Pages

Sunday, August 28, 2011

போதையின் விளைவு??...

எதிர்பாராமல் திடீரென வரும் சோதனை, நமக்கு தாங்கமுடியாத வேதனையையும் இழப்பையும் தரும்போது மிகுந்த மனஉளச்சல் உண்டாகிறது. அப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் சென்ற மாதம் நிகழ்ந்தது. அதனை வருத்தத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்று இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு உறங்க சென்றேன். உறங்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்போது மணி 12 இருக்கும்போது எனது செல்போன் அலறியது. "ஹலோ காக்கா.. நான் பாஸித் பேசுறேன். அஜீஸ் மாமாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருச்சி.. மாமிக்கு என்ன செய்வதென்றே தெரியலை. ரொம்ப பயப்படுதாங்க.. உடனே சீக்கிரம் கிளம்பி வாங்க" என்றதும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியானது. "எப்படிடா ஆச்சி.." என்றதுக்கு அவன், "மாமா, கடை அடைத்துவிட்டு 11.30 மணிக்கு சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது ஆம்னி கார் மோதி வலது காலில் எலும்பும் நரம்பும் கட்டாகிருச்சி.. நாங்க திருச்செந்தூர் ஆஸ்பிடலுக்கு கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். நீங்க சீக்கிரம் வாங்க" என்றான்.

விசயம் அறிந்ததும் எல்லோருக்கும் அதிர்ச்சி. கண்களில் கண்ணீருடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே என்னுடன் மனைவியும் என் அத்தாவும் அம்மாவும் கிளம்பும்போது 12.30 மணி. மறுபடியும் பாஸித்யிடமிருந்து போன். "காக்கா, மாமாவுக்கு ட்ரீட்மென்ட் பண்ண நாகர்கோவில் திரவியம் எலும்புமுறிவு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வருகிறோம். சீக்கிரம் வாங்க காக்கா" என்றான். "இதோ கிளம்பிட்டோம் பாஸித். கவலைப்படாமல் இருங்க. மாமிக்கு ஆறுதல் சொல்லு" என்று சொல்லும்போது எனக்கு குரல் உடைந்து கலக்கம்.

இரவு நேரம் என்பதால் ஆட்டோவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டோக்காரருக்கும் போன் செய்தால் எல்லோரும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் பஸ்ஸ்டாப்பில் கலக்கத்துடன் நால்வரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னவென்று கேட்டார். அவரும் விபரம் அறிந்து வருத்ததுடன் "நாங்க எதாவது ஆட்டோக்காரன் தென்பட்டால் அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லியபடி சென்றார். சிறிதுநேரத்தில் அங்குவந்த மற்றொரு போலீஸ் இன்ஸ்பெக்டர், விபரம் அறிந்து வருத்தமாகி, "சரி சரி கவலைப்படாதீங்க.. அன் டைம்மா இருக்கே.. டவுண் செக்போஸ்ட்டில் எதாவது பஸ்ஸை மறித்து எப்படியாவது அனுப்பி வைக்கிறேன். வண்டியில் ஏறுங்க" என்று சொல்லி எங்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

சிறிது தொலைவில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோக்காரர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பினால் "என்னால் இப்போது வரமுடியாது" என்று மறுத்துவிட்டார். உடனே இன்ஸ்பெக்டர் ஆட்டோக்காரரை சத்தம்போட்டு எங்களை அனுப்பி வைத்தார். புதிய பேரூந்து நிலையத்துக்கு அழைத்து வந்த ஆட்டோக்கார நண்பர் எங்களை நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.‌

நாங்கள் ஆஸ்பிடலுக்கு சென்றபின் சிறிதுநேரத்தில் மாமாவை ஆம்புலன்சில் கொண்டு வந்தார்கள். அடிபட்டு சுயநினைவு இல்லாமல் இருந்த மாமாவை ‌ பார்த்ததும் சொல்லமுடியாத மிகுந்த வேதனையாக இருந்தது. மாமாவுடன், மாமியும் அவர்கள் பக்கத்துவீட்டு பாஸித்தும் உடன் இருந்தார்கள். எப்படி இதெல்லாம் நடந்தது என்று விசாரிக்கும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

மாமா 11.30 மணிக்கு கடையடைத்துவிட்டு சைக்கிளில் வரும்போது அவரது கடைக்கு அருகில் டீக்கடை வைத்திருக்கும் நண்பர் பைக்கில் பின்னால் வந்து, "என்ன அஜீஸ்பாய்! கடையடைக்க இவ்வளவு நேரமாச்சா" என்று கேட்டிருக்கிறார். அதற்கு மாமா, "இன்னக்கி திங்கள்கிழமை சந்தையல்லவா.. அதான் கொஞ்சம் லேட்டாகிருச்சி...." என்று சொல்லிதான் முடிக்கவில்லை அதற்குள் எதிரே குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த ஒருவன் வேகமாக இருவர் மீதும் மோதி காரை சிறிதுதூரம் ஓட்டிசென்று நிறுத்தியிருக்கிறான். இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இருவரும் சைக்கிளையும் பைக்கையும் ரோட்டின் ஓரமாக நிறுத்திதான் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடோடி சென்று இருவரையும் தூக்கி அருகிலிருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்கள். வீட்டுக்கு தகவலறிந்து மாமி உட்பட தெருவில் உள்ளவர்கள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்ய அங்குள்ளவர்கள் எந்த அக்கறையும் இல்லாமலும் டாக்டர் பணியில் இல்லாமலும் இருந்திருக்கின்றனர். ஆம்புலன்ஸ் கேட்டதற்கு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர், டாக்டர் வந்ததும் இதுகுறித்து கேட்டதற்கு, அவர்மீது ஆஸ்பத்திரி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தன்னிடம் தகாதமுறையில் நடந்திருக்கிறார் என்றும் பொய் வழக்கு போட்டிருக்கிறார் அங்குள்ள அரசு பெண்டாக்டர். என்னத்த சொல்ல....

பின்னர் தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். திருச்செந்தூரில் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் "எங்களால் சிகிச்சை செய்யமுடியாது; வேறு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லுங்கள்" என்று சொல்லி, எங்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்த பணம் கொடுத்தால்தான் இங்கிருந்து நீங்கள் போகமுடியும் என்றும் கெடுபிடி செய்திருக்கிறார்கள். உடனே மாமி தன் காதில் இருந்த கம்மலை கழட்டி கொடுத்தும் நம்பிக்கை இல்லாமல் டிரைவரின் டிரைவிங் லைசன்ஸையும் வாங்கியிருக்கிறார்கள். பின்னர் மாமாவை நாகர்கோவிலுக்கும் இன்னொருவரை திருநெல்வேலிக்கும் மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

நாகர்கோவில் திரவியம் ஆஸ்பத்திரியில் மாமாவை பரிசோதித்த டாக்டர் உங்க மாமாவுக்கு வலதுகால் தொடை எலும்பு உடைந்துள்ளது; மூட்டு விலகியிருக்கு; கரண்டை கால் பின்பகுதியில் 10மீ அளவுக்கு சதை சிதைந்து 2 நரம்பு கட்டாகியுள்ளது. ஆண்டவன் கிருபையால் முக்கியமான நரம்பு கட்டாகாமல் இருப்பதால் காப்பாற்றி விடலாம். கவலைப்படாதீங்க. இப்போது அதிகப்படியான இரத்தம் வெளியேறியுள்ளதால் மயக்க நிலையில் இருக்கிறார். உடனடியாக ஆப்ரேசன் செய்யவேண்டும். எலும்பு ஜாயின்ட் பண்ண பிளேட் வைக்கணும்; கரண்டை காலில் கட்டான நரம்புகளுக்கிடையே பிளாஸ்டிக் நரம்பு வைத்து இணைத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணவேண்டும். இதற்கெல்லாம் நிறைய செலவாகும். உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு பணத்துக்கு ஏற்பாடு செய்யணுமே என்னசெய்ய.... சிலர் பண உதவி செய்வதாக சொன்னார்கள். அவர்களிடம் கேட்டபோது இப்போது எங்களால் முடியாது என்று மறுத்துவிட்டனர். நான், எனது மனைவியின் நகைகளை பேங்கில் அடகுவைத்து 1 1/4 லட்சம் கொடுத்தேன். இன்னும் பணத்துக்கு உறவினர்களிடமும் மற்றும் சிலர்களிடம் உதவி கேட்டோம். ஊரில் உள்ள நல்மனது கொண்ட மக்கள் சில தொகை கொடுத்தனர். அப்படியாக சேர்ந்த பணத்தைக் கொண்டு ஆப்ரேசனுக்கு பணம் கட்டினோம்.

இறைவனின் கிருபையால் ஆப்ரேசன் நல்லவிதமாக முடிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டுக்கு கூட்டிவந்தோம். இப்போது மருந்து கட்டுபோட வாரத்துக்கு 2முறை தூத்துக்குடியில் உள்ள திரவியம் மருத்துவமனைக்கு சென்று வருகிறோம். இப்போது உடல்நலம் தேறி வருகிறார். மாமா எழுந்து நடப்பதற்கு முயற்சித்து வருகிறோம்.

உடன்குடியில் உள்ளவர்கள், "அஜீஸ் பாய்க்கு இப்படி ஆகிட்டதே.. ரொம்ப நல்ல மனுசன்; ஓரமாக சென்று ஓரமாக வரக்கூடியவர்; அமைதியானவர்; அவருக்கா இந்த நிலைமை" என்று ‌மாமாவை பற்றி அவர்களுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது.

ஆக்ஸிடென்ட் செய்தவனை போலீஸார் பிடித்து எஃப் ஐ ஆர் போட்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவன் இரண்டே நாளில் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டான். திருநெல்வேலியில் கேஸ் போட்டிருக்கிறோம்.

மாமா இரவெல்லாம் வலியில் உறக்கம் வராமல் துடிப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. "நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன். சும்மா போனவனை அடித்துப்போட்டு விட்டானே... என்னோட உழைப்பு போயிவிட்டதே.. நடக்க எத்தனை மாசம் ஆகப்போகிறதோ தெரியவில்லையே.." என்று கண்ணீர் வடிக்கிறார். இதெல்லாம்‌ அவனுக்கு எங்கே கேட்கப்போகிறது?.. இந்த பாவம் அவனை ஒருக்காலும் சும்மா விடாது.

டிரைவர் என்றால் கட்டாயம் குடித்துவிட்டுதான் வாகனம் ஓட்டவேண்டுமா?.. அப்படி என்னைய்யா அதுல இருக்கு?.. உயிரை வாங்கும் அளவுக்கு குடி தேவையா?... கொஞ்சம் சிந்தித்து பார். உன்னால் எத்தனை உயிர்கள் போக வேண்டி இருந்தது?.. கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

தன்னை மறந்த குடிபோதை, அவனை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்த சுற்றத்தாரையும் பாதிப்பதை அவன் கொஞ்சம் சிந்தித்து பார்த்து திருந்தட்டும்.

,



Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்