Pages

Saturday, May 29, 2010

கயத்தாரிலிருந்து கட்டபொம்மனும் நானும்


அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) நாயக்கர் வம்சத்தில் ஆட்சிபுரிந்தவர் ஜெகவீர பாண்டியன். இவரிடம் அமைச்சராக இருந்த தெலுங்கை பூர்வீகமாக‌ கொண்ட‌ கெட்டிபொம்மு (வீரம் மிகுந்தவர்) என்பவரின் பரம்பரையில் வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனின் இயற்பெயர் வீரபாண்டியன்.

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

அந்த காலகட்டத்தில் வணிகம் செய்ய நம்நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றத் தொடங்கினர். நம்நாட்டை தந்திரமாக ஆங்கிலேயர் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். எல்லா அரசர்களும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டவேண்டும் என்று கி.பி. 1793ல் ஆங்கிலேயர் சட்டம் கொண்டு வந்தனர். இதற்கு நாட்டின் பலபகுதிகளிலிருந்து மன்னர்கள், நம்நாட்டை வெள்ளைக்காரன் அடிமைப்படுத்துவதா என்று வெகுண்டெழுந்தனர். தமிழ்நாட்டிலும் பல மன்னர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

கட்டபொம்மன் திருநெல்வேலி பாளையத்துக்காரகளை ஒன்றுதிரட்டி ஆலன்துரையை எதிர்த்து போரிட்டார். இந்தபோரில் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். பின்னர் நெல்லை கலெக்டராக இருந்த ஜாக்சன் துரையுடனான சந்திப்பு பயனளிக்காமல் போகவே வெள்ளையர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்தார். அக்டோபர் 1, 1799 இல் எட்டப்பனால் காட்டிகொடுக்கப்பட்டு புதுக்கோட்டை மன்னன் தொண்டைமானின் உதவியுடன் ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை கைதுசெய்து கயத்தாறுக்கு கொண்டு வந்தனர்.

அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

************************************

வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி சிறுவயதில் பாடபுத்தகங்களில் படிக்கும்போது பெருமையாக இருக்கும். அப்போதே என்மனதை கவர்ந்தவர் கட்டபொம்மன். என்னுடைய சிறுவயதில் கயத்தாற்றில் இருக்கும் எங்க நன்னி (அம்மம்மா) வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். கட்டபொம்மனை இங்கேதான் தூக்கிலிட்டார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் ஒருதடவை கூட அந்த இடத்தை அப்போது பார்த்ததில்லை.

கயத்தாரிலுள்ள கட்டபொம்மன் சிலை. இதுதான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்.


ஒருநாள் எதோ ஒரு ஊருக்கு சென்றுவிட்டு வரும்போது நன்னி, "எல சேக் இதுதான் கட்டபொம்மன் தூக்குலபோட்ட இடம். பார்க்கணும் பார்க்கணும் என்று சொல்லுவியலே நல்லா பாத்துக்கோ" என்று காட்டும்போதுதான் தெரிந்தது. இதன்பின்னர் கட்டபொம்மன் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டார். நெல்லையில் பாளையங்கோட்டை பேரூந்து நிலையத்துக்கு அருகிலும் கட்டபொம்மன் சிலை உண்டு.

சிறுவயதில் கயத்தாரில்தான் நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்டேன். அங்கே உள்ள சைக்கிள்கடையில் வாடகைசைக்கிள் ஒரு மணிநேரத்துக்கு 50பைசா. சைக்கிள் கடைக்குசென்று எங்கமாமா பேரச்சொல்லுவேன். உடனே கடைக்காரர் "பத்திரமாக ஓட்டு என்ன".. என்றுசொல்லி சைக்கிளை கொடுப்பார். மாமாவிடமிருந்து "ரோட்டுப்பக்கமெல்லாம் போகக்கூடாது" என்று கண்டிப்புடன் அனுமதி கிடைக்கும். நான் எங்கசொந்தக்கார பையனை சேர்த்துக்கொண்டு கட்டபொம்மன் சிலை, குட்டிகுளம், பன்னீர்குளம் என்று மாமாவுக்கு தெரியாமல் சுத்துவேன்.

மாமாவிடம், "மாமா கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடத்தில் எப்படிமாமா சிலை வந்தது?" என்று கேட்டேன்.



அதற்கு மாமா, "இந்தஇடம் ஆரம்பத்தில் வெறும் தரையாகத்தான் இருந்தது. இந்த இடத்தின் மகிமையை தெரிந்து கொண்ட நடிகர் சிவாஜி கணேசன்தான் இந்த இடத்தை வாங்கி அதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை நிறுவினார். சிலை திறப்பு விழா 1970-ம் வருடம் ஜூலை மாதம் 16-ம் நாள் நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டி தலைமை வகிக்க பெருந்தலைவர் காமராஜர் கட்டபொம்மன் சிலையை திறந்து வைத்தார்" என்று மாமா சொன்னபோது பிரமிப்பாக இருந்தது.

மாமா, "கட்டபொம்மனை விசாரணை நடத்தி சிறையில் வைத்திருந்த கட்டடம் போலீஸ் நிலையத்துக்கு பின்னால் உள்ள சந்தைக்கு போகும் தெருவில் உள்ளது. ஆனால் அது இப்போது ரொம்ப சேதமடைந்து உள்ளது" என்றார்.


பாஞ்சாலங்குறிச்சியின் நுழைவாயில். இதிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கட்டபொம்மனின் கோட்டை உள்ளது.



இதனால் எனக்கு ரொம்ப ஆவலானது. அப்படியானால் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமானது. அப்போதைய சூழ்நிலையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு செல்வது இயலாத காரியமாக இருந்தது. இருந்தாலும் என்றாவது ஒருநாள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மட்டும் மாறவே இல்லை.


பின்னர் மாமாவீட்டுக்கு கயத்தாறுக்கு போகும்போதெல்லாம் கட்டபொம்மன் சிலையை பார்க்க தவறுவதில்லை. கல்லூரி படிப்பு முடித்தபின், இந்தகாலத்தில் படித்த படிப்புக்கு ஏத்தமாதிரி எங்கே வேலை கிடைக்குது?.. வீட்டு கஷ்டசூழ்நிலையினால் வேலையை தேடியதில் நிரந்தரமில்லா வேலைதான் மிஞ்சியது. கிடைத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். கயத்தாற்றில் மாமாவுக்கு தெரிந்தவர் டிவிஎஸ் (இருசக்கர வாகன விற்பனை) டீலர்ஷிப் வாங்கினார். அப்போது மாமா, அவரிடம் என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்கே எனக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலை கிடைத்தது.

கயத்தாறில் வேலை கிடைத்ததால் தினமும் வீட்டுக்கு நெல்லை செல்ல முடியாததால் மாமாவீட்டிலே தங்கியிருந்து வேலை பார்த்தேன். எங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள நெல்லை டிவிஎஸ் தான் டிஸ்ரிபியூட்டர். அதனால் தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அலுவலக வேலையாக தூத்துக்குடி, நெல்லை செல்லவேண்டியிருந்தது. இருசக்கர வாகனத்தில்தான் தூத்துக்குடிக்கு செல்வதுண்டு.

இப்போதைய பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ளே இருக்கும் கட்டபொம்மன் நினைவகம்.


அந்த பகுதியில் உள்ள அனைத்துபகுதியும் எனக்கு அத்துப்படி. இந்தநேரத்தில்தான் என்விருப்பமான பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பார்க்கும்வாய்ப்பு கிடைத்தது. கயத்தாரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில்தான் பாஞ்சாலங்குறிச்சி இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. போகும்போதெல்லாம் குறைவான தூரம் கொண்ட வேறவழி இருந்தாலும் பத்துநிமிசமே அதிகம்எடுக்கும் இந்த வழியில் வருவேன்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை செப்பனிட்டு புதிய கோட்டை மதில்சுவர்கள் நினைவகம், அருங்காட்சியகம் விளையாட்டு திடல் எல்லாம் அந்த கோட்டையில் உண்டு. இந்த கோட்டையை 1974ல் அப்போதைய முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திறந்துவைத்தார். இப்போதும் பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் மே மாதம் 14ம் தேதி மற்றும் 15ம்தேதி கட்டபொம்மன் விழா நடைபெறும். இந்தவிழாவில் தூத்துக்குடிமாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

ஆனால் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தவிழாவில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இப்போது விடுமுறையில் சென்றதும் கயத்தார் சென்றிருந்தேன். நான், என்மனைவி, தங்கை தம்பிகள், மாமா பசங்கள் என்று எல்லோரும் கட்டபொம்மன் சிலையை காண சென்றோம். வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் நெல்லை டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்போது கயத்தார் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டபொம்மன் சிலை அமைவிடத்தில் சிறுபூங்காவும், குடிநீர்வசதிகள் அமைத்து நல்லமுறையில் பராமரித்து வருகிறார்கள்.


***********************************

அன்பு நண்பர்களே!! இந்த கட்டுரையை யூத்புல் விகடனுக்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் இந்த கட்டுரையை பாராட்டி குட்பிளாக்ஸ் பகுதியில் முக்கியத்துவத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

,

Post Comment

அவன்

அந்த தெருவில் எல்லா வீடுகளும் உறங்கிக்கொண்டிருந்தன. எங்கும் ஒரே நிசப்தம். அந்த வீட்டை இருகண்கள் நோட்டமிட்டன. சுற்றிலும் ஆட்கள் வருகிறார்களா என்று கண்கள் தேடின. மெல்ல அந்த வீட்டின் அருகில் கால்கள் முன்னேறின. அவன் அந்தவீட்டின் கேட்டை தன் திறமையைக் கொண்டு சத்தமில்லாமல் திறந்தான்.

ஊ..ஊ..ஊஊவ்..ஊவ்..ஊவ் என நாயின் ஊளைச்சத்தத்தால் கலக்கமுற்றாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மெதுவாக முன்னேறினான். திடீரென அந்தவீட்டு நாய் முழித்து சிலிர்த்துக்கொண்டு குரைப்பதற்கு தயாரானது. உடனே அவனுடைய மின்னல்வேக புத்தியினால் கையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை நாயின் முன்னால் வீசினான். அதைப்பார்த்ததும் அவன்பின்னால் வாலாட்டிக்கொண்டே வந்ததை தடவிவிட்டுக் கொண்டு மேலும் முன்னேறினான்.

ஷூவின் சத்தம் கேட்காதவண்ணம் அவனுடைய நடை இருந்தது. ஒரு கம்பீரமான நடை. கண்களில் கண்ணாடியும் தலையில் தொப்பியும் வாயில் சிகரெட்டும் அச்சுஅசல் ஒரு சினிமாஹீரோ போல காட்டிக்கொண்டிருந்தது அவனுடைய தோற்றம். உங்களுக்கு இஷ்டமான ஹீரோக்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

மாடிப்படிகளில் விறுவிறுவென ஏறி ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே வந்தான். அவளின் பெட்ரூமுக்கு அவன் கால்கள் முன்னேறின. தட்டினான் பதில் இல்லாததால் அடுத்த அறையை அவன் கண்கள் தேடி விரைந்தன.

படித்துகொண்டிருந்த அவளுக்கு திக்திக்திக் என்றானது. வேகமான இதயத்துடிப்பால் அவளுக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்துக் கொட்டியது. சத்தமில்லாமல் மெல்ல அடுத்த அறைக்கு சென்று கதவை தட்டினாள்.

என்னம்மா இந்த நேரத்தில்.. என்றபடி அவளுடைய மாமனாரும் மாமியும் மலங்க மலங்க கண்ணை கசக்கியபடி கேட்டனர். அத்தை, மாமா நம்மவீட்டுக்கு திருடன் வந்திருக்கான். எங்கம்மா அவன்.. அடுத்த ரூமில் இருக்கிறான் என்று அவள் சொன்னதும் ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு, மாமா அந்த அறையை நோக்கி முன்னேறினார்.

மெல்ல அறையை திறந்து அவருடைய கண்கள் அவனைத் தேடின. பின்னால் பார்த்தபடியே வந்த அவருக்கு வேகமாக எதன் மேலோ மோதியதுபோல அதிர்ந்து ஏறிட்டார். அடப்பாவி நீயா?!..

நைட் நேரத்துல திகில்நாவல் படிக்காதேன்னா கேட்கிறீயாடி நீ.. என்று அவளை அவன் கடிந்து கொண்டான்.

ஏன்ம்பா நீ நேரத்தோடு வரலாமே.. என்றபடி அவர்கள் சென்றார்கள்.


,

Post Comment

Tuesday, May 25, 2010

படம் பார்க்க வாங்க

அன்பு நண்பர்களே!! எனது மச்சினன் ஷாகுல்ஹமீது கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவர் எனக்கு அழகான புகைப்படங்களை அனுப்பி இருந்தார். சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் எடுத்த புகைப்படங்கள். என்னே ஒரு அழகு.. அந்த புகைப்படங்களை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.



ஆசை ஆசை இப்பொழுது.. பேராசை இப்பொழுது..

கலங்கரை விளக்கம் என்றுமே கலங்காது..

மின்னல் ஒருகோடி எந்தன் உயிர்த்தேடி வந்ததே..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே.. நானும் அங்கே...

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே.. உன்னைத்தேடி வந்து சேதி சொன்ன..


அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்...

ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் தோன்றவே ஒருநாள் போதுமா..

பனிவிழும் மலர்வனம் உன்பார்வை..

செவ்வானம் சின்னப்பெண் தூவும்..


வெள்ளி அப்படியே அள்ளிக்கலாம் போலிருக்கு...

,

Post Comment

Saturday, May 22, 2010

விமான விபத்து - வருத்தத்துடன்


இன்று பொழுது ஏன் விடிந்தது என்று வருத்தமாக உள்ளது. அப்படியே இரவு தொடர்ந்திருக்ககூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஆம் காலையில் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி டிவியில் செய்திகளை கேட்டதும் மனம் ஒரே நிலையில் இல்லாமல் தவிக்கிறது. சொல்லொண்ணாத் துயரம். இதை நினைக்க நினைக்க மனம் தவியாய் தவிக்கிறது.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மனநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மனதுக்குள் விடைத் தெரியாமல் தவிக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து இரண்டு ஆண்டோ அல்லது அதற்கு மேல் ஆண்டுகளோ கழித்து மனைவி மக்களை சந்திக்க நாட்டுக்கு திரும்பும் அத்தனைபேரும் என்ன குற்றம் செய்தார்கள்?. இதோ விமானம் தரை இறங்கப்போகிறது; நம்மை பார்க்க நம் சொந்தங்கள், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறதே, அதை விவரிக்க வார்த்தைகளை எந்த தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லை.

விமானம் தரையிறங்க இன்னும் இத்தனை நிமிடங்களை இருக்கிறது என்று அறிவிப்பு வந்தவுடன் மனம் குதூகலிக்க ஆரம்பிக்கிறது. விமானப் பணிப்பெண் சொல்லும் (கட்டளைக்கு) சீட்பெல்ட் கவன எச்சரிக்கைகளை சந்தோச மனநிலையில் அவர்கள் கடிந்து கொண்டாலும், மனம் அதை பொருட்டாக நினைக்காது. அதேநேரம் விமானம் தரையிறங்கும் நேரம் தடதடவென கேட்கும் சத்தம், சொந்தபந்தங்களை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் காணாமல் போய்விடுகிறது.

விமானம் தரையிறங்கியதும், இமிக்ரேசன் முடிந்து தனது சாமான்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது நமக்குள் ஒரு கம்பீர நடை. சொந்தபந்தங்களை கண்டதும் ஆரத்தழுவி சந்தோசமாய் தத்தம் ஊர்களுக்கு செல்லும்போது என்னே ஒரு ஆனந்தம்.

தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு கரையை கண்டதும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் தண்ணீரில் முழ்குவதுபோல இந்த சம்பவம் வருந்தத்தக்கது. இவ்விபத்துக்கு யார்மேல குற்றம் சாட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. பலியானவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஈடுகட்டமுடியாத இழப்புக்கு நம்மால் ஈடுகட்டமுடியுமா?..

ஒரு விமான சேவை நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். அதிலும் ஏர் இந்தியா விமான சேவை மற்ற நிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவாகவே தோன்றுகிறது. விமானத்தில் விபத்துக்குள் ஏற்படாவண்ணம் பாதுகாப்புகள் அவசியம். ஒவ்வொரு விமான பணிப்பெண்ணும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவைகளை தருதல் நலம்பயக்கும்.

விமானத்தில் கொடுக்கப்படும் லைஃப்ஜாக்கெட் தீயினால் பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஆடைகளை கொடுத்தால் இந்தமாதிரி தீவிபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்கலாம்.

அதேபோல தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். நல்ல ஓடுதளம், விமானம் தரையிறங்கும் நேரத்தில் எந்த இடையூறும் இருக்ககூடாது. விமான நிலையத்தை சுற்றிலும் ஒரு நல்ல தரையாக இருக்கவேண்டும். நான் சொல்லவருவது விமான நிலையத்தை சுற்றிலும் ஆபத்தான பள்ளத்தாக்கோ அல்லது ஆபத்தான இடங்களோ இருக்ககூடாது. எளிதில் தீப்பிடிக்காத புதுரக விமான‌ங்களை தயாரித்து மக்களுக்கு தரமான சேவையை வழங்கலாம்.

இப்போது ஏற்பட்ட இழப்பை யாராலும் திரும்ப பெற இயலுமா?.. இந்த விபத்து நடந்த இடத்தில் சில அசம்பாவித எண்ணங்களை கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பலியானவர்களிடமிருந்து நகைகளையும் திருடிச் செல்கின்றனர் என்பதை நினைக்கும்போது வருத்தமாகவே உள்ளது. எப்படி இந்த கோரவிபத்தை கண்டதும் திருடுவதற்கு மனம் ஒத்துழைக்கிறதோ தெரியவில்லை?..

இனிமேல் இதுபோன்ற விபத்து நடக்காதவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்குமா?..

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யவேண்டும். இந்த இழப்பு ஈடுகட்டமுடியாது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.

கண்களில் கண்ணீருடன் கதறும் குடும்பங்களை காணும்போது துயரம் மேலும் வாட்டுது. அவர்களின் துயரங்களில் பங்கெடுக்கும் உங்கள் ஸ்டார்ஜன்.

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இறைவன் நல்லதொரு ஆத்மா சாந்தி நிலையை கொடுப்பானாக.. ஆமீன். அனைவரும் பிராத்திப்போமாக...

,

Post Comment

Thursday, May 20, 2010

யூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே...

"அய்யா பாருங்கோ; அம்மா பாருங்கோ, இந்த சிருசு பண்ற வேலையை..," என்றார் அவர். அந்த மனிதர் காலில் சலங்கை ஜல்ஜல்லென்று சத்தத்தோடு கையில் சாட்டையை வைத்து தன்னைத்தானே அடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார். பக்கத்தில் 'ஆடுரா ராமா ஆடுரா ராமா' என்ற தாளத்துக்காக‌ குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருந்தது குரங்கா என்று பார்த்தால் அவரது 4 வயசு குழந்தை.

"அம்மா பசிக்குதும்மா," என்றபடி ஒரு பிச்சைக்காரன் அந்தம்மாவிடம் கேட்கிறான். "அப்படியாப்பா இந்தா," என்று கொஞ்சம் சோறும் குழம்பும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் கொடுகிறார். அவன் சாப்பிட்டுவிட்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான். அந்தம்மா மகிழ்வுடன் "போயிட்டுவாப்பா," என்று அனுப்பி வைக்கிறார்.


இந்த இரண்டு சம்பவங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் நான் கண்ட காட்சிகள்.

இப்போது சற்று விரிவாக பார்க்கலாம்.


நிகழ்வு 1...




சாட்டை அடிக்கும் அந்த மனிதரை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தோம். திடிரென அந்த குழந்தை பசியால் "அப்பா பசிக்குது பசிக்குது," என்று அழ, "ஏல இப்பதான் கூட்டம் கூடிருக்கு. இப்ப போய் அழுவுறீயால" என்று இரண்டு அடி அடிக்க, அந்தப் பிஞ்சு அவரது அதட்டலுக்கு பயந்து மறுபடியும் குட்டிக்கரணம் போடுகிறான். அடித்து முடிந்ததும் ஆளாளுக்கு காசு கொடுத்தனர். நானும் 2 ரூபாய் கொடுத்தேன், சிலர் சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

என் பக்கத்தில் நின்றிருந்த ஒரு தம்பதியில் மனைவி, "என்ன‌ங்க அந்த பிள்ளைக்கு காசு கொடுங்க - பாவமா இருக்கு," என்றார். உடனே அவள் கணவன், "போடி இவளே... வேடிக்கை பார்த்தேல்ல பேசாம இரு," என்றார். அவள், "பாவமா இருக்கு... காசு கொடுங்க பாவம்," என்று மறுப‌டியும் கேட்கிறாள். அதற்கு கணவன், "ஏன்டி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? வேடிக்கை காட்டுறது அவன் வேலை; வேடிக்கை பாக்கிறது நம்ம இஷ்டம், இதுக்கு எதுக்கு காசு? இப்போ நாம இயற்கைக்காட்சியை பாக்கிறோம் அதுக்கு என்ன காசா கொடுக்கிறோம். போடி போடி நாம போற பஸ் வருதான்னு பாரு அதவிட்டுட்டு... காசு அது இதுன்னு," என்று வள்ளென்று விழுந்தார்.

அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் மேல கோபம் வந்ததோ வர‌வில்லையோ - எனக்கு அவர் மேல டன் கணக்கில் ஆத்திரமாக இருந்தது. அவர்கள் போகும் பஸ் வந்ததும் சென்றுவிட்டார்கள்.

அந்த சாட்டைக்காரனின் பையன் இப்போது ரொம்ப அழுதுக்கிட்டே இருந்தான். எல்லோரும் சாட்டைக்காரனுக்காக இல்லாமல் அந்த பிஞ்சுக்காக காசு கொடுத்தனர். ஆனால், அந்த பையனின் அழுகுரலை சட்டைபண்ணாமல் இன்னும் தனக்கு காசு விழவேண்டும் என்பதற்காக மேலும் மேலும் தன்னைத்தானே அடித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துறானாம். உடனே அங்கிருந்த பெருசு, "ஏலே, அந்த பச்சப்பிள்ளை எவ்வளவு நேரமா அழுவுறான், அவனுக்கு ஒரு பன் வாங்கிக் கொடுக்கணுமின்னு தோணாமல் அடிச்சிக்கிட்டே இருக்கிய்யேல‌. அவனுக்கு சாப்பாடுவாங்கிக் கொடுக்கியா... இல்ல உன்னை அடிச்சித் தொரத்தனுமால," என்று சத்தம் போட, அங்கிருந்த அனைவரும் "ஆமா" என்றனர்.

அதன்பின்னர் சாட்டைக்காரன் அந்த இடத்தை விட்டு நகன்றான்.



சாட்டைக்காரன்
தன்னைத் தானே அடித்துக் கொண்டு பிச்சை கேட்பதை பார்க்கும்போது நமக்கு மிகவும் வேதனையாக உள்ளது. கஷ்டப்படும் மக்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யலாம். நம்முடைய அரசாங்கமும் இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யலாம்.

சாட்டைக்காரன் தன்னையும் வேதனைப்படுத்தி, தன்னுடைய குழந்தையையும் பசியால் துடிக்கவைக்கும் இந்தப் பிழைப்பு தேவைதானா? நல்ல திடகாத்திரமாக இருக்கிறான். ஏதாவது வேலைத் தேடி அல்லது ஏதாவது தொழில் செய்து அவனும் அவன் குடும்பமும் நல்லா இருக்கலாமே... இப்படி பொதுவான எண்ணம் மேலிடுகிறது.

ஒரு சில சாட்டைக்காரர்கள் பற்றி விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்களே கிடைத்தது.

சாட்டை அடிக்கும் மனிதர்கள் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து கும்மாளமிட்டு தன் குடும்பத்தை பட்டினி போடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு அறிவுரைகள் சொன்னால் - 'சாமி நான் உடம்ப அடிச்சிக்கிறேன் இல்லையா, அதான் சரக்கடிக்கிறேன். அப்பதான் உடம்பு வலிக்காது. நாளைக்கு அடிச்சாதான் காசு கிடைக்கும்,' என்ற விளக்க அறிக்கை வேறு!

"ஏம்பா, எதாவது வேலை செஞ்சி பொழைக்கலாமே..." என்றால், "என்ன சாமி நாங்கெல்லாம் காலம்காலமாக இப்படியே இருந்துட்டோம். திடீர்னு வேலைக்குபோன்னா எப்படி போகமுடியும்," என்ற பதிலே வந்தது.

விவரம் தெரியாதவர்களைத் திருத்தலாம். ஆனால், எல்லாம் தெரிந்தவர்களை?

******************************

நிகழ்வு 2...

"அம்மா பசிக்குதும்மா.." என்றபடி ஒரு பிச்சைக்காரன் அந்தம்மாவிடம் கேட்கிறான். "அப்படியாப்பா இந்தா," என்று கொஞ்சம் சோறும் குழம்பும் ஒரு வாளி மூடியில் வைத்து அவனிடம் கொடுகிறார். அவன் சாப்பிட்டுவிட்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான். அந்தம்மா மகிழ்வுடன் "போயிட்டுவாப்பா" என்று அனுப்பி வைக்கிறார்.

அந்தம்மாவை சுற்றிலும் நிறைய பிச்சைக்காரர்களும் ஆதரவற்ற அனாதைகளும் இருக்கிறார்கள். எல்லா பிச்சைக்காரர்களும் அந்தம்மாவிடம் சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர்.

அந்தம்மா நீங்க நினைப்பதுபோல பெரிய பணக்காரரோ அல்லது கொடைவள்ளலோ கிடையாது. அவர் ஓர் ஆதரவற்ற வயதான பெண்மணி. அந்தம்மா கொடுக்கும் சாப்பாடு அறுசுவை சாப்பாடு அல்ல. அது பழைய சோறும் சாம்பாரும் தான் என்று நினைக்கிறேன். சாப்பாடு கொடுக்கும் அந்தம்மா முகத்தில் எவ்வளவு சந்தோசம். இந்தக் காட்சியை கண்ட என் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

ஒருபானையில் சோறும் ஒரு தூக்குவாளியில் சாம்பாரும் இருக்கிறது. அவர் எங்கிருந்து சாப்பாடு கொண்டுவருகிறார். அவர் வீடுவீடாக‌ சென்று பிச்சைக்கேட்டு சாப்பாடு வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு கிடைத்த சாப்பாட்டை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தது நெகிழ்வாக இருந்தது. அவருக்கு எவ்வளவு பெரிய மனசு, தாயுள்ளம் கொண்டவர் என்பதை நினைக்கும்போது அந்தம்மா நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

**********************************

ஆதரவற்ற ஒரு அம்மா பசியால் வாடுபவர்களுக்கு உணவு கொடுக்கிறார். நம்மால் ஏன் முடியவில்லை? நாம் இவர்களை போன்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும்போது அவர்களின் மகிழ்ச்சியை முகத்தில் காணலாமே!

ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம் என்று சொல்வார்கள்.

'ஓர் ஏழைப் பெண்மணியிடம் இருக்கும் இரக்க குணம், நம்மில் பலரிடமும் இல்லாதது ஏன்?"

இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால், விடை கிடைக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன்.

***********************************

அன்புள்ள நண்பர்களே!! இந்த சமூக கட்டுரை யூத்புல் விகடனில் சிறப்புக் கட்டுரையாக இன்று வெளியாகி உள்ளது. யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் கொடுத்த யூத்புல் விகடனுக்கு நன்றி.

தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கு நன்றிகள். நன்றி நண்பர்களே..

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Wednesday, May 19, 2010

நன்றி நண்பர்களே..

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா..

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்கள் எனக்கு நன்றி விருது கொடுத்து சிறப்பித்துள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விருதினை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு பத்துபேருக்கு விருது கொடுத்து, மற்றவர்கள் நமக்கு ஸ்டார்ஜன் விருது தரலியே என்று நினைக்ககூடாது பாருங்க. என் மனம் கேட்கவில்லை. நான் உங்கள் அனைவருக்கும் இந்த விருதினை வழங்க ஆசைப்படுகிறேன்.


நான் வலைப்பூ ஆரம்பித்ததிலிருந்து எனக்கு ஆதரவுகொடுத்து என்னுடைய பக்கத்துக்கு வருகைதந்த உங்கள் அனைவர்களையும் மறக்க இயலாது.

எனவே உங்கள் அனைவருக்கும் இந்த நன்றி விருதை வழங்குகிறேன்.

விருதை பெற்றுக் கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்

நன்றி நண்பர்களே!!

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Monday, May 17, 2010

எண்ண அலைகள்


ஆந்தை அலறியதும் இது
கெட்ட சகுனமாச்சே..
வெளியில் சென்ற
அவன் என்ன ஆனானோ?..

போன் அலறியது
ஒருவேளை அவளா
இருக்குமோ எண்ணியபடி
ஹலோ.. என்றான்
எதிரே வந்த பஸ்ஸை
கவனிக்காமல்...


,

Post Comment

Sunday, May 16, 2010

ஒருநாள் ஒருஇரவு...

என்னங்க என்ன‌ங்க எழுந்திருங்க..என்று என்மனைவி செல்வி என்னை எழுப்பினாள். என்னடி இந்த நடுராத்திரியில எழுப்புற.. மத்ததை நாளைக்கு பாத்துக்கலாம்.. எனக்கு டயடா இருக்கு, காலையில சீக்கிரமா ஆபீஸ் போகணும் என்றபடி மறுபுறம் திரும்பி படுத்தேன். அய்ய ஆசையப்பாரு., அருணுக்கு பால்பவுடர் தீர்ந்துபோச்சி, அழ ஆரம்பிச்சிட்டான், போய் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ல ஒரு செரிலாக் வாங்கிட்டுவாங்க.. செல்வி மறுபடியும் எழுப்பினாள். சே உன்தொல்லை தாங்கலைப்பா, என்று எரிச்சலோடு படுக்கையைவிட்டு எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

மணி பனிரெண்டு ஆயிருச்சி; நாலுதெரு நடந்து போகணுமே என்று எரிச்சலோடு வீட்டைவிட்டு கிளம்பினேன். அய்யயோ தெருவிளக்கெல்லாம் அணைந்திருக்கே., இந்த முனிஸிபாலிட்டியில விளக்கை சரிபண்ணுறேன்னு இப்ப அப்போன்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க. ஆஹா இன்னக்கி ரொம்ப இருட்டாஇருக்கே.. அமாவாசையா இருக்குமோ.. என்று நினைத்தபடியே நடந்துவந்துகொண்டிருந்தேன்.

ஆ இந்ததெருவ கடந்துபோகணுமே.. போன ரெண்டுவாரத்துக்கு முன்னாடி செத்துபோன மாரியம்மா ஆவியா நடமாடுதான்னு ஒரு கேள்வி. கல்யாணமான இரெண்டாவது நாளே புருசனை பிடிக்காம ஒரே சண்டையாம். சண்டை முத்திப்போயி ஒருநாள் மண்னெண்ணைய ஊத்திக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். நிறைவேறாத ஆசையோட செத்துப்போனா ஆவியா அலைவாங்களாமே.. அப்படியாங்க..

மனசுல லேசான ஒருபயம்.,இருந்தாலும் வெளிக்காட்டலாமா; நாங்கல்லாம் யாரு புறாவுக்கே பெல்லடிச்சவங்களாச்சே.. நானெல்லாம்.. இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். இப்ப இதுபோதும். தைரியத்துடன் நடக்க ஆரம்பித்தேன். பையன் அழுதுக்கிட்டு இருப்பானே., சீக்கிரமா பால்பவுடர் வாங்கிட்டுபோகணும் என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நாலுதெருவும் கடந்து மெயின்ரோட்டுக்கு வந்தாச்சி. கடையில் செரிலாக் 2 டப்பா வாங்கினேன். மறுபடியும் வேறொரு நாள் தூக்கத்துல செல்வி அலையவிட்டிர‌க்கூடாது பாருங்க அதான் 2 டப்பா.

என்னாச்சி இந்த மனுசனை இன்னும் காணலை. கடையில பால்பவுடர் வாங்கப்போனாரா இல்ல கடையையே விலைக்கு வாங்கப்போனாரா.. அருண்வேற அழுதுக்கிட்டே இருக்கானே என்னாச்சின்னு தெரியலியே.. நீ அழாதடா என்செல்லம். அப்பா இப்போ வந்திருவாரு.. ஆரோரோ ஆரிராரோ என்செல்லம் கண்ணுறங்கு..

அருண் அழுதுக்கிட்டு இருப்பானே.. நடையில் வேகம் கூட்டினேன். ஆஹா 4வது தெருவ கடந்து மூணாவது தெருவுல வந்துகொண்டிருந்தேன். அடுத்த தெரு மாரியம்மா தெரு. இப்போது மனதுல உள்ள பயபூதம் முழுச்சிகிருச்சி. அடடா இன்னக்கி நான்வீட்டுக்கு போனாமாதிரிதான். ஊவ்வ் ஊவ்வ்வ்... தூரத்தில் நாயோ நரியோ ஊளையிடுத சத்தம். மெல்ல ஒரு சிலிர்ப்பு. சில்லுன்னு காற்று வீசியது. மாரியம்மா தெருவுக்கு வந்தாச்சி.. மெதுவா வீசின காத்து இப்போ வேகமாக வீசியது. மரங்கள் வேகமாக ஆடின. கிளைகள் ஒடிந்து என்மேல் விழுவதுபோல அருகில் வந்து பயமுறுத்தியது. மனதில் திக்திக். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியலியே..

அருகில் இருந்த வீட்டுகளின் ஜன்னலெல்லாம் டப்..டப்.. டபடப.. டபடப.. வேகமாக அடித்தது. அதேசத்தம் என் மனதிலும்.. மறுபடியும் வேகவேகமா ஜன்னல்களின் சத்தம். இப்போது பயத்தில் நடையில் வேகம். தூரத்தில் வெள்ளை வெளெறென ஒரு உருவம் தோன்றி மறைந்தது. அது மாரியம்மாவாத்தான் இருக்கும். நாய் மறுபடியும் ஊளை ஊவ்வ்வ்.. ஊவ்வ்வ்.. ரோட்டில் கிடந்த‌ குப்பையெல்லாம் என்முகத்தில்.. தட்டிவிட்டுக்கொண்டே நடந்தேன். பின்னால் திரும்பினால் மறுபடியும் அதே உருவம் தோன்றி மறையுது. ஆஹா துரத்த ஆரம்பிச்சிருச்சே.. வேகமாக ஓடினேன். மாரியம்மா தெருவை கடந்து எங்கத்தெரு.. பின்னால் யாரோ துரத்துவது போல இருந்தது. பின்னால் திரும்பிபார்க்காமல் ஓடினேன். தடதட சத்தம். என்னை பிடித்துவிடுவது போல இருந்தது. முதுகில் யாரோ அடிப்பதுபோல டமடம.. டமடம.. சத்தம்.

ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தேன். தூரத்தில் என்மனைவி வீட்டுவாசலில்.. அடடா அடடா.. செல்வி பேய்வருவது தெரியாமல் வீட்டுவாசலில் நிற்கிறாளே.. செல்வி.. வீட்டுக்குள்ள ஓடிவிடு ஓடிவிடு பேய்வருது பேய்வருது.. என்று கத்த ஆரம்பித்தேன். என்னஇது.. நான் கத்தியும் உள்ளே போகாமல் நிற்கிறாளே.. மறுபடியும் கத்த ஆரம்பிக்க.. வெறும் காத்துதான் வருது.. ஆஹா.. தொண்டை வற‌ண்டுவிட்டதுபோல.. நாக்கு பே..பே..பே...

என்னங்க.. என்னங்க.. சீக்கிரம்வாங்க.. மழை தூத்துகிறதுகூட தெரியாம மெய்மறந்து வாரீங்களே.. என்ற செல்வி என்னை அணைத்தபடி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.


,

Post Comment

Thursday, May 13, 2010

துப்பறியும் சாம்பு

ஒரு ஊரில் பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். அந்த ஊரில் நல்லசெல்வாக்குடன் வாழ்ந்து வந்தான். திடிரென்று அந்த பணக்காரனை காணவில்லை. மகன்கள் இருவரும் எல்லாப்பக்கமும் தேடுகிறார்கள்.

மகன்கள் துப்பறியும் சாம்புவிடம் உதவி கேட்கின்றனர். சாம்புவும் பணக்காரனின் நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் விசாரிக்கிறார். பணக்காரனின் அறையையும் சோதனை செய்கிறார். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. பாத்ரூமில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழும் சத்தத்தை அப்போதுதான் கவனிக்கிறார்.

உடனே பாத்ரூமின் கதவை திறக்க முயற்சிக்கும்போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. கதவை உடைத்து பார்த்தால் அந்த பணக்காரன் இறந்து கிடக்கிறான். பாத்ரூமிலிருந்து மியாவ் என்றபடி ஒரு பூனை வெளியே வருகிறது.

பணக்காரன் இறந்துபோன காரணத்தை துப்பறியும் சாம்புவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களே!! நீங்கள் கண்டுபிடித்து சாம்புவுக்கு உதவி செய்யுங்களேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

ராஜ கிரீடம்


கொக்கரக்கோ கொக்கரக்கோ என‌
கூவி சூரியனை அழைக்கிறாய்
அதனால்தான் பொழுதும் விடியுதோ
மமதை எல்லாம் நினைப்புதான் போல..

ஒய்யார நடையும் சிலுப்பிய தலை
தெரு பெட்டைகள் மயங்க
சுற்றி சுற்றி வந்தால்
காதல் டூயட்டுன்னு நினைப்போ..

ஆசையோடு இரை வைத்தால்
கையை பதமா பார்க்கிறாய்?
அருமையான வாசம் வருதே
அடடா சட்டியில் நீயா..


,

Post Comment

Sunday, May 9, 2010

அன்னை ஓர் ஆலயம்

அம்மா அம்மா என்றபடியே வீட்டினுள் நுழைந்தேன். அம்மாவ காணோமே.. எங்க போயிட்டாங்கன்னு தெரியலியே, சரியாவே எங்கிட்ட போன்ல பேசலியே.. என்னாச்சி தெரியலியே... கௌரி கௌரி ஏய் கௌரி... இவளையும் காணோம் எங்கபோயிட்டா சே என்று புலம்பியபடியே வீட்டில் குட்டிபோட்ட பூனைபோல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன் எரிச்சலுடன்.

ஏ ராஜா அம்மாவையும் பாட்டியையும் எங்கடா காணோம் என்றேன் என் மகனிடம். அப்பா, அம்மா அடுத்த தெருவுல இருக்கிற என் பிரண்டு மகேஷ் வீட்டுக்கு போயிருக்காங்க அம்மா.. பாட்டி எங்கபோனாங்கன்னு தெரியலப்பா.., நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரட்டாப்பா என்றான். சரிடா அப்பா வந்திருக்கேன்னு சீக்கிரம் கூட்டிட்டுவா என்ன என்று ராஜாவை அனுப்பி வைத்தேன். இதோ என் பையன் வந்திட்டான் அக்கா.. நா போயிட்டுவாரேன். என்று சொல்லிக்கொண்டிருந்தாள் கௌரி. அம்மா, அப்பா வந்திருக்காங்க வா போகலாம்.., என்று அவசரப்படுத்தினான் ராஜா.சரி கௌரி பாத்து பத்திரமா நடந்துக்கோ என்று சொல்லி வழியனுப்பினாள் மகேஷ் அம்மா. சரிக்கா நா வாரேன் என்று கிளம்பினாள் கௌரி. உங்கப்பா வந்து நேரமாச்சாடா., இல்லம்மா இப்பதான் ஒரு 5 நிமிசத்துக்கு முன்னாடி வந்தார் என்று சொன்னான் ராஜா.

ஏ கௌரி எங்கப்போனே.. என்று கேட்டேன் என் மனைவியிடம். இல்லீங்க மார்க்கெட் போகும்போது மகேஷ் அம்மா வீட்டுக்கு கூப்பிட்டாங்க அதான் சமையல முடிச்சிட்டு போயிட்டு வந்தேன் என்று சொன்னாள் கௌரி. சரி அதுகிடக்கட்டும், அம்மாவை எங்கே? என்று கேட்டேன். ஓ உங்கம்மாவா எங்கபோனாங்கன்னு தெரியல.. 2 நாளா ஆளக்காணோம் என்று அசால்டாக சொன்ன கௌரியை பளார் என்று கன்னத்தில் அறைந்தேன். என்னடி சொல்லுறே அம்மாவ காணோமா... எங்கப்போனாங்க சொல்லுடி சொல்லுடி மறுபடியும் கன்னத்தில் பளார் என்று அறைந்தேன். அம்மாவ விட்டுட்டு அசால்ட்டா சொல்லுறே.. என்ன நெஞ்சழுத்தம் உனக்கு, ராஸ்கல் என்று கோபத்தின் உச்சியில் நான்.

சே என்ன இவள்.. பொறுப்பில்லாதவள்., ஒருவேளை அக்கா வீட்டுல அம்மா தங்கிட்டாங்களோ..அப்படின்னாலும் எங்கிட்ட போன்ல சொல்லிருப்பாங்களே.. 10 நாள் ஆபிஸ் வேலையா பெங்களுரு போயிருந்த சமயத்துல இப்படி ஆயிருச்சே.. இப்ப என்ன செய்ய., என்று மனவேதனையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு நினைவுகளை பின்னோக்கி அசைப்போட்டு கொண்டிருந்தேன்.

அம்மா அம்மா எங்கம்மா இருக்கே.. என்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்தேன். டேய்! என்ன எப்பப்பார்த்தாலும் அம்மா அம்மா தானா., நான் ஒருத்தன் இங்க குத்துக்கல்லாட்ட உக்கார்ந்திருக்கேன் கண்ணுக்கு தெரியலியா என்று அப்பா அருணாச்சலம் கேட்டார். அதானே நல்லாச்சொன்னீங்கப்பா எப்பப்பார்த்தாலும் இவனுக்கு அம்மா அம்மாதானா., நாமெல்லாம் இல்லியா என்று அக்கா செல்வி அங்கலாய்த்தாள். அடஅடஅடா., எப்ப்பார்த்தாலும் அவனை வம்புகிழுக்காம அப்பாவுக்கு மகளுக்கும் தூக்கமே வராதுபோல.., என்று ச்மையல்கட்டுல இருந்து அம்மா பர்வதம் வந்தாள்.

அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கும்மா ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா., எக்ஸ்போர்ட் கம்பெனியில எக்ஸ்கியூடிவ் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலை. மாதம் பத்தாயிர ரூபாய் சம்பளம்., பின்னாடி டபுளா இன்கிரிமென்ட் ஆகும்ன்னு சொல்லிருக்காங்க. என்றேன் மகிழ்ச்சி பொங்க. அப்பா அம்மா அக்கா எல்லோருக்கும் மிகுந்த சந்தோசம். பாத்தியா செல்வி நம்மிடம் சொல்லாம நேரா அம்மாட்ட சொல்றான்.,ம் ம் நடக்கட்டும் என்றார் அப்பா. அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா., எல்லாம் உங்க நண்பர் ரெக்கமென்ட்ல தான். இந்தவேலை கிடைக்க நீங்கதான் காரணம் உங்களுக்குதான் முதல்ல தேங்க்ஸ் சொல்லணுப்பா என்றேன். நீ நல்லாருந்தாலே எங்களுக்கெல்லாம் சந்தோசந்தான் என்று எல்லோரும் என்னை வாழ்த்தினர்.

சில மாதங்களுக்கு பின்னர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்தபடுக்கையாயிட்டார். முன்னேமாதிரி அவரால் எங்கும் செல்லமுடியவில்லை. அம்மாதான் அப்பாவ நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அடுத்த மாதத்தில் அப்பா காலமானார். அப்பாவின் மறைவு எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தது. இருந்தும் அம்மாதான் சமாளித்து குடும்பத்த நடத்துனாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தோம். ஒரு சில மாதங்களில் கும்பகோணத்துல இருந்து நல்லவரன் அமைஞ்சது. அக்காவுக்கும் சம்மதம்; அப்புறம் ஆறு மாதத்துல கல்யாணம் நடத்தவேண்டி இருந்தது; பணம் பற்றாக்குறை, அங்கஇங்கேன்னு கடனஉடன வாங்கி கல்யாணம் நடத்தினோம். அத்திம்பேர் ரொம்ப தங்கமானவர். எங்கக்காவ நல்லா வச்சிக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்றுவரை பொய்க்கவில்லை.

டேய் குரு! முன்னமாதிரி நான் இல்லைடா என்னால முடியல., வயசாக்கிட்டே போகுதுடா உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டேன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்டா என்று அம்மா சொன்னார்கள்.
என்னம்மா இப்பதான் அக்காவுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கோம்; அந்த கடனே இன்னும் முடியல., அதுக்குள்ள எனக்கா! இரண்டு மூணு வருசம் கழியட்டும் அப்புறம் பார்ப்போம் என்றேன் அம்மாவிடம்.

அதெல்லாம் முடியாது., உனக்கு பொண்ணுபார்க்கத்தான் போறேன்., வீட்டுக்கு விளக்கேத்த மகாலட்சுமி கூட்டிட்டுவாரேன் பாரு; ஆமா சொல்லிப்புட்டேன் என்ற அம்மாவிடம் மறுப்பு சொல்லமுடியவில்லை.
அம்மா பெண்தேட ஆரம்பிச்சாங்க; திருச்சிக்கு சுத்துவட்டாரத்துல பார்த்தாங்க., சரியா அமையவே இல்லை. அம்மாவும் சளைக்கலை., கடைசியில நாகப்பட்டினத்துல அமைந்தது. என்ன செய்ய தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் கொஞ்சம் தொலைவுதான்.

பேரு கௌரி., நல்ல சொத்துபத்து., பெண் லட்சணமா இருக்காடா., நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பாடா., நாளைக்கே பொண்ணுபார்க்கபோறோம் ரெடியாயிரு என்ற அம்மாவின் வார்த்தைய என்னால் தட்ட முடியல. அடுத்த 2 மாதத்துல கல்யாணம் ஆயிருச்சி. கௌரி அழகாக இருந்தாள். என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.

அவளிடம் இப்போது சிலமாதங்களாக நிறைய மாற்றங்களை காண்கின்றேன். என்னவென்று கேட்டால் ஒன்றும் அவள் சொல்வதில்லை; நானும் அப்படியே விட்டுவிட்டேன். என்னாங்க கல்யாணம் ஆகி ஆறு வருசமாயிருச்சி., ஒரு கார்வாங்கலாம், புதுவீடு வாங்கணும் என்று இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் காதில்வாங்கியும் வாங்காமலும் இருந்தேன். அப்பப்ப சத்தம் போடுவேன்; ஆனால் அடித்ததில்லை. ஆனால் இன்று அம்மாவை காணவில்லை. அந்த கோபத்தில் அடித்துவிட்டேன். இப்போது கௌரி என்ன செய்கிறாளோ., சே.. என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்; கட்டிலிலிருந்து எழுந்து சமையலறைக்கு சென்றேன்.

அங்கே ராஜா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா! சண்டையா போட்டா வீட்டவிட்டு போயிரலாமோ., நான் உன்னை அப்படியெல்லாம் செய்யவிட‌மாட்டேன் என்ற மகனை அணைத்த கௌரியின் கண்களிலிருந்து தாரைதாரையாக நீர் கோர்த்திருந்தது. என்னங்க என்னை மன்னிச்சிருங்க., நாந்தான் அத்தைய சண்டபோட்டு வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டேன். அத்தையின் நல்லமனசை புரிஞ்சிக்காம மத்தவங்க பேச்சை கேட்டு புத்தி தடுமாறிட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்ற கௌரியை நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொன்னேன்.

சரிவா அக்காவுக்கு போன் பண்ணிகேப்போம். அக்கா அம்மா அங்கே வந்திருக்காங்களா என்று கேட்டேன். என்னடா குரு! அம்மா இங்கே வரலையே.. என்னாச்சி சொல்லுடா அம்மாவ எங்கே என்றாள் செல்வி அக்கா மறுமுனையில். கௌரி சண்டை போட்டதால் அம்மா கோவிச்சிக்கிட்டுபோயிட்டாங்க. காணோம் அம்மாவை என்று வருத்தத்துடன் சொன்னேன் அக்காவிடம்.


தஞ்சாவூரில் நிறைய இடங்களில் தேடினேன். அம்மாவை காணவில்லை. பசிக்குது என்ற ராஜாவுக்கு பிரட் வாங்க கடையில் நுழையும்போது எதிரே உள்ள அனாதை ஆசிரம வாசலில் அம்மா நின்று கொண்டிருந்தாள்.

அம்மா கண்ணீருடன் வரவேற்றாள். அம்மா எங்கம்மா போனே என்னவிட்டுட்டு உன்னைய எங்கெல்லாம் தேடினேன் என்றேன் கண்களில் கண்ணீருடன். ஹைய்யா பாட்டி என்ற ராஜா, அம்மாவைக் கட்டிக்கொண்டான். கௌரியும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள்.

**********************************


அனைவருக்கும் என் இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Saturday, May 8, 2010

கடகராசி..

அவள் எனக்கு கேன்சர்
என்று என்னிடம் சொன்னபோது
எப்படி ஆறுதல் சொல்ல‌
தோன்றாமல் மௌனமாய் நான்..


இனிதான் உனக்கு வசந்தமே!!
உன்கஷ்டங்கள், ஆபத்துகள் விலகிடும்!!
நீ ஆவாய் நாளைய முதல்வராக!!
பணவரவுகள், நட்புகள், பெருகிடும்!!
புதுமனை வாசம் பெறுவாய்!!
இப்படியெல்லாம் நான்
அவளிடம் சொன்னபோது
முகமலர்ச்சியை காணாதது ஏனோ!


எப்போதும் கலகலப்பாய்
இருப்பவள் நான் இதை
சொன்னதும் எல்லாமே
விதிப்படிதான் நடக்கும்
என்ற பதிலே அவளிடமிருந்து..


,

Post Comment

Thursday, May 6, 2010

கரகர மொறுமொறு - 6/5/2010

என் அருமையான அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

ஒரு சந்தோசமான விசயம். ஏப்ரல் 27 அன்று நான் வெளியிட்ட வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?.. என்ற கட்டுரை யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் வந்துஇருக்கிறது. இந்த சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த சந்தோசத்தினை விவரிக்க வார்த்தைகளே இல்லை. விகடன் குழுமத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சந்தோசத்தை உங்கள் அனைவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி விகடன் குழுமத்திற்கும், நண்பர்கள் அனைவருக்கும்...

வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?.. - எனது கட்டுரை.




***********************************


கேள்விக்கு உங்கள் பதில் 7:

வாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள இது ஒரு நல்லமுயற்சி என்று என்னை பாராட்டிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றிகள் சொல்வதென்றே தெரியல.. இந்த பகுதிக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி 7:


நம்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட என்ன செய்யலாம்?..


சென்றவாரம் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுபோல இந்த வாரமும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!!.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Tuesday, May 4, 2010

வெஜ். பிரியாணி

சகோதரி ஆசியாஉமர் அவர்கள் வெஜ்.பிரியாணியை செய்துபார்த்து இடுகை வெளியிட்டிருந்தார். அதனை பார்த்து நானும் அக்பரும் இதேபோல பிரியாணி செய்ய திட்டமிட்டிருந்தோம். அதன்படி இன்று மதியம் நானும் அக்பரும் கன்னட நண்பன் ரைய்கானும் செய்து பார்த்தோம். ரொம்ப அருமையாக இருந்தது.


தேவையான பொருட்கள்:



முட்டை 4
உருளைகிழங்கு 1
பச்சை பட்டாணி சிறிதளவு
பீன்ஸ் 100 கிராம்
கேரட் 2
பட்டர் ஒரு பாக்கெட்
வெங்காயம் 4
மிளகாய் 4
தக்காளி 3
இஞ்சிபூண்டு பேஸ்ட் சிறிதளவு
புதினா சிறிதளவு
மல்லிக்கீரை சிறிதளவு
தயிர் 2 பாக்கெட்
பிரியாணி மசாலா 1 பாக்கெட்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு


முதலில் பாத்திரத்தில் எண்ணெய்யும் பட்டரும் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் வெங்காயம் பொன்னிறமானதும் கரம் மசாலா, இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய், தக்காளி, மல்லிப்புதினா சேர்த்து வதக்க வேண்டும்.


எல்லாம் நன்றாக பேஸ்ட்போல வதக்கியதும் பிரியாணிமசாலா சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். எண்ணெய் மேலே கிளம்பியதும் நறுக்கிவைத்த காய்கறிகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.

காய்கறிகள் நன்றாக கொதித்தவுடன் தயிரை கொட்டி நன்றாக கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் லேசான தீயில் நன்றாக கொதிக்க வேண்டும்.

எல்லாம் சேர்ந்து கூட்டுபோல ஆனதும் நாம் ஏற்கனவே வடித்துவைத்த சோற்றை காய்கறி மசாலாவில் கொட்டி மசாலா மேலெம்பும்வரை கிளறி எல்லாத்தையும் கலவையாக்க வேண்டும்.

பின்னர் 15 நிமிடம் தம்மில் வைத்து மூடிவிட வேண்டும்.

அருமையான வெஜ்.பிரியாணி தயார்.


இதற்கு சைடிஸ்டாக முட்டையை அவித்து வெங்காய பச்சடி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

நீங்களும் செய்துபாருங்களேன் நண்பர்களே!!..

நன்றி ஆசியா.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


**********

இதை ஜலீலாவின் பேச்சிலர் சமையல் போட்டிக்காக அனுப்பியுள்ளேன்.

Post Comment

Saturday, May 1, 2010

மே தின வாழ்த்துகள்


கால்கடுக்க காத்திருந்தேன்
காய்த்துப்போன கைகளுடன்
இன்றைய கூலியான
100 ரூபாயை எண்ணி எண்ணி..

செலவின முகங்கள் வந்து போயின
சிலேட்டு, புத்தகம் கேட்ட
மகனின் முகமே முதலாய்..
அதற்கு முதலாளியின்
முகம் பார்க்க காத்திருக்கிறேன்
மனதில் ஆயிரம் புலம்பல்களுடன்..

அதோ வருவது யாரோ?.
வந்தவர் சொன்னார்
மேதின வாழ்த்துக்கள்.
படம் பிடித்தார் டிவியில் காட்ட...

,

Post Comment

மனைவி அமைவதெல்லாம் ...

ஒருவனுடைய வாழ்க்கையை இரண்டா பிரிக்கலாம். கிறிஸ்து பிறப்பதுக்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்றமாதிரி திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின். எதனால அப்படிஎன்றால் ஒருவன் என்னதான் சல்லித்தனம் பண்ணினாலும் கல்யாணம் ஆயிருச்சி என்றால் அவ்வளவுதான் பொட்டிப்பாம்பா அடங்கிருவான். நேத்துவரைக்கும் காடுமேடெல்லாம் சுத்தித்திரிஞ்சவனை இன்னைக்கி காணோமென்று கேட்டால் அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சிப்பா என்பார்கள். அந்தளவுக்கு ஒருவனுடைய வாழ்க்கையில் ஒரு பெண் வந்துட்டான்னா கேட்கவே வேண்டாம் அவனோட வாழ்க்கை டோட்டல் சேஞ்ச்தான். அந்தளவுக்கு மனைவியோட முக்கியத்துவம்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்ன்னு சும்மாவா சொன்னாங்க.. ஆமா கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர்தான். ஒருவனுக்கு அவனோட டேஸ்ட்டுக்கு தகுந்தமாதிரி அவனது பெற்றோர், தன்பிள்ளைக்கு ஏத்த மனைவியை எவ்வளோ கஷ்டப்பட்டு தேடி அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறாங்க. காதல் கல்யாணங்களில் இந்த நிலை மாறலாம். அவனே/அவளே அவன்/அவள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறாங்க. இந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவன், பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.

ஒரு பெண்ணுக்கு என்னதான் பெற்றோர்கள் வளர்ப்பில் இருந்தாலும் கல்யாணம் பண்ணிகொடுத்ததும்தான் முழு அந்தஸ்து பெறுகிறாள். அதேமாதிரி ஆணுக்கும் நேத்துவரைக்கும் அலட்சியமா நினைத்தவர்கள் இன்னக்கி ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. ஏ அவன் குடும்பஸ்தன் அவனுக்கு எல்லா முன்னுரிமையும் கொடுங்கப்பா என்று கொண்டாடுவாங்க. மனைவிதான் ஒருவனுக்கு வாழ்க்கையோட அர்த்தத்தை புரியவைக்கிறாள். அதேமாதிரி ஒருவனுக்கு பாதிபலம் அவனோட மனைவிதான்.

ஆணுக்கு இரவில் மட்டும் சுகத்தை கொடுப்பது மட்டுமல்ல பெண்ணோட வாழ்க்கை. அவனுக்கு துணையாக இருந்து அவனோட கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து அவனுக்கு நேரான வழி இதுதான் என்று சுட்டிக்காட்டிபவ‌ளும் அவனோட மனைவிதான். கணவன் எதாவது கோல்மால் பண்ணினானென்றால் அவன மண்டையில தட்டி திருத்துபவளும் அவன் மனைவிதான். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த வீட்டையும் தன் புத்தியால் திறமையால் முன்னுக்கு கொண்டுவருவது அவன் மனைவிதான்.

கணவன் இதயத்தில் மட்டும் இடம்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இவர்களின் மனதிலும் இடம் பிடிக்கும் பெண் ஒரு புத்திசாலி என்றால் அது மிகையாகாது. தன் புகுந்த வீட்டில் எத்தனை குறையிருந்தாலும் அதனை மறைத்து தன் குடும்பத்துக்காக வாழும் ஒரே ஜீவன் மனைவிதான். இதே நகரத்தில் வாழும் பெண்கள் தன் கணவனுக்காக கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று குடும்ப கஷ்டத்தை தீர்க்க பாடுபடுகின்றனர். கணவனை ஊதாரித்தனமாக செலவு செய்யவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்து சிக்கனமாக்கி குடும்பத்தை முன்னேற்றுகிறாள்.

ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம். ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதான். புகுந்தவீட்டில் தான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் இல்லாததால் கல்யாணம் முடித்த இரண்டே நாளில் தனிகுடித்தனம் அமைக்க காரணமும் இதே மனைவிதான். மனைவி சொல்வதை கேட்டு குடும்பத்தை பிரிக்கும் ஆண்கள் தங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மனம் குமுறுவர், வேதனைக்குள்ளாவர் என்பதை அறிய வாய்ப்பில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லையெனலாம்.

அதேபோல குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டு குடும்பத்தை இரண்டாக பிரித்து தான்மட்டும் நல்லா வாழணும் என்று நினைக்கும் சுயநலமிக்க மனைவிகள் நிறைய பேர் உண்டு. மனைவி சொல்வதை கேட்கலாம் தப்பில்லை. ஆனால் அது நன்மைபயக்கும் விஷயமாக இருக்கவேண்டும். சில குடும்பங்களில் கணவனை தன் கட்டுக்கோப்பில் வைத்து மாமியார், மாமனாரை கொடுமைப்படுத்தும் மருமகள்கள் பலேபலே.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தன் பெற்றோர் பேச்சை கேட்கும் பெண்கள் ஏன் தன்கணவன் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது இன்றுவரை விடை தெரியாமலே உள்ளது. அதேமாதிரி தன் பெற்றோர் பேச்சை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் ஆண்கள் நிறைய பேர் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் துணையாக வரும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது ஏனென்றே தெரியல.

இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்துவரை சென்று பிரிந்துவாழும் தம்பதிகள் நிலைமை வருத்தத்துக்கு உரியது. ஈகோவை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற தூண்கள்தான் தாங்கி நிற்கிறது. அதில் ஒன்று சரிந்தாலும் அவ்வளோதான். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் ஒரு குடும்பம் ஒரு இனிய இல்லறமாகும்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்