Pages

Thursday, July 29, 2010

அழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை

அன்புள்ள நண்பர்களே!! உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு இந்த 200வது இடுகையை எழுதுகிறேன்.

இந்த உலகம் ரொம்ப வேகமாக முன்னேறி வருகிறது. எல்லாம் அறிவியல் வளர்ச்சியினால் மாறிவரும் உலகத்துக்கு தகுந்தாற்போல நாமும் வேகமாக இயங்குகிறோம். இளைப்பாற சிறிதுநேரம் கிடைத்தால் நமக்கு எவ்வளவு சந்தோசம். அந்த சிறு இடைவெளியில் நம்முடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது. அதுவும் சிறுவயது ஞாபகங்கள் என்றென்றும் பசுமைமாறாத நினைவுகள். அதை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தால் நம்முடைய கவலைகள், இடறுகள், மனஅழுத்தம் இதிலிருந்து கொஞ்சம் விடுதலைதான்.

நமக்கு தகுந்தாற்போல நம்முடைய பிள்ளைகளும் இந்த உலகத்துக்கேற்ப மாறி வருகிறார்கள். இன்று அவர்களது உலகத்தில் நிறைய மாற்றங்கள், அவர்களது குழந்தைபருவ விளையாட்டுகளும் மாறிவிட்டன. முன்பெல்லாம் சிறுவர்கள் தெருவில் சென்று கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இன்னும் நிறைய விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. அதையெல்லாம் இப்போது எங்கே என்று தேட வேண்டியுள்ளது.


அதுபோல சிறுமிகளும் பல்லாங்குழி, பாண்டி, தாயம், சிட்டிக்கல் இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவதை இன்று காணமுடிவதில்லை. எங்கே இந்த விளையாட்டுகள் எல்லாம்?.. காலமாற்றத்தினால் குழந்தைகளும் மாறிவிட்டனர். இப்போதைய சிறுவர் சிறுமியர்கள் இந்த விளையாட்டுன்னா என்னஎன்று கேட்கும் சூழல்..


வருடத்தில் 12 மாதங்களில் இந்தவிளையாட்டுகள் சீசன் போல ஒவ்வொன்றும் மாறிமாறி வரும். இந்த சீசன் கோலிக்கா சீசன் என்றால் நாம் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தால் மற்ற சிறுவர்கள் ஹை..ஏய்.. இவனப்பாருலே.. இன்னும் பம்பரம் விளையாடிக்கிட்டிருக்கான் என்று ஏளனமாக பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இந்த விளையாட்டுகள் அப்போதைய சிறுவர்களின் வாழ்க்கையோட பின்னிபிணைந்தே இருந்தன.

கோலி

சிறுவர் விளையாட்டுகளில் கோலி விளையாட்டு முக்கிய பங்கு பெறுகிறது. கோலிக்கா என்றுகூட சொல்வார்கள். விதவிதமான கோலிக்காவை கடையில் வாங்குவதற்கு கடும்போட்டி.., கடையில் உள்ள ஒரு டப்பா கோலிக்கா சீக்கிரம் விற்றுவிடும். கோலிக்கா உருண்டையில் உள்ளே தெரியும் கண்ணை கவரும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் சிறுவர்களை அதிசயக்க வைக்கும். அந்த கோலிக்காவில் ஒரு உலகம் உண்டென்று நம்பி அவர்களை வழிநடத்தி செல்லும் கோலிக்காவை எவராலும் மறக்க இயலாது.

கோலிக்கா விளையாட்டில் மூணுகுழி, பேந்தான், ஒத்தகுழி, வட்டடிஸ், பொட்டல், இரட்டகோடு போன்றவை ரொம்ப இன்ரஸ்டிங்கான விளையாட்டுகள். பள்ளிக்கூடம் முடிந்தஉடனே பைக்கட்டை வீட்டில் போட்டு போறதுதான்., கருக்கலான (இருட்டியபின்) அப்புறம் அம்மா தேடிவரும்வரை கோலிக்கா விளையாட்டுதான். எங்கிருந்தாலும் குறிபார்த்து அடிப்பதில் கில்லாடியாக இருப்பவர்கள் இந்த விளையாட்டில் ஜொலிப்பார்கள்.

பம்பரம்

பம்பரம் விளையாட்டை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விளையாடுவார்கள். அனைவரும் விரும்பும் விளையாட்டு. இதுவும் கோலிக்கா போல கடைகளில் வாங்க போட்டிதான். விதவிதமான கலர்களில் விற்கப்படும் பம்பரங்களை வாங்கிவந்து முதல்வேலையாக அதிலிருக்கும் சின்ன ஆணிய எடுத்துட்டு ஒரு பெரிய ஆணியை சைக்கிள் கடையில் கொடுத்து அடித்து அதில் சுழற்றிவிடும் பம்பரம் ஆடும் அழகு அழகுதான். உள்குத்து, ஆக்கர் போட்டு குத்துவாங்காத பம்பரமே கிடையாது.

கில்லி (குச்சிக்கம்பு, கில்லிதண்டா)

இதுவும் எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப பிரபலமான விளையாட்டு. இது விளையாடும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிரிக்கெட்டின் முன்னோடியான இதில் எதிர்த்து விளையாடுபவனுக்கு கொடுக்கப்படும் மூணு சான்ஸில் அவன் அடிக்காதபோது வரும் குதூகலம் ரொம்ப அருமையாக இருக்கும். அவன் அடிக்க ஆரம்பிக்கபோகும்போது ஒண்ணு காக்கா, இரண்டு குருவி, மூணு கொக்கு என்று சொல்லி அவனது கவனத்தை திசைதிருப்பும்போது அவனால் அடிக்கமுடியாதபோது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

ஒருதடவை நான் எங்கத்தெரு பையன்கள்கூட குச்சிக்கம்பு விளையாடும்போது ஒருவன் விளையாடும்போது இதேபோல சொன்னதும் அவனால் அடிக்கமுடியாமல் போனதும் அவனுக்கு பயங்கர கோபம். அதன்பின் அவனிடம் டேய் இதெல்லாம் விளையாட்டுடா; அதுக்காக என்னிடம் பேசாம இருக்காதே என்று சொன்னேன்.

காத்தாடி

பருவகாற்று காலத்தில் காத்தாடி விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பனை ஓலையில் காஞ்சரம் முள்ளை சொருகி காத்தாடி காத்தாடி அழகாக சுத்து சுத்து என்று காற்றடிக்கும் திசையில் வைத்து காத்தாடியை சுற்றவைப்பது மகிழ்வான விளையாட்டு.

அதுபோல டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட் அட்டை சேகரித்து விளையாடும் விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இதெல்லாம் அப்போதைய சிறுவர்களின் பொழுதுபோக்கான விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டுகள் உடல் வளர்ச்சிக்கும், அறிவுக்கும் வேலை கொடுப்பதாக அமைந்தது. அவர்களால் பல கோணங்களில் சிந்திக்க உதவியாய் இருந்தன.


இதுமாதிரி சிறுமிகளுக்கு பல்லாங்குழி, தாயம், பாண்டி, சிட்டிக்கல் போன்ற விளையாட்டுகள் இல்லாமல் பொழுதே போகாது.

இந்த விளையாட்டுகள் எல்லாம் எங்கே சென்றுவிட்டன?..

இப்போதைய குழந்தைகளின் பொழுதுபோக்கெல்லாம் வீட்டினுள்ளே கம்பியூட்டர் முன்னே கழிந்துவிட்டது. வீடியோ கேம்ஸ், மற்றும் கம்பியூட்டர் கேம்ஸ் என்று சிறுவர்களின் உலகம் மாறிவிட்டது. அவர்களது சந்தோசங்கள் அந்த நாலு சுவற்றுக்குள்ளே அடங்குகிறது என்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

இதுபோதாதென்று டிவியில் ஜெட்டிக்ஸ், போகோ, சுட்டிடிவி, கார்ட்டூன்ஸ் என்று டிவியிலும் அவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். இதெற்கெல்லாம் அடிமையானதை நினைக்கும்போது வருத்தம்தான்.

எங்கே அந்த குறும்புகள்... மறக்க முடியாத இளவயது குறும்பு சேட்டைகள் உங்களிடமிருந்து காணாமல் போய்விட்டதே. உங்கள் திறமைகளை வெளியே கொண்டுவாருங்கள். இதோடு முடிந்துவிட்டதா.. உங்கள் உலகம்??.. சொல்லுங்க குழந்தைகளே!!.

வெளிய வாங்க குழந்தைகளா.. உங்களின் பரந்த உலகம் இருட்டினில் இல்லை. வெளிச்சத்துக்கு வாங்க.. பாருங்கள் உங்கள் உலகத்தினை.. நாலு
சுவற்றுக்குள் உங்கள் சந்தோசத்தை தொலைத்துவிடாதீகள்.

உங்கள் கனவுகள் வெற்றிப்பாதையில் அழைத்து செல்லட்டும.. வாருங்கள் குழந்தைகளே... வெற்றி உங்களுக்கே..

,

Post Comment

Wednesday, July 28, 2010

பொருட்காட்சி


பளபளன்னு லைட்டு வெளிச்சம் கண்ணை கூசியது. சாலையில் எங்கும் சுவரொட்டிகளும் பேனர்களும் ஊர்ல பொருட்காட்சியென்று அறிவித்தது போதாதென்று ஆட்டோவிலும் ஒலிப்பெருக்கி கத்திக்கொண்டு வந்தது.

ஹைய்யா.. பொருட்காட்சி போட்டுட்டாங்களா..செம ஜாலி..அப்பா அம்மா என்னய பொருட்காட்சிக்கு கூட்டிட்டு போவீங்களா.. அங்க வெளாட்டுச்சாமா, பொம்ம, காரு, தண்ணிதுப்பாக்கி, வாங்கித்தருவியளா அப்பா.. அப்புறோம் ராட்டனத்துல ஆடணும், கொலம்பஸ், புதுபுது ராட்டணமெல்லாம் வந்திருக்காமுல்ல.. அப்பா அப்பா.. எங்களல்லாம் கூட்டிட்டுபோவீங்களா என்று பிள்ளைகள் அவங்கஅவங்க அப்பா அம்மாக்கிட்ட ஒரே நச்சரிப்பு.

ஆர்ச், ரத்னா தியேட்டர் ஸ்டாப் தாண்டியதும் பிள்ளைகளுக்கு ஒரே குசி.. ஹைய்யா பொருட்காட்சி வந்தாச்சி பொருட்காட்சி வந்தாச்சி என்று பிள்ளைகள் பஸ்ஸில் ஒரே குதியாட்டாம். ஆங்..ஆங்.. பொருட்காட்சியெல்லாம் இறங்குங்க.. இறங்குங்க.. என்று கண்டக்டர் விசில் கொடுத்து பஸ்ஸ நிப்பாட்டுனதுதான் தாமதம், எல்லா பிள்ளைகளும் தங்களோட அப்பா அம்மா கைய உதறிட்டு ஒரே ஓட்டம் பொருட்காட்சிய நோக்கி..

அந்த பிள்ளைகளைப் போல எனக்கும் சந்தோசம்.. இன்னக்கி நல்லா கூட்டம் வரணுன்னு நினைத்தேன் பொருட்காட்சிக்கு உள்ளிருந்து. ஆம்.. இன்னக்கி நல்லா கூட்டம் வந்திச்சின்னா கடன்காரன், சிறுசுகளுக்கு விளாட்டுச் சாமான் வாங்கணும், பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ரொட்டிக்கறி வாங்கிட்டு போகணும், அப்புறம் பெரியவனுக்கு நோட்டு புத்தகமெல்லாம் வாங்கணும், சின்னவளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும், சின்னவனுக்கு பால்பாட்டல், துணிமணியெல்லாம் வாங்க வேண்டியிருந்தது.. இன்னக்கி கூட்டம் வருமா.. என்று காத்திருந்தேன்.

நான் இந்த பொருட்காட்சித் திடலில் மேஜிக் ஷோ ஸ்டால் போட்டிருக்கேன். ஆமாம் எனக்குத் தெரிந்த மேஜிக்கை காட்டி மக்களை மகிழவைப்பது என்னுடைய தொழில். இருந்தாலும் மக்களுக்கு முன்னமாதிரி மேஜிக்ல விருப்பமே இல்லாம போயிருச்சி.. நல்லா கூட்டம் வந்தாத்தான் ஏதோ அன்னக்கி வயித்துப்புழப்பு கழியும்.. இது தெனோம் நடக்கிறதுதான். பாப்போம் இன்னக்கியாவது கூட்டம் வருதான்னு... என்ன செய்ய எல்லாம் காலத்தின் கோலம்.

பொருட்காட்சியில் மக்கள் வரவர கூட்டம் அலைமோதியது..

அய்யா.. வாங்க, அம்மா.. வாங்க, எதடுத்தாலும் இருபதுரூபா இருபதுரூபா.. வாங்க வாங்க சீக்கிரம் வாங்க, காலியாயிருச்சின்னா கிடைக்காது என்று பக்கத்துக்கடைக்காரன் கூவிக்கூவி வித்துக் கொண்டிருந்தான். அதற்கடுத்த கடைக்காரன் அம்மா பாருங்க அக்கா பாருங்க விதவிதமான வளையல், பொம்ம, கொண்டப்பூ, சைடு ஜோடி பத்துரூபா.. பாருங்கம்மா வளயல், வளயல், பொம்ம என்று கூவிக்கொண்டிருந்தான். இப்படி எல்லாக்கடைகளிலும் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.


மேஜிக் ஷோ ஆரம்பமாகப்போகுது. மேஜிக், மேஜிக் ஷோ புதுபுது மேஜிக்குகள் உங்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு ஆளுக்கு பத்துரூபா பத்துரூபா.. மேஜிக் மேஜிக் என்று என்னுடன் வேலைப்பார்ப்பவன் மேஜிக் ஷோ டிக்கெட் வித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் கூட்டம் வந்தால் நல்லாருக்குமேன்னு நினைத்தபடி திரைக்கு பின்னாலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏய்.. ஏய்..மேஜிக் ஆரம்பிங்கலே.. எவ்ளோ நேரமாச்சி.. மேஜிக் ஆரம்பிக்கபோறீங்களா இல்லையாலே.. இல்லன்னா பத்துரூபா திருப்பிக்கொடுங்கலே.. என்று கூட்டத்தினர் கத்திக்கொண்டிருந்தார்கள். இனியும் தாமதித்தால் காரியங்கெட்டுருன்னு நினைச்சி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

எல்லோரும் ஜோரா ஒருதடவ கைய தட்டுங்க.. என்றபடி வந்திருந்தவர்களை ஒவ்வொரு தலையாக எண்ணிக்கொண்டே சொன்னேன். நேத்து அளவுக்கு இல்லைன்னாலும் இன்னக்கி கொஞ்சம் சுமாரான கூட்டம்தான். எல்லோரும் இங்கப்பருங்க அம்மா பாருங்க அய்யா பாருங்க.. இந்த மேஜிக் புதுவிதமானது.. ஏய் பையா..பையா இங்க பாரு.. என்ன நல்ல பாரு.. கையில ஒண்ணுமில்லயா... சொயிங்.. இங்கப்பாரு.. பூங்கொத்தை அங்கிருந்த சிறுவனிடம் கொடுத்தேன். அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்து இங்கப்பாருங்க.. இப்போ இந்தா நிக்கிறாரே இவரு இப்போ இங்கருந்து மாயமாகப்போறாரு.. எல்லோரும் ஒருதடவ ஜோரா கைய தட்டுங்க.. என்று சொல்லியவாரே அவரை மறைய வைத்தேன். இப்படி எனக்கு தெரிந்த ஒரு அஞ்சாறு மேஜிக்க செய்துகாட்டினேன். மக்களுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சி..

ராத்திரி 11 மணியா ஆகப்போனது. எல்லோரும் பொருட்காட்சிய விட்டு கிளம்பினார்கள். ஷோவில் சேர்ந்த பணத்த ஸ்டாலுக்கு வாடக, துணிமணி வாடக, அரசாங்க வரி, கூட இருந்தவங்களுக்கு அன்னக்கி சம்பளன்னு போக மிச்சமீதி என்பங்குக்கு ஏதோ கிடைத்தது.

நான் கணக்கு போட்டு வச்சிருந்த காரியத்துக்கெல்லாம் வருமா என்று கணக்கு பார்த்ததில் துண்டு விழுந்தது. என்ன செய்ய.. அரைகுறை மனசோட வீட்டுக்கு நடந்து வந்தேன். வருகிற வழியில் இளங்கோவில் ரொட்டிக்கறி வாங்கினேன்.

வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ரொட்டிக்கறி பார்சலை பங்கு போட்டுக்கொடுத்தேன்.

என் சின்ன பையன், நான் மேஜிக் ஷோக்கு பயன்படுத்தும் மந்திரக்குச்சிய வைத்துக்கொண்டு எனக்கு பிரியாணி வேணும், பிஸ்கட்டு வேணும், பொம்ம வேணும் என்று மந்திரகுச்சியால் ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு இருந்தான்.

நான் அதை ரசித்தபடியே கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

,

Post Comment

Saturday, July 24, 2010

ஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே!! வியாழன் இரவு கொஞ்சம் வேலை இருந்தது. நம்ம நண்பர் சரவணக்குமார் அப்போது அலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசும்போது எங்கள் இடத்துக்கு கவிஞர் பா.ரா. அண்ணன் அவர்கள் வந்துள்ளார்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமை பாரா அண்ணனை
அழைத்துக்கொண்டு
ஹஸா வந்து விடுகிறோம் என்று சொன்னார். உடனே எனக்கும் அக்பருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை.


(வலமிருந்து அக்பர், ஆறுமுகம், ஸ்டார்ஜன், சரவணக்குமார், முடிவிலி சங்கர், அக்பரின் தம்பி, அக்பர் மச்சினன்)


ரொம்ப நாளாக பாரா அண்ணனை சந்திக்கவேண்டும் என்ற ஆவல். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. பாரா அண்ணன், ஜூபைலில் இருக்கும் நண்பர் முடிவிலி சங்கர், கவிஞரும் நண்பருமான ஆறுமுகம் முருகேசன் மற்றும் நண்பர் சரவணக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்திக்க வருகிறார்கள் என்ற செய்தி எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை நானும், அக்பரும், அக்பரின் தம்பி, அக்பரின் மச்சினனும் வியாழன் இரவே திட்டமிட்டோம்.

(நானும் ஆறுமுகம் முருகேசனும்)


காலையில் 9 மணிக்கு எழுந்து பிரியாணி செய்து சாப்பிட ஏற்பாடு செய்தோம். நண்பர்கள் அனைவரும் சொன்னதுபோல பகல் 12 மணிக்கு வந்து எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு 1 மணிக்கு சாப்பிட்டு 2 மணிக்கு எங்கள் பகுதியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மணல்களால் ஆன மணற்குன்று, குகையை காண எல்லோரும் கிளம்பினோம்.

ஜபல் கராஹ்_ வை பற்றிய ஒரு பார்வை.


ஜபல் கராஹ்_ ஒரு சுற்றுலாத்தளமாகும். இது அல் ஹசா ஹபூப் சிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இது பழைமை வாய்ந்த மணற்குன்றுகளால் ஆன மணற்குகை. இங்கு வித்யாசமான குகைகளையும் சிறிய சிறிய மலைகளால் ஆனது. இந்த இடத்துக்கு பெயர் அல் கராஹ். மலைகளால் சூழ்ந்துள்ளதால் இந்த இடத்துக்கு ஜபல் அல் கராஹ் என்ற பெயர் பெற்றது. மற்ற இடங்களில் எவ்வளவுதான் சூரியன் சுட்டெரித்தாலும் இங்கு வெயிலே தெரியாத அளவுக்கு குளுமையான இடம். இதை நாங்கள் குளுமையின் உணர்வை நன்றாக அனுபவித்தோம். அதனால் இங்குள்ள வெளிநாட்டினரும் அரபிகளும் அடிக்கடி இந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள். வெள்ளிக்கிழமையானால் எல்லோரும் இந்த ஜபல் கராவுக்கு கிளம்பி விடுவார்கள்.


ஜபல் காரா_ கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புகைப்பட கலைஞர்களின் கலை ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் விதவிதமான வடிவங்களில் குகைகளும், மணற்குன்றுகளும் பார்க்க பார்க்க ரொம்ப பரவசமாக இருக்கும். நாம் இந்த மலைகளின் மேல ஏறி நடந்து செல்லலாம். வெயிலில் நாம் பார்க்கும்போது தங்கம்போல பிரகாசிக்கும். வித்யாசமான கலர்களில் பார்க்க பார்க்க பரவசமாக இருக்கும்.

இங்குள்ள பாறைகள் குன்றுகள் எல்லாம் உயரமாக, செங்குத்தாக உள்ளது. குகையின் உள்ளே சூரியன் தனது ஒளிக்கற்றையை உள்ளே செலுத்தி பார்க்க ரொம்ப அழகாக் உள்ளது. நீங்களும் படங்களில் கண்டுகளியுங்கள்.


நம் நாட்டிலுள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைபிரதேசம். இங்குள்ள சவுதிகளுக்கு நீரோடை, பூங்கா, மலைப்பிரதேசம் என்றால் ரொம்ப கொள்ளை பிரியம். இங்குள்ளவர்கள் இயற்கைக்கு ரொம்ப ஏங்குகிறார்கள். அதனால்தான் செலவையும் பொருட்படுத்தாமல் பல வெளிநாடுகளுக்கு வருடம்தோறும் சுற்றுலா செல்கிறார்கள். சவுதி அரசாங்கமும் தங்கள் பங்குக்கு நகரமெங்கும் செயற்கை புல்வெளிகள், நீரூற்றுகள், பூங்காக்கள் அமைத்து வெயிலின் தாகத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறார்கள்.

********

நண்பர் ஆறுமுகம் முருகேசனின் காரில் எல்லோரும் சரியாக 2 மணிக்கு கிளம்பினோம். நானும் அக்பரும் இதற்கு முன்னர் ஜபல் கராஹ்_ க்கு இரண்டு மூன்று தடவை சென்றிருக்கிறோம். ஆனால் இப்போது செல்லும்போது வழியெங்கும் சாலைகள் எல்லாம் சீர்படுத்தி எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வைத்தது சவுதி அரசாங்கம். இருந்தாலும் இடையிடையே வழிக்கேட்டு சென்றது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ஒருவழியாக ஜபல் கராஹ்_ வை அடைந்தோம்.

உள்ளே செல்ல செல்ல ஆர்வம் மிகுதியானது. செல்ல முடியாத அளவுக்கு சிறிய சிறிய இடுக்குகளில் எங்கள் உடம்பை செலுத்தி உள்ளே சென்றோம்.
எல்லா இடத்துக்கும் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போது மலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் பகுதியையும் பார்வையிட்டோம். எனக்கும் அக்பருக்கும் வேலை இருந்ததால் மாலை 4.30 மணிக்கு திரும்பினோம்.

நேற்றைய பொழுது ரொம்ப சந்தோசமாக இனிமையாக கழிந்தது.

வீடியோ காண..

Post Comment

Thursday, July 22, 2010

வானமே எல்லை?..

காடும் சிறுத்து
கழனிக்கு செல்லாத‌
மாடுகள் சென்றன‌
இல்லாத காடிப்பானையை?..

பார்த்து பார்த்து
சலித்துப்போன‌
வானமும் பொய்த்தது
மழை மேகமும்
கேட்டது சில்வர் அயோடைடை?..

பசியால் வந்தோரை
பசியாற வைத்தும்
இன்று பசியாற்ற‌
ஒவ்வொரு கணமும்
உருளுகிறது வயிற்றினிலே?..

பள்ளிக்கு சென்றவனும்
திரும்பினான் புத்தகமில்லாமல்?..
ஏட்டு சுரைக்காய்
கறிக்கு உதவாது
என்றெண்ணியோ?...

பட்டுப்போன
பயிரல்லாம் என்னைவிட்டு
போகாதே என்று சொன்னாலும்
நான் பட்டுபோகாமலிருக்க‌
பட்டண பிரதேசம் செல்கிறேன்?..

,

Post Comment

Tuesday, July 20, 2010

வரும்வரை காத்திரு..4 - தொடர்கதை

அன்புள்ள நண்பர்களே!! இந்த தொடர்கதையை வெளியிட‌ இரண்டு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. தமிழ்மண நட்சத்திர வாரம் மற்றும் சில அலுவல்கள் காரணமாக என்னால் இந்த தொடர்கதையை எழுத முடியவில்லை. இனி தொடர்கதை தொடர்ந்து வரும்.

தொடர்கதைக்குள் செல்லலாமா..

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌

வரும்வரை காத்திரு..
வரும்வரை காத்திரு..2
வரும்வரை காத்திரு..3

********


என்ன ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவள்வீட்டுக்கு சென்று அவளுடைய அப்பாவை பார்த்து பேசலாம் என்று கிளம்பினேன்.

என்ன தைரியத்தில் கிளம்பினேன் என்று தெரியாது. என்ன நடக்கப்போகுதோ?.. அவள் அப்பா என்ன சொல்வாரோ.. அவங்க வீட்டுல என்னை ஏத்துப்பாங்களா வழியெங்கும் யோசித்துக்கொண்டே சென்றேன்.

"டிக்கெட்..டிக்கெட்" என்று கண்டக்டர் கேட்டதுக்குகூட பதில் சொல்லாமல் யோசித்ததால் "ஏய்.. என்ன யோசனை.. முதல்ல டிக்கெட் வாங்கு அப்புறம் உக்காந்து நல்லா யோசி" என்று கண்டக்டர் உரக்க கேட்டபின்தான் ஞாபகம்வந்து போகும் இடத்தை சொல்லி டிக்கெட் வாங்கினேன். ப்ரியாவின் ஊர் அவளைப்போல அழகாகவே இருந்தது. நல்ல வயல்வெளிகள், சிலுசிலுவென்று வீசும் காற்றை அனுபவித்துக்கொண்டே, ஊர் அழகை ரசித்தபடியே நடந்துவந்து கொண்டிருந்தேன்.



அவளது வீட்டை நெருங்கியதும் மனதில் பக்கென்று பயம் ஒட்டிக்கொண்டது. வீட்டை நெருங்கி கேட்டை திற‌ந்ததும் உள்ளே நிறைய தலைகளாக நிறையபேர் அங்குமிங்குமாக சென்றுகொண்டிருந்தன. ப்ரியாவின் வீட்டில் ஏதோ விசேசம் போல. சிறுவர்கள் அங்கே இருக்கும் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அவர்கள் விளையாடுவதை விட்டுட்டு என்னையே பார்த்தபடியே என்னை பிந்தொடர்ந்தனர். அங்கு குழுமிருந்தவர்களும் என்னை நோட்டமிட்டதால் எனக்கு ஒருமாதிரியாக தப்பா எதுவும் வந்து மாட்டிக்கிட்டோமே என்று தோன்றியது.

திரும்பி செல்ல எத்தனிக்கும்போது உள்ளிருந்து ஒரு குரல்.. "தம்பி உள்ளவாங்க.. சரியான நேரத்துக்குதான் வந்திருக்கீக.. வாங்கவாங்க.. உள்ள வாங்க.. வெளிய நின்னுக்கிட்டிருக்கீக" என்றவரை பார்த்தால் ப்ரியாவின் அம்மா. "என்னங்க என்னங்க யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க.." என்றபடி ப்ரியாவின் அப்பாவிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். "அடடே வாங்க தம்பி.. ப்ரியாவுக்கு நிறைய உதவியெல்லாம் செஞ்சிருக்கீளாமுல்ல.. பிரியா அம்மா சொல்லிருக்காவ.. வாங்க வந்து உக்காருங்க.. நல்ல சமயத்துலதான் வந்திருக்கீக.. வந்ததுக்கூட ஒருவகையில் நல்லதாப்போச்சி.." என்றபடி அழைத்து சென்றார். எனக்கு எல்லாம் பிரமிப்பா இருந்தது. இங்க என்ன நடக்குது?.. என்று முகத்தில் கேள்வியுடனே அமர்ந்திருந்தேன்.

பின் ஒவ்வொருவராக என்னிடம்வந்து தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டது வியப்பாகவும் எனக்கு இது புது அனுபவமாகவும் இருந்தது.

எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தனர். என்கண்கள் பிரியாவை தேடின.

சிறிதுநேரம் சென்றதும் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமினர். நானும் அவர்களுடன் கலந்து நடப்பது என்னவென்று தெரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பரபரப்பின் உச்சியில் இருந்தேன். இவ்வளவுபேர் இருக்கிறார்கள், எப்படி அவளது அப்பாவிடம் எங்கள்காதலை சொல்வது?.. யோசனையில் மூழ்கியிருந்தேன். அருகில் எல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே.. அங்கே ப்ரியா அலங்காரத்துடன் தோழிகள் புடைசூழ வந்தது எனக்கு அதிர்ச்சியானது.

ஒரு நிமிடத்தில் எல்லாம் விளங்கிவிட்டது. ஆம் இன்று அவளுக்கு இன்னொருவனுடன் கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அடடா.. இது என்ன இப்படி?.. இப்போது என்ன செய்வது?..

நான் அமர்ந்திருந்ததை பார்த்த ப்ரியாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. எனக்கு என்னசெய்வதென்றே தெரியல.. ஆஹா வசமா மாட்டிக்கிட்டோமே இப்போ என்ன செய்வது?.. ப்ரியாவின் கண்களில் தெரிந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தேன்.

அய்யர் விவாக ஒப்பந்தத்தை படிக்க தயாரானார். "நிகழும் சங்கையான யுக வருடம் தை திங்கள்....." என்று படிக்கும்போது, "நிறுத்துங்க.. நிறுத்துங்க.. ஒரு நிமிசம்.." என்ற குரல்வந்த திசையை நோக்கி எல்லோரும் திரும்பினர்.

"நிறுத்துங்க.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லை. நான் ஒருத்தரை காதலிக்கிறேன்.,அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்ற ப்ரியாவை எல்லோரும் திகைப்புடன் பார்த்தனர். உடனே அங்கு வந்திருந்தவர்கள் குசுகுசுவென பேசிக்கொண்டனர். எல்லோருக்கும் ரொம்ப ஆச்சர்யம், திகைப்பு. எல்லோரும் அதிலிருந்து வெளியேற சிறிதுகால அவகாசம் ஆனது. உடனே ப்ரியாவுக்கு அருகிலிருந்த அவளது சித்தப்பா, "என்ன தைரியமிருந்தா இப்படி சொல்லுவ?.. என்ன கொழுப்பு.. ங்ம் ங்ம்.." என்று அடிக்கவரும்போது நான் உடனே அவரது கையை பிடித்து தடுத்தேன்.

"இனி ஒரு அடி அவமேல விழுந்தது.. அப்புறம் அவ்வளவு தான்.. ஆமா நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிறோம். எங்க ரெண்டுபேரையும் சேத்துவைங்க" என்றேன். "ஓஹோ இதுக்கெல்லாம் நீதான் காரணமா.. எல்லோரும் சேர்ந்து அடிங்கல.. எங்க வந்து என்ன பேச்சிபேசுறே.. எவ்வளவு தைரியம்" என்று அவளது சித்தப்பா சொன்னதும் சிலர் என்னை சூழ்ந்து அடிக்க ஆரம்பித்தனர். நானும் அவர்களை என்னால் முடிந்த அளவுக்கு தடுத்தேன். நிச்சயதார்த்த வீடு களேபரமானது. மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளை சொந்தக்காரங்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் அடிவாங்குவதை கண்ட பிரியா தடுத்தும் அவளுக்கும் அடி விழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு பெரியவர் "அட விடுங்கப்பா.. விடுங்கப்பா.." என்று எல்லோரையும் விளக்கிவிட்டார்.

ப்ரியாவின் அப்பா மாணிக்கம், "தம்பி எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன் உன்மேல.. சே.. எவ்வளவு துணிச்சல் இருந்தா இவ்வளவு கூட்டத்துலயும் ப்ரியாவ காதலிக்கிறேன்னு சொல்லிருப்ப.. இந்த விசேச வீட்டையே இவ்வளவு களேபரமா மாத்திட்டியே.. உன்னை காதலிக்கிறேன்னு அவளும் எங்கிட்ட சொல்லலியே.. இவ்வளவு ஏற்பாடும் செய்தபின்னாடி இப்படி சொன்னா எப்படிப்பா?.. என்னை இவ்வளவு கூட்டத்து முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டியே.. சே.. சரி அதெல்லாம் விடு. நீ என்ன வேலைப் பார்க்கிற?.. உங்க அப்பா அம்மா யாருன்னே எனக்கு தெரியாது., என்ன குலம் கோத்திரம் தெரியாமலே எங்கிருந்தோ வந்து என்பொண்ண கட்டிக்கிறேன்னு சொன்னா எப்படி தம்பி?.." என்றார்.

நான் "அய்யா., எனக்கு பக்கத்தூருங்க.. எங்கப்பா ரைஸ்மில்லுல வேலைப்பார்க்கிறாரு.. நான் பிஎஸ்சி படிச்சிக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர், "நீ இன்னும் படிச்சிமுடிக்கலை.. அதுக்குள்ளே காதலாம் காதல். ஒரு வேலைவெட்டி கிடையாது.. எம்பொண்ண எப்படி வச்சி காப்பாத்துவ.. இத்தனவருசமா பொத்திபொத்தி வளத்த பொண்ண வேலைவெட்டி இல்லாத வெறும்பயலுக்கு கட்டிக்கொடுத்து எம்பொண்ணையும் உன்னமாதிரி கஷ்டப்பட சொல்றீயா.. எப்போ எம்பொண்ண கட்டிக்கிற தகுதி இருக்கோ.. அப்ப வா.. இப்ப போகலாம்" என்றதும் அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றனர்.

"போகலாம்ன்னு சொன்னேனுல்ல.. ம்ம்ம்.. ம்ம்" என்று மாணிக்கம் சொன்னதும் ப்ரியாவை பார்த்தபடி நான் அவளது வீட்டைவிட்டு வெளியேறினேன்.

மாப்பிள்ளை வீட்டாரும் சொந்தக்காரங்களும் என்னை முறைத்து பார்த்தபடி என்னை கடந்து சென்றனர்.

தொடரும்...

,

Post Comment

Monday, July 19, 2010

காங்கிரசும் உட்கட்சி பூசலும்

சென்னையில் நடைபெற இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட, மாநில, பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டன. இது தொடர்பான தேர்தல் ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தேர்தல் 20 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கும் என தொண்டர்கள் பலர் தயாராக இருந்தனர். இந்நிலையில் இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ரவி மல்லு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்., தலைவர் தங்கபாலு கால அவகாசம் கேட்டதற்கிணங்க இந்த தேர்தல் ஒத்திவைக்ப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.


நன்றி: தினமலர் செய்திகள்.


************************


ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்து வருவது பற்றி செய்திகளில் படிக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. விடுதலைக்கு பாடுபட்ட பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சியில் இப்போது குறிப்பாக தமிழ்நாட்டில் உட்கட்சி பூசல்மோதல்கள் உருவாகி பல கோஷ்டிகளாக உருவெடுத்து ஒரு நிலைப்பாடு இல்லாமல் தவித்து வருவது வேதனையளிக்கிறது. ஒரு பெரிய அரசியல் கட்சியில் ஒற்றுமை இல்லாதது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம்தான். இது தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும்.

இது ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.

அந்தகாலத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முக்கியபங்கு ஆற்றிய காங்கிரஸ் கட்சியை பற்றி ஒரு பார்வை:


1885 ம் ஆண்டு உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டு, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஸ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த காங்கிரஸ் பால கங்காதர திலகர், கோபால கிருஸ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பல சிறந்த தலைவர்களை உருவாக்கியது.

1915ல் தென் ஆப்ரிக்காவிலிருந்து படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த காந்திஜி காங்கிரஸ்ஸின் கொள்கைகளால் கவரப்பட்டு காங்கிரஸுடன் இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் பெரியார் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திராவிட இயக்கத்தை உருவாக்கினார்.

ஜவஹர்லால் நேருவின் திறமையினால் காங்கிரஸ் கட்சி பிளவுபடாமல் சிறப்புற்று விளங்கியது. ஆனாலும் அவருடைய அரசு நிறைய பிரச்சனைகளையும் மற்றும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு ராஜினாமா செய்ய நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1957 இல் மகள் இந்திராகாந்தி காங்கிரஸ் தலைவரானது அதிக விமர்சனங்கள் எழுந்தன.

லால்பக்தூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். இந்திராகாந்தி தன்னுடைய திறமையினால் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தி மீண்டும் ஒரு சக்திவாய்ந்த கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்தார்.

1977 பொதுதேர்தலில் தோல்வியை சந்தித்த காங்கிரஸில் 1978ல் மீண்டும் பிளவு ஏற்பட்டு சுவரண் சிங் தலைமையிலான குழுவாகவும் இந்திராகாந்தி தலைமையிலான இ.காங்கிரஸ் குழுவாகவும் பிரிந்தனர்.

பின்னர் இந்திராகாந்தியின் மறைவுக்கு பின்னர் ராஜீவ்காந்தியினால் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றது. ஆனால் 1991ல் பொதுதேர்தலின்போது குண்டு வெடிப்பில் பலியான ராஜீவ்காந்திக்கு பின்னர் சரியான தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தள்ளாடிவந்தது. சிரிக்காத பிரதமர் நரசிம்மராவின் ஆட்சியில் முன்னேற்றம் இல்லாமல் மூப்பனார், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்ததினால் கட்சியில் பல்வேறு பூசல்கள் இருந்துவந்தது.

ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி தலைமையேற்றபின் இன்று ஒரு நிலையை எட்ட காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

தமிழக காங்கிரஸில் காமராஜருக்கு பின் எந்த ஒரு தலைவராலும் ஆட்சிஅமைக்க முடியவில்லை. இன்றுவரை திராவிடகட்சியின் கூட்டணியுடன்தான் ஆட்சியில் பங்குபெற்று வருகின்றனர். கட்சியில் உள்ளவர்கள் தங்களின் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட ஏன்தான் தயங்குகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும் ஒரு பெரிய கட்சி பிளவுபடுவதை காணும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

அந்தகாலத்தில் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியை தங்கள் வாழ்க்கையோடு இணைந்தே செயல்பட்டனர். பல போராட்டங்களை காங்கிரஸுடன் சேர்ந்து விடுதலைக்காக பாடுபட்டனர்.

ஆனால் இன்றைய மக்கள் காங்கிரஸ்ஸா அப்படின்னா என்ன என்ற அர்த்தத்துடனே காங்கிரஸை தூரத்தில்வைத்து பார்க்கின்றனர்..

இந்தநிலை மாறுமா?.. என்பதற்கு விடையை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Saturday, July 17, 2010

அறியா பருவம்

பத்துமாசம் சுமந்து
பெற்றதால் என்னவோ
அம்மாவுக்கு எவ்வளவு
சந்தோசம் முகத்தினிலே!!
எத்தனை எத்தனை
கோயில்களுக்கு சென்றிருப்பாளோ
என் வரவுக்காக..

தவழும்போதும் குப்புற
விழுந்து நான் அழும்போதும்
என் அழுகையை ரசித்து
பாலூட்டி தாலாட்டி
உறங்கவைத்தாள் என் அன்னை.

நடைபயில கற்றுக்
கொடுத்து நான்
நடக்கமுயற்சித்தாலும்
நடக்க விடுவதில்லை..
இடுப்பை விட்டு இறக்காமல்
எப்போதும் தூக்கிக்கொண்டு
கண்ணுக்கு கண்ணாக
காத்தாள் என் அன்னை.

நான் தனியாக சென்றால்
பதபதைப்புடன் உடனே
தேடி வந்து அள்ளிச்
செல்வாள் அன்னை.

குறும்பு சேட்டைகள்
செய்யும்போது கண்டிக்க‌
மனம் வருவதில்லை..
பாசம் நேசம்
எல்லாம் கண்டேன்
என் அன்னையிடம்..

நர்சரிக்கு செல்லும்
வயதில் சென்றேன்
அவளைவிட்டு பிரிந்து..
செல்லும்போதே மனம்
வலித்தது இருவருக்கும்

திரும்பி வந்தேன்
சலன‌மற்று..
அன்னையின் முகம்
காணமுடியாமல் நான்
கரிக்கட்டையாய்..


( 2004 ஜூலை 16 கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான பிஞ்சுகளுக்கு அஞ்சலிகளுடன் இந்த இடுகையை சமர்பணம் செய்கிறேன். )

,

Post Comment

Thursday, July 15, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

Starjan ( ஸ்டார்ஜன் )

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. இது ரொம்ப நாளாக எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வி. அதற்கான பதிலை சொல்ல இப்போதுதான் வாய்ப்பு அமைந்தது. கல்லூரியில் படிக்கும்போது இரண்டு ஷேக் மைதீன்கள் உண்டு. எங்களுக்குள் வித்யாச‍ப்படுத்திக் கொள்ள பெயரில் மட்டும் அவருக்கு தில் ஷேக் என்றும் எனக்கு ஸ்டார் ஷேக் என்றும் வைத்துக் கொண்டோம். பெயரில்தான் வித்யாசமேதவிர எப்போதும் ஒன்றாவே இருப்போம். ஸ்டார் ஷேக் என்ற பெயரில்தான் பதிவு ஆரம்பிக்க நினைத்தேன். பின்னர் எனது மனைவி பெயரில் உள்ள முதலெழுத்தும் என்பெயரில் உள்ள கடைசி எழுத்தையும் சேர்த்து ஸ்டார்+ஜன்= ஸ்டார்ஜன் என்று பெயர் வைத்து எழுத ஆரம்பித்தேன்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. மனதில் உள்ள எண்ணங்களை எழுத்தின்மூலம் பதியவைப்பதற்காக..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் ஆரம்பத்தில் தமிழ்மணம், தமிழிஷ்ல் மட்டுமே இணைத்திருக்கிறேன். தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் இதர திரட்டிகளுக்கும் என் நன்றிகள். எனது எழுத்துக்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்த பெருமை திரட்டிகளுக்கே போய் சேரவேண்டும்.

பின்னர் என் எழுத்துக்களை படித்து பாராட்டிவரும் வாசகர்கள் அவர்களாக எல்லா திரட்டிகளிலும் இணைத்த அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன். அனுபவங்களை பற்றி எழுதும்போது நமக்கும் படிப்பவர்களுக்கும் ஒரு உறவுப்பாலம் தோன்றும். அதில் ஒரு சந்தோசம். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதை போக்காமல் நாளைய பொழுது போக என்னசெய்யலாம் என்று யோசித்து எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

டெம்ப்ளேட் டெஸ்ட் செய்ய ஒரு வலைப்பூ. நான் எழுத ஆரம்பித்த புதிதில் உள்ள நாளைய ராஜா என்ற வலைப்பூ, இப்போது எழுதிவரும் நிலா அதுவான‌த்துமேல சேர்த்து மொத்தம் மூன்று.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நான் ஒவ்வொரு இடுகை எழுதும்போதும் முதல் இடுகையாக நினைத்து எழுதுகிறேன். எல்லோரையும் போல நானும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்தான் இன்றுவரை உள்ளது. மாறாக எனக்கு யார்மீதும் கோபமோ பொறாமையோ ஏற்பட்டதில்லை. எல்லோரும் என் நண்பர்களே...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் நண்பர் அக்பர். பண்பாளர்; பாசமிக்கவர்; என் நலனில் அக்கறை கொண்டவர். நாங்கள் இருவரும் நிறைய விசயங்களை பற்றி விவாதிப்போம். ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டதில்லை.

பின்னர் எழுத ஆரம்பித்தவுடன் என்னை பாராட்டிய என் நண்பர் முரளிக்கண்ணன், அண்ணன் கோவி.கண்ணன், பழனி டாக்டர் திரு சுரேஷ் அவர்களையும் மறக்க இயலாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எல்லோருக்கும் தெரிந்த விசயந்தான். நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. கேள்வியில் கேட்டதினால்..., உங்கள் கற்பனைகளுக்கு தீனி போடுங்கள். உங்கள் எழுத்துக்கள் பிறரால் போற்றப்படவேண்டும். எழுத்திற்கு ஒரு கண்ணியம்கொடுங்கள். பிறர் மனம் வருந்தும் அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் ஆகிடக்கூடாது.


பா.ரா அண்ணன் அவர்களையும் நண்பர் ஜெய்லானி அவர்களையும் நண்பர் சரவண‌க்குமார் அவர்களையும் இந்த தொடரை தொடர அன்போடு அழைக்கிறேன்.


என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Sunday, July 11, 2010

வாசகர் பரிந்துரை தேவையா...

அன்புள்ள நண்பர்களே!! இன்றுடன் என்னுடைய தமிழ்மண நட்சத்திரவாரம் முடிவடைகிறது. நட்சத்திர வாரத்தில் இதுதான் கடைசி இடுகை. என்னுடைய எல்லாப் படைப்புகளையும் ஆர்வமுடன் படித்து ஊக்கம் அளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் நான் எழுதிய படைப்புகள் எல்லாம் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் இதுபோன்றதொரு நட்சத்திர வாரம் அமையப் பெற்றால் இந்த வாரம்போல சிறப்பாக்குவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது வாழ்த்துக்களின் மூலம் உங்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு நட்சத்திர வாய்ப்பை தமிழ்மண நிர்வாகத்தினரிடம் கோருகின்றேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

**********

தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு,

தமிழ்மண நிர்வாகத்தினருக்கு என்னுடைய சின்ன வேண்டுகோள். உங்களுடைய சேவையை யாராலும் மறக்கஇயலாது. எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து பதிவுலகில் பிரகாசிக்க வைத்திருப்பதற்கு எத்தனை தடவைகள் நன்றிகள் சொன்னாலும் அதற்கு ஈடுஇணையாகாது. எல்லோரும் உங்களிடம் தங்களுடைய பதிவுகளின் மூலம் கோரிக்கை வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அது வாசகர் பரிந்துரையை நீக்குவது பற்றிய கோரிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களது சேவை எப்போதும் போல தொடரட்டும். வாசகர் பரிந்துரை நீக்கவேண்டாம். புதிதாக எழுதும் பதிவர்களை பற்றிய புதிய பகுதி கொண்டு வந்தீர்களானால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.

எதற்காக வாசகர் பரிந்துரை நீக்கவேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் வாசகர் பரிந்துரை என்பது வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பகுதி. இதற்கும் தமிழ்மணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வாசகர் பரிந்துரையில் வாசகர்கள் படித்து தேர்ந்தெடுப்பதுதான் தேர்வாகும். ஒரு சிலரே அதிக வாசகர்கள் பரிந்துரைக்கும் இடுகையில் வரமுடியும். இதுதான் உண்மைநிலையும்கூட. உங்களுக்கு அந்த இடுகைகள் பிடித்திருந்தால் அதற்கு ஓட்டுபோட்டு மேலும் முன்னணியில் வரச் செய்யுங்கள். அதற்காக வாசகர் பரிந்துரைக்கும் பகுதியை வேண்டாமென்று சொல்வது எந்தவிதத்தில் நியாயமாகும். ஓட்டுபோடுவது என்பது நமது உரிமை. அதை விட்டுக்கொடுக்கலாமா.. சொல்லுங்கள்.

வாசகர் பரிந்துரையில் மாற்றம் தேவை இல்லை. இப்படியே இருப்பதுதான் நல்லதென்று நினைக்கிறேன்.


******************

தயக்கம்

என்னுடைய கடந்த வாழ்வில் முன்னேற ஆசை.. இடுகையில் ஒரு காரணியை சொல்ல மறந்துவிட்டேன். வாழ்க்கையில் முன்னேற தயக்கம் இருக்கக்கூடாது. எந்த காரியத்துக்கும் தயக்கமில்லாமல் துணிச்சலுடன் முன்னேறவேண்டும்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டுவிழாவில் பாட்டுப்போட்டி நடைபெற்றபோது நானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காக என்னபாட்டு பாடலாம் என்று யோசனை செய்தேன். பாடுவதற்கு "எல்லாப் புகழும் இறைவனுக்கு" என்ற பாடலை பாட முடிவு செய்தேன். எனக்கு அந்த பாடலின் வரிகள் தெரியாததால் ஒவ்வொருவரிடமும் கேட்டேன். ஒரு கல்லூரி விரிவுரையாளர் அந்த பாடலை எனக்கு எழுதித் தந்தார். எப்படி பாடவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

பாட்டுப்போட்டி அன்று நிறையபேர் கலந்து கொண்டனர். வைத்திருந்த பெட்டியிலிருந்து ஆளுக்கொரு சீட்டு எடுத்தோம். நான் எடுத்த சீட்டை பார்த்தால் நம்பர் ஒண்ணு. மனசு திக்திக்கானது. எப்படி பாடப்போகிறோம்?.. ரொம்ப தயக்கமாகவே இருந்தது. வேறசீட்டை எடுத்திடலாமா என்று ஒரு யோசனை. என்ன ஆனாலும் சரி.. நடப்பது நடக்கட்டும்.

சார், ஒண்ணாம் நம்பர் எடுத்த மாணவர் மேடைக்கு வருமாறு அழைத்ததவுடன் நான் போய் நின்றதும் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இவன் எப்படி பாடப்போகிறான் என்று பொண்ணுங்க பையன்கள் எல்லோரும் திகைத்தனர். ஒரே கூச்சல்.

நான் பாட ஆரம்பித்ததும் இருந்த கூச்சல் அடங்கி ஆர்வமுடன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கோ முதல்தடவை மேடையில் பாடுவதால் கைகளெல்லாம் கிடுகிடுவென ந‌டுங்கியபடி நடுக்கத்துடன் பாடினேன். பாடிமுடித்ததும் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். கைத்தட்டுகளால் அரங்கத்தையே அதிரவைத்தனர்.

பரிசு கிடைக்கவில்லையென்றாலும் பலரிடமிருந்து பாராட்டுக்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

ஆகவே எந்த ஒரு விசயத்திலும் தயக்கம் என்பது வேண்டாம். தயக்கம்தான் முன்னேறுவதற்கு தடையாக இருக்கும் ஒன்று. தயக்கத்தை விட்டொழியுங்கள்.

என்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்த தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய எல்லா படைப்புகளையும் படித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றிகள்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

வாழ்வில் முன்னேற ஆசை...


மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அல்லும்பகலும் பாடுபட்டு உழைத்து பொருளாதார முன்னேற்றம் கொண்டுவருகிறான். இதனால் அவனும் அவன் குடும்பமும் கவலை இல்லாமல் இருக்கமுடிகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் இன்று ஒரு நல்லநிலையில் இருப்பதை கண்கூடாக காண்கிறோம். எப்படி இது சாத்தியமானது என்று பார்த்தால் உழைப்பு தான் காரணமாக இருக்கமுடியும்.

ஒருவன் முன்னேறுவதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் அவனுக்கு தன்னம்பிக்கை வேண்டும். உழைப்பு, பணமுதலீடு, தொழில்பக்தி, தகவல்தொடர்பு திறமை (கம்யூனிகேசன் ஸ்கில்), நேர்மை, வாய்ப்பு இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தொழில் தொடங்குவதற்கு இந்த காரணிகள் இன்றியமையாததாகிறது.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை தான் எல்லாவற்றிக்கும் முக்கியமாகும். ஒருவன் ஒரு காரியத்தை செய்யும்முன் அவனுக்கு தன்னம்பிக்கை தான் பாதிபலமாகும். எந்த இக்கட்டான சூழ்நிலையானலும் தன்னம்பிக்கை மட்டும் இழக்ககூடாது. நினைத்த காரியத்தை முடித்துவிட வேண்டும். நம்மால் இதை செய்யமுடியாதே; நம்மால் முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தால் காலம்பூராவும் யோசித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

உழைப்பு

ஒருவன் முன்னேற வேண்டுமென்றால் அவனிடம் நல்ல உழைப்பு வேண்டும். எந்தமாதிரியான சூழ்நிலையை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடின உழைப்பே அவனை முன்னேற வைத்துவிடும். உழைப்பின் அருமையை எறும்பிடமிருந்து கற்றுக்கொள் மானிடா என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.

பண முதலீடு

தொழில் தொடங்குவதற்கோ நிறுவனம் தொடங்குவதற்கோ முதலீடு அவசியம் தேவை. இது இல்லையெனில் எதுவும் நடக்காது.

தொழில்பக்தி

எந்த தொழிலோ அல்லது நிறுவனமோ அங்கு வேலை செய்யப்படும் தொழிலுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். தொழிலில் ஒரு பயபக்தி இருக்கவேண்டும். சும்மா ஏனோதானோ வென்று இருந்தால் தலையில் துண்டுபோட்டுட்டு செல்லவேண்டியதுதான். தொழில்பக்தி ஒருவனை ஒழுக்கமாக வைத்திருக்கும். எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் பழகவிடாது. பண்பாளனாக மாற்றிவிடும்.

தகவல் தொடர்பு திறமை (கம்யூனிகேசன் ஸ்கில்)

இதுவும் முக்கியமான ஒன்று. நாம் தயாரித்த பொருள்களை விற்க வேண்டும். அதற்கு நல்லா பேசத் தெரிந்திருக்கவேண்டும். தப்போதவறோ ஒரு வாடிக்கையாளரிடம் நம்முடைய பொருள்களை விற்கத் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தன்னுடைய பேச்சித்திறமையால் அவர்களாக மனம்வந்து விரும்பி வாங்கி செல்லவேண்டும். முகம்பார்த்து பேசும்போது அவர்களுக்கு நம்மேல் ஒரு அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஒரு பழமொழி சொல்வாங்க. ஆட்டை மாடாக்க தெரிந்திருக்க வேண்டும். கழுதையை குதிரையாக்க தெரிந்திருக்க வேண்டும். பேச்சுக்கலைதான் முன்னேற வழி அமைத்துக் கொடுக்கும்.

நேர்மை

இதுவும் ரொம்ப முக்கியமான ஒன்று. நேர்மை தொழிலில் சிறந்து விளங்க வழி செய்யும். தொழிலில் ஏமாற்றுவேலைகள் இல்லாமல் இருக்குமானால் அது காலாகாலத்துக்கும் நீடித்து நிற்கும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தொழிலோ வியாபாரமோ செய்யும் போது அது பல்கி பெருகிவிடும்.

வாய்ப்பு

எல்லாம் இருந்து வாய்ப்பு அமையவில்லையெனில் நம்முடைய முயற்சிகள் வீணாகி போய்விடும். இன்று நாம் அனைவரும் ஒரு நல்ல வாய்ப்புக்காத்தான் காத்திருக்கிறோம். எத்தனை பேர் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நடையாய் நடக்கும்போது இப்போ கிடைத்திடாதா அப்போ கிடைத்திடாதா என்று ஏக்கங்கள் வாட்டி எடுக்கின்றன. வேலை கிடைப்பது அரியது. நல்ல வாய்ப்புகள் நம்கதவை தட்டும்போது கொட்டாவிவிட்டு தூங்கினால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வெள்ளித்திரை திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவார். ரொம்ப அருமையானது; யதார்த்தமானது. எனக்குத் தெரிஞ்சி உலகத்துல இரண்டே பேர்தான் உண்டு. வாய்ப்புக் கிடைத்தவன், வாய்ப்பு கிடைக்காதவன். வாய்ப்பு கிடைத்தவன் முன்னேறி செல்கிறான். வாய்ப்பு கிடைக்காதவன் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

வாய்ப்பு சில நேரங்களில் கிடைக்கும். அதை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று பழமொழி உண்டு. வாய்ப்பு அரிதில் கிடைத்துவிடாது.

ஒரு சிலருக்கு நல்ல வாய்ப்புகள் தானாக அமைவதுண்டு. எனக்கு தெரிந்த இரண்டு பேருக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் வேலை கிடைப்பதே கஷ்டம். அதிலும் வெளிநாட்டில் என்பது அபூர்வம். அப்படிக் கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்டால் நமக்குநாமே துரோகம் செய்வதுபோலாகும்.

என்னுடைய நண்பர் அவருக்கு தெரிந்த ஒருவரை ஊரிலிருந்து வேலைக்காக கூட்டிவந்தார். வந்தவருக்கு வேலை அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. சரியென்று நண்பரே அவருக்கு நன்றாக வேலை செய்ய சொல்லிக்கொடுத்தார். அவருக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்தும் சரியாக மண்டையில் ஏறவில்லை. சரி இதுதான் சரியில்லை. வேறு வேலையில் விட்டாலாவது பிழைத்துக் கொள்வார் என்று பார்த்தால் சமார்த்தியம் இல்லை. இதுவும் செட்டாகவில்லை.

பின்னர் நண்பர் வேறொரு கடையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்காவது சமார்த்தியத்தை வைத்து பிழைத்துக் கொள்வார் என்றுபார்த்தால் அவரால் முடியவில்லை. அவர் இங்குவந்த ஒண்ணரை வருசத்துக்குள்ளாலே நாட்டுக்கு சென்றுவிட்டார்.

இன்னொரு நண்பர் தன்னுடைய சித்தி மகனை தன்னுடன் பணிபுரிய ஊரிலிருந்து கூட்டிவந்தார். வந்த ஒரு மாதத்துலே ஊருக்கு சென்றுவிட்டார். நண்பருக்கு பலத்த நஷ்டம். என்னசெய்ய?... இந்தமாதிரி ஆட்களை?..

இந்தமாதிரி வாய்ப்புகளை எதிர்நோக்கி எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள நம்மால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும். என்னால் எதுவும் முடியலியே என்று சும்மா இருந்துவிடக்கூடாது.

எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை இறைவன் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுப்பான். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். முயற்சிப்போம் முடியாதது என்று ஒன்றும் இல்லை.

வாய்ப்புகளை நோக்கி காத்திருப்போம்.. உங்களுடன் நானும்..

,

Post Comment

Saturday, July 10, 2010

செய்யது அப்பா

செய்யது அப்பா

ஒருவனுடைய வாழ்க்கையில் முன்னேற உந்துகோலாய் இருந்த மனிதரை பற்றிய ஒரு இடுகை. நான் சிறுவயதில் இருக்கும்போது எங்க வீட்டில் ரொம்ப கஷ்டம். வறுமையான சூழ்நிலை. அப்போது எங்களுக்கு உதவியாய் இருந்தது எங்கப்பா செய்யது அப்பாதான். உங்களுக்கே தெரிந்திருக்கும் இஸ்லாமியர் குடும்பங்களில் தாத்தாவை அப்பா என்றும், அப்பாவை அத்தா என்றுதான் கூப்பிடுவோம்.

செய்யது அப்பாவுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உண்டு. அதில் நான் அவரது இரண்டாவது மகனுக்கு பிறந்த‌ மூத்த பேரன். எங்கப்பாமேல எனக்கு நிறைய அன்பு உண்டு. அவருக்கும் என்மேல் பிரியம் உண்டு. பெரியத்தாவையும் அவரது குடும்பத்தினர் மேல் பாசம் இருந்தாலும் எங்கள் குடும்பத்தின்மேல் அளவு கடந்த பாசம் வைத்திருத்திருந்தார். எங்கத்தாவுக்கு அந்த நேரத்தில் அவ்வளவா வேலை இருப்பதில்லை. அப்போது கஷ்டப்படும்போது எங்கப்பா அவரால் இயன்ற உதவிகளை செய்வார்.

என்னிடம் படிக்கும் ஆவலைக் கண்ட எங்கப்பா எங்கத்தாவிடம், எலே சேக்கை எப்படியாவது படிக்கவை. அவன் படிக்கணும் என்று சொல்லி ஊக்கப்படுத்துவார். எங்கத்தாவுக்கும் என்னை படிக்கவைக்க வேண்டும் என்ற கனவு. எங்க ஊரில் எங்கள் பகுதியில் நான் முதன்முதலில் அறிமுகமானது எங்கப்பாவின் மூலம் தான். எங்கப்பா ஒவ்வொருவரிடமும், இவந்தான் என் பேரன் ஷேக், இவன் நல்லா படிக்கிறான். நல்ல பையன் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். இன்றும் எங்கள் தெருக்களில் செய்யது அப்பா பேரன் என்று என்மேல் பாசத்துடனும் அன்புடனும் இருந்து மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் அது எங்கப்பா மூலம்தான் கிடைத்தது.

அவர் என்மேல அளவு கடந்தபாசம் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். அதேமாதிரி நான் சேட்டை செய்யும்போதெல்லாம் கண்டிக்கத் தவறுவதில்லை. அவர் அந்த காலத்தில் சித்தமருத்துவம் வைத்தியம் பார்த்து கொண்டிருந்தார். என்னுடைய காலத்திலும் அவரது வைத்தியம் தொடர்ந்தது. உடம்பு சரியில்லாதவங்களுக்கு மருந்து தயாரித்து மருந்துகளை என்னிடமும் கொடுத்துவிடுவார். நான் கொண்டு கொடுத்துவிட்டு வருவேன். நாளாகநாளாக வயதாகிக் கொண்டே போனதால் அவருக்கு பின்னால் எங்க பெரியத்தாவோ எங்கத்தாவோ அவரது மருத்துவத்தை தொடரவில்லை.

பெரியமகன் இருந்தாலும் அவரது வீட்டில் சாப்பிடமாட்டார். எங்க வீட்டில் எங்கம்மா கையினால் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுவார். எப்போதும் எங்களுடனே தான் இருப்பார். எங்கு சென்றாலும் அவர் என்னைத்தான் அழைத்து செல்வார். சொந்தக்காரங்களின் கல்யாண விஷேச‌ங்களுக்கும் ஊருக்கு செல்வதானால் என்னைத்தான் அழைத்து செல்வார்.

ஒருதடவை மதுரைக்கு எங்க பெரிய மாமி (அத்தாவின் தங்கை) வீட்டுக்கு சென்றது மறக்கமுடியாத அனுபவம். அப்போது மாமி குடியிருக்கும் ஏரியாவுக்கு குதிரை வண்டியில் சென்றது இன்று நினைத்தாலும் மறக்கமுடியாது. ஆட்டோ, டாக்சி இருந்தபோதும் குதிரை வண்டியில் போனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அது இன்று நினைத்தாலும் கிடைக்கமுடியாத குதிரைவண்டி பயணம். எங்கமாமி பசங்களோட விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் மாமி குடும்பத்தோடு எங்க ஊருக்கு வந்திடுவாங்க. ஒரே ஜாலிதான். நாங்களும் எப்போதாவது மதுரைக்கு செல்வதுண்டு.

எங்கப்பா எங்கத்தாவிடம் அன்று நடந்தவற்றை சுவாரசியமாக பேசுவார். நானும் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருப்பேன். எங்கப்பா சுருட்டி பிடிக்கிற ஸ்டைலே தனிதான். அவர் அப்போது பேமஸா இருந்த மான்மார்க் சுருட்டுதான் பிடிப்பார். நான் அவருக்கு மான்மார்க் சுருட்டு கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அவர் பிடிக்கும் ஸ்டைலை அவர் அருகிலிருந்து மெய்மறந்து ரசிப்பேன். நாளாக நாளாக அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. எங்கத்தா கூட இருந்து கவனித்துக் கொண்டார்.

ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க எங்கம்மாவிடமிருந்து சாப்பாடு வாங்கிக்கொண்டு செல்வேன்.

இப்படி எங்கள் குடும்பத்தின்மேல் பாசமும் அன்பும் கொண்டு பிரியாமல் இருந்த செய்யது அப்பா இறக்கும் தருவாயில் நாங்க (எங்கத்தா, எங்கம்மா, நான், தங்கை தம்பிகள்) யாரும் இல்லையென்று நினைக்கும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும். அதான் விதின்னு சொல்வாங்க போல..

நான் பத்தாம்வகுப்பு தேர்வு முடிந்து லீவு விட்டிருந்தாங்க. அப்போது எங்க மாமி குடும்பத்தோடு ஊருக்கு வந்திருந்தாங்க. அவர்கள் ஊருக்கு செல்லும்போது என்னையையும் என் தங்கையையும் உடன் அழைத்து சென்றார்கள். நாங்களும் விருப்பப்பட்டோம். போகும்போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. மதுரைக்கு போனாலே ரொம்ப ஜாலிதான்.

அந்த நேரத்தில் எங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போனது. எங்க மாமா (அம்மாவின் அண்ணன்) மதுரைக்கு செல்லும்போது எங்கப்பா, மாமாவிடம் சேக்கை அழைத்துக் கொண்டு வந்திடுங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார். மாமா அங்குவந்து வா சேக் ஊருக்குபோவோம். உங்கப்பா கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க என்று அழைத்தார். நான் விளையாட்டுபுத்தியில் நா இன்னும் கொஞ்சநாள் இருந்துட்டு வாரேன் மாமா என்று வர மறுத்துவிட்டேன்.

இரண்டுமூன்று நாள் கழித்து எங்கத்தாவும் அம்மாவும் மதுரைக்கு வந்தார்கள். எங்கத்தா வரும்போது அப்பாவிடம் அவர்களை கூட்டிகொண்டு நாளைக்கு வந்துடுவேன் கவலைப்படாதீங்க என்று சொல்லி அப்பாவிடமிருந்து விடைபெற்றிருக்கிறார்.

மதுரைக்கு வந்த அன்று இரவு 2 மணிக்கு அப்பா இறந்துவிட்டார்கள் என்று பெரியத்தாவிடமிருந்து தந்தி வந்திருக்கிறது. உறங்கிகொண்டிருந்த நான் அழுகுரல் கேட்டு விழித்து பார்த்தேன். அப்போதுதான் எங்கப்பா இறந்துபோன செய்தி கேட்டு மனம் ரொம்ப வேதனைப்பட்டது. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம். அப்போது அந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்ததை எண்ணி கண்ணீருடன் இந்த இடுகையை எழுதுகிறேன்.

மீண்டு வருமா அந்த காலம்?..

எங்கப்பாவுக்கு எவ்வளவு ஏக்கமாக இருந்திருக்கும். அப்பா இறக்கும்போது நாங்க ஒருவர்கூட இல்லாதது ரொம்ப வருத்தத்திலும் வருத்தம்.

செய்யது அப்பாவுக்கு இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன்.

Post Comment

Friday, July 9, 2010

காதல் இனிமையானது

காதல் புனிதமானது அது எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு மெல்லிய உணர்வு. இன்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டுள்ளோம். இளம்வயதில் அதாவது படிக்கும் பருவமான டீன்ஏஜ் பருவத்தில் வருவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் உயிரின் ஜனனம் முதல் மரணம்வரை தொடரும். காதல் என்பது ஒரு உயிர் உருவாவதற்கு முன்னரே காதல் வந்துவிடுகிறது.

உதாரணத்துக்கு ஒரு தாய் தன்வயிற்றில் கரு உண்டான உடனே தன்குழந்தையின் மேல் அதீதபாசம் கொண்டுவிடுகிறாள். பெற்றோர்கள் தன் குழந்தையை நேசித்து அப்பொழுதே காதலாகி கனவுகாண தொடங்கிவிடுகிறார்கள். பெற்றோர் தன் குழந்தையின்மீது உண்டான பாசமும் காதல்தான். பிள்ளை பெற்றோரின்மேல் கொண்ட பாசமும் காதல்தான். இப்படி எதுஎதன் மேல் அன்பு செலுத்துகிறோமோ அதெல்லாம் காதல் தான்.

காதலில் அன்பு, பாசம், நேசம், ஆசை, விருப்பம் இதெல்லாம் அடங்கிவிடுகிறது. நம்மவர்கள் இளம்வயதில் வருவதுதான் காதல் என்று காதலை கொச்சைப்படுத்துகிறார்கள். இளவயது காதல் எதனால் உண்டாகிறது என்றால் பையனோ பெண்ணோ தன்னுடன் படிக்கும் அல்லது தன்னுடன் பணிபுரிபவர்களிடமோ வருகிறகாதல். ஒருவர்மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகள் கவரும்படியாக அமைந்துவிட்டால் அங்கே இருவருக்கும் காதல் உருவாகிவிடுகிறது. அவன்/அவள் செய்யும் சின்னசின்ன நடவடிக்கைப் பிடித்துபோய் இவர்கள்தான் நம்மீது உண்மையான அன்பு செலுத்துகிறான்/ செலுத்துகிறாள் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

இருவரின் மனங்களும் ஒத்துப்போய் அன்பு செலுத்துவதினால் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால்தான் இன்று நிறைய காதல் திருமணங்கள் பெருகிவருகின்றன. இதற்கு இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் காதல் திருமணங்களை அங்கீகரிப்பதில்லை. தாங்கள் இருபது வருடங்களாக தங்கள் பிள்ளைகள் பொத்திபொத்தி வளர்த்தபின் எங்கிருந்தோ வந்த முன்பின் பழக்கமில்லாத இன்னொருவனுடன்/இன்னொருவளுடன் காதல் என்றுவரும்போது மனம் ஏற்கமறுக்கிறது. எங்கே தங்கள் பிள்ளைகள் வழிமாறி சென்று வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள் என்ற கவலையில்தான் பெற்றோர்கள் காதலை ஏற்கமறுக்கிறார்கள். இதுதான் உண்மை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்மீதான கனவில் களங்கம் வரும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மனம் வேதனைப்படுகிறது. ஆனால் காதலர்கள் இதை அலட்சியம் செய்து பெற்றோர்களின் மனதை புரிந்துகொள்வதில்லை. சிறிது காலம் சென்றபின் காதல்வாழ்க்கை கசந்தபின் திரும்பிவரும்போது பெற்றோர்கள் மன்னித்து சந்தோசத்துடன் அவர்களை ஏற்றுக்கொளும்போது இழந்ததை மீட்ட சந்தோசம் வந்துவிடுகிறது.

இந்தமாதிரி சூழ்நிலையை தவிர்க்க பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இதையும் மீறி பிள்ளைகள் தவறான வழியில் சென்றுவிடுகிறார்கள். இதுமாதிரி நடக்காமலிருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உண்மைநிலையை தெளிவாக விளக்கவேண்டும். ஒரு நல்ல நண்பனைப்போல அவர்களோடு மனம்விட்டு பேசவேண்டும். இதெல்லாம் இப்போது சரியாகத் தோன்றும்; பின்னால் இப்படி நடந்தற்காக நாம் நிறைய வருத்தப்படவேண்டி வரும் என்று புரியவைக்க வேண்டும். அப்போதுதான் வழி தவறமாட்டார்கள். பிள்ளைகளும் நம் வாழ்க்கைக்கு தேவையானதை நிதானமாக சிந்தித்து சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனால்தான் இளம்வயதில் வ‌ரும் காதலை வேண்டா வெறுப்பாக எல்லோரும் நினைக்கிறார்கள். திருமணத்துக்கு பின் வரும் காதல் என்றென்றும் அழியாதது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை ரொம்ப அர்த்தமுள்ளதாகும். காதல் நமக்குள் வரும்போது சாதிமத பேதங்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிடும். அன்பால் எதையும் சாதிக்கலாம். வன்முறைகள் எதுவும் நடக்காது. இது தெரியாமல் ஒவ்வொருகொருவர் சண்டையிட்டு மடிகிறார்கள். இந்த உலகில் காதலிக்காதவர்கள் இருக்கவே முடியாது. மனிதர்களுக்கு மட்டுமின்றி
ஒவ்வொரு உயிருக்கும் காத‌ல் உண்டு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு.

காதலால் தவறான பாதையில் மனம் செல்லாது. காதல் நியூட்ட‌னின் முதல் விதியைப் போல..

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்.

இதுபோலதான் காத‌லும். காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

Thursday, July 8, 2010

சென்னை டூ மதுரை - வழி: திருச்சி

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிஎஸ்ஆர்பி தேர்வுக்காக சென்னை செல்ல ஆயுத்தமானேன். சென்னையில் எங்க மாமாவுடைய நண்பரின் மச்சான் வீடு இருந்ததினால் அவரது வீட்டில் தங்கி தேர்வு எழுத சென்றேன். திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு அரசுவிரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் பதிவு செய்து என்பயணத்தை தொடர்ந்தேன். வீடியோ பேருந்து என்றார்களே படம் போடுவார்கள் என்று நினைத்திருந்தேன். கயத்தார் தாண்டியதும் படம்போட கண்டக்டர் ஆயுத்தமானார். அப்பாடி இப்பவாவது படம் போடணுன்னு தோணிச்சே என்றபடி இருந்த நான் போட்ட படத்தை பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். பார்த்தால், போனவாரம் சன்டிவியில் ஒளிபரப்பட்ட தெய்வவாக்கு படத்தை போட்டதும் கடுப்பாகி போனேன்.

ஓவர்டேக் செய்து போய்க்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தில் புதியபடம் ஓடுவதை நினைத்து எனக்கு வயித்தெரிச்சலாக இருந்தது. சரி நமக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்றபடி பயணத்தை தொடர்ந்தேன். சாத்தூர் அருகே ஹோட்டலுக்குள் பஸ் சென்றதும் நான் இறங்கவில்லை. எங்கப்பா ஜன்னத் ஹோட்டலில் வாங்கித்தந்த பிரியாணியை சாப்பிட்டேன்.

மதுரை வந்ததும் படமும் முடிந்தது; எல்லோரும் உறங்க ஆரம்பித்தார்கள். எனக்கு உறக்கம் வராமல் இருக்கமுடியவில்லை.

சிறிதுநேரம் உறங்கியும் சிறிதுநேரம் உறங்காமலும் என் பயணத்தை தொடர்ந்தேன். நான் முதல்தடவை சென்னைக்கு செல்வதால் இறங்கவேண்டிய இடம் தெரியாததால் கண்டக்டரிடம் சென்று இறங்கவேண்டிய இடத்தை சொன்னதும் கோபப்பட்டார். என்ன இவ்வளவுநேரம் தூங்கினாயா.. அந்த இடத்தை கடந்து நிறைய தூரம் வந்தாச்சி, சீக்கிரம் இறங்கு.. என்று எரிச்சலோடு இறக்கிவிட்டார். என்ன செய்ய.. சரின்னு இறங்கினேன்

இறங்கி விசாரித்ததில் நான் இருப்பது கிண்டிக்கு அருகில்.. ஆஹா ரொம்ப தூரம் வந்திட்டோமே.. தாம்பரத்திலிருந்து வேறு பஸ் ஏறி மாமாவின் நண்பருடைய மச்சான் வீட்டுக்கு செல்ல வேண்டும். அவர் அரசு வேளாண் மையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தாம்பரத்திலிருந்து பஸ் ஏறி அவருடைய ஊர் ஸ்டாப் எது என்று தெரியாததால் கண்டக்டரிடம் அந்த ஸ்டாப் வந்ததும் என்னை இறக்கிவிட்டுட்டுங்க என்று கேட்டிருந்தேன். அவரும் சரி என்றார். நான் ஊர் வந்திருச்சா வந்திருச்சா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால் அவர் இதாம்பா இறங்கிக்கோ என்று சொல்லி இறக்கிவிட்டுட்டார். இறங்கி விசாரித்ததும்தான் தெரிந்ததும் இரண்டு கிலோமீட்டருக்கு முன்னாடி இருந்த ஊரில் இற‌க்கி விட்டுட்டார்.

அடப்பாவி இப்படி பண்ணிட்டானே என்ற வருத்தத்தில் கால்வலிக்க நடந்தேன். பின்னர் உறவினரின் வீட்டின் வழி தேடி அவரது இல்லத்துக்கு சென்றேன். அவர்கள் என்னை நன்றாக உபசரித்ததார்கள். மறுநாள் காலையில் அவரே தேர்வு எழுதும் மையத்துக்கு அழைத்து சென்று விட்டுட்டு அவர் வேலைக்கு சென்றுவிட்டார். தேர்வு எழுதி முடிந்ததும் வீட்டுக்கு சென்று மதியம் சாப்பிட்டுவிட்டு நான் ஊருக்கு செல்கிறேன் என்று கிளம்பினேன்.

எப்பா.. இப்போ கிளம்பினால் எப்படி சரியாகும்.. இன்று இருந்துவிட்டு சுற்றிபார்த்துவிட்டு நாளைக்கு செல்லலாமே என்றார். இல்லசார். நா கிளம்புறேன். நான் நேரா திருநெல்வேலிக்கு செல்லலை. மதுரையில் உள்ள எங்கமாமி வீட்டுக்கு செல்கிறேன். அங்கு இப்போது கிளம்பினால்தான் இரவுக்குள் சென்றுவிடமுடியும் என்றதும் அவர் மகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைத்தார்.

ரொம்ப தூரமாக இருந்த பூக்கடை பஸ்ஸ்டாண்டுக்கு செல்லாமல் சோம்பேறியாக அதான் தாம்பரம் வழியாத்தான் எல்லா பஸ்ஸும் செல்லும், இங்கிருந்தே சென்றுவிடலாமே என்று தாம்பரத்தில் பஸ் ஏற காத்திருந்தேன்.

அங்கு நின்றிருந்த தனியார் சொகுசு பேருந்துகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நான் நிற்பதை பார்த்ததும் என்னிடம், நீ எங்கே போகணும் என்றதும் நான் மதுரைக்கு போகணும் என்றேன். உடனே அவர்கள் ஏறு..ஏறு.. மதுரைக்குதான் போறோம் என்றார்கள். அப்போது அந்த பஸ்ஸில் அப்போது வெளியான ஜீன்ஸ் படம்போட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் ஜீன்ஸ் படம்பார்க்கும் ஆவலில் அந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன்.

அந்த பஸ்பயணம் எனக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

எங்கமாமி அப்போதுதான் புதியவீட்டுக்கு குடித்தனம் சென்றிருந்தார்கள். நான் வரும்தகவல் அறிந்து என்னிடம் புதுவீட்டுக்கு வரும்வழியை சொல்லிருந்தார்கள். நான் ஏற்கனவே மதுரைக்கு அடிக்கடி சென்றிருந்ததால் எல்லா ஏரியாவும் தெரியும் அந்த நம்பிக்கையில் நான் வந்துடுவேன் என்று சொல்லிருந்தேன்.

இரவு 7மணி இருக்கும்.. பஸ் திருச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. சமயபுரம், மலைக்கோட்டை, தென்னூர் வழியாகசென்றதால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மதுரைக்கு பஸ் செல்வதானால் பைபாஸ் வழியாத்தானே போகணும் என்ற சந்தேகம் இருந்தது. ஒருவேளை ஆட்கள் ஏற்றிக்கொள்ள திருச்சிக்குள் செல்கிறதுபோல என்று நினைத்துகொண்டேன். பஸ்ஸிலிருந்து ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் பஸ்ஸின் உள்ளே உட்கார்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது கண்டக்டர் என்னை பார்த்து ஏய் தம்பி.. இறங்கு இறங்கு.. என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியானது. நா எதுக்கு இறங்கணும்., நா மதுரைக்குதான் செல்கிறேன்., இறங்கமாட்டேன் என்று கூறினேன். அதற்கு அவன் இந்தபஸ் திருச்சிவரைக்கும்தான் போகும் என்றுதும் எனக்கு வந்ததே கோபம். நீ எப்படி என்னை ஏமாத்தி பஸ்ல ஏத்தலாம். நீ திருச்சிவரைக்கும்தான் போகுமுன்னு முதல்லயே சொல்லிருக்கலாமே.. எனக்கு எவ்வளவு அலைச்சல். நான் திட்டமிட்டிருந்த‌ நேரத்தில் மதுரைக்கு சென்றிருப்பேனே.. சே.. என்ன மனுசன்நீ.. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே.. என்று அவனிடம் சண்டையிட்டேன்.

சரி சரி ரொம்ப பேசாதே.. இந்தாப்புடி மீதி ரூபா.. இந்தாருக்கு பஸ்ஸ்டாண்ட். பஸ்ஏறி மதுரைக்குப்போ.. அப்புறம் இவர் திருநெல்வேலிக்கு போகணுமாம். அவரை திருநெல்வேலிக்கு பஸ் ஏற்றிவிடு என்றதும் அவனுக்கும் எனக்கும் வாக்குவாதமானது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்துவைத்தார்கள். தம்பி எப்போதும் இவங்க இப்படித்தான் பண்ணுவாங்க. தனியார் பஸ்ஸை நம்பவே கூடாது. சென்னையிலிருந்து வரும்ஆட்களை எல்லாஊருக்கும்போகுமுன்னு சொல்லி ஏற்றி இங்கவந்து இறக்கிவிட்டுடுவாங்க. சரி நீங்க ஊருக்குபோங்க என்று அங்கிருந்தவர் என்னிடம் கூறினார்.

என்னுடன் பயணம் செய்தவரையும் கண்டக்டர் ஏமாத்திட்டான். அவர் சென்னையில் ஒரு கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு சொந்த ஊர் பெங்களூராம். வேலைவிசயமாக திருநெல்வேலிக்கு செல்கிறாராம். எனக்கு வழிதெரியாது; நீங்கதான் எனக்கு வழிகாட்டணும்; என்னை திருநெல்வேலி பஸ்ஸில் ஏற்றிவிடுங்க என்று கேட்டுக்கொண்டார்.

பஸ்ஸ்டாண்டில் மதுரைக்கு செல்லும் பஸ் அந்தநேரத்தில் இல்லை. திருநெல்வேலிக்கும் பஸ் எதுவும் இல்லை. என்னடா செய்றது என்று யோசித்தேன். ஒரே ஒரு பஸ் நாகர்கோவிலுக்கு விரைவு பேருந்து மட்டும் இருந்தது. அதில் டிக்கெட் கிடைக்குமா என்று விசாரித்தேன். என்கூட வந்தவருக்கு திருநெல்வேலி செல்லணுமென்று டிக்கெட் கேட்டேன். அப்படியே நான் மதுரைக்கு போகணும் எனக்கும் டிக்கெட் வேணும் என்று கேட்டேன். அதற்கு பஸ்பூத் அலுவலர்., டிக்கெட்ல்லாம் புல்லாகிருச்சே.. முடியாது., வேற பஸ்ஸுக்கு டிரை பண்ணுங்க‌ என்றார்.

சிறிதுநேரம் கழித்து பஸ்பூத் அலுவலர் யோசனை செய்து, சரிப்பா அவருக்கு ஒரு சீட் ஒதுக்கித்தாரேன் என்றார். நான் உடனே, அவர் என்சகோதரர். அவருக்கும் எனக்கும் டிக்கெட் வேணும்., நாங்க இரண்டுபேரும் ஒண்ணாத்தான் போவோம். தயவுசெய்து டிக்கெட் தாங்க‌ என்று கேட்டேன். பின்னர் ஒருவழியாக அவர் எனக்கும் டிக்கெட் தர சம்மதித்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இரவு 9 மணிக்கு பஸ் கிளம்பியது.

சிறிதுநேரம் கழித்து ஒரு சாப்பிடுவதுக்கு ஹோட்டலுக்குள் பஸ் சென்றதும் அங்கே இருவரும் சாப்பிட்டோம். ஒரு செட் தோசைக்கும் சின்ன கப்பில் சிக்கனுக்கும் ஒரு ஆளுக்கு 90 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். என்ன செய்வது?..

பஸ் மதுரையை நெருங்கியதும் கண்டக்டரிடம் என்னை கோரிப்பாளையம் தேவர் சிலை திருப்பத்தில் இறக்கிவிடுங்க என்று கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் முடியாது. உனக்காகத்தான் மதுரையில் பஸ்ஸை நிறுத்திறேன். அண்ணா பஸ்நிலையத்தில் இறங்கிக்கோ என்றதும் அவருக்கு நன்றிசொல்லிட்டு என்னுடன் பயணம் செய்தவரிடம் விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.

அண்ணா பஸ்நிலையத்திலிருந்து கோரிப்பாளையத்துக்கு சுமார் 4 கிலோமீட்டர் இருக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கிய நேரம் நள்ளிரவு 11.40 மணி இருக்கும். கோரிப்பாளையத்தில் மாமிவீடு இருக்கும் தெருவுக்கு நடந்துவர 30 நிமிடம் ஆனது. மணி 12.10 இருக்கும். தெருவே உறங்கிக்கொண்டிருந்தது. மாமி மாடியில் உள்ள வீட்டில் குடியிருப்பதாக சொன்னதால் எது என்று சரியாக தெரிவில்லை. திறந்திருந்த வீடுகளில் நான் மாமியின் பெயரும், மாமா பெயரையும் அவர் பணிபுரியும் விபரங்களையும் கூறி கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் இரண்டுநாட்களுக்கு முன்னாடிதான் இந்த பகுதிக்கு குடிவந்திருந்ததால் அவர்களை பற்றிய விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

மணிவேறு 12 தாண்டிருச்சி.. எப்படி கண்டுபிடிக்கப்போறோம்; என்ன நடக்கப்போகுதோ என்று மனது திக்திக் என்றது. வீட்டை கண்டுபிடிக்கும் வழி தெரியவில்லை. எப்படியாவது கண்டுபிடிச்சிரலாம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மாடியில் குடியிருக்கும் வீடுகளை தட்டி விபரங்கள் கேட்டேன்.

அப்போது ஒரு வீட்டில் சென்று கேட்டுக்கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் பேய்தான் கதவை தட்டுகிறது என்று நினைத்து ஒரு கட்டையை படிகளில் உருட்டிவிட்டனர். உடனே நான் பயந்துபோய் ஓடிவிட்டேன். பின்னர் ஒரு வீட்டில் கேட்கும்போது ஆமா அவர்களை எனக்கு தெரியுமே என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் சொன்னதும்தான் நிம்மதியானது.

அவர் மாமாவின் வீட்டைக்காண்பித்ததும் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவருக்கு நன்றி சொன்னேன். மாமா.. மாமி.. நா சேக் வந்திருக்கேன் என்றதும் அவர்கள் உடனே கதவை திறந்தார்கள்.

மறுநாள் காலையில் நான் நடந்தவற்றை சொன்னதும் மாமி பசங்க, "நல்லவேளை மச்சான் அந்த வீட்டுக்காரய்ங்க உங்கள கட்டையால அடிக்காம விட்டாங்களே" என்று சொல்லி எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம்.


***************



இந்த இடுகையை குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கும் விகடன் குழுவினருக்கும் என் நன்றிகள்.

,

Post Comment

ப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி 2

முதல் பாகம் படித்துவிட்டு தொடருங்கள்.

குப்பன்னாபுரம் பண்ணையார் பங்களா.. ஒரு பெரிய கூட்டம் கூடிருந்தது. பண்ணையார் புளிமூட்டை புண்ணியக்கோடி பங்களாவின் பால்கனியிலிருந்து கணக்காப்பிள்ளை முத்து கீழே எட்டிப்பார்த்தான்.. “ஏயப்பா.. எம்பூட்டு தலைங்க.. அய்யா அய்யா எல்லாரும் வந்துப்புட்டாங்க.. நீங்க வாங்க” என்று பண்ணையாரை முத்து அழைத்தான்.

பண்ணையார் வந்து தலைகாட்டியதும் அங்கு ஏற்பட்ட பெரும் கூச்சல் டவுனுக்கே கேட்டுருக்கும். அம்பூட்டு சத்தம்.

“அய்யா எல்லாத்தையும் வரிசையில நிக்கவச்சிருக்கேன்.. பட்டணத்துலருந்து வந்தவுகள அந்த அறையில தங்கவச்சிருக்கேன்.. நீங்க வந்து என்னன்னு விசாரிச்சிங்கன்னா மேக்கொண்டு ஆகிறத பாத்துப்புடலாம்” என்று முத்து அழைத்தான்.

"வாங்க வாங்க எல்லோரும் வாங்க வாத்தியாருங்களா.. சாப்பிட்டீங்களா.. எதுவும் குறவிருந்த சொல்லுங்க.. நம்ம ஊரு பயலுகளுக்கு கம்பூட்டருன்னு இருக்காம்ல.. அத சொல்லிக்கொடுக்கலாம்ன்னு இருக்கேன். நீங்க அவனுவளுக்கு நல்லா சொல்லிக்கொடுங்க.. அப்புறம் நமக்கொரு ஆசங்க.. அது உலகம்பூராவும் பேமஸ்ஸாகனும்ன்னு.. அதுக்கு நம்ம கணக்காப்பிள்ளை முத்து சொன்னானுங்க.. ஏதோ ப்ளாக்ன்னு இருக்காம்ல.. அதுல எழுதுனா பேமஸ்ஸாகிரலாமுல்ல., அதான் உங்கமூலமா நம்ம காட்டுமேட்டுல திரிஞ்ச நம்ம பயலுகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கலாம்ன்னு உங்கள அழைச்சிருக்கேன்.. நீங்களும் அவனுவளுக்கு சொல்லிக்கொடுத்து எழுத வச்சீங்கன்னா உங்களுக்கு ரொம்ப கடமபட்டவனா இருப்பேனுங்க..." என்று பண்ணையார் பட்டணத்துலருந்து வந்த ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அதற்கு அவர்கள் எல்லாம் நல்ல யோசனைதான் அய்யா.. நீங்க அவர்களுக்கு வேண்டியதையும், எங்களுக்கு தேவையானதையும் செய்து கொடுத்திருங்க.. பேஸ்ஸா பண்ணிடலாம். அதுக்கு முன்னாடி அவர்கள் ஏதாவது நாலெழுத்து படிச்சவங்களா இருக்கணும். ஏன்னா நாங்க சொல்லிக்கொடுக்கிறத ஓரளவாவது புரிஞ்சிக்கணுமில்லையா. அதுக்கு தான் ஒரு எட்டாம்கிளாஸ் வரைக்குமாவது படிச்சிருந்தா நல்லாருக்கும்ன்னு நினைக்கிறோம் என்று ஆசிரியர்களில் ஒருவர் பண்ணையாரிடம் சொன்னார்.

எனக்கு ஒரு எலவும் தெரியாதுங்க.. உங்களுக்கு என்னன்ன தேவைப்படுதுங்களோ அத கூச்சப்படாம கேளுங்க வாத்தியாரே.. அவனுவள்ல யாரு யாரு சரியா வர்றானுகளோ அவனுவளுக்கு சொல்லிக்கொடுங்க.. அப்புறம் மேக்கொண்டு ஆவுறத பாக்கலாமுங்க என்று பண்ணையார் சொன்னார்.

உடனே ஆசிரியர்கள் வந்திருந்த அத்தனை பேர்களிடமும் விசாரித்து மூன்று பேரை தேர்வு செய்தார்கள். அய்யா ஒரு மூணு பேர தேர்ந்தெடுத்திருக்கோம் என்று ஆசிரியர் சொன்னார்.

அதற்கு பண்ணையார் சரிங்க அப்ப அந்த மூணுபேருக்கு சொல்லிக்கொடுங்க.. மத்த பசங்களும் பண்ணையார் வேலைத்தருவாருன்னு என்னை நம்பி வந்திட்டானுங்க.. நா அரசாங்கத்துல சொல்லி அவனுவளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டி இலவசமா படிக்கவைக்கலாமுன்னு இருக்கேன். அதுப்போக நல்லா படிக்கிற பயலுகளுக்கு வேலையும் கொடுக்கலாமுன்னு இருக்கேன் என்ன நா சொல்றது சரிதானுங்களே!! என்ற பண்ணையாரை அவர்கள் இந்த காலத்துலயும் இப்படி ஒரு மனிதரா என்று வியந்தார்கள்.

************

தேர்வு செய்யப்பட்ட அந்த மூன்றுபேரையும் கூப்பிட்டு உங்க பேரென்னல்ல., எந்த ஊருன்னு சொல்லுல என்று கேட்டார். அய்யா கும்புடுறேனுங்க.. என்பேரு மாரிமுத்துங்க ஊரு கோடகநல்லூருங்க.. அய்யா என்பேரு கண்ணாயிரமுங்க; ஊரு தெக்குபட்டிங்க.. அய்யா என்பேரு கருப்பையாங்க ; ஊரு அலிய்யாண்டியபுரமுங்க (அழகியபாண்டியபுரம்).

அட அப்படியால்ல.. நல்லா படிக்கணுமுல்ல என்ன.. வாத்தியாருங்க சொல்லிக்கொடுக்கிறத கவனமா கேட்டு படிச்சி பெரியாளா வரணும் என்ன.. சரியாலே.. என்று சொல்லி பண்ணையார் தோட்டத்துக்கு கணக்காப்பிள்ளை முத்துவுடன் சென்றார்.

*********

ஆசிரியர்கள் அந்த மூன்றுபேருக்கும் கம்பியூட்டர் படிப்பு நன்றாக சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர். ஆசிரியர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுதான் கிராமத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். இதை கற்றுக்கொடுக்க ஒரு ஆறு ஏழு மாதமானது. பண்ணையாருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நம்ம கனவு பலிக்கப்போவதை எண்ணி பேரூவகை அடைந்தார்.

ஒரு நல்லநாளா பார்த்து பண்ணையார் பளாக் ஆரம்பித்தார். ப்ளாக் பெயர் புளிமூட்டை. புரோபைல் பெயர் புண்ணியகோடி என்று ஆரம்பித்தாயிற்று.

முதல் இடுகை : அறிமுகம்

அய்யா எல்லோருக்கும் வணக்கமுங்க., நான் நெல்லை ஜில்லாவுல இருக்கிற கோனூர் ஊராட்சி ஒன்றிய தலைவரா இருக்கேனுங்க.. இப்போதான் எழுத ஆரம்பிச்சிருக்கேனுங்க.. அல்லாரும் என்னோட வலைப்பூக்கு வந்து ஆதரவு கொடுக்கமுன்னு உங்களயெல்லாம் அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உங்கள் புளிமூட்டை புண்ணியக்கோடி.

கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் தம் கடமைமுடிந்துவிட்டதென தத்தம் ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

இதனைப்படித்த எல்லோரும் அட இதுயாரு புதுசா இருக்கு என்று தினமும் வருகைத்தர வருகைத்தர ஹிட்ஸ் கூடிக்கொண்டே இருந்தது. பண்ணையாருக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. பண்ணையாரும் தினமும் ஒரு இடுகை அந்த பயலுகளைவைத்து எழுதி ஹிட்ஸ் வாங்கிக்கொண்டிருந்தார். அவனுவளும் சளைக்காமல் எழுதித் தள்ளினர்.

நாளாகநாளாக பண்ணையாரின் அலும்பல் தாங்கமுடியவில்லை. அவருடைய எல்லா இடுகைகளும் பெரிய அளவில் பேசப்பட்டன. எப்பப்பார்த்தாலும் பண்ணையாருக்கு ப்ளாக் பற்றிய சிந்தனைகள்தான் ஓடிக்கொண்டிருந்தது. கணக்குவரவு செலவெல்லாம் மறந்துபோனது. தூக்கத்திலிருந்து எழுந்து இன்னைக்கி எத்தனபேர் வந்திருக்காங்க.., எத்தனபேரு கருத்து சொல்லிருக்காங்க‌.. எத்தனபேர் பாலோயரா ஆகிருக்காங்க என்று கணக்குபண்ண ஆரம்பித்தார். மனைவி, மக்கள், குடும்பம், சொந்தக்காரர் எல்லோருக்கும் பண்ணையார் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. மிகவும் வருந்தினர். எப்படி இவரை திருத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.

********

இப்படியே சிலமாதங்கள் ஓடின. அவரது பக்கத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளாகநாளாக குறைந்துகொண்டே இருந்தது. பண்ணையாருக்கு ரொம்ப கவலையாக இருந்தது. எப்பப்பார்த்தாலும் வலையில் இருப்பது, எழுதிக்கொடுக்கும் பயலுகளுக்கு அலுப்புத்தட்டியது. தினமும் புதுசுபுதுசா யோசிக்கிறது நல்லாருந்தாலும் நாளாகநாளாக ஆர்வம் குறைந்துகொண்டே போனது.

ஒருநாள் அந்த பசங்க மூன்றுபேரும் பண்ணையாரிடம் சென்று, "அய்யா!.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. எங்கோ காட்டுமேட்டுல சுத்திட்டிருந்த எங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்து கம்பூட்டர் கத்துக்கொடுத்து எங்களை அறிவுப்பாதையில் அழைத்து சென்றீர்கள். தினமும் புதியபுதிய விசயங்களை தேடிச்சென்றதால் எங்களுக்கு அறிவு வளம் பெற்றது. இதுக்கு உங்களுக்கு எம்பூட்டு நன்றி சொன்னாலும் ஈடுஇணையாகாது. நீங்க என்றென்றும் நல்லாருக்கணும்.. ஆனால் இந்த ப்ளாக் தொடர்ந்து எங்களால் எழுத முடியவில்லை. நாங்க போயிட்டுவாரோம்" என்று அவருடைய பதிலை என்னன்னு கேக்காம ஒரே ஓட்டமாக ஓடிட்டாங்க.

"அடப்பாவிப்பயலுகளா.. என்ன இப்படி நட்டாத்துல உட்டுட்டு போயிட்டீங்களேல்ல.. போங்கடா போக்கத்த பயலுகளா.. நானே எழுதுவேம்ல.. என்ன எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா.." என்று திட்டியவண்ணம் அவருக்கு தோணியதை எழுதினார்.

மறுநாள் அவருடைய வலைப்பக்கத்தை திறந்து பார்த்தால் எல்லோரும் கும்மியடித்து, "மவனே!! இனிமே பதிவுன்னு எழுத ஆரம்பிச்சே அப்பறம் நடக்கிறதேவேற" என்று திட்டிதீர்த்திருந்தார்கள்.

"அப்படி நான் என்ன எழுதிட்டேன்னு இந்தவாங்கு வாங்குறானுவ.. வேணான்டா சாமி.. இந்த பதிவுலகமே வேணான்டா அப்பா.. பேரும்வேணாம் புகழும்வேணாம்.. இருக்கிற பேரே போதும்டா சாமி.." என்று தலையில் கைவைத்து உக்கார்ந்தவர்தான் இன்னக்கிவரைக்கும் பதிவு பக்கமே எட்டிப்பார்க்கலை.


***************

அன்புள்ள நண்பர்களே!! இந்த கதையின் நீளம் கருதி இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளேன்.

,

Post Comment

Wednesday, July 7, 2010

ப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி

“டும்..டும்டும்... டுன்டும் டும்..” என்று சத்தம் கேட்டவுடன் கோடகநல்லூர் சனமெல்லாம் என்னஏதோன்னு டீக்கடை பெஞ்சில் வெட்டிப்பேச்சி பேசிக்கிட்டிருந்த பெருசிலேருந்து சிறிசுவரைக்கும் கொட்டுஅடிப்பவனை சுற்றி கூடிட்டாங்க. சின்னசிறிசுகளுக்கு கொட்டுஅடிப்பவனை கண்டதும் சந்தோசம் தாங்கவில்லை. ஏய்ய்..ஹெஹெ.. ஏய் என்று ஒரேசத்தம். அடுப்படியில மண் அடுப்புல ஈரவிறகையும் எரியவைத்து சோறாக்கிக்கிட்டிருந்த பொம்பளைங்களும் அப்படி அப்படியே போட்டு ஆலமரத்தடிக்கு வந்துட்டாங்க..

“ஏலேய் அய்யா..என்ன சேதி கொண்டுவந்திருக்கலே..” என்று ஒரு பெருசின் குரல் டும்டும்..டுன்டும்..டும் என்ற சத்தத்தில் காணாமல் போனது. “இதனால சுத்துப்பட்டி சாதிசனத்துக்கு தெரிவிக்கிறது என்னன்னா.. நம்ம கோனூர் பண்ணையார் புளிமூட்டை புண்ணியகோடி வேலைக்கி ஆளெடுக்கிறவ.. இங்க காடுமேட்டெல்லாம் சுத்தி அப்பன் ஆத்தாட்ட திட்டுவாங்கிக்கிட்டு இருக்கிற பயலுக.. வயசுபுள்ளைங்கள சுத்திசுத்தி வந்து வாங்கிகட்டிகிட்டு இருக்கிற பயலுகளும் அங்க வந்துசேருங்கல.. அப்பன் ஆத்தாக்களே!!.. அடம்புடிக்கிற பயலுகளை பொடதியில தட்டி அனுப்பிவைங்க ஆத்தாமார்களே.. அவங்கனுக பொஞ்சாதிகளே.. அனுப்பி வைங்கோ.. குப்பன்னாபுரத்து பண்ணையாரோட பங்களாவுக்கு வந்திருங்க சாமியோவ்..டும் டும்.. டும்டும்..”

“எலேய் நல்லசெய்தி சொல்லிருக்கலே.. காடுமேடெல்லாம் திரிஞ்சிகிட்டு இருக்கிற பயலுக புத்திவந்து பொழைக்க நல்ல விசயமுல்ல.. அப்படி என்னவேலைல்ல நம்ம அய்யா கொடுக்கிறாவ..” என்று மணியக்காரர் கேட்க..
“அய்யா.. நல்லா கேட்டுக்கோங்க.. பண்ணையார் கம்பூட்டர்ன்னு எதோ இருக்காம்ல.. அத சொல்லிக்கொடுத்து வேலையும் கொடுக்கிறதா சொல்லிருக்காவ...டும்டும்.. நா இன்னும் நாலுஊருக்கு போவனும் வர்றேன் சாமியோ..” என்று சொல்லிக்கொண்டே போனான்.

************

கோனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கடந்த 10 வருசமா தலைவரா இருக்கிற பண்ணையார் புளிமூட்டை புண்ணியக்கோடிக்கு சொத்துபத்துன்னு தோட்டம்துரவுன்னு ஏகப்பட்டது நிறைய கணக்குவழக்கில்லாம இருக்கு. அவருக்கு ஒரு ஆசை மனசுக்குள்ள இருந்துகிட்டு அரிச்சிக்கிட்டு இருக்கு.. பேரன்பேத்தி எடுத்த பொறவும் அவரோட ஆசை மாறவேஇல்லை. நாமளும் இந்த உலகத்துல பேமஸ்ஸாகனும்கிற ஆசை அவர் யோசித்து யோசித்து இருக்கிற மண்டமசிரெல்லாம் காணாம போயிருச்சி..

“அய்யா என்ன இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீக..பாருங்க தலையில ஒரு மசிரையும் காணல..” என்றான் அவரிடம் வேலைபார்க்கும் கணக்காப்பிள்ளை முத்து. “எலேய்.. என்ன எகத்தாளமா போடுற.. இருஇரு உன்ன அப்புறமா கவனிக்கிறேன்..” என்றார் பண்ணையார். “அய்யா.. கோவிக்கிறாதீக.. நா உண்மையத்தான் சொன்னேன். இந்த சுத்துப்பட்டியில உங்கள அடிக்கிறதுக்கு ஆளே இல்லைன்னு பேசிக்கிறாக.. நீங்க பெருசா கவலப்பட்டுக்கிட்டு இருக்கீக” என்றான் முத்து. “எல.. இந்த சுத்துப்பட்டிக்கெல்லாம் என்னைய தெரியலாம். ஆனா உலகம்பூராவும் என்பேரு தெரிஞ்சி நா பேமஸ்ஸாகனும்.. அதுக்கு எதாவது வழியிருந்தா சொல்லுலே..” என்றார் புண்ணியக்கோடி.

“அட இதான் விசயமுங்களா.. நானும் என்னவோஏதோன்னு பதறில்ல போயிட்டேன். நல்லா சொன்னீக அய்யா.. இப்போ பதிவுலகம்னு ஒண்ணு இருக்கு.. அங்க நீங்க ப்ளாக் ஆரம்பிச்சி எழுத ஆரம்பிச்சிகன்னா போதும். ஹிட்டு தானா ஆயிரும். நீங்களும் உலகம்பூராவும் பேமஸ்ஸாகிருவீங்க பாருங்க” என்றான் முத்து. “அட அப்படியால்ல முத்து.. நல்லவாக்கு சொன்னேல.. ஆமா அதன்ன பிளேக்கு பிளேக் நோயால்ல அது..” என்ற பண்ணையாருக்கு “அய்யா என்னஇது ரொம்ப வெள்ளந்தியா இருக்கீக.. அதுபேரு பிளேக் இல்ல ப்ளாக். அதுல தினமும் பதிவபோட்டீங்கன்னா போதும்.. ஒருநா கத கட்டுர, கவித, சமையல்குறிப்புகள், அழகுகுறிப்புகள், சமுதாயத்துல நடக்கிற பிரச்சனைகள், அரசியல் சம்பவங்கள், நக்கலா நகைச்சுவை இப்படின்னு எழுத ஆரம்பிச்சீங்கன்னா நீங்க உலகாளவுல பேமஸ்ஸாகிருவீக.. என்ன அய்யா நா
சொல்றது விளங்கிச்சா..” என்று அவன் சொல்லசொல்ல ஆன்னு வாய்மூடாம பண்ணையார் கேட்டுக்கொண்டிருந்தார்.

“எலே இதுல எதுவும் எகத்தாளமில்லையே..ஆமா நா கைநாட்டாச்சே எப்படில்ல நீ சொன்னமாதிரியெல்லாம் எழுவுறது.. ஒண்ணும் புரியலியே..” என்றார் அப்பாவியாக. “அய்யா ஒண்ணும் கவலப்படாதீக.. நீங்க எழுதவேணா., ஆளவச்சி எழுத வச்சிட்டாப்போச்சி.. பட்டணத்துலருந்து நாலெழுத்து படிச்ச கம்பூட்டர் தெரிஞ்ச ஆளுகளவச்சி எழுதிட்டீங்கன்னா போதும். அவுக எழுதிருவாக.. என்ன சரியா” என்றான் முத்து. “எலேய்.. படிச்ச ஆளுகலெல்லாம் வேணாமுல்ல.. நம்ம சுத்துப்பட்டில உள்ள பயலுவல கூட்டியாந்து எழுத வச்சா.,நம்ம சுத்துப்பட்டி சனங்கல்லாம் என்னைய பெருசா பேசுவாங்க.. அப்படியே அவங்களுக்கும் வேலை கொடுத்தமாதிரியும் இருக்கும் பேரும் கிடைச்சமாதிரியும் இருக்குமுல்ல என்ன நா சொல்றது” என்றார் பண்ணையார்.

“அய்யா நீங்க சொல்றது வாஸ்தவந்தான். ஆனா நம்ம பயலுவ நாலெழுத்து படிச்சவங்களா.. எல்லாம் உங்களமாதிரி கைநாட்டு பயலுவ.. அவனுவளப்போயி எழுத சொல்றீங்களே இதெல்லாம் சரியாவராதய்யா.. அவனுவளுக்கு கம்பூட்டர பத்தி ஒரு எலவும் தெரியாதே.. எப்படி எழுதுவானுக.. நல்லா நாலுக்குமூணு தடவ யோசிச்சிக்கிருங்க” என்றான் முத்து.

“சரியா வரும்லே.. நம்ம பயலுக காட்டுலேயும் மேட்டுலேயும் திரியிறானுக.. அவனுகள படிக்கவச்சா அவனுகளுக்கும் பொரோசனமாஇருக்கும்; நமக்கும் பொரோசனமா இருக்கும்ல... என்ன ஆனாலும் சரி அவனுக படிக்கவச்சி அதன்ன சொன்னே பிளேக்கோ ப்ளாக்கோ அத எழுத வைக்கப்போறோன்ல..சரியா..” என்றார். “சரி அய்யா.. உங்க இஷ்டம்போல செய்யுங்க.. ஆமா பயலுவலுக்கு கம்பூட்டர் சொல்லிக்கொடுக்கணுமே அதுக்கு..” என்று முத்து சொல்லிமுடிக்குமுன் பண்ணையார் “எலேய் பட்டணத்துலருந்து நாலெழுத்து படிச்ச கம்பூட்டரு சொல்லிக்கொடுக்குற‌ ஆளுகள கூட்டியாந்துரு.. சுத்துப்பட்டிக்கெல்லாம் தண்டோரா போட்டு சொல்ல சொல்லிருலே.. என்ன நா சொல்ரது காதுல விழுதா” என்று சொன்னபடி செழியநல்லூருக்கு பஞ்சாயத்து பண்ண கிளம்பினார். ஹூம் ஹூம் இதெல்லாம் எங்கப்போயி முடியப்போவுதோ என்றபடி முத்து சென்றான்.

*********

எல்லா ஊர்லருந்தும் பயலுக பண்ணையார் கொடுக்கிற வேலைக்கு ஆர்வத்துடன் கிளம்பினாங்க. சுத்துப்பட்டி பதினெட்டுபட்டி சனமெல்லாம் வாய்நிறைய பண்ணையார் நல்லாருக்கன்னு வாழ்த்தினாங்க..

அப்பன்பாட்டன் சொத்தை உக்கார்ந்து தின்னு கரைச்சி., ஏழபாழைங்க வயித்துல அடிச்சி சொத்த அபகரிச்சி., எப்பப்பார்த்தாலும் வெட்டுகுத்து, வெட்டிபேச்சி, சினிமா கூத்துன்னு பண்ணையாருங்க திரிஞ்ச காலமெல்லாம் போயி மக்களுக்கு நல்லது செய்யனுன்னு நினைக்கிற நம்ம பண்ணையார மாதிரி ஊர்உலகத்துல இப்பூடி ஒரு மனுசாளு இருந்தா நாங்கெல்லாம் முன்னேறி நாடும் முன்னேறிருமே என்று வாயிலிருந்து மட்டுமல்லாமல் மனதார உள்ளக்கிடப்பிலிருந்து வரும் இவர்களின் வார்த்தைகளுக்கு அபார சக்தி உண்டு.

“பண்ணையார் வேலைக்கு ஆளெடுத்தாலும் எடுத்தாரு.. இந்த பயலுக காட்டுற அலம்பலுக்கு மட்டும் குறச்சலில்லே.. எலேய்.. என்ன தெனவெடுத்துப்போயி அலையாதீகலே.. என்னமோ திருநெல்வேலி ஜில்லா கலக்கிடரு வேலைக்கி போறமாதிரிதான்.. போலே..போ கீழ மண்ணப்பாத்துபோலே.. என்னமோ ஆகாசத்துல பறக்குறமாதிரிதான்” என்று பெருசுகள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். “ஏய் பெருசுகளா.. ஆமா நாங்கஅப்படித்தான்.. இப்ப என்னா செய்யனுங்கிறீக.. பொறாமைபிடிச்சவங்க” என்று பயலுக சிலிப்பிக்கொண்டு திரிந்தாங்க..


தொடரும்...

**********

Post Comment

தங்க ராஜா - தொடர் இடுகை

ஸாதிகா அக்கா என்னை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றிகள்.


ஒரு பெரிய தங்க கடையில் உள்ளே நுழைந்து வேண்டிய மட்டும் ஃப்ரீயாக அள்ளிக்கொளுங்கள் எனும் பொழுது வரும் ஸ்டார்ஜனின் அனுபவம்..


* முதலில் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

* இப்போது தங்கம் விற்கும் விலையில் ஒரு பெரிய தங்கநகை கடையில் எல்லாம் ப்ரீயா கிடைக்குதுன்னா கேட்கவா வேணும். ஆனந்தம் ஆனந்தம்.

* தங்கநகைக் கடையில் ப்ரீயாக என்றால் நான் அந்த நகையில் உள்ள எல்லாவற்றையும் நானே எடுத்துக் கொள்வேன்.

* நான் கடையில் உள்ள எல்லாத்தையும் எடுத்தப்பிறகு கடைக்காரரிடமிருந்து கடையை வாங்கிக் கொள்வேன்.

* என்மனைவி, எங்கம்மா, என்தங்கைக்கு வேண்டியதை மட்டும் கொடுப்பேன்.

* கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஏழைஎளியவங்களுக்கும் விலையை குறைத்து கொடுப்பேன். செய்கூலி, சேதாரத்தில் நியாயமாக உள்ள ப்ரசன்டேஜ் மட்டும் அவர்களிடம் வாங்குவேன்.

* எல்லோரும் தங்கம் வாங்கவேண்டும்; கனவு நனவாகவேண்டும். விலையை குறைக்க தங்க நகைக்கடை உரிமையாளர் கூட்டத்தில் வலியுறுத்துவேன்.

* நகைக்கடையில் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு செல்லும் இளம்பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டேன். கஷ்டப்படும் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

* அந்த பெண்கள் படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும். ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர்கள் படிக்க வழிசெய்வேன்.

* வலைஉலக நட்புகளுக்கு செய்கூலி,சேதாரம் இல்லாமல் விற்பனை செய்வேன்.

* கலப்படமில்லாத சுத்தமான தங்க நகைகளைதான் விற்பனை செய்வேன். அநியாயவிலைக்கு நகைகளை விற்கமாட்டேன்.

* இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.


**************



இந்த இடுகையை குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கும் விகடன் குழுவினருக்கும் என் நன்றிகள்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்