நெல்லையில் அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி.
பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற பஸ்ஸிலிருந்து இறங்கியதால் மாணவர் அருண்குமார் பலியானார்.
இந்த செய்தியை காலையில் கேட்டதும் மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
நெல்லை புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டரில் தொலைவில் திருநெல்வேலி_ நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ஐ.ஆர்.டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இது அரசாங்க போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகையில் கல்லூரி கட்டணங்கள் அமைந்திருக்கும். இதர மாணவர்களும் படித்து வருகிறார்கள். இந்த பாலிடெக்னிக்கில் சேருவதற்கு கடும்போட்டி உண்டு.
இந்த கல்லூரி புறநகர் பகுதியில் இருப்பதால் அவ்வளவாக பஸ் போக்குவரத்து கிடையாது. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே நெல்லை ஜங்சன் பேரூந்து நிலையத்திலிருந்து பஸ்கள் உண்டு. தவறினால் கல்லூரிக்கு செல்லமுடியாதநிலை. ஆனால் நாகர்கோவில் செல்லும் பேரூந்துகள் மனதுவைத்தால் மட்டுமே செல்லமுடியும். கஷ்டம்தான் இதுமாதிரி புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு..
இன்று பலியான மாணவர் அருண்குமார் தென்காசியை சேர்ந்தவராம்.. தினமும் தென்காசியிலிருந்து நெல்லைக்கு பயணம் செய்து கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரிக்கு நேரமானதால் நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் ஏறி கல்லூரியில் இறங்க திட்டமிட்டு பயணம் செய்தார். ஆனால் கண்டக்டரும் டிரைவரும் கல்லூரி நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் டிரைவரிடம் கெஞ்சியதில் டிரைவர் பஸ்ஸை ஸ்லோ செய்தார். அருண்குமார் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது தவறிவிழுந்து பலியானார்.
இந்த மாணவர் எனது உறவினர் மகனின் வகுப்புத் தோழன் என்பதால் மிகவும் வருத்தத்திலும் வருத்தம். இந்த செய்தியை காலையில் கேட்டதும் ரொம்ப மனசு கஷ்டமாகிவிட்டது.
பள்ளி மாணவர்/ கல்லூரி மாணவர்களை கண்டாலே கண்டக்டருக்கும் டிரைவருக்கும் பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை... ஒரு மனிதாபிமானம் இல்லையே.. இறங்குவதற்கு ஒரு நிமிசம் ஆகுமா.. அலட்சியத்தால் ஒரு உயிரை இழக்கவேண்டியதாயிற்றே..
பொதுவாக எங்கெல்லாம் பள்ளி/கல்லூரி நிறுத்தங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ்கள் நிற்கவே நிற்காது. ஒரு அரைகிலோமீட்டர் சென்றுதான் நிறுத்துவார்கள். மாணவர்கள் எல்லோரும் பஸ்கள் பின்னாலே ஓடிவந்து ஏறுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். ஏறியபின்னாடியும் கண்டக்டரிடமிருந்து வசவை வாங்கிவிட்டுதான் பயணிக்க வேண்டும். என்ன கொடுமை இது.. இதுமாதிரி அனுபவங்கள் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.
பஸ்ஸில் ஏற்றிச்சென்றால் குறைந்தா போய்விடுவார்கள் என்ன.. ஏதோ அவர்கள் வீட்டு சொத்தை அபகரித்ததுபோலதான் அங்கலாய்த்து கொள்வார்கள். அதுவும் பஸ்பாஸ் வைத்திருக்கும் சிறுவர்களுக்கு நிறைய வசவு கிடைக்கும்.. அவர்களை தங்கள் பிள்ளைகளை போல நினைக்க மறுப்பது ஏனோ?..
பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தரப்பிலிருந்து கேட்டால் என்ன சொல்வார்கள்.. ஸ்டாப்பிங் கொடுக்காத இடங்களில் நிறுத்த எங்களுக்கு அனுமதி இல்லை. மீறி நிறுத்தும்போது டைம்கீப்பிங்கில் எங்களுக்கு ரீமார்க் கிடைக்கும். மாணவர்களை ஏற்றி இறக்கும்போது காலவிரயமாகும். நாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லாவிட்டால் பதில் சொல்லவேண்டியிருக்கும். அதுபோக மாணவர்கள் பஸ்ஸுக்குள் சேட்டை செய்யும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். இதை தவிர்க்கவே மாணவர்களை பஸ்ஸுக்குள் ஏற அனுமதிப்பதில்லை.
இவர்கள் இப்படி சொன்னால் மாணவர்களின் போக்குவரத்து கேள்விக்குறியாகிறது. பள்ளி/கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகிறது. மாணவர்களை எல்லா நேரங்களிலும் ஏற்றிச்செல்ல வேண்டியதில்லையே.. பள்ளி/கல்லூரி நேரங்களான காலை, மாலை வேளை நேரங்களில் தானே மாணவர்கள் செல்வார்கள். அந்த நேரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் மனிதாபிமான நோக்கோடு உதவி செய்யலாமே..
எப்படிதான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இறந்த அந்த மாணவனின் உயிர் திரும்ப கிடைக்குமா..
வரும்காலங்களில் இதுமாதிரி வருந்ததக்க சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுக்குமா..
என்பதே நம் அனைவரின் கேள்வியும்..
,
Post Comment