Pages

Sunday, December 2, 2012

பெண்ணே..! நீயும்

 பெண்ணே..! நீயும்




மெல்லிய தோகை சிலிர்த்தெழும் தேகம்
அள்ளிய நளினம் மெல்லிடை ஸ்பரிசம்
கொஞ்சிப்பேசும் விழிகளின் இயக்கம்
எஞ்சிய எவரும் காணாத நாணம்

வந்தென்னை அணைத்துக்கொள்ளடா என
ஏங்கும் உந்தன் பருவம் ஒரு தோகையோ!
கார்க்கூந்தல் வாசத்தால் எனை மயக்கும் மங்கையே

பெண்ணே..! நீயும் ஒரு அழகு மயில் தானடி!!..

Post Comment

Wednesday, April 11, 2012

சுனாமி எச்சரிக்கை


இன்று மதியம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை படித்ததும் மனம் என்னவோ போலானது. மிகுந்த வேதனையடைந்தேன். யாருக்கும் எந்தவித துன்பமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று மனம் பதபதைப்பாக இருக்கிறது.

மலேசியாவில் உள்ள தம்பியுடன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது கொஞ்சம் ஆறுதல். நண்பர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்க சொல்லவேண்டும்.

சென்றமுறை 2004ல் சுனாமி வந்து இந்திய இந்தோனேஷியா மற்றும் கடற்கரை பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. மறுபடியும் சுனாமி என்றால் தாங்காது இந்தபூமி. இறைவன் தான் எல்லா மக்களையும் பாதுக்காக்க வேண்டும்.

சென்ற 2004ல் சுனாமி வந்தபோது நான் வேலை விசயமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அங்கே எல்லோரும் ரொம்ப கவலையுடன் இருந்தனர். ரேடியோக்களிலும் தொலைக்காட்சியிலும் ஒலி/ஒளிப்பரப்பட்ட காட்சிகளை கண்டபோது மனம் ரொம்ப வேதனையாக இருந்தது. அன்றைய தினம் மனசு முழுவதும் பிரார்த்தவண்ணமே இருந்தது. மதுரை வந்தபின் பள்ளியில் தொழுது பிரார்த்தனை செய்தது இன்னும் பசுமையாக உள்ளது.


எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.

சென்னையில் உள்ளவர்களும் கடற்கரை மாவட்டங்களில் உள்ளவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கவலைப்படவேண்டாம். இறைவன் பாதுகாப்பான்.

,

Post Comment

Tuesday, April 10, 2012

அவன் வரும் நேரம்


இரவு நேரம். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது எங்கிருந்துதான் அந்த வலி வந்ததோ தெரியவில்லை. அம்ம்ம்ம்ம்மா.... என்ற அலறலுடன் தட்டுதடுமாறி மெதுவாக எழுந்தேன். வாசலுக்கு வந்து பார்த்தால் எங்கும் இருட்டு பயம்வேறு தொற்றிக் கொண்டது. யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று தேடினேன். பக்கத்து வீடுகளை தட்டியதில் குறட்டை சத்தமே பதிலாய் வந்தது. அங்குமிங்கும் நடந்தேன்., பதிலே இல்லை. இந்த நேரம் துணைக்கு யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவரும் இல்லாதது வெறுப்பாய் உணர்ந்தேன். மனம் ஒருவித ஏக்கத்துடன் தவியாய் தவித்திருந்தது.

அம்மாவுக்கும் மாமி வீட்டுக்கும் போன் செய்யும் போது மனமும் வலித்தது. உறவுகளை உதறித்தள்ளி தொலைவில் தனிமையில் இருந்தது முதலில் சந்தோசமாக இருந்தாலும் இப்போது நினைக்கையில் மெல்ல தலையை சுற்றியது. தண்ணீரை அள்ளிஅள்ளி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. மீண்டும் வலி வரத் தொடங்கியிருந்தது.

அந்த ஆளரவமற்ற சாலையில் என் கால்கள் மெல்லமெல்ல விரைந்தன. வலி விட்டுவிட்டு வருகிறதே.. என்னால் நடக்க முடியல.. தலைசுற்றி மயக்கத்துடன் நடந்து வந்தேன். யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போன்று இருந்ததால் அம்ம்ம்மா.. என்றபடி மயங்கி விழுந்தேன். இதமான காற்று என் முகத்தினில் மோத சிலிர்த்தெழுந்து நினைவுகள் பயணிக்கத் தொடங்கியிருந்தது. எழும்போது கால்கள் நடக்க திரணியற்று பயணித்தன.

"மரகதவல்லி மருத்துவமனை" என்ற பெயர்தாங்கி நின்ற இடத்தினிலுள்ளே கால்கள் சென்றன. என் நிலை கண்டும் அங்கிருந்த செவிலியர் கண்களில் அலட்சிய பார்வை "டாக்டர் இல்லை., காலையில்தான் வருவார்" என்ற பதிலுடன்.

நான் பொறுத்துக் கொள்வேன். வலி பொறுக்குமா?.. கத்த தொடங்கினேன். செவிலியர், "ஏம்மா, சும்மா சும்மா கத்திக்கிட்டே இருக்கே.. டாக்டர் வரட்டும்" என்றவளுக்கு மயக்கம்தான் விடையாய் கிடைத்தது என்னிடமிருந்து.

"குவா.. குவா" குரல் கொடுத்து என்னை மெல்ல கண்விழிக்க செய்தான் என் செல்லம். எழ முடியாமல் பெட்டிலிருந்து எழுந்தபோது, "வாடா.. வாடா என் செல்லக்குட்டி" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மாமியை கண்டதும் என் கண்களையும் மீறி நீர் வடிந்தது. "மாமி..." என்று பேச எத்தனிக்கும்போது வார்த்தைக்கு பதிலாய் கண்ணீர். பரவாயில்லமா என்றபடி என் செல்லத்தை கொஞ்சிக் கொண்டிருந்தார்.

,

Post Comment

Monday, March 26, 2012

நேசம் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை

புற்றுநோய் விழிப்புணர்ச்சிக்காக நேசம் அமைப்பினர் நடத்திய சிறுகதை போட்டி முடிவுகளை இன்று அறிவித்துள்ளார்கள். இதில் மூன்று பரிசுகளும் நான்கு ஆறுதல் பரிசுகளுக்கான சிறுகதைகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில் முதல் பரிசு பெற்றது அப்பாவி தங்கமணியின் சிறுகதை. எனது சிறுகதையான "பொழுது விடியட்டும்" சிறுகதையை இரண்டாம் பரிசு சிறுகதையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் நடுவர் குழுவினருக்கும் என்னுடைய‌ நன்றிகள்.



எல்லா புகழும் இறைவனுக்கே!

வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த வெற்றிபெற உதவிய உங்கள் அனைவரின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் என்னால் மறக்க இயலாது.

நண்பர் அக்பர் போன்மூலம் சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப சந்தோசமா இருந்தது.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருநிமிடம் விக்கித்து நின்றேன். இந்த சந்தோசத்தை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நேசம் போட்டி முடிவுகளை இங்கே காணலாம்.

போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை பொழுது விடியட்டும்.

தேர்ந்தெடுத்த நேசம் அமைப்பினருக்கும் உடான்ஸ் திரட்டிக்கும் நடுவர் குழுவினருக்கும் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Thursday, March 15, 2012

கரையில்லா ஜோதி?..


கவியே என் ஆருயிர் கவியோ நீ
உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்..

வரிகளை கொண்டு உன்னையடையும்
வழிகளாய் உருவகப்படுத்தினோம்..
அது ஏக்கம், சோகம், இன்பம்,
தாங்கி நிற்கும் உணர்வுகளாக..

என்று எழுத்து என்னும் மூதாட்டியை
நிலாவில் கண்டோமோ அன்றே
நீயும் பிறந்திருப்பாய் என்றே
தோன்ற வைத்திருப்பாய்!!

சிக்கிமுக்கி காலம்முதல்
தீப்பொறிகள் போல
காதலுக்காக தூதுச்சென்றாயோ!!
அல்லது விதைகளை தூவிச்சென்றாயோ?..
உன் சக்தியால் சில மக்கியும்
பல விருட்சமாகவும் யெங்கெங்கிலும்...

ஆண்டியிலிருந்து கவிச்சக்கரவர்த்தியையும்
தாண்டி கவியரசாகவும் கவிபேரரசுகளாய்
பரந்துவிரிந்த தேசமிது
உன்னை விரும்பாதோர் அவனியில் உண்டோ?..

கவியே என் ஆருயிர் கவியோ நீ..
பூவையர் மனம் போல மென்மையானவளே!
ஒவ்வொரு நாளும் புத்தம்புது
மலராய் பூக்கின்றாய் என்னுள்..
எனை வந்து சேருவது என்னாளோ?..

வா அருகினில் வா
வந்தெனை அணைத்துக் கொள்
எமை உன் ஜோதியில் கலக்க வா..

உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்...

,

Post Comment

Saturday, March 10, 2012

நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறர்க்கு?..

இப்போதெல்லாம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவது மிக சாதாரணமாகி விட்டது.


"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார். அதில், அண்ணல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும்.

420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். ஆக மொத்த எடை... 1500 கிலோ..!

100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும் இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!.

அடேங்கப்பா......!


ஆட்சியாளர்களுக்கு இவ்வளவு வீண்செலவு செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பது சாதாரணமாக தோன்றுகிறது.

கஷ்டப்படும் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. இவ்வளவு பணத்தைக் கொண்டு பசியால் வாடும் கஷ்டப்பட்ட அரபிகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் செலவு செய்தால் அவர்கள் மனம் குளிருவார்களே..

இந்த பணத்தைக் கொண்டு நாட்டுநலப் பணித்திட்டங்களுக்கு செலவிட்டால் நாட்டில் பணப்பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டங்களும் விரைந்தோடுமே..

சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்?????....

******

* ஒரு 20 ரூபாயை 2 ஏழைகளுக்கு தர்மம் செய்வது நமக்கு பெரிய விசயமாக இருக்கும்.

* ஆனால் இந்த 20 ரூபாயை ஹோட்டல் சர்வருக்கு டிப் ஆக கொடுப்பது சாதாரணமாக தோன்றுகிறது.

* ஒரு 3 நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மிக கடினமாக தோன்றும்.
ஆனால் 3 மணி நேரம் சினிமா படத்தை உக்கார்ந்து பார்ப்பதில் கஷ்டமே தெரியாது.

* நாள்பூராவும் ஜிம்முக்கு போய் நேரத்தை வீணாக்கி கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்வது மிக பிடித்தமான ஒன்று.

* அதே நாள் வீட்டில் சின்னசின்ன வேலைகள் செய்து அம்மாவுக்கு உதவியாய் இருப்பதில் ரொம்பவே டயடாகி விடுவோம்.

* வருடத்தில் ஒருநாள் வரும் லவ்வர்ஸ் டே எப்போ வருதுன்னு ஆவலோடு இருப்போம்.

* ஆனால் அன்னையர் தினம் (மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) எப்போ வருதுன்னு தெரியாமலே போய்விடும்.



* இதோ இந்தப் படத்தில் தோன்றும் இரண்டு சிறுவர்கள் பசி மயக்கத்தில் சுருண்டு கிடக்கின்றனர். இவர்களுக்கு ஆளுக்கொரு ரொட்டித்துண்டுகள் வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு சந்தோப்படுவார்கள்.

* ஆனால் இதே சோகக் காட்சியை படமாக வரைந்து 1 லட்ச ரூபாய்க்கு விற்பது பேசனாகி விட்டது,....

என்ன செய்ய?..

நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறருக்கு அது ரொம்ப பெரிய விசயமாக இருக்கும்.

எனவே இறைவன் கொடுத்த பொருளாதாரத்தை வீண் வகைகளில் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஈடுபாடு காட்டினால் உலகில் வறுமை என்னும் சொல்லே இருக்காது.

,

Post Comment

Monday, March 5, 2012

ஏமாறுகிறவன் இருக்கும்வரை...

சென்ற ஆண்டு ஊருக்கு சென்றிருந்த சமயம், எப்போதும் மதியம் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கத்தை போடுவதுண்டு. அப்படி ஒருநாள், சாப்பிட்டுவிட்டு குட்டித்தூக்கத்தை புரண்டு புரண்டு வரவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது அலைபேசி அலறிக்கொண்டிருந்தை பார்த்த என் மனைவி, "ஹலோ! ய்யாரு.." என்றார். "ஹலோ! மிஸ்டர் ஷேக் மைதீன் இருக்கிறாரா.. அவரிடம் கொடுங்க., கொஞ்சம் பேசணும்" என்று கொஞ்சும் குரலில் ஒரு பெண் மறுமுனையில். மனைவி ஒருவித பார்வையுடனே என்னிடம் போனை தந்தார்.



நான் "ஹலோ" என்றேன். "ஹலோ நீங்கதான் ஷேக்மைதீனா?" என்றாள். "ஆமா நாந்தான்.. என்ன வேணும் சொல்லுங்க" என்றேன். உடனே மறுமுனை பெண், "சார்! கன்கிராஜிலேசன்ஸ்! நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படப்போகுது! உங்க கனவு நனவாகப்போகிறது!" என்றாள் அவள். "அட! என்னங்க சொல்றீங்க.. ஒண்ணும் புரியலியே.." என்றேன். "ஆமா சார்.. உங்களுக்கும் உங்க மனைவிக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. எங்க நிறுவனத்தின் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்)ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் உங்க ரெண்டுபேரையும் செலக்ட் பண்ணிருக்காங்க. இலவசமா பாலிசி தர்றாங்க. பணமே கட்டவேண்டாம். உங்களுக்கு 2 லட்சரூபாய்க்கு பாலிசி இலவசம்" என்றார் அந்த பெண்.

"அடடே.. ரொம்ப நல்ல விசயந்தான் சொல்லியிருக்கீங்க.. அப்ப நான் அதிர்ஷ்டசாலிதான் ரொம்ப சந்தோசமா இருக்கு.." என்றபடி மனைவியை ஒரு லுக் விட்டேன். மனைவியும் "என்ன?.. யாருங்க போன்ல" என்றபடி ஆர்வமானார். இதுபோல நிறைய இலவச பாலிசி மேட்டர் கேள்விபட்டிருந்தாலும் இவங்க என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே என்று போனை துண்டிக்காமல் இன்சூரன்ஸ் கம்பெனி பெண்ணுடன் பேச்சை தொடர்ந்தேன். இதைக் கண்டு என் மனைவியும், அத்தாவும், அம்மாவும், தங்கையும் ஆர்வத்துடன் என் அருகே அமர்ந்ததும், நான் பேசுவதை ஸ்பீக்கர் போனில் போட்டு அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

"ஆமா சார்! நீங்க அதிர்ஷ்டசாலிதான். பாலிசியை வாங்கிக்கொள்ள எங்க அலுவலகத்துக்கு வாங்க" என்றார். "சரிங்க.. உங்க அட்ரஸ் கொடுங்க.. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்" என்றேன். அந்த பெண்ணும் ஆபீஸ் அட்ரஸ் கொடுத்தார். ரொம்ப நன்றி என்றேன். "பரவாயில்லை சார்! எங்களுக்கும் பங்கு கிடையாதா?.." என்றார் அந்தபெண். "என்னது?.. உங்களுக்கும் பங்கா?.. அஸ்குபுஸ்கு!" என்றேன் நான். "அட என்ன சார்! நான் சொன்னது உங்க சந்தோசத்தில்" என்றார் அந்த பெண். இருவரும் கடகடவென சிரித்தோம்.

"சரிங்க அப்ப நான் உங்க ஆபீஸ்க்கு வந்து பாலிசியை வாங்கிக்கிறேன்" என்றேன். "சரிங்க‌ சார்! வரும்போது மறக்காம உங்க மனைவியையும் கூட்டிட்டு வாங்க" என்று அடுத்த குண்டை போட்டார் அந்த பெண். "மனைவியை ஏன் கூட்டிட்டு வரணும்?.. நானே வந்து வாங்கிக்கிறேன் மேடம்" என்றேன். "இல்லீங்க.. கண்டிப்பா உங்க மனைவியையும் கூட்டிட்டு வரணும். மனைவியோட வந்தால்தான் பாலிசி கொடுப்பாங்க. மறந்துருராதீங்க சார்" என்றதும் நான், "மேடம்! மனைவியை இப்ப கூட்டிட்டு வரமுடியாது. நானே வந்து வாங்கிக்கிறேனே மேடம்" என்றதும் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார் அந்த பெண்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். மறுபடியும் அவளிடமிருந்து போன். "ஏன் சார்.. உங்க மனைவி வரமாட்டாங்க?. கண்டிப்பா வரணுமே சார்" என்றார் அந்த பெண். "இல்லீங்க.. அவங்க வரமுடியாத சூழ்நிலை. அதனாலதான் நான் வருகிறேன் என்று சொன்னேன்" என்றேன் நான். அந்த பெண்ணும் லேசுல விடலை. துருவிதுருவி கேட்டுக்கொண்டிருந்தார். "என்ன சூழ்நிலை?. உங்களுக்கு பாலிசி வேணுமென்றால் மனைவியோட வாங்க" என்றார். "என் வொய்ப் ஊருக்கு போயிருக்காங்க. வர 2 நாளாகும். நான்கூட இப்ப ஊருக்குதான் கிளம்பிக்கிட்டு இருக்கிறேன். அதனால நான் இப்ப வந்து வாங்கிக்கிறேன். பாலிசி டாக்குமென்ட்ஸ் எல்லாம் ரெடியா வச்சிருங்க. இப்ப வருகிறேன்" என்றதும் அந்த பெண் போன் இணைப்பை மறுபடியும் துண்டித்து விட்டார்.

எங்க வீட்டிலுள்ளவர்களுக்கு இது உண்மையா இல்லை பொய்யா?.. என்று ஒரே குழப்பம். பொய்தான் என்று தெரிந்தாலும் அந்த பெண் பேசுவதை வைத்து பார்க்கும்போது உண்மையா இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த பெண்ணின் பேச்சு அற்புதமாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. இவர்களுக்கு ரொம்ப நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காங்க.

அப்போதுதான் எனது சிஐடி மூளையில் பல்பு பிரகாசித்தது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் இடம் நன்றாகத் தெரியும். அங்கே சென்று இது பொய்யா?.. உண்மையா? என்று நேரில் பார்த்துவிடலாம் என்று தோன்றியது. உடனே அங்கே கிளம்பிவிட்டேன்.

அதுஒரு ஐந்துமாடி கட்டடம். கீழ் தளத்தில் பிரபலமான ரெஸ்டாரென்ட் இயங்குகிறது. நான் அங்கு சென்று லிப்டை ஆன் செய்தேன். அது ஒர்க் ஆகவில்லை. அங்கிருந்த காவலாளி, "லிப்ட் ஒர்க் ஆகாது., படியில் ஏறி போங்க சார்" என்றார். விறுவிறுவென படிகளில் ஏறி நான்காவது மாடியில் உள்ள அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்றதும் எனக்கு அதிர்ச்சியானது.

சரியாக கட்டிமுடிக்கப்படாத கட்டடம். சுற்றிலும் நோட்டம்விட்டேன். அங்கு யாருமே இல்லை. மேலும் முன்னேறி சென்றேன். அப்போது மீண்டும் அதே குரல். அதே குரல் பல குரல்களாக எதிரொலித்தது. அப்போது எதிரே ஒரு பெண் அலுவலகத்துக்கு உள்ளிருந்து வந்தாள். நான் சுற்றும்முற்றும் பார்ப்பதை உணர்ந்து என்னவென வினவினாள். அதற்கு நான், "நான் கீழே ரெஸ்டாரென்ட்க்கு வந்தேன். மேல்மாடியில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் இலவச பாலிசி தருவதாக பேசிக்கிட்டாங்க. அதான் இங்கே வந்தேன்" என்றேன். "அப்படியா.. ரொம்ப சந்தோசம். ஆமா., இங்கே இலவச பாலிசி உண்டு. உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா ஒய்பை கூட்டிட்டு வாங்க. இலவச பாலிசி தருவாங்க" என்றாள். நான் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நோட்டம் விட்டேன். "சரிங்க மேடம் அப்ப நா வாரேன்" என்று அங்கிருந்து கிளம்பினேன்.

நான் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சிதான் மிஞ்சியது. உள்ளே நாலைந்து கால் கேபின்களில் இளம்பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் பேசிய பெண்ணின் குரலும் கேட்டது. இவர்கள் பேச்சாலே கஸ்டமர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தனர். அந்த அலுவலகத்தில் பாலிசி கொடுப்பதாக இருந்தால் எதாவது அதிகாரியோ இல்லை அலுவலகமாகவோ இயங்கவேண்டுமே. அங்கு ஐந்தாறு பெண்களை தவிர வேறயாருமே இல்லையே?.. பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து ஏமாற்றுதல் முறையற்ற செயல். இந்த பெண்களையும் குற்றம் சொல்லி பயனில்லை

எனக்கு தெரிந்து,

இப்படித்தான் சில இடங்களில் இலவச பாலிசி தருவதாக சொல்லி வரவைத்து உங்களுக்கு இலவசமா பாலிசி தருவதானால் இவ்வளவு தொகை செலுத்தினால் போதும். அப்புறம் நீங்க பணம் எதுவும் கட்டவேண்டாம் என்று சொல்லி பணத்தை கறந்துவிடுவார்கள். இப்படி நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

முதலில் இலவசம் என்று சொல்லி பின்னர் டாக்குமென்ட்ஸ் கையெழுத்திடும்போது ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை கேட்டால் என்ன செய்வது?.. இவர்களது இலக்கு நடுத்தர வர்க்கத்தினரை இலவசம் என்ற பெயரில் கவர்ந்து இழுப்பதுதான். இதுபோல கம்பெனி தரும் இலவசங்களை கண்டும் காணாமல் விடுவது சாலச் சிறந்தது.

அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். இதுபோன்ற இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

மறுநாள், மறுபடியும் அதே பெண்

"ஹலோ சேக்மைதீன்!.. உங்க ஒய்ஃப் ஓகே சொன்னாங்களா.. உங்க ஒய்ஃபை கூட்டிட்டு எப்ப வாரீங்க? உங்களுக்கான இலவச பாலிசி வெயிட்டிங்ல இருக்கு.. வந்தீங்கன்னா வாங்கிக்கிரலாம். இல்லன்னா வேற யாருக்காவது கொடுத்திடுவாங்க‌" என்றாள். உடனே நான், "இல்லீங்க மேடம்! எனக்கு இப்ப பாலிசி வேண்டாம். என்னோட பாலிசிய வேற யாருக்காவது கொடுத்திடுங்க.. எதோ நம்மளால முடிஞ்ச உதவி. உங்க புண்ணியத்துல அவங்களாவது நல்லாருக்கட்டுமே" என்றேன்.

,

Post Comment

Friday, February 10, 2012

சாதிக் S/o ஜமீலா - சிறுகதை

​சாதிக் S/o ஜமீலா - சிறுகதை


"எலே சாதிக்கி!.. சாதிக்!.. இந்த பய எங்கப்போனான்?.. பள்ளிக்கோடம் போவணும். இம்ப்பூட்டு தேரமாச்சி.. ரெண்டுவா சோறு திங்காம அரக்கபரக்க ஓடுவானே" என்றபடி தோசை சுட்டு அருகிலிருந்த பாத்தரங்களில் வைத்துக் கொண்டிருந்தேன். அருகிலிருந்த பிள்ளைகளும் பள்ளிக்கொடம் போவுறதுக்கு அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர்.


"ஏ புள்ளைகளா.. அவசரப்படாதீங்கோ.. ஒவ்வொருத்தருக்கா தானே சுட்டு வைக்கமுடியும்" என்றபடி தோசையை திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தேன். "எலா ஜமீலா.. என்ன இம்ப்பூட்டு தேரமா சுட்டுக்கிட்டு இருக்கே.. நா அப்பவே பாத்தரத்தை வைச்சிட்டு போனேனே.. இன்னுமா சுடலை?.. எம்புள்ள பள்ளிக்கொடத்துக்கு கிளம்பிட்டான். சீக்கிரம் கொடுலா" என்றாள் பக்கத்துவீட்டு பாத்திமா. "இந்தா முடிஞ்சிருச்சி. எடுத்துக்கோ" என்றபோது சாதிக் வீட்டுக்குள் வந்தான்.


"உம்மா.. நா இஸ்மாயிலுட்ட நோட்ஸ் வாங்கப்போனேம்மா" என்றான். "சரி சரி.. இந்தா ki ரெண்டு தோசைய சாப்பிடு வாப்பா" என்றேன். "அதெல்லாம் வாணாம்மா.., பழைய சோறு சாப்பிட்டு போறேம்மா.. நேரமாச்சி" என்றான். "சரி வாப்பா.. நல்லா பெரிய படிப்பெல்லாம் படிக்கோணும் என்ன!.., க்க்ஹ்ஹும், க்க்ஹ்ஹூம்" என்று இருமியபடியே சொன்னேன். "உம்மா பாத்தும்மா.. அடுப்பு கிட்டத்துல இருக்காதேம்மா தள்ளியிருமா. இருமலா இருக்குல்ல.. டாக்குடருட்ட போன்னால்லும் போவமாட்டேன்ங்குதே, என்னம்மா இதெல்லாம்?.." என்றான் சாதிக். "அதெல்லாம் உம்மாக்கு ஒன்னுமில்ல வாப்பா. தர்மாஸ்பத்திரிக்கு போவணும்.. எங்க நேரம் கிடைக்குது?" என்றேன். "உக்கும் இப்படியே சொல்லிக்கிட்டு இரு. சரி நா ஸ்கூலுக்கு போறேம்மா" என்றபடி பைக்கட்டை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.


அவன் பள்ளிக்கொடத்துக்கு போற அழகை கண்களில் நீர் சூழ பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம்! வெறும் பழையசோத்த சாப்பிட்டு போறான். எனக்கும் தோசை கொடுக்கணுன்னு ஆச. ஆனா தோச சுட்டு வித்தாதான் அன்னக்கி உலை வைக்கமுடியும். இன்னக்கி கொஞ்சம் யாபாரம் நல்லாருந்தது.


*****


எப்படில்லாம் வாழ வேண்டிய புள்ள. இப்போ தகப்பன் இல்லாதவனா ஆயிட்டானே!.. கல்யாணத்துக்கு முன்னாடியே துபாய்க்கு போன எங்கூட்டுக்காரவுக‌ சம்பாரிச்சி சம்பாரிச்சி மொத்தத்தையும் அனுப்புனாக. தங்கச்சிமார்களுக்கு ஜாம்ஜாம்முன்னு கல்யாணம் நடத்துனாக‌.., கல்யாணத்துக்கப்பறம் நா வந்தபின்னாடி கொஞ்சநஞ்சமா செலவு செஞ்சதுல எதோ மிச்சம் வந்துச்சி.. அப்படியிருந்தும் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சி.. மாமாவும் மாமியும் என்ன நல்லா பாத்துக்கிட்டாக. சாதிக் வாப்பாவும் கஷ்டப்பட்டு சம்பாரிச்சாக.


துபாயில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது எங்வூட்டுக்காரவுகளுக்கு மிசினில் கைமாட்டிருச்சி.. முழுகையும் மாட்டிக்கிருச்சி., அங்குள்ள டாக்டருங்க, 'இவுகளுக்கு சுகர் இருக்காம்; அதனால காப்பாத்த முடியாதுன்னு' ஊருக்கு அனுப்பிச்சாட்டாங்க.. ஊருக்கு வந்தபின்னாடி நானும் எப்படியாவது காப்பாத்திப்புடலாமுன்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா அல்லாஹ் அவுகளை கூப்பிட்டுக்கிட்டான். எனக்கு தலையில் இடி விழுந்தமாதிரி உலகமே இருண்டுவிட்டது. என்னடா செய்வது?.. பேசாம நானும் அவுகக்கூடயே போய்சேர்ந்திரலாமுன்னு தோணிச்சி. சாதிக்கின் பிஞ்சுமுகம் பார்த்து என்னை நானே ஆறுதலாக்கிக் கொண்டேன். சாதிக் 10 வயசு. அவன படிக்க வைச்சி பெரிய ஆளாக்கணுன்னு அவன் வாப்பாவுக்கு ரொம்ப இஷ்டம்.


துபாயிலிருந்து சாதிக் வாப்பாவுக்கு கிடைத்த பணம் கடன்காட்சிக்கே சரியாப்போச்சி. இப்ப இருக்கிற ஓட்டுவீடுதான் மிச்சம்.


*****


ஆஹா மணி பத்தாகிருச்சே.. நாலு தெருவுக்கு மீன் விக்க போகணும்.. யா அல்லாஹ் இன்னக்கி மீன் நல்லா விக்கணும் என்று பிரார்த்தப்படி மீன்கூடையை சுமந்து சென்றேன். "இங்க பாருலா ஜமீலா! இன்னக்கி நல்லநல்ல மீன்லாம் கிடைச்சிருக்கி.. யாபாரத்த சுருக்கா முடிச்சிட்டுவா என்ன.. சுணங்கிராதே சரியா" என்றார் மீன் வியாபாரி மரியதாஸ்.


"மீனு வாங்கலியோ மீன்னு மீனே.. யம்மோய் மீன் வாங்கிலியோ.."


"மரியம்மா, ஏய் உபகாரம், மேரி.. நல்ல நல்ல மீனெலாம் இருக்கு.. உனக்குன்னு பந்துசா கொண்டுவந்திருகேன்லா.."


"ஏலா சாச்சி, இந்தா முதல்ல.. இந்த நீசுத்தண்ணியக்குடி.. அப்புறம் மீனு விக்கலாம். என்ன மீனெலாம் வச்சிருக்கே??.."


"நெத்திலி, ஆரா, கெண்டை, கெழுத்தி, வாவல், சூரா, சீலா.. இப்படி ஆத்துமீன்னு கடல்மீன்னு நிறைய இருக்கு.."


"விலையெல்லாம் ஆனை வில குதிர வில சொல்லுவியேலா.."


"என்ன சாச்சி.. இப்பூடி கேட்டுட்டே.. அநியாயமா வித்தா அல்லாஹ்வுக்கு யார் பதில் சொல்றதாம்."


"தெரியும் சாச்சி.. அதான் உங்கிட்ட வாங்குறோம்."


"சரி நேரமாச்சி.. நா நாலு தெருவுக்கு போவணும். வர்றேன் சாச்சி" என்றபடி மீன் விற்க சென்றேன்.


*****


"ஏய் ஜமீலா.. ஜமீலா.. என்னலா இப்படி ஆகிட்டே.. ம்ம்ம்.. பாவமா இருக்கு. உன்னய பாக்கும்போது!. இப்படி கஷ்டப்படுறதுக்கு சாதிக்கை படிப்ப நிப்பாட்டிட்டு எதாவது வேலைக்கி அனுப்ப வேண்டியது. உனக்கு கொஞ்சம் கஷ்டம் தீருமுல்ல" என்ற கதிஜாவுக்கு "எம்புள்ளக்காக கஷ்டப்படாம யாருக்கா கஷ்டப்பட போறேன். இன்ஷா அல்லாஹ்! அவன் நல்லா படிச்சி நல்ல பெரிய ஆளா வரணும். அதான் சாதிக் வாப்பாவோட ஆசையும் கூட. அத நா பாக்கணும்" என்றேன். சரிதான். ஆனா உன் உடம்பு இருக்குற நிலமைய நினைச்சி பாரு. இந்தா இத சாதிக் படிப்பு செலவுக்கு வச்சிக்கோ.. அப்புறமா துட்டு வாரவுட்டு தா" என்றாள் கதிஜா.


*****


"சாதிக் பத்தாம் வகுப்பு முடிஞ்சிட்டான். நல்ல மார்க்கு வாங்கிருக்கான். 11 சேக்கணும். எதோ உங்களால இயன்ற உதவியை அக்பர் முதலாளிக்கிட்ட சொல்லி செய்ய சொன்னீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்" என்றேன் அக்பர் முதலாளியின் மனைவியான ஆயிஷாவிடம்.


"நல்ல கதையா இருக்கே.. இதுக்கு முன்னாடி வாங்குனது போறாதா.. இருக்குறது குச்சி வீட்டுல.. நெனப்பு மாளிகையோ?.. அவன வேலைக்கி அனுப்புறத விட்டுட்டு படிக்க வைக்கிறாளாம். சரிசரி.. போ, நா சொல்றேன். வந்துட்டா துட்டுதுட்டுன்னு" என்று சலித்தபடி சொன்னாள் ஆயிஷா.


*****


இன்னிக்கி பார்த்து ரொம்ப இரும்மலா இருக்கே.. ரொம்ப தலைசுற்றல்.


"யாரும்மா இங்க ஜமீலா?.. உன்னய டாக்டர் கூப்பிடுதாக.. உள்ளே போம்மா" என்று நர்ஸ் அழைத்தாள்.


டாக்டர் முத்து என்ற பெயர் பலகைக்கு முன்னால் போய் அமர்ந்தேன்.


"நீங்கதான் ஜமீலாவா.. என்னம்மா இப்படி உடம்ப வச்சிருக்கீங்க.. தொடர்ந்து இரும்மலா இருந்துச்சா.. இப்போ உங்க நுரையீரல் பக்கத்துல கேன்சர் உண்டாகிருக்கு. இப்பதான் ஆரம்பம். நீங்க தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்தா குணப்படுத்திடலாம். விட்டுட்டீங்கன்னா உசுருக்கே ஆபத்தா முடியும். உடம்ப கவனிச்சி பாருங்க.. தோசை, இட்லி சுடுறதை, அடுப்புல வேல பாக்கிறத விடணும். சரியா" என்றார் டாக்டர்.


"என்னம்மா ஆச்சி.. டாக்டர் என்ன சொன்னாக?.." என்றான் சாதிக் கவலையோடு. "அதெல்லாம் ஒண்ணுமில்ல வாப்பா. சும்மா இருமல்தான். டானிக் மருந்தெல்லாம் கொடுத்திருக்காங்க., சரியாகிரும்; கவலப்படாதே" என்றேன் அவன் தலையை தடவியபடி.


*****


இப்படியே நாட்களும் நகர்ந்தன. சாதிக் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மதியம் பள்ளியில் இருந்து வந்த சாதிக்கிடம் பக்கத்துவீட்டு பாத்திமா, "எலே சாதிக்!.. உங்கம்மா மீன் விக்க போகயிலே.. தலை சுத்தி கீழே விழுந்துட்டா" என்று சொன்னதும் அவன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.


"உம்மா.. உம்மா.. என்னாச்சிம்மா.. உனக்கு கேன்சராம்!.. பாத்திமா மாமி சொன்னாங்க., ஏம்மா எங்கிட்ட சொல்லலை. எனக்காக நீ கஷ்டப்படுவதை பார்க்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு. நா படிப்ப நிப்பாட்டுதேன்ம்மா, படிப்ப விட உன் உசுருதான் முக்கியம். நீ வேணும் எனக்கு., என்னைய விட்டுட்டு போயிராதேம்மா" என்ற சாதிக் கண்ணீர் வடித்தான். "எனக்கு ஒண்ணும் இல்லப்பா சாதிக்! நீ படிச்சி பெரியாளாகணும் அதான் உங்க வாப்பா உம்மாவோட ஆசை. அல்லாஹ் எல்லாம் நல்லவழிய காட்டுவான். கவலைப்படாதே சாதிக்" என்றேன். அவன் கண்ணீரை துடைத்தபோது எனக்கும் கண்களில் நீர்.


இந்த நேரத்தில் முழுஆண்டு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. சாதிக் அந்த நேரத்திலும் படித்துக்கொண்டே என்னையும் கவனித்துக் கொண்டான். என் உடல்நிலை கொஞ்சம் தேறி வருவதை உணர முடிந்தது.


"உம்மா.. உம்மா.. நா பாஸாகிட்டேம்மா., நாந்தான் ஸ்டேட் பர்ஸ்ட்.. என்னோட பேரு பேப்பருல்லாம் வந்துருக்கு.. எல்லோரும் பாராட்டியிருக்காங்க.. நா டாக்டருக்கு படிக்கப்போறேம்மா., நம்ம அக்பர் முதலாளி உதவி செய்யுறேன்னு சொல்லிருக்காவ. ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த வெற்றியெல்லாம் உன்னால்தான் உம்மா. இனி உன்ன சந்தோசமா வச்சிக்கிருவேன்" என்று சாதிக் ஆனந்த கண்ணீரோடு சொன்னதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


"யா அல்லாஹ்! எல்லா புகழும் உனக்கே.."


அவனை உச்சிமுகர்ந்து ஆனந்த கண்ணீரோடு கட்டிய‌ணைத்தேன்..

Post Comment

Saturday, January 28, 2012

பொழுது விடியட்டும் - சிறுகதை



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை



"ஏ.. மாரிமுத்து.! ஏ மாரிமுத்து.. எங்கிட்டு இம்ப்பூட்டு தூரோம்.. அதுவும் இந்த வேகாத வெயில்லுல விரசா போறீய‌.. செத்த நில்லுப்பா" என்ற குரல் வந்த திசையில் கோயில்பிச்சை நின்று கொண்டிருந்தான். "என்ன செய்யுறது பிச்ச!.. இந்த பொங்கலுக்கு மொவ‌ளும் மருமொவ‌னும் ஊருலருந்து 10 மணி பஸ்ஸுக்கு வாரவுகல்ல.. அதான் கூட்டியாற போறேன்.. ஆமா! நீ எங்கல போறே. அதுவும் வெள்ளையும் சொள்ளையுமா?!. சோக்கா இருக்கேலே" என்றேன். "அட நம்ம செல்வி வாராளா.. கட்டிக் கொடுத்ததுக்கப்பறம் பார்க்கவே இல்லயே.. பார்த்து எம்ப்பூட்டு நாளாச்சி.. எதாச்சும் கடிதாசி கிடிதாசி போடுவாளா மாரி?.. கண்ணுக்குள்ளே வளந்த புள்ள!.. ம்ம்ஹும். நா பக்கத்தூரு சந்தைக்கி மாடுவாங்கலான்னு போறேன்.. நீயும் வாறியா மாரி?.." என்றான் பிச்சை.

"இல்லப்பா.. இன்னக்கி மருமொவன் வாராவுல்லா.. நீ போயிட்டு வா"

"ஆமா.. ஆமா மருமொவன் கொஞ்சம் முசுரு புடிச்சவருதான். சரி சரி.. பஸ் வர்ற சத்தங்கேட்குது"

"அப்ப்பா.. எப்புடி இருக்கீய" என்றபடி வந்தாள் செல்வி. "வாங்க மாப்ளே.. எப்டி இருக்கீய.. சொகந்தானா.. வீட்டுல எல்லோரும் சவுக்கியந்தானா?.." என்றதுக்கு "ம்ம்.. நல்லாருக்காங்க.. நல்லாருக்காங்க" என்றார் மாப்பிள்ளை. "மாப்ளே.. எப்படி இருக்கீங்க.. செல்விம்மா எப்படி இருக்கே.. பார்த்து எம்ப்பூட்டு நாளாச்சி" என்று பிச்சை கேட்டதுக்கு "பிச்ச சித்தப்பா.., எப்படி இருக்கீய.. வீட்டுல எல்லோரும் நல்லாருக்காங்களா" என்றாள் செல்வி.

"மாரி!.. புள்ளைகள கூட்டிட்டு வீட்டுக்கு போ.. நா சந்தைக்கி போயிட்டு வாரேன். பஸ்ஸு கிளம்ப போவுது. நா வாரேன்" என்றபடி பிச்சை பஸ்ஸில் ஏறினான்.

"ஏய்ய்ய் ஆறுமொவம்.. இவுகள வீட்டுல கொண்டுபோய் இறக்கிவிட்டுரு.. செல்வி.. ரெண்டுபேரும் வீட்டுக்கு போங்க. நா செத்த பொடிநடையா வாரேன்" என்று வண்டிக்காரனிடம் சொல்லி அவர்களை மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். மனம் பழையவற்றை அசை போட ஆரம்பித்தது.

இந்தா போறானே கோயில்பிச்சை. என்னோட 3 வயசு சின்னவன்தான். ஆனா, சின்ன வயசுலருந்து இவந்தான் எனக்கு எல்லாமே. அப்போம் நாங்கெல்லாம் விளாடாத விளாட்டே இல்லை. பள்ளிக்கொடம் பக்கத்துல நிழலுக்குக்கூட‌போனது கிடையாது. வாத்திக்கும் எனக்கும் சின்ன தகராறாகி சிலேட்ட கொண்டு அவர் மண்டைல போட்டதுக்கு அப்புறம் படிப்ப மூட்டை கட்டுனதுதான். படிப்பு சுத்தமா மண்டைல ஏறல. ஆனா பிச்சை அப்படியில்லை. நல்லா படிப்பான். அதுனால அவனுக்கு விவரமெல்லாம் அத்துப்படி. ஆனா அவனால மேக்கொண்டு படிக்கமுடியல.

எங்கப்பாவுக்கு நஞ்சை, புஞ்சை தோட்டம்துரவுன்னு எக்கசக்கமா உண்டு. சீட்டு, குடி, பந்தயம்முன்னு இருந்த சொத்தை அழிக்க ஆரம்பிச்சார். அம்மாவையும் எங்களையும் அடிப்பாரு. அம்மா பாவம். அப்பாவ நினைச்சி கவலப்பட்டு கவலப்பட்டு நோயில விழுந்துருச்சி. அம்மாவையும் தங்கச்சி, தம்பிகளை காப்பாத்துறக்காக சின்ன வயசுலயே விவசாயத்துல எறங்கியாச்சி. பிச்சையும் என்கூட விவசாயத்துல எறங்கிட்டான்.

அப்பாவுக்கு ஏதோ நோய் வந்திருச்சி.

"நானும் எனக்கு தெரிஞ்ச வைத்தியமுல்லாம் செஞ்சுட்டேன். இனி ஆண்டவன் விட்ட வழி. மாரி உங்கப்பா பொழைக்கிறது கஷ்டம்தான்."
"வைத்தியரே.. டவுண் ஆசுபத்திரிக்கு கொண்டு போலாமுங்களா.."
"ம்ஹூம் தேறுறது கஷ்டந்தேன்."

அப்பா போன‌கவலையிலே அம்மாவும் போய் சேர்ந்திருச்சி. அப்பா விட்டுட்டு போன கொஞ்சநஞ்சத்தை வச்சி தங்கச்சியையும் கரை சேர்த்துப்புட்டேன். தம்பிகளையும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஒருநிலைக்கு கொண்டு வந்தேன்.

செண்பகம் வந்தபின்னாடி எல்லாமே மாறிச்சி.. "ஏலே மாரி! செல்வி பொறந்தபின்னாடி செழிப்பாவுல்ல இருக்கே.. ரொம்ப சந்தோசமா இருக்குடே" என்று பிச்சை சொன்னபோது எனக்கும் சந்தோசமாக இருந்தது.

ஆனா கொஞ்சநாள்ல என் உடம்பெல்லாம் சிறுசிறு கட்டிபோல பொக்களம் பொக்களமா இருந்ததை பார்த்து "ஏன்யா.. என்னைய்யா.. உடம்பெல்லாம் இப்படி இருக்கு. உங் அப்பாருக்கு உள்ள வியாதி தொத்திருச்சா.. என்னஏதுன்னு வைத்தியருக்கிட்ட கேளுய்யா" என்று செம்பவம் சொன்னபோது அதிர்ச்சியா இருந்தது.

வைத்தியரும் ஏதேதோ பச்சயில மருந்தெல்லாம் கொடுத்து சரிபடுத்தினார்.

"ஏலே மாரி! இவுக ‌டவுண்லருந்து வந்துருக்காவ. எதோ கவருமென்ன்ட்டுலருந்து பணம் கொடுக்காங்களாம். எதோ எல்ஐசி யாம். மாசாமாசம் கொஞ்ச ரூவா கொடுத்தா போதுமா., ஒரு பத்து பதினைஞ்சு வருசத்துல ஒரு லட்சமா கொடுப்பாகளாம். நானும் சேந்துட்டேன். நீயும் சேருறியாலே" என்றான் பிச்சை.

"எலே பிச்ச.. நமக்கெல்லாம் எதுக்குலே இதெல்லாம். வயசு போன காலத்துல இதெல்லாம் தேவையா" என்றேன்.

"பின்னாடி உதவுமுல்லே.." என்றான். சரி அவன் சொன்னா சரியாத்தான் இருக்குமுன்னு கைநாட்ட வச்சிப்புட்டேன்.


"செல்வியும் வளர்ந்து பெருசாயிட்டா.. ஒரு நல்ல வரனா பாத்துமுடிங்கன்னு" செம்பவம் அடிக்கடி நச்சரித்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கென்ன தெரியப்போவுது?.. நா படுதபாடு!. இருந்ததையெல்லாம் தங்கச்சிக்கும் தம்பிகளுக்கும் பிரிச்சி கொடுத்து மிச்சமீதி இருந்ததை கொண்டும் கடனஉடன வாங்கி செல்வியோட கல்யாணத்தை செய்யலாமுன்னு நினைச்சேன்.

கல்யாணத்தன்னக்கி மாப்பிள வீட்டுக்காரவுக வரதட்சண பாக்கி அதுஇதுன்னு சொல்லி ரொம்ப கிராக்கி பண்ணிப்புட்டாக. அவுகள சரிக்கட்டி புள்ளைய ஆனந்த கண்ணீரோடு மறுவீட்டுக்கு வழிஅனுப்பினேன்.

அப்ப போன செல்வி இப்பதான் ஊருக்கு வாரா. ம்ம்ம்.. என்ன செய்ய?.. என்று நினைத்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.


"ஏன்யா.. இம்ப்பூட்டு தேரம்..." என்று செம்பவம் கேட்டதற்கு "ஏபுள்ள! வருத வழியில நம்ம செட்டியார் கடையில மளிகை சாமான் சொல்லிட்டு அப்டியே நாம் தாஸ் நல்ல இளசா கிடாக்கறி வச்சிருந்தான்; மாப்புள நல்லா சாப்பிடுவாகல்ல அதான் வாங்கியாந்துட்டேன்., சட்டுபுட்டுன்னு செஞ்சிப்புடு. புள்ளைக பசி தாங்கமாட்டாக, காப்பித்தண்ணி எதாச்சும் கொடுத்தியாப்புல்ல‌" என்றேன். "ம்ம்ஹாம்.. ஆச்சுப்பா., எதுக்குப்பா இதெல்லாம்" என்ற செல்விக்கு "கல்யாணத்தக்கப்பறம் இப்பதான் வந்திருக்கிய.. சும்மாரு புள்ள" என்றபோது எனக்கு கண்களில் நீர் கோர்த்திருந்தது.

பொங்கலன்று, செல்வி புதுத்துணி பட்டு உடுத்தியிருந்ததை பாக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. என் கண்ணே பட்டுரும் போல., அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருந்துச்சி. செம்பவம் திருஷ்டி சுத்திப்போட்டாள். "செல்வி நம்மூரு கொட்டாயில எங்கவீட்டு பிள்ளை படம் போட்டிருக்கான்; போயிட்டு வாங்க" என்று சொல்லி அனுப்பினோம்.

"ஏய்.. செம்பவம், செம்பவம்.. எங்கடி போயிட்டே?., வயக்காட்டுக்கு உரம், பூச்சிமருந்து வாங்கியாந்துட்டு அப்டியே சந்தக்கி போயிட்டு சாமானெல்லாம் வாங்கியாந்துறேன் சரியாபுள்ள" என்றபடி கிளம்பும்போது மாமா என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

"மாமா, நா ஊருக்கு கிளம்புறேன்" என்றார் மாப்ளே. "என்ன மாப்ள.. அதுக்குள்ள கிளம்பிட்டீக.. வந்து ஒருவாரம்தான் ஆச்சி.. இருந்துட்டு போலாம்ல" என்றேன். "இல்ல மாமா., ஊருல சோலி நெறையா இருக்கு. நா கிளம்புறேன்" என்றார். "அப்பஞ்சரி., நல்லபடியா போயிட்டு வாங்க. செல்விய எப்பவந்து கூட்டிட்டு போவீக., அடுத்தவாரம் வருவீயளா" என்றேன் மாப்பிள்ளையிடம். "செல்வி, இனிமே எங்கூட வரமாட்டா. இனிமே இங்கதான் இருக்கப்போறா.."என்றதும் எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. "என்ன சொல்லுதீய மாப்ளே?.. ஏன் என்னாச்சி?!" என்றேன் அதிர்ச்சியுடன். "அத அவள்ட்டேயே கேட்டுக்கோங்க.. நா வாரேன்" என்றதும் எனக்கு ஒருமாதிரி ஆனது. என்ன சொல்றதுன்னே தெரில. உடனே சுதாரித்துக்கொண்டு "சரிங்க.. போயிட்டு வாங்க. அப்ப ஆறுமொவத்த அனுப்பி வைக்கிறேன்., வண்டி வரும்" என்றேன். மனது பாரமாவே இருந்தது.

"ஏலே மாரி! பொங்கல்லாம் சிறப்பா இருந்திச்சா வோய்!.. மொவளும் மருமொவனும் வந்திருந்தாவல்ல" என்றான் பிச்சை சந்தையில் நிற்கும்போது. நான் மௌனமாய் நின்றேன். "ஏலே மாரி! நா கேட்டுட்டே இருக்கேன். ஊமையா நிக்குறே.. என்னடே ஒருமாதிரியா இருக்கே.. உடம்புகிடம்பு சரியில்லையா.. என்னாச்சி சொல்லுலே" என்றான். "அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. செல்விய கட்டிக்கொடுத்த நேரமே சரியில்ல. இப்ப வீட்டுல வந்து கிடக்கப்போறா. மாப்பிள்ளை உட்டுட்டு போயிட்டாரு. இனிமே வரமாட்டாராம். என்னஏதுன்னு தெரியலே எனக்கு என்ன செய்றதுன்னே தெரில" என்றேன். "அய்யயோ.. இப்படி ஆகிருச்சே.. ரொம்ப கஷ்டமாவுல்ல இருக்கு. இரு என்னஏதுன்னு கேப்போம்" என்றான் பிச்சை.

"ஏலே செல்வி! என்ன புள்ள பிரச்சன உங்க ரெண்டுபேருக்குள்ள?. சொல்லுலே.." என்றேன் அருகில் செம்பவமும் பிச்சையும் இருந்தார்கள்.

"அப்ப்பா.. அதுவந்துப்பா.." என்றாள் கண்ணீருடன். அவளால் சொல்லமுடியவில்லை. "கல்யாணமாகி 6 மாசமாகியும் வயித்துல ஒரு புழுபூச்சிக்கூட தங்கல. டவுண்ல வள்ளியம்மை டாக்டருக்கிட்ட போயி என்னஏதுன்னு கேக்கும்போது அவுக ஸ்கேன் பண்ணி பாத்துட்டு கர்ப்பபையில கட்டி இருக்குதாம். அத ஆப்ரேசன் பண்ணி எடுத்தாதான் குழந்த பொறக்குமாம். ஏற்கனவே என்னைய கரிச்சி கொட்டிக்கிட்டு இருந்தாவ. இப்ப இதுன்னு தெரிஞ்சி ஒரே அடிஉதைதான். அவரு வேற கல்யாணம் பண்ணப்போறாறாம். கட்டிய ஆப்ரேசனு பண்ணினா உன்கூட வாழுவேன். இல்லைன்னா அப்படியே உங்க வீட்டுலே இருந்துக்கோன்னு சொல்லிட்டாருப்ப்பா.. ம்ம்ம்.." என்று அவள் சொல்லும்போது எங்களுக்கு ஒரே அழுகையானது. என்ன சொல்றதுன்னே தெரியல.

"சரிம்மா கவலப்படாதே.. எல்லாம் சரியாகிரும்" என்று அவளை தேற்றினோம். ஒரே கவலையாக இருந்தது.

"மாப்பிள்ளைக்கு போன்போட்டு பேசுணும் பிச்ச, போன்போட்டு தா" என்றேன். "மாப்ளே.. நீங்கதான் பெரியமனசு பண்ணி செல்விய ஏத்துக்கணும். ஊருக்கு வாங்க மாப்ளே.. எல்லாம் சரியாகிரும். பேசிக்கலாம்" என்றதுக்கு "அதான் செல்வி எல்லாம் சொல்லிருப்பாளே.. நா என்ன பேசுறதுக்கு இருக்கு?.. போன வையுங்கய்யா" என்று மொகத்துல அடிச்சமாதிரி சொல்லிட்டாரு.

எனக்கும் முன்புபோல ஓடியாடமுடியவில்லை. அடிக்கடி உடம்புக்கு முடியாம போனது. செல்விக்கு ஆப்ரேசன் பண்ண பணத்துக்கு எங்கப்போவேன்?.. இருந்த நஞ்சபுஞ்ச காணி நிலம், எல்லாத்தையும் வித்துதான் செல்விக்கு கல்யாணம் பண்ணிவச்சேன். இப்ப இருக்குற ஓட்டுவீடு தான் மிச்சம். ஏதோ வயல்ல கொஞ்சம் இருக்கு. அதுவும் கடன்ல இருக்கு. இது எதுவும் காணாதே. என்ன செய்ய?.. ஒரே யோசனையா இருந்துச்சி.

"மாரி கவலப்படாத மாரி., எல்லாம் அந்த அம்மன் அகிலாண்டேஸ்வரி கொடுக்கிற சோதன. எல்லாம் சரியாகிரும். நானும் என்னால முடிஞ்சத செய்யுறேன். பண்ணையாருக்கிட்ட எதுவும் கேட்டியா மாரி?.." என்றான் பிச்சை.

"ஏற்கனவே கல்யாணத்துக்கு வாங்கின கடனே முடியல. அதுக்குள்ள பணமா?.. என்று இல்லன்னு சொல்லிட்டாருப்பா. நானும் நிறைய பேருட்ட கேட்டுருக்கேன். எல்லாம் அகிலாண்டேஸ்வரி பாத்துப்பா. ம்ம்ம்ம்.." என்றேன்.

"என்னய்யா.. எதாச்சும் பணம் கிடைச்சுதா.. இப்ப என்னய்யா பண்ணப்போறே கவலப்படாதய்யா.. மனச போட்டு குழப்பிக்காதய்யா., எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்றாள் செம்பவம்.

"என்ன செய்றதுபுள்ள.. எல்லாத்துட்டயும் கேட்டு பாத்துட்டேன். இன்னா தாரேன் அன்னா தாரேன் தான் சொல்றாக. சரி பாப்போம். பொழுது விடியட்டும்" என்றேன். செம்பவம் என் அருகில் இருந்து தலையை கோதிவிட்டபடி தடவிக்கொண்டிருந்தாள். அது எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

நித்திரை என்னை தழுவ கண்களை மெல்ல மூடினேன்.

"என்னயிது.. என்னக்கும் இல்லாத திருநாளா இந்த மனுசன் இம்ப்ப்பூட்டு தேரம் தூங்கறாவுகளே.. எய்யா.. எழுந்திருய்யா., எய்ய்யா.," என்று உலுக்கியவள் அசைவற்று கிடந்ததை பார்த்ததும் "அய்யய்யோ... என் ராசா., என்ன விட்டுட்டு போயிட்டீயா.." என்று கதறினாள் செண்பகம்.

,

Post Comment

Sunday, January 15, 2012

பொங்கல் நல்வாழ்த்துகள்

பொங்கலோ பொங்கல்

புத்தரிசியும் புதுப்பானையும்
போட்டியிட்டு பொங்கலிட‌
சந்தோசமும் பூரிப்பும் பெருமிதமிட‌
இவ்வாண்டும் மகசூல் அதிகமாகிட‌
எங்கள் வாழ்வும் வளமும் பெருகிட‌
மங்களமாய் வசந்தம் வீச
குலவையிடுவோம்

பொங்கலோ பொங்கல் என்று!!

உழக்கரிசி நெல்லுமணி
பல கோட்டைகளாக
உருவெடுத்திட‌
உண்ணாமல் உறங்காமல்
கண்ணிமை போல‌
களத்துமேட்டினில் காத்த
உரமிட்டு உரமிட்டு
உரமேறிய கரங்களும்
சொல்லுதே

பொங்கலோ பொங்கல் என்று!

தன் பசி துறந்து பிறர்
பசி நீக்கும் மருத்துவனாய்
உழைப்பின் பெருமையை
உலகறிய செய்த‌
விவசாயியே! என்றும் நீ வாழியவே!

என்றும் உங்கள் வாழ்வினில்
வசந்த ஒளிவீசிட‌
வாழ்த்துதே எங்கள் மனம்

என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

*****

இனிய பொங்கல் திருநாளில் எல்லா வளமும் பெற்று இந்த தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாக மலர இறைவனிடம் பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Post Comment

Wednesday, January 11, 2012

அவளா இவள்?.. 250வது இடுகை

"டே..டேய்.., எங்கடா பாத்துட்டு போறே?.. கொஞ்சன்னா செத்துருப்பியே.. ஆளும் மூஞ்சியும் பாரு!.. சரியான சாவுக்கிராக்கி" என்ற ஆட்டோக்காரன் திட்டிக்கொண்டே சென்றான். செவி நரம்புகள் மூளைக்கு சென்றனவா என்று தெரியாது. அந்த ஜனநெருக்கடியிலும் அவள் மட்டும் காலையில் பூக்கும் பனிபடர்ந்த ஒற்றை ரோஜாப்போல அழகாய் பூத்திருந்தாள்.

அவளை கடந்ததும்தான் 'ஒருவேளை இது அவளா இருக்குமோ?' என்றெண்ணியது மனம். சே சே.. இருக்காது என்றாலும் மனது அவள்தான் என்று அடித்து சொல்லியது. பார்த்தது ஒரு நிமிடம்தான் என்றாலும் நினைவெல்லாம் அவளே நிறைந்திருந்தாள். பார்க்காமலாவது இருந்திருக்கலாம். அவளருகில் செல்வதற்குள் பஸ்ஏறி சென்றுவிட்டாளே.. இப்போ எங்கிருக்காளோ தெரியலியே..

"டேய் கணேஷ்.. காலேஜ் பஸ் வந்திருச்சிடா; அங்க என்னடா பாத்துட்டு இருக்கே.. சீக்கிரம் வாடா" என்று மூர்த்தி என் தோளை உலுக்கியதும் பஸ்ஸில் ஏறினேன். "பாடம் ந‌டத்துறத கவனிக்காம அங்க என்ன யோசனை" என்று சாக்பீஸை என்மேல் எறிந்த பாலா சார், "எங்கே நீரிலிருந்து ஹைட்ரஜனை டீஹைட்ரேட் செய்யும் முறையை சொல்லுங்க சார்?" என்றார். நான் பதிலறியாது நின்றிருந்தேன். "என்ன அதுக்குள்ள மறந்துருச்சா.., சரிசரி உட்கார்ந்து தொல" என்ற வசவுகள் எனக்கு புதுசா என்ன!.

மறக்கக்கூடியவளா அவள். சிறுவயதில் ஒன்றாய் படித்து விளையாண்டு மகிழ்ந்த காலங்கள் இப்போதும் நினைவிலிருந்து மாறலியே.. பள்ளியில் படிக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையே யார் முதல்ராங்க் வாங்குவது என்ற ஒரே போட்டிதான். ஒருதடவை அரையாண்டு தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும்போது, நான் பள்ளியறை வாசலில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தேன். அவள் வரும்போது நான் வாசலில் கைவைத்திருந்ததை அவள் கவனிக்கவில்லை. விருட்டென உள்ளே நுழைந்த அவள் என்கையில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு விட்டது. அவளால் பரிட்சை எழுத முடியாமல் போயிவிட்டது.

வேதனையில் மனம் துடித்து அவளிடம் சாரி சொன்னேன். டேக்இட்ஈஸியாக எடுத்துக்கொண்ட அவள் என்னிடம் நெருங்கி பழகினாள். ஆண்டுவிழாவில் அவளின் (அழகுமலர் ஆட...அபிநயங்கள் கூட‌) நாட்டிய நடனம் கண்டு மெய்சிலிர்த்தேன். பள்ளியை விட்டு இருவரும் பிரியும்போது இனம்புரியாத உணர்வு என்னை ஆட்கொண்டது. இது காதலா?...

மறுநாள், பாலா சாரின் வகுப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தபோது, என் செல்போன் அலறியதை கேட்ட பாலா சார், "போங்க சார்!.. உங்க வேலையெல்லாம் முடித்துக்கொண்டு வந்தால்போதும். வெளியே போறீங்களா" என்று கத்தினார்.

அடசே.., என்றபடி வெளியே வந்த நான், மொபைலில் வந்த நம்பரை பார்த்தால் ஒரு புதிய நம்பர். இதென்ன புது நம்பரா இருக்கு; யாராக இருக்கும் என்றெண்ணியபடியே ஹலோ என்றேன்.

மறுமுனை "ஹலோ கணேஷ்தானே இது!.. எப்படிங்க இருக்கீங்க?.." என்றது ஒரு பெண்குரலில்.

"நான் நல்லாருக்கேன். யாரு நீங்க!.. தெரியலியே..குரலும் பரிச்சயப்படலியே" என்றேன்.

"நல்லா யோசிச்சு பாருங்க‌.. யாருன்னு தெரியும்?!" என்றாள்.

"ம்ஹூம் ஞாபகத்துக்கு வரலியே.. சீக்கிரம் சொல்லுங்க. இங்க பாலா சார் என்னை காய்ச்சி எடுத்துருவார்" என்றேன்.

"நேத்து பஸ்ஸ்டாண்டுல நீங்க என்னை பார்த்துட்டு போனதாக என் பிரண்டு சொன்னாள். பேசுறதுக்குள்ள பஸ் வந்ததால் போயிட்டேன். மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் பேசுவோம். எனக்கும் இங்க மாலதி டீச்சர் வர்ற நேரமாகிருச்சி. பை பார் நவ்" என்றபடி போனை கட் பண்ணினாள்.

ஒருவேளை இது அவளா இருக்குமோ?.. என்று நினைக்கும்போதே மனம் சந்தோசத்தில் துள்ளியது. அன்றுமுழுவதும் அவள்தான் நிறைந்திருந்தாள்.

இன்று மாற்றம்கண்ட அம்மாவுக்கு புதிதாக தெரிந்தேன். எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்ற உத்வேகம்தான் இருந்தது. பரபரப்பான சாலையில் ஜனத்திரள்கள் மத்தியில் அவள்மட்டும் தனித்திருக்க மாட்டாளா என்று கண்கள் தேடின.

"ஏய் விஜி! என்னடி இன்னக்கி காலேஜ் வரலியா?.. யாரையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்கே?. என்னடி விசயம்" என்று கேட்ட மீராவுக்கு "அதெல்லாம் ஒன்னுமில்லடி" என்றாள் விஜி. 'இன்னக்கி பார்த்து 7சி நேரத்தோட வந்திருச்சே.., இப்போ கணேஷ் தேடிக்கிட்டு இருப்பாரே.. பார்க்கமுடியாம போயிருச்சே' என்ற வருத்தம் அவளுக்கு.

"ஹலோ யாரு கணேஷா!.. சாரிங்க., இன்றும் பார்க்கமுடியாம போயிருச்சே" என்றாள்.

"அதெல்லாம் பரவாயில்லீங்க. ஆமா உங்க பெயரை சொல்லவே இல்லியே" _ கணேஷ்.

"விஜி" _ விஜி.

"வாவ்.. நைஸ் நேம்"

"தேங்க்ஸ்

“என் செல்நம்பர் எப்படி கிடைத்தது?..”என்றேன். “என் பிரண்டு கொடுத்தாள். நாளைக்கு எப்படியாவது சந்திக்கணும். பை சீ யூ” என்றபடி போனை கட் செய்தாள். எனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்றே தெரியவில்லை. ஆனந்த‌த்தில் மனம் துள்ளி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போது எப்படியாவது என்காதலை அவளுக்கு தெரியப்படுத்தி விடவேண்டும்.

மறுநாள், அவளுக்காக‌ கொஞ்ச நேரத்தோடு பஸ்ஸ்டாண்டிற்கு வந்து காத்திருந்தேன். அவள் வருவாளா?.. அவள் வருவாளா?.. என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?.. என்று பாடலாம் போல இருந்தது. நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவள் தோழிகள் வந்தாலும் அவளை மட்டும் காணவில்லை. ‘என்னடா இது?.. இன்று சந்திக்க வருகிறேன்; என்றாளே! இன்னும் ஆளைக் காணவில்லையே. என்ன ஆனதோ அவளுக்கு?..’ மனம் பதைபதைப்பாய் இருந்தது.

“ஹலோ விஜியா.. எங்கிருக்கீங்க. வரலியே என்னாச்சி?..” என்றேன்.

“சாரி கணேஷ்!.. கிளம்பும்போது கால் சுளுக்கிவிட்டது. நடக்க முடியவில்லை” என்றாள்.

“அய்யய்யோ.. என்னாச்சி. இப்போ எப்படி இருக்கு.. டாக்டரிடம் காண்பித்தீங்களா” என்றேன். “தைலம் போட்டு தடவியிருக்கேன். டாக்டர் 2 நாள்ல சரியாகிரும் என்றிருக்கிறார். இப்போ வலி பரவாயில்லை” என்றாள். “சே!.. இப்படி ஆகிருச்சே விஜி., உடம்ப பாத்துக்கோங்க., எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதீங்க” என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. அவளுக்கு வலியென்றதும் என்மனதும் சேர்ந்து வலித்தது.‌

இரண்டு நாட்கள் கழித்து,

இன்று எப்படியும் வருவாள். என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். தூரத்தில் அவள் தோழிகள் புடைசூழ வந்து கொண்டிருந்தாள். இங்கே என்மனம் குதூகலித்து எப்படி சொல்ல எப்படி ஆரம்பிக்க..,என்ற தயக்கம்தான் மேலிருந்தது. என்காதலை ஏற்றுக்கொள்வாளா.. பேசியிருக்கும்போது இருந்த தைரியம்., இன்று நேரில் காணும்போது இல்லையே. என்ன செய்ய?! என்ற தவிப்பில் இருந்தேன்

சிறிதுதூரத்தில், விஜி அவளது தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது இந்தபக்கம் பார்ப்பதும் அங்கே பார்ப்பதுமாக எனக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள்.

நான் அவளருகே சென்று பேச எத்தனிக்கும்போது என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு உள்ளூற மனதில் குறுகுறுப்பும் பயமும் சேர்ந்து ஒட்டிக்கொண்டது.

விஜி என்னிடம் வந்து, “ஹலோ மிஸ்டர், என்ன வேணும் உங்களுக்கு! நானும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் நடவடிக்கையே சரியில்லையே. யார் நீங்க?..” என்றதும் எனக்கு தூக்கிவாரி போட்டது.

“ஹலோ என்னை தெரியலியா.. தெரியாத மாதிரி கேக்குறீங்க.. நல்லா யோசித்து பாருங்க” என்றேன் பதபதைப்புடன்.

“ஹலோ யாருன்னே தெரியலைங்கிறேன். அப்புறம் எப்படி தெரியாதமாதிரி இருப்பது?.. என்ன விளையாடுறீங்களா?.. ஈவ் டீசிங் பண்றீங்கன்னு போலீஸ்ல சொல்லவா?!..”

“நாந்தான் கணேஷ். என்னை தெரியலியா.. தினமும் போனில் பேசியிருக்கீங்க.. தெரியலைன்னு சொல்றீங்களே என்னங்க விஜி!.”

“என்னது நான் உங்ககூட டெய்லி பேசினேனா.. சான்ஸே இல்ல. நீங்க யாருன்னே தெரியாதே.. என் பேர் எப்படி தெரியும்!” என்றாள் விஜி வியப்புடன்.

“ஆமா விஜி.. நாந்தான் கணேஷ். என்ன நம்புங்க. டெய்லி பேசியிருக்கீங்க. 2 நாளுக்கு முன்னாடி உங்களுக்கு கால் சுளுக்கிருந்ததே.. இப்போ பரவாயில்லையா” என்றேன் விளக்கமாக‌.

அவள் வியப்புடன், “அப்படியா.. நான் யார்க்கூடவும் பேசலியே., இதுல எங்கேயோ தப்பு நடந்துருக்கே.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.”

“நீங்க நம்பலைன்னா என் மொபைல்லயும் உங்க மொபைல்லயும் கால்ஹிஸ்ட்ரி பாருங்க. அப்ப புரியும்” என்றேன் வருத்ததுடன்.

"இதுல என் தோழியோட அண்ணனுக்கு தானே போன் செய்தேன். இதுல எப்படி உங்க நம்பர்!!....... ஆ!!.. அடடா.. ஒரு நம்பர் மாறியிருக்குது அட ஆமா!!!!. அவர் பேரும் கணேஷ்தான். ஓ.. ஐ ம் சாரி. தப்பான நம்பருக்கு பேசிட்டேன். இது இந்தளவுக்கு போகுமுன்னு நா நினைக்கலை. எதுவும் தப்பா நினைச்சு மனதை போட்டு குழப்பிக்காதீங்க" என்றாள்.

விஜி இப்படி சொன்னதும் எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. இத்தனை நாள் காதல் முடிவுக்கு வந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது.

விஜிக்கு அவள் மனதில், இவனுடன்தான் பேசியிருக்கிறோமா; இதயத்தை கொள்ளை கொண்ட காதலன் இவந்தான் என்றதும் வெட்கமும் வேதனையும் கலந்து முகத்தினில் தெரிந்தது.

“ஏய் விஜி! அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே.. 7சி வந்திருச்சி. சீக்கிரம் வா” என்று மீரா அழைத்ததும் விஜி ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் அங்கிருந்து நகன்றாள்.

நான் உடனே விஜியிடம், “விஜி! மறுபடியும் எப்போ போன் பண்ணுவீங்க” என்றேன்.

அவள் என்னை குறுகுறு பார்வையுடன் வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள்.

“போலாம் ரைட்” என்று 7சி கண்டக்டர் விசில் கொடுத்தார்.

Post Comment

Tuesday, January 3, 2012

விடிவெள்ளியாய் உதித்தவள்

சிறுவயதிலேயே உலகசாதனை புரிந்த நெல்லையை சேர்ந்த சிறுமியை பற்றி உணவு உலகம் சங்கரலிங்கம் சார் தன்னோட பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதைப் படித்தததும் அந்த சிறுமியை பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம். சிறுவயதிலேயே கணனி தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு பாடம்நடத்தும் திறமை உள்ள, ஐக்யூவில் சிறந்துவிளங்கும் இந்த சுட்டிப்பெண்ணின் வயது பதினொன்றுதான் ஆகிறது என்றால்
வியப்பாக
இருக்கிறதல்லவா.. ஆம். இந்த சிறுமியின் பெயர் விசாலினி.

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள்.
சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.








இத்தனை
சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.



உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network

Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.




உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com

வேண்டுகோள்:1)

ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.


2) விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

****

இத்தனை சாதனைகளும் புரிய காரணமாய் அமைந்த ஊக்குவித்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இவள் இன்னும் பல சாதனைகள் புரிந்து உலக அரங்கினில் பெருமைப்படுத்தப்பட வேண்டும்.

விசாலினிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

சங்கரலிங்கம் சார் பதிவினை பார்க்க..

நன்றி சங்கரலிங்கம் சார்.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்