயிலாக்கி விடுவார்" என்றேன் அவர்களிடம். "டேய் கரெக்டா வந்திருவோம்; கவலைப்படாதே" என்றபடி கேண்டீனுக்குள் அவர்கள் சென்றதால் நான் உள்ளே சென்றேன்.

இதற்குள் எங்க கிளாஸ் பிள்ளைகளுக்கு என்னோட லவ் மேட்டர் தெரிஞ்சிருச்சிபோல.. பரட்ட மாதிரி பத்த வைச்சிட்டாளுக. எங்க கிளாஸ்க்கு உள்ளே நுழையும்போது அவர்கள் பேசிக்கிட்டிருந்தது என் காதில் விழுந்தது. "ஏண்டி மாலா.. நம்ம அருண் பார்த்தியா..ஜூனியர கரெக்ட் பண்ணிட்டான்.. அருணோட ஆள் செம கியூட்டுடி.. நாமளும் இவ்வளவு நாளும் ரூட் விட்டுக்கிட்டிருந்தோம். சிக்குனான இந்த பயல்.. இதுக்கெல்லாம் லக் வேணுன்டி" என்றாள் கார்த்திகா. "ஏய் என்னாங்கப்பா.. நாந்தான் உங்க பேச்சா இருக்கேன் போல.. பொறாமை பிடிச்சவளுகளா.. போங்கடி" என்றபடி வெளியே வந்த நான் திடுக்கிட்டேன். அங்கே பிரியா கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

எங்க கிளாஸ் அருகில் உள்ள சுவற்றில் பிரியா வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தாள். "என்ன நீங்க.., நான் லவ் பண்றதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கிட்டிருக்கீங்க சீனியர். இதெல்லாம் நல்லாஇல்லை ஆமா சொல்லிட்டேன்" என்று செல்லமாக சொன்னாள். "ஏய் பிரியா., நானா சொல்லல.. எல்லோரும் மோப்பம் பிடிச்சிட்டாளுக. அவர்கள் என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ். அவர்கள் நாம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க.. ரொம்ப ஆர்வமா இருக்காங்க.. எப்படி சொல்லாம இருக்கமுடியும்.. சொல்லு" என்றேன்.

"சரிசரி.. உங்கள்ட்ட கொஞ்சம் பேசணும்.. சாயங்காலம் கிளாஸ் முடிஞ்சதும் கேண்டீனுக்கு பின்னாடி உள்ள ஆலமரத்தடிக்கு வந்திருங்க.. ஐ லவ் யூ மை டியர் அருண்" என்றுசொல்லி முத்தம் ஒன்று கொடுத்தாள்.

"இது காணாது சாயங்காலம் வரைக்கும் போதாது., இன்னும் வேணும் பிரியா.. அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்..எனக்கு இரண்டாவது பிரீயட்டிலிருந்து சாயங்காலம்வரைக்கும் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு.,சாயங்காலம்தான் முடியும். கொஞ்சம் லேட்டாகும்; பரவாயில்லையா..சரியா மை டியர் டார்லிங்" என்றேன். "அதெல்லாம் எனக்கு தெரியாது..எனக்கு கிளாஸ் முடிஞ்சதும் போன் பண்ணுவேன்.. வந்திரணும் என்ன" என்றாள்.

"டார்லிங் 5மணிக்குதான் முடியும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன் பிளீஸ்" என்றேன்.

"சரி சரி சீக்கிரம் வந்திருங்க மை டியர் சீனியர்" என்று புன்னகைத்தபடியே சென்ற அவள் எதிரில் அவளுடைய கிளாஸ் லெக்சரர் வந்திட்டார். "என்ன இங்க நடக்குது" என்று கேட்டார். உடனே அவள் பதில் சொல்லும்முன் நான் முந்திக்கொண்டு "ஒண்ணுமில்ல சார். அவளுக்கு ஒரு சின்ன டவுட் கேட்டாள் சொல்லிக்கொடுத்தேன். நீ போம்மா" என்றேன். ஆங்!..ஆங்!!.. தலையாட்டியபடியே சென்றார்.

நான் வேகவேகமாக சால்ட் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருந்தேன். எல்லாத்தையும் எல்லோருக்கும் முன்னாடியே தயார் செய்து மைக்ரோஅவனில் 2 மணிநேரத்துக்கு வைத்துவிட்டு காத்திருந்தேன். "டேய் அவனுக்கு இன்னிக்கி கச்சேரி இருக்குபோல..எப்பவும் கொஞ்சம் லேட்டாதான் செய்வான். இன்னிக்கி பாரு படு ஸ்பீடா செய்றான்" என்று மூர்த்தி இஸ்மாயிலிடம் சொன்னான். "டேய்.. அவனபாருடா என்னவேகமா பிரிசிபிடேட் செய்றான். நீயும் வேகமாக செய்யுடா... நீ என்ஜாய் பண்ணு மாப்ள" என்றான் இஸ்மாயில்.

நாலுமணி ஆகி காலேஜ் விட்டாச்சி..எங்களுக்கு இன்னும் பிராக்டிகல் கிளாஸ் முடியல. அந்த சமயத்தில் எனக்கு பிரியாவிடமிருந்து போன்வந்தது. "ஆஹா வந்திருச்சிடா அவனுக்கு.." , "என்னது பிரிசிபிடேட்டா.," , "இல்லப்பா அவனுக்கு சிக்னல்" என்று என் அருகில் இருந்த மூர்த்தியும் இஸ்மாயிலும் பேசிக்கொண்டிருந்தனர். "டேய் வேகமாக செய்து காண்பிச்சிட்டு வெளிய வரப்பாருங்கடா.. சார் அங்கயிருந்துக்கிட்டு உர்ன்னு பார்த்திக்கிட்டு இருக்காரு. பேசமா சீக்கிரம் செய்யிற வழியப்பாருங்கடா.."என்று நான் அவர்களைப்பார்த்து புன்னகைத்தபடியே என்னுடைய பிரிசிபிடேட் காண்பிக்க சென்றேன்.

"என்ன அருண்.. இவ்வளவு நேரமாயிருச்சி.. நாலரையாயிருச்சே.." என்றாள். "சொல்லுவம்மா நல்லா சொல்லுவம்மா.. லேப்ல சால்ட் பிரிசிபிடேட் கொண்டு வர்றதுக்குள்ள எவ்வளவு நேரமாகும் தெரியுமா.. நீயும் தேர்ட் இயர்ல செய்யத்தானே போற.. அப்பதெரியும்" என்று நான் சொன்னதும் சரி டியர் என்றாள்.

"காலையில் கொடுத்தது பாக்கி இருக்கே.. அத தரக்கூடாதா" என்றபடி அவளை நெருங்கினேன். "ஏய் என்ன பக்கத்துல வாரே.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். சரி நம்ம குடும்ப விசயத்தபத்தி பேசுவோமா" என்றாள்.

உடனே நான், "என்பெயர் அருண். வயது 21 மாநிறம். 5 அடி 5 அங்குலம். அப்பா பெயர் ஆவுடையாப்பிள்ளை. அம்மா பெயர் பார்வதி. எனக்கு இரண்டு தம்பி ஒரு தங்கை. 2 தம்பிகளும் படிக்கிறாங்க. தங்கை படிக்கலை. அப்பா ஒரு அரிசி ஆலையில் வேலைப்பார்க்கிறார். வீட்டில் கொஞ்சம் கஷ்டம். அப்பா கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார். நான் காலர்ஷிப்பில் படிக்கிறேன்" என்று நான் சொன்னதும் பிரியா கடகடவென சிரித்தாள்.

என்னப்பா சிரிக்கிற என்றதும் "இல்லீங்க ஸ்கூல்ல மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறமாதிரி நீங்க சொன்னதும் எனக்கு சிரிப்பு தாங்கலை" என்றபடி சிரிப்பை விட்டுவிட்டு நினைத்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அட போப்பா என்று நான் பொய்க்கோபம் ஆனதும் "சரி சரி டியர். என்னை பற்றி சொல்லணுமின்னா, வீட்டில் நானும் என்தம்பியும்தான். அப்பா பிசினஸ் கான்ட்ராக்டர். சொத்துபத்துன்னு தோட்டம்துரவுன்னு எக்கசக்கமா இருக்கு. அப்பா பெயர் மாணிக்கம்; அம்மா புஷ்பலதா" என்றாள்.

அப்படியே கொஞ்சம் பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதேதெரியவில்லை. அய்யயோ நேரமாயிருச்சே என்றபடி இருவரும் பஸ்ஏறி எங்கள் ஊருக்கு சென்றோம்.

இப்படியாக இரண்டுநாள்கள் கழிந்திருக்கும். ஒருநாள் நான் பிரியாவை பார்க்க சென்றேன். அவள் லேப்புக்கு சென்றிருந்ததும் அவளை தேடி அங்கு சென்றேன். பிரியா லேப்பில் பிராக்டிகல் செய்யாமல் சும்மா நின்றாள். என்ன என்றேன் அவளிடம். "அருண் நான் இன்னக்கி என்னோட கப்போர்ட் சாவி கொண்டுவரலை, மறந்துட்டேன். என்ன செய்யன்னு தெரியல.. சார் சத்தம்போட்டுட்டார்" என்று சொன்னாள். நான் உடனே என்னோட கப்போர்ட் சாவியை எடுத்துகொடுத்தேன்.

இதில் என்ன ஒற்றுமை என்றால், என்னோட டேபிளும் அவளோட டேபிளும் ஒண்ணுதான். அந்த டேபிளில் நாலு கப்போர்ட் இருக்கும். பர்ஸ்ட் இயர், செகண்ட் இயர், தேர்ட் இயர் மாணவர்களுக்கு ஆளுக்கொரு கப்போர்ட் கொடுத்திருப்பாங்க. அதில் நமக்கு கொடுத்த சாமான்கள் கண்ணாடிக்குடுவை, பியூரெட், பிப்பெட், அடுப்பு, பீங்கான் தட்டு, கோட் என்று வேதியியல் மாணவர்களுக்கு உண்டான சாமான்கள் இன்னும் நிறைய இருக்கும். எதாவது உடைந்துவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அவரவர் பொறுப்பு. ஆண்டு முடியும்போது எல்லாத்தையும் திருப்பிக்கொடுக்கணும். இல்லைன்னா ஃபைன் போட்டிருவாங்க.

அதனால் என்னோட சாவியை கொடுத்ததும் அவளுக்கு சந்தோசம் முகம் மலர்ந்தது.

நான் என்னோட வகுப்பறைக்கு வந்து பாடங்களை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும் லேப் அட்டெண்டர் எங்க வகுப்புக்கு வந்து பாடம் நடத்தி கொண்டிருந்த ஹச்ஓடி யிடம் வந்து காதில் குசுகுசுவென ஏதோ சொன்னதும் அவரோட முகம் கலவரமானது. உடனே ஹச்ஓடி அவசர அவசரமாக லேப்பை நோக்கி ஓடினார்.

நாங்கள் அனைவரும் சூழ்நிலையறிந்து அவருடைய பின்னால் ஓடினோம்.

அங்கே... அங்கே.. அப்போது என்னோட பிரியா மயக்கமுற்று கிடந்தாள். எல்லோரும் அவளை நினைவுக்கு கொண்டுவர போராடினோம். இதற்குள் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டாங்க.

பிரியாவுக்கு மயக்கம் தெளிந்து கண்ணை திறக்க முயற்சித்தாள் அவளால் கண்திறக்க முடியவில்லை. வலியால் துடித்தாள்..

ஆம்புலன்ஸ் வந்து அவளை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. நானும் பின்னால் ஓடினேன்....

தொடரும்...

,

Post Comment

Tuesday, June 22, 2010

ஜூன் 22 - நீண்ட பகல் ஏன்

ஸ்யப்பா.. என்னா வெயிலு.. 53 டிகிரி வெயிலை இப்போது சமாளிக்கமுடியவில்லை. அனலா கொதிக்கிறது. எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் அதிகமான வெப்பம். என்ன செய்வது சம்பாதிக்கணும் என்று வந்திட்டோம். இதெல்லாம் கடந்துதான் ஆகணும். புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இனி பிற்காலத்தில் என்னநடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாத ஒன்று.

அண்டம் என்பது எண்ணிடலங்கா நட்சத்திரங்களும் கோள்களும் அடங்கிய ஒரு பால்வெளி. கண்ணுக்கு தெரியாத புலப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னுகின்றன. அதில் நம் கண்ணுக்கு தெரிந்த அருகிலுள்ள சூரியன் ஒரு நட்சத்திரம். சூரியனுக்கு 9 கோள்கள் நீள்வட்டபாதையில் சுற்றிவருகின்றன. இந்த ஒன்பது கோள்களுக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட துணைக்கோள்கள் உண்டு. நம்முடைய பூமிக்கு சந்திரன் என்ற துணைக்கோள் பூமியை சுற்றிவருகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன. இதனால் தான் காலநிலை மாற்றங்கள் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால்தான் இரவுபகல் மாறிமாறி வருகிறது.

இன்று நீண்டபகல். இன்று சூரியன் அஸ்தமனமாவது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஜூன் மாதம் 22ம்தேதி நீண்டபகல். நாம் இருக்கும் இந்த பூமத்திய ரேகை அருகில் இருப்பவர்களுக்கும் வடதிசையில் இருப்பவர்களுக்கும் இன்று நீண்ட பகல். இதே நாள் தென்துருவத்தில் இருப்பவர்களுக்கு இன்று நீண்ட இரவு.

எதனால் இப்படி ஆகிறது என்று நான் கூகிள் மற்றும் இதர தளங்களில் சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீண்ட பகல் எப்படி உண்டாகிறது?.


புவியின் வடகோளம் சூரியனை நோக்கியும் புவியின் தென்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருப்பதால் வடகோளத்தில் பகல்பொழுது மிக நீண்டதாக இருக்கிறது.

இன்று பூமி சூரியனில் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது.

இன்றில் இருந்து பகல்பொழுது மெல்லமெல்லமாக குறையத் தொடங்குகிறது ...!
டிசம்பர் மாதம் 23ம் நாள், வடகோளத்தில் நீண்ட இரவு நாள் ஆகும்.

இந்த நாளில் பூமி, சூரியனில் இருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ளது.


நீண்ட இரவு எப்படி உருவாகிறது?.

வடகோளக் கோடைகாலம் --------21/03--------- வடகோளக் குளிர்காலம்



இந்த ப்ளாஸ் கோப்பை நீங்கள் காண்பதன் மூலம் என்ன காரணம் என்று விளங்கிவிடும். பூமியின் இடத்தை மாற்றிவைத்து பாருங்கள். நீண்டபகலும் இரவும் எவ்வாறு உருவாகின்றன என்பது விளங்கிவிடும்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Monday, June 21, 2010

வரும்வரை காத்திரு - தொடர்கதை

"ஏய்!! பிரியா பிரியா.. என்னாச்சி இவ்வளவு நேரம்.. சீக்கிரம் கிளம்பு., நல்லநேரம் முடியுறதுக்குள்ள அங்கப்போகணும்" என்றேன் என்மனைவியிடம். "என்னதுரை சீக்கிரம் கிளம்பியாச்சோ. உங்களுக்கென்ன ஆம்பளைங்க சட்டுபுட்டுன்னு கிளம்பிருவீங்க.. எங்களுக்கு எல்லாவேலையையும் முடிச்சிட்டு கிளம்புறதுக்குள்ள ஒருவழி ஆயிரும்" என்றாள் பிரியா. "சரிசரி ரொம்ப சலிச்சிக்கிறாதே., சீக்கிரம் கிளம்பு நேரமாயிருச்சி"..என்றேன்.

"இங்க வந்து பாருங்க ராஜா பண்ற வேலைய‌.. அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்கான்.. டேய் சும்மாயிரன்டா" என்று என்மகன் ராஜாவை அதட்டினாள் பிரியா. "அடடா.., என்ன இது உன்னோட"... என்று சொல்லியவாறே அறைக்குள் நுழைந்த நான் திக்கித்து நின்றேன். அங்கே ராஜா, பிரியாவை சேலைகட்ட விடாமல் சேலையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். "ஆஹா.. என்ன அழகு!! என்ன அழகு!!., இப்படி ஒரு தரிசனம் காலையிலே கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும்" என்றேன். உடனே பிரியா, "அய்ய..மச்சானுக்கு ஆசையப்பாரு..",என்றாள். "அய்யய்யோ.. சே சே., நான் இயற்கைக்காட்சிய சொன்னேன்.", என்றேன். "இயற்கைக்காட்சியை ரசிக்கிறஆளப்பாரு.. நீங்க எத ரசிச்சிருப்பீங்கன்னு தெரியும்.. குழந்தைய தூக்கிட்டு வெளியப்போங்க.. நான் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வாரேன். அய்ய.. ஜொள்ளு ரொம்பத்தான் வடியுது.. கண்ணாடியில போயி துடைங்க.." என்றாள் பிரியா.

கையில் வைத்திருந்த ராஜா கீழே இறங்கிவிட்டான். அப்ப‌டியா.. என்முக‌த்துல‌ ஜொள்ளா வ‌டியுது?.. என்ற‌ப‌டி க‌ண்ணாடியில் பார்த்தேன். பார்த்த என‌க்கு ரொம்ப‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஆமா.. என்முகமும் மனதின் நினைவுகளும் கண்ணாடியில் பிரதிபலித்தது.

அப்போது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த வருசம் புது அட்மிசன் நடந்துகொண்டிருந்தது. "டேய் அருண்! நியூ அட்மிசனுக்கு நிறையபேர் கூட்டமாக வந்திருக்காங்க. பிகர்ஸ் நிறைய இருக்கும். வாடா அப்படியே.. நமக்கானது எதாவது இருக்கான்னு ஒரு அட்டடென்ஸ் போட்டுவந்திருவோம்" என்று அழைத்தார்கள். "டேய் போங்கடா., உங்களுக்கு வேறவேலையே இல்லையா.." என்றபடி சென்றேன்.

இது வழக்கமாக வருசாவருசம் நிறையபேர் அட்மிசனுக்கு வருவதும்போவதுமாக இருப்பார்கள். நியூ அட்மிசன்ன்னா கேட்கவா வேண்டும். கொண்ட்டாம்தான். எனக்கும் போகணுமென்ற ஆசைதான். ஆனால் மனது கேட்கவில்லை. கிளாஸ்ரூமை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அப்போது, ஏதோ சிந்தனையில் வந்துகொண்டிருந்த எனக்கு, வராந்தா திருப்பத்தில் வந்த ஆளை கவனிக்கவில்லை. உடம்பு ஒரு குலுக்கலுடன் அதிர்ந்ததும்தான் தெரிந்தது யார்மேலோ நேருக்குநேராக மோதிவிட்டேன் என்று. நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். மோதிய ஆளும் கீழே விழுந்துவிட்டார். நான் மோதியது யாராக இருக்கும் என்று பார்த்த எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. ஒரு 18 வயது மதிக்கத்தக்க பெண்மேல்தான் நான் மோதியது.

எழுந்த எனக்கு சிறிதுநேரம் நினைவுகள் எங்கோ சென்றுவிட்டது. வாவ்.. வாவ்.. என்னே ஒரு அழகு!!.. தங்கசிலைப்போல தளதளன்னு தக்காளிபோல இருந்தாள். என்கண்கள், கால்முதல் தலைவரை அவள்மேனியை ஆராய ஆரம்பித்துவிட்டது. எங்கள் இருவரின் கண்களும் பேசிக்கொள்ள ஆரம்பித்தன. சார் சார்., என்ற தேனினுமினிய குரலைக்கேட்டு சொக்கி நின்றேன். தோளை தொட்டு உசுப்பினாள்; ஓஹோ அழைத்தது அவள்தானோ..

"சாரிங்க, ஏதோஒரு நினைப்புல வந்தநான் தெரியாம மோதிட்டேன்; சாரி சாரி.." என்றேன். "இல்லைங்க நாந்தான் சாரி கேட்கணும். நானும் ஏதோ நினைப்புல வந்து மோதிட்டேன்" என்றாள் அவள். "இப்படி இரண்டுபேரும் எவ்வளவு நேரந்தான் சாரி கேட்டுக்கிட்டே இருப்பது; பரவாயில்லை விடுங்க.. என்ன.. வலிதான் பிச்சிடுச்சி.. எம்மாடி எவ்வளவு பெரிய மோதல்.," என்றபடி கீழே குனிந்து என்புத்தகங்களை எடுக்க கீழே குனிந்தேன். அப்போது அவளும் குனிய என்தலையும் அவள்தலையும் டம் என்ற சத்தத்துடன் பேசிக்கொண்டன. அய்யோ..வலிக்குதே.. இரண்டுபேரும் முனகினோம்.

"என்பெயர் அருண்., உங்க பேரென்ன?.." என்றேன் அவளிடம். "என்பெயர் பிரியா.. ரொம்ப சுவாரசியமா இருந்ததுல்ல நம்ம சந்திப்பு.." என்றாள். "ஆமா இப்படி நடக்குமுன்னு நான் நினைக்கல.. ஆமா உங்களை இதற்குமுன்னாடி இங்க பார்த்ததில்லையே.. நீங்க எப்படி இங்க?.." என்றேன். "நா புதுசா பர்ஸ்ட்இயர் சேர்ந்திருக்கிறேன்" என்றாள் அவள். "எந்த டிப்பார்ட்மென்ட் நீங்க.." என்றதுக்கு "நான் கெமிஸ்ட்ரி" என்றாள். "சரியாப்போச்சி.. நானும் அதே டிப்பார்ட்மென்ட் தேர்ட்இயர், சரி மீண்டும் சந்திப்போம்" என்று அவளிடமிருந்து விடைபெற்றாலும் அவளே என் இதயத்தில் குடியேறியிருந்தாள். போகும்போது அவள் என்னை வெட்கப்பட்டுக்கொண்டு திரும்பித்திரும்பி பார்த்தபடி சென்று கொண்டிருந்தாள்.

சே! என்ன ஒரு அழகு..இப்போது அவள் எப்படி இருப்பாள்?.. என்ற நினைப்பு வகுப்பறையில் நடந்த பாடத்தை கவனிக்கவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்தபின்னும் அவளுடைய முகம் வந்துவந்துபோனது. எங்கே மறுபடியும் பார்ப்போமா என்று மனம் ஏங்கியது. பின்னர் கல்லூரியில் இரண்டுநாள்கள் அவளை பார்க்கவில்லை. அன்றுதான் முதன்முதலாக கவிதை எழுத ஆரம்பித்தேன். அவளே என் எழுத்தில் ஆக்கிரமித்திருந்தாள். இப்படியாக அவளை காணாது ஒருவாரம் போயிருந்தது. என்றாவது சந்திப்போம் என்ற நினைப்புமட்டும் மாறவேஇல்லை.

வழக்கம்போல கல்லூரிக்கு பஸ்ஏற பஸ்நிலையத்தில் காத்திருந்தேன். டேய் மச்சான்.. என்னடா படியில் நிக்காம மேலேஏறி போற..என்ற என்நண்பனுக்காக படியில் நின்றேன். பஸ் சிறிதுதூரம் சென்றிருக்கும். பஸ்ஸை நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க.. என்றபடி பஸ்ஸின் பின்னால் ஒருவர் ஓடிவருவது தெரிந்தது. உடனே டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி குரல்கொடுத்தேன். டிரைவரும் பஸ்ஸை ஸ்லோ பண்ணினார். ஓடிவருபவர் அருகில் வந்த‌தும் பார்த்தால் அட நம்ம பிரியா.. ஓ..பிரியா.. கைகொடுத்தேன். அவள் ஜம்ப் பண்ணி தொத்தினாள். நான் கைகொடுத்து தூக்கியதும் அவள் என்நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். "என்ன பிரியா ஒருவாரமாக ஆளேக்காணோம்.. என்னாச்சி.," என்றேன் அவளிடம்.


தொடரும்..

*********************

அன்புள்ள நண்பர்களே!!

இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் என்னுடைய இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள்.

இந்த கதையின்மூலம் தொடர்கதை எழுத ஆரம்பித்துள்ளேன். இதன் தொடர்ச்சியை இனிவரும் நாட்களில் இதே தலைப்பில் எழுதுகிறேன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Friday, June 18, 2010

மீனு வாங்கலியோ மீனு...

மீனு வாங்கலியோ மீன்னு மீனே.. யம்மோய் மீன் வாங்கிலியோ.. பாய்வீட்டம்மா, நல்ல நல்ல மீனெலாம் இருக்கு.. உனக்குன்னு பந்துசா கொண்டுவந்திருகேன்லா..

ஏலா சாச்சி, இந்தா முதல்ல.. இந்த நீசுத்தண்ணியக்குடி.. அப்புறம் மீனு விக்கலாம். என்ன மீனெலாம் வச்சிருக்கே??..

நெத்திலி, ஆரா, கெண்டை, கெழுத்தி, இப்படி நிறைய இருக்குமோய்..

விலையெல்லாம் ஆனை வில குதிர வில சொல்லுவியேலா..

என்ன சாச்சி.. இப்பூடி கேட்டுட்டே..விலய பத்தி உனக்கென்ன கவல?.. அதான் உன்வீட்டுக்காரவுக வெளிநாட்டுல்ல இருக்காவ.. நல்லா ஆக்கிபொங்கி சாப்பிடுலா.. கஞ்சத்தனமா இருக்காதலா..

ஆமா நீபாட்டுக்கு சொல்லிருவ..அவுகபடுத கஷ்டம் உனக்கெங்க தெரியப்போவுது?..

ஆமா ஒன்மாமியாரக்காணோம் எங்கப்போனாக சாச்சி..

அவுகளும் மாமாவும் சொந்தக்கார வீட்டுக் கலியாணத்துக்கு போயிருக்காவ..

அப்டியா.. ஆமா ஒன்மாமனார் மாமியார்கூடவா கூட்டுகுடித்தனமிருக்கே.. தனிக்குடித்தனம் போவலியா..

எலா சாச்சி.. என்ன இப்படி குண்டத்தூக்கிப் போடுற.. மீன்னு விக்க வந்தோமா..போனோமான்னு இல்லாம என்ன பேச்சி இது செத்த பேச்சி.. அத நான் பார்த்துக்கிறேன். சரி சரி அந்த கெழுத்தில ஒரு கிலோ சட்டுபுட்டுன்னு போடுட்டு கிளம்பு.. பேச்சப்பாரு பேச்ச..

நான் என்ன சொல்லிப்புட்டேன்ன்னு இப்படி தய்யதக்கான்னு குதிக்கிற.. ஊருல உலகத்துல நடக்காததையா சொல்லிப்புட்டேன்.. புதுசா கல்யாணமாயிருக்கே., எதோ சொல்லணுமின்னு தோணிச்சி.. வாரேன் ஆத்தா..

ரொம்பத்தான் சலிச்சிக்கிற.. போ..போ.. மீன்னு விக்கிற வழியப்பாரு..

மீனு வாங்கலியோ மீன்னு மீனு..

,

Post Comment

நீ நான் அவள்


நீ நான் அவள்
இது தமிழ் இலக்கணமல்ல‌
அருகில் நீ இலக்கணமாய்
தொலைவில் அவள்
இலக்கணம் மறந்து
யாரையோ அழைத்தபடி..

,

Post Comment

Tuesday, June 15, 2010

ரயில்பாதை குண்டுவெடிப்பு

ரயில்பாதை குண்டுவெடிப்பு செய்தியை நேற்றுமுன்தினம் கேட்டபோது மனம் பதபதைப்பாக இருந்தது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டிக்கும், பேரணி ரயில் நிலையத்துக்கும் இடையே சித்தணி என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.இதில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது.

சேலம் எக்ஸ்பிரஸ் அப்பாதையை கடந்த சில நிமிடங்களில் குண்டு வெடித்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு சத்தம் கேட்டு என்ன என்று பார்த்தபோது குண்டுவெடிப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பேரணி ரயில் நிலையத்தை உஷார்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மலைக்கோட்டை ரயில் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

நல்லவேளை எந்தவிதமான அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை.

**************

ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைக்கும்போது சிறுவயதில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

மலையூர் ஒரு அழகான சிற்றூர். அழகிய வயல்வெளிகளும் தோட்டங்களும் பசுமை நிறைந்த ஊர். பக்க்த்து ஊரில் உள்ள பள்ளியில் கண்ணன் ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தான். தினமும் 6 கிலோமீட்டர் நடந்து சென்று படித்துவந்தான். அவனது குடும்பம் ஏழ்மையானது. பள்ளிச்சீருடை வாங்கமுடியாததால் கலர்ச் சட்டைதான் அணிந்துவருவான். மற்ற பிள்ளைகள் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது படிப்பில் கவனம்செலுத்தி முதல்மாணவனாக இருந்தான்.

ஒருநாள், தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் பள்ளிக்கு மதியத்துக்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கண்ணன் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தான். அப்போது வழியில் ரயில் இருப்புபாதை குறுக்கிட்டது. வேடிக்கை பார்த்தபடியே வந்த கண்ணன், மழையினால் ரயில்பாதை அரிப்பு ஏற்பட்டு துண்டாக உடைந்திருந்ததை பார்த்ததும் மனம் திகைத்து போய்விட்டான். தூரத்தில் ரயில்வரும் சப்தம் கேட்டது.

கண்ணனுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. ரயிலை உடனடியாக நிறுத்தவேண்டும். யாரும் வருவார்களா என்று அங்குமிங்கும் ஓடினான். கண்ணுக்கு எட்டியதூரம் யாரையும் காணவில்லை. ரயில் அருகில் வந்துகொண்டிருந்தது. உடனடியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவன் போட்டிருந்த‌ சட்டை சிவப்புக் கலரில் இருந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறே ரயிலை நிறுத்த முயற்சி செய்தான்.

ரயில்வரும் திசையில் சட்டையை கொடிபோல அசைத்துக்கொண்டே வேகமாக ஓடினான். இதை கவனித்த ரயிலின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். நடந்த சம்பவத்தை கண்ணன் எல்லோரிடமும் கூறினான். அனைவரும் திகைத்தனர்; பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கண்ணனை அனைவரும் பாராட்டினர்

*************

தீவிரவாத‌த்தை ஏன் கைவிட மறுக்கின்றார்கள் என்றே தெரியவில்லை????..

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Friday, June 11, 2010

வெளிநாட்டில் வாழும் குடும்பங்கள்


இன்று அமெரிக்காவில் இருக்கும் பதிவர் சித்ராக்காவுடன் மின்னஞ்சல் உரையாடலின்போது இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சித்ராக்கா, "உங்க பேமிலி இந்தியாவுலயா இருக்காங்க?. அப்புறம் எனக்கு ரொம்ப நாளா கேட்கணும் என்ற கேள்வி இது.. ஏன் ஸ்டார்ஜன், ஏன் மிடில் ஈஸ்டேர்ன் நாடுகளில் வேலை பார்க்கும் நிறைய பேர்கள், தங்கள் குடும்பத்தை தங்களுடன் கூட்டி கொண்டு போவதில்லை? அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் போறவங்க கூட்டிட்டு போறாங்களே!! - அதான் கேட்டேன்...." என்று கேட்டார்.

எனக்கு உடனே இது குறித்து ஒரு இடுகை எழுதவேண்டும் என்று தோன்றியது. அதனால் உண்டான கருத்து பரிமாற்றம்தான் இந்த இடுகை. இதை எழுதவைத்த சித்ராவுக்கு என் நன்றிகள்.

இது சற்று சிந்திக்கவேண்டிய கேள்விதான். பொதுவா வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் மனைவி,மக்களை பிரிந்துதான் விமானத்தில் ஏறுகிறார்கள். உள்ளம் இந்தியாவில் பயணிக்க உடலோ போகவேண்டிய நாட்டுக்கு பயணிக்கிறது. பிரிவின் சோகத்துக்கு எந்த அளவுகோலும் கிடையாது. இந்த சோகம், ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒருவாரமோ அல்லது ஒருமாதமோ நீடிக்கும். அதிகபட்ச சோகம் அவரவர் மனநிலையை பொறுத்தது. இது மத்தியகிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கும் பொருந்தும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை பற்றி இந்த இடுகையில் எழுதியிருந்ததை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வெளிநாட்டு வாழ்க்கையே கஷ்டமான ஒன்று.

மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிபவ‌ர்கள் தங்களோடு குடும்பத்தை அழைத்து செல்லாததுக்கு இதுதான் முக்கிய காரணங்களாக இருக்கமுடியும்.

1. பொருளாதார பிரச்சனை.
2. இங்குள்ள தட்ப‌வெப்ப காலநிலை மற்றும் மருத்துவ வசதி
3. பிள்ளைகளுக்கு படிப்பு கெடும். தரமான கல்வி இல்லாதது.

பொருளாதார பிரச்சனைகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போதே குறைவான சம்பளத்துக்கு ஒப்புதல் பெற்றபின்தான் தேர்ந்தெடுத்துதான் அனுப்புகின்றனர். குறைவான சம்பளம் வாங்குபவர்களால் எப்படி குடும்பம் நடத்தமுடியும்?. இங்கே குடும்பங்களோடு இருப்பவர்கள் எல்லோரும் நல்ல‌ கம்பெனியில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கம்பெனியில் வீடுவசதி, இதர சலுகைகள் கிடைக்கின்றன. அதனால் அவர்களுக்கு தங்குதடையின்றி குடும்பங்களை கவனிக்கமுடிகிறது.

குறைவான சம்பளம் வாங்குபவர்கள்... அதிகவேலை, குறைவான சம்பளத்தால் குடும்பத்தை நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இப்போது எல்லோரும் குடும்பத்தை அழைத்துவரலாம் என்ற அறிவிப்பு சவூதி அரசாங்கத்தால் அறிவிக்கப்படிருக்கிறது. இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சிதான். காலையில் வேலைக்கு சென்றால் இரவு வீடு திரும்புபவர்களும் உள்ளனர். அவர்களால் எப்படி குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடியும்?.

தட்பவெப்ப காலநிலை மற்றும் மருத்துவ வசதிகள்

மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை உங்களுக்கே தெரியும் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இந்த நாடுகள் அமைந்துள்ளன. அதிக வெயில், அதிக குளிர், புயல்மணற் காற்று, இன்னபிற இன்னல்கள் உண்டு. இந்த தட்பவெப்ப நிலை இங்கு வேலை செய்பவர்களுக்கே ஒத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலே வாழ்ந்து வந்தவர்கள் திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் குடும்ப அங்கத்தினருக்கு ஒத்துவரவேண்டுமே... பிள்ளைகள் நலன்தான் முக்கியம். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ வசதிகள் அவ்வளவாக தரமானதாக இருப்பது கிடையாது.

நம்நாட்டில் உள்ள மருத்துவ வசதிகள் இல்லாதது பெரிய குறை. ஒரு தலைவலி காய்ச்சல் என்றால் நாம் பெனடால் என்ற மாத்திரையைத்தான் தேடிச் செல்கிறோம். மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இங்குள்ள டாக்டர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்களுக்கு ஏற்ற மருத்துவ சாதனங்கள் கிடையாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

பிள்ளைகளுக்கு தரமான கல்வி இல்லாதது

மத்தியகிழக்கு நாடுகளுக்கு வருபவர்களுக்கு இந்தியாவில் நம்பிள்ளைகளின் படிப்பை மூட்டைகட்டி விட்டுதான் விமானத்தில் ஏறவேண்டும். படிப்பு அதோ கதிதான். படிக்கவைக்க நல்ல கல்விச்சாலைகள் இல்லாததும் ஒரு காரணம்தான். நம்மூரை போல கல்விநிலையங்கள் இங்கு இல்லை. இருக்கும் பள்ளிகளில் எல்லா வெளிநாட்டினரின் குழந்தைகளும் படிக்கின்றனர். எல்லோருக்கும் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இதுபோன்ற காரணங்களினால் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை அழைத்துவர தயக்கம் காட்டுகின்றனர். அதுபோக அவரவர் மனநிலையை பொறுத்தது.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Wednesday, June 9, 2010

கறுப்பு வெள்ளை


"மாமா... ரெண்டுநாளா போனே ஒர்க் ஆகல. காலையில ராயபுரம் போய் டெலிபோன் எக்சேஞ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திருங்க. அப்புறம் அந்த ரோட்டிலே கிழக்கால இருக்கிற கேஸ் கம்பெனியோட ஆபீஸ்ல புக் பண்ணி பத்து நாளாச்சே கேஸ் என்னாச்சின்னு கேளுங்க, சரியா மாமா," என்று என் மருமகள் மல்லிகா சொன்னாள்.

"சரிம்மா," என்றபடி தலையாட்டினேன்.

"அப்புறம் சொல்லமறந்திட்டேன் மாமா, மத்தியானம் உங்க பேரன் பேத்தியை ஸ்கூல்லருந்து கூட்டியாந்து சாப்பாடு கொடுத்திட்டு மறுபடியும் ஸ்கூல்ல விட்டுருங்க மாமா. சாயங்காலம் சும்மா இருக்கிற நேரத்துல அந்த பைனான்ஸ் கம்பெனியில சீட்டு போட்டிருந்தோமே, அங்கபோய் சீட்டு ஏலம் என்னாச்சின்னு கேட்டுட்டு வரும்போது வீட்டுக்கு தேவையான சாமான்ல்லாம் வாங்கியாந்துருங்க மாமா."

"நான் நைட்டுவந்து சமைக்கணும்.. உங்களை அனுப்புறதுக்கு வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்ய..? நானும் உங்க பிள்ளையும் வேலைக்குப் போனா வர்றதுக்கு நைட்டு ஆகிறது, என்ன செய்யன்னு தெரியல மாமா..." என்றபடி மல்லிகா தன் அறைக்குச் சென்றாள்.



"சரிம்மா சரிம்மா," என்று வார்த்தைகள் தான் பேசியதே தவிர உள்ளம் ஒட்டவில்லை. என் படுக்கையை விரித்துக் கொண்டிருந்தபோது அருகில் என் செல்லக்குட்டிகள் பேரன் கார்த்திக்கும் மலரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

கார்த்திக்கின் காலில் கடித்த கொசுவைத் தட்டிவிட்டுக் கொண்டு போர்வையை எடுத்து போர்த்திவிட்டேன். இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஃபேனை அவர்கள் பக்கம் திருப்பி என் உடலை படுக்கையில் சாய்த்தேன்.

மனம் பலவற்றை அசைப்போட்டபடி இருந்ததால் என்னால் உறங்க முடியவில்லை. எப்போ உறங்கினேன் என்று தெரியாது.

*****

"தாத்தா தாத்தா இந்த ஜட்டிய போட்டுவிடு," என்றபடி வந்த கார்த்திக்கின் குரல் கேட்டு விழித்துப் பார்த்தேன். ஆஹா இன்னக்கி ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல. கண்ணெல்லாம் அழுத்தியது.

"டேய் கார்த்திக், தாத்தாவோட கண்ணாடிய எடுத்துத்தாப்பா," என்ற என் குரல் அவனுடைய விளையாட்டில் கரைந்து போனது. தட்டுத் தடுமாறி கண்ணாடி அணிந்தேன்.

"ம்ம்.. ம்ம்.. தாத்தா இங்கப் பாரு என்னோட பென்சில் முனையை கார்த்திக் உடைச்சிட்டான்; நா எப்படி எழுதுவேன்," என்று கண்ணை கசக்கிய மலருக்கு, "ஓகே ஒகே இதுக்கெல்லாமா அழுவாங்க என்ன பொண்ணு... நா உனக்கு பென்சில் சீவித் தாரேன், அழக்கூடாது என்ன? இந்தாப் பாரு பென்சில் சீவுனதுக்கு அப்புறம் எப்படி அழகா இருக்குபாரேன்," என்று பென்சிலைக் கொடுத்தேன்.

"தாத்தா, எங்க மிஸ் பேரன்ட்ஸ கூட்டிட்டு வரச் சொன்னாங்க. மம்மிட்ட சொன்னா தாத்தாவ கூட்டிட்டு போன்னு சொல்றாங்க. ஏன் தாத்தா, மம்மியும் டாடியும் வரமாட்டேங்கிறாங்க?"

"அவங்களுக்கு நிறைய வேலையிருக்கும், அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது. நான் வாரேன்... சரியா?" என்று மலரின் தலையை தடவிகொடுத்தேன்.

இருவரையும் ஸ்கூலில் விட்டுட்டு ராயபுரம் செல்வதற்கு பஸ் ஏற காத்திருந்தேன். வந்த இரண்டு பஸ்ஸிலும் வாசலில் தொங்கியபடி நின்றனர். அடுத்த பஸ்ஸில் ஏறினால்தான் சீக்கிரமாக ராயபுரம் போய்விட்டு, கார்த்திக்கும் மலருக்கும் சாப்பாடு கொடுக்க போக முடியும். வந்த பஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன்.

பஸ்ஸில் ஒரே கூட்டம். நிற்ககூட இடமில்லாமல் ஒருவருக்கொருவர் இடித்துகொண்டு நின்றனர். எனக்கு கிடைத்த குறுகிய இடத்தில் ஓடுங்கி நின்றேன். பஸ் கூரையில் மேலுள்ள கம்பியை பிடித்தபடி எவ்வளவு நேரந்தான் நிற்பது? பேலன்ஸ் கிடைக்காமல் அங்குமிங்கும் தள்ளாடினேன். வயசானாலே இப்படித் தானோ?

"இந்தா பெருசு ரொம்ப நேரமா சரக்கடிச்சவன் மாதிரி தள்ளாடிக்கிட்டே இருக்கே... இப்படிக்கா குந்து," என்ற இளைஞனை நன்றியுடன் பார்த்தபடி சீட்டில் அமர்ந்தேன்.

பேப்பரில் அக்னி நடசத்திரம் தொடர்கிறது என்று படித்த ஞாபகம். தாகம் தொண்டையை அடைத்தது. டெலிபோனுக்கு கம்ப்ளைண்ட் கொடுத்திட்டு கேஸ்ஸுக்கு சொல்லிட்டு வெளியே வர்றதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சு.

*****

ஆஹா மணி பன்னிரெண்டாகிருச்சே... கார்த்திக்கு ஸ்கூல் விட்டிருக்குமே! அரக்கபரக்க பஸ் பிடித்து ஸ்கூலிலிருந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

இருவருக்கும் சாப்பாடு கொடுத்து ஸ்கூலில் விட்டுவிட்டு வர்றதுக்குள் மணி ரெண்டாகிவிட்டது. தட்டில் உள்ள சாதம் வயிற்றில் செல்ல முடியாமல் திரும்பியது. எதிரே செண்பகம் சிரித்துக் கொண்டிருந்தாள் மாலையுடன். 'ஆமா உனக்கென்ன கவலையில்லாமல் போய் சேந்திட்டே. இங்கே நான் படுகிற அவஸ்தையை யார்ட்ட போய் சொல்லுவேன்? நீயும் போய்ச் சேர்ந்திட்டே... சே... என்ன வாழ்க்கையிது?' மனம் ஒரு நிலையில் இல்லை. கண் மூடினேன்.

நான்கு மணிக்கு ஸ்கூல் விட்டதும் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

"ஏய் மலர் தம்பிய பாத்துக்கிறணும் என்ன..? தாத்தா வெளிய போயிட்டு வாரேன். நல்லபடியா இருக்கணும்; சேட்டைகள் எதுவும் செய்யாம சமர்த்தா இருக்கணும் என்ன சரியா," என்றேன்.

"தாத்தா எப்போ வருவ?"

"வருவேன்," என்று அவர்களிடம் விடைபெற்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். ஜன்னலோர இருக்கையில் மாலை நேரத்து இளம்வெயில் என்னை வரவேற்றது. மனம் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல கனமானது. மனம் பல நினைவுகளை அசைபோட்டபடி என்னோடு பயணித்தது.

'கிராமத்துல விவசாயம் பண்ணிக்கிட்டிருந்த எங்க அப்பாரு ஏதோ அவருடைய சக்திக்கு ஏத்த மாதிரி படிக்க வைத்தார். படிப்புக்கான‌ வேலையை விட‌ வயித்து பசிக்கான வேலையில்தான் ஐக்கியமாக முடிந்தது. கல்யாணமான புதிதில் செண்பகத்தோடு இந்த சென்னை மாந‌கரத்துக்கு வந்து கிட்டதட்ட 30 வருசமாச்சி.

எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளமாய் பாஸ்கரும் முத்துவும் பிறந்தார்கள். ஆஹா ஓஹோன்னு இருக்காவிட்டாலும் அப்படி இப்படின்னு உருண்டு பிரண்டு இருவரையும் நன்றாக படிக்க வைத்தேன். அவர்களும் என் பெயரைக் காப்பாத்தி இன்று இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். எங்க பக்கம் வீசிய காற்று, எப்போ இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ அப்பவே திசைமாறியது.

இருவரும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால் நானும் செண்பகமும் அன்னியமானோம். என்ன செய்ய..? எல்லாம் நேரந்தான். செண்பகமும் கவலைப்பட்டு கவலைப்பட்டு அந்த கவலையிலே போய் சேர்ந்திட்டாள்.

டேய் உனக்கும் சேர்த்து வைச்சிக்கோடா என்ற என் நண்பனின் வார்த்தை என் மகன்களின் செயலில் காணாமல் போனது.'

ஆஹா.. என்ன இது? காற்று இதமா வீசுகிறதே... சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. அடடா... மனம்போன போக்குல மெரீனா பீச்சுக்கு வந்திட்டேன் போல. அதுவும் நல்லதுக்குதான் என்று என் மனம் சொல்லியது. கடல் அலை என்னை வா வா என்றழைத்ததற்கு ஏற்ப என் கால்கள் வீறுநடை போட்டன.

"சார் சார் கடலை வாங்கிக்கோங்க சார்..." என்ற குரல் வந்த திசையில் பார்த்தேன். என் வயதை ஒத்த ஒருவர் அங்கே கடலை வித்துக் கொண்டிருந்தார். அந்த தள்ளாத வயதிலும் யாருக்கும் பாரமாக இருக்காமல் உழைக்கும் அவரது எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே... இங்கே தன்னம்பிக்கையுடன் உழைக்கும் எத்தனை எத்தனை கரங்கள்? வா வா என்று ஆர்ப்பரித்த கடலலை அமைதியாக உறங்கியது என் மனதினிலே...

ஆங்.. ஆங்.. தப்பு பண்ணிட்டேனே..! மகனையும் மருமகளையும் நம்பிய நான் என்னை நம்பாமல் போய்விட்டேனே.. கண்முன் என் மகனுக்கு எழுதிய கடிதம் நிழலாடியது...

அன்புள்ள பாஸ்கருக்கும் முத்துவுக்கும்,

உங்கள் வாழ்க்கைத் திரியை ஏற்றிவிட்ட மெழுகுவர்த்தியின் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் முன்னுக்கு வர நான் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறீர்கள். சந்தோசம் அதுதான் தேவை; நீங்க நல்லாயிருந்தா சந்தோசப்படும் நபர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்ளலாமா... மன்னிக்கவும் உங்களை பெற்றெடுத்தவன் என்ற முறையில் சொல்லிட்டேன்.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வார்கள். ஆம்! உங்கள் திருமணம் எனக்கு திருப்புமுனைதான்.

மனைவி என்பவள் நம் வாழ்க்கையில் சரிபாதி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் உங்களுக்கு மனைவிதான் வாழ்க்கையானதால் நானும் என் மனைவியும் தனிமைபடுத்தப்பட்டோம். இந்த உண்மைத் தெரிந்த அவளும் சீக்கிரமே போய்விட்டாள். அவள் என்னை பிரியமனமில்லாமல் அடிக்கடி வாங்கவாங்க என அழைக்கிறாள்.

உங்களுக்கு மனைவி சொல்லே மந்திரம் ஆனது போல எனக்கும்தான். நானும் அவள் வழியிலே செல்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு அப்பா.

*****

ஆங்.. ஆங்.. தப்பு பண்ணிட்டேனே.. மகனையும் மருமகளையும் நம்பிய நான் என்னை நம்பாமல் போய்விட்டேனே... மனதில் புதிய தெம்பு கிடைத்தது. என் கால்கள் தானாக பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைந்தது.

ஆ!! இந்நேரம் என் மருமகள் வந்திருப்பாளே.. அவள் கண்ணில் கடிதம் பட்டிருக்குமோ... தெரியலியே.

அட சே!!... பஸ் ஊர்வலத்தோடு ஊர்வலமாக‌ ஊர்ந்தது.

"தாத்தா... கார்த்திக் தண்ணீரில் விளையாடிக்கிட்டே இருக்கான். ரொம்ப சேட்டை பண்ணுறான்," என்ற மலரின் சொல்லைத் தாண்டி என் அறைக்கு சென்றேன்.

அவனுடைய விளையாட்டில் என் கடிதமும் கப்பலாய் மாறியிருந்தது.

*****

அன்புள்ள நண்பர்களே!! இந்த கறுப்பு வெள்ளை சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறுகதையை தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

,

Post Comment

Sunday, June 6, 2010

அறிவியல் முன்னேற்றங்கள்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா...

இன்று அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பழங்கால மக்களின் வாழ்க்கைமுறை, இன்றைய சூழ்நிலைக்கு ஒப்பிடும்போது ஏணிவைத்தாலும் எட்டாத உயரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை. எந்த வளர்ச்சியும் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை செய்துபாருங்கள்.

இப்போது, எந்த அறிவியல் சாதனமும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். எப்படி உலகம் இயங்குகிறது என்று நீங்களே இந்த புகைப்படங்களை பார்த்து ரசியுங்கள் நண்பர்களே....

























Post Comment

Saturday, June 5, 2010

பதிவுலகம் செய்வது சரியா?.. தவறா?..

நேற்றுமுன்தினம் நான் எழுதிய "சத்தியமா நான்" என்ற கவிதை இடுகை வெளியிட்டிருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு விழுந்திருந்தது. பொதுவா நான் இந்த மைனஸ் ஓட்டுப்பற்றி கவலைகொள்வதில்லை. மைனஸ் ஓட்டுபோடுவது என்பது அவரவர் விருப்பம்தான். ஆனால் நண்பர் உடன்பிறப்பு தன்னோட பதிவில் ஜனரஞ்சக பதிவர் ஸ்டார்ஜன்னுக்கும் மைனஸ் ஓட்டு விழுந்திருக்கிறதே என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

நண்பர் உடன்பிறப்பின் இடுகை இதுதான்.

அதற்கு நொந்தக்குமாரன் என்பவர் கீழ்கண்டவாறு பின்னூட்டமிட்டிருந்தார். அதனை நீங்களே படியுங்கள்:


///நொந்தகுமாரன் said...

உடன்பிறப்பு,

நேற்று நர்சிம் பிரச்சனை குறித்து, பல பதிவுகளையும் படித்த பொழுது.. கலகம் அவர்களின் பின்னூட்டங்களில் ஓட்டளிக்க ஒரு வாய்ப்பு இருந்தது. பதிவின் கருத்தில் உடன்பட்டதால்...நான் வாக்களித்தேன். அதை வாக்களிக்கும் வாய்ப்பை கலகம் அவர்களே செய்திருக்கலாம். இதில் வினவின் டெக்னிக்கல் குழு தான் செய்தது என்பது உங்கள் கற்பனை.

பிறகு, நடுநிலை பதிவுக்கு மைனஸ் ஓட்டு என்கிறீர்களே... அந்த வாக்களித்தது நான் தான். அந்த "ஸ்டார்ஜன்" பதிவு ஊரில் சாதிய ஒடுக்குமுறை நடக்கும் பொழுது...இரு தரப்பினரும் அமைதியாக போக வேண்டும் என 'அமைதி விரும்பிகள்' வேண்டுகோள் விடுப்பார்கள் அல்லவா! அது மாதிரி இருந்தது அந்த பதிவு. அதனால் எதிர் வாக்களித்தேன்.

நர்சிம் என்ற பதிவரால் ஒரு பெண் பதிவர் கேவலமான முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறார். 'உடன்பிறப்பு'கள் எல்லாம் கமுக்கமாய் வேடிக்கைப் பார்க்கும் பொழுது... வினவு அதை தட்டிக்கேட்கிறது. அதையும் கூட ஆதரிக்கும் நேர்மை இல்லாமல், சித்து வேலைகள் என பதிவு போட முடிகிறது என்றால்.. இது எப்பேர்பட்ட கயவாளித்தனம்.

பின்குறிப்பு : இதை நீங்கள் வெளியிடவில்லை என்றால்.. உங்களுக்காக தனிப்பதிவு இட வேண்டியிருக்கும். வெளியிடுவீர்கள் தானே! உடன்பிறப்பு!

6:19 AM ///.


இதுதான் நான் எழுதிய கவிதை:

சத்தியமா நான்...

சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை
மறுநாள் காணாமல்
போயிருந்தது குடிக்கப்
போகும்போது...

எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு.
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்..

நீவருவாய் உணவருந்த
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.

கடையேழு வள்ளல்களைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது அந்தோ பரிதாபம்.

இருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..

இதில் எந்த இடத்தில் நான் நடுநிலைக் கருத்தை சொல்லிருக்கேன்?. இந்த கவிதைக்கும் அந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?.

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க சார்?...

,

Post Comment

Wednesday, June 2, 2010

சத்தியமா நான்...


சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை
மறுநாள் காணாமல்
போயிருந்தது குடிக்கப்
போகும்போது...

எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு.
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்..

நீவருவாய் உணவருந்த
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.

கடையேழு வள்ளல்களைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது அந்தோ பரிதாபம்.

இருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்