Pages

Wednesday, December 29, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

மன்மதன் அம்பு

இந்த பெயரே வித்யாசமா இருக்கே.. அதுவும் நம்ம உலக நாயகன் இந்த படத்துல நடித்திருக்கிறார் என்றால் வித்யாசம் இல்லாமல் இருக்காது.
ரொம்ப எதிர்பார்ப்புக்குள்ள படம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு விமர்சனம் எழுதியது. அதுக்கப்பறம் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவோமே என்று தோன்றியது.

நிஷா என்ற அம்புஜம் (திரிஷா) பிரபல சினிமா நடிகை, மதனகோபால் (மாதவன்) தொழிலதிபர் இருவரும் காதலிக்கின்றனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் திரிஷாவை சந்தேகப்படுகிறார் மாதவன். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுகின்றனர். இதனால் மனக்கசப்படைந்த திரிஷா பிரான்ஸில் இருக்கும் தனது பள்ளித்தோழி சங்கீதா வீட்டுக்கு செல்கிறார்.


மேஜர் ஆர். மன்னார் (கமலஹாசன்) தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவரின் நண்பர் ரமேஷ் அரவிந்த், ஆஸ்பத்திரியில் உயிருக்காக போராடிவருவதால் மருத்துவசெலவுக்காக பணம் தேவைப்படுவதால் கம‌லும் பிரான்ஸ் செல்கிறார். திரிஷா வேறுயாருடனாவது நெருங்கி பழகுகிறாரா என்பதை வேவு பார்க்க கமலஹாசன் மாதவனால் அனுப்பி வைக்கப்படுகிறார். ப்ரான்ஸில் த்ரிஷாவை பிந்தொடர்ந்து அவரைபற்றிய தகவல்களை அவ்வப்போது கமலஹாசன் மாதவனுக்கு அனுப்பி வைக்கிறார்.

சங்கீதாவுடனும் அவரின் 2 குழந்தைகளுடனும் சந்தோசமாக ஜாலியாக இருக்கும் திரிஷா தன்காதலனை மறக்காமல் இருக்கிறார். இதனால் பணம்தர மறுக்கும் மாதவனிடம் கமலஹாசன் த்ரிஷாவை பற்றி அவதூறு தகவல்களை தருகிறார். திரிஷாவுடன் நெருங்கி பழகும் கமல் தன் குடும்பத்தை பற்றி குறிப்பிடும்போது, தன் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறுகிறார். கமல் கூறும் சூழ்நிலைகளை அறிந்த திரிஷா அந்த விபத்துக்கு தான்தான் காரணம் என்று அறிந்து வேதனைப்படுகிறார். மாதவனின் டார்ச்சரால் வெறுப்படைந்திருக்கும் திரிஷாவுக்கு கமலுடன் ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது.

இருவரும் இணைந்தார்களா..., மாதவன் - திரிஷா காதல் என்ன ஆனது?.. முடிவு என்ன?.. என்பதை படம் பாக்காதவங்க படம்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசனுடன் இணைந்து திரிஷா, மாதவன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இசை: தேவிஸ்ரீ பிரசாத். கதை திரைக்கதை வசனம்: கமலஹாசன். இயக்கம்: கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்.

மன்மதன் அம்பு படம் இன்னொரு பஞ்சதந்திரம் போலவோ அல்லது தெனாலி போலவோ இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் வெளியானது.

நல்ல கலகலப்புடன் கமலஹாசனுக்கே உரிய பாணியில் காமெடி செய்து படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறார். தன் நண்பனின் மருத்துவத்துக்காக வேவுபார்க்க செல்லும் கமல் வேவுபார்க்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு. வசன‌ங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. கதையும் நல்ல கதை.


பணம் தரமறுக்கும் மாதவனுடன் கெஞ்சும் காட்சிகளும், தன் குடும்பத்தை குறிப்பிடும் ப்ளாஸ்பேக் காட்சிகளிலும் கமல் மின்னுகிறார். தெனாலி படத்தில் இயல்பான நடிப்பில் கலக்கிய கமல் இந்த படத்திலும் அதே கெட்டப்பில் அசத்துகிறார். திரிஷா, சங்கீதா குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் காட்சிகளில் கமல்ஹாசனின் காமெடி களைகட்டுகிறது.

ஒரே ஒரு பாடல்காட்சியில் வந்தாலும் அசத்தலான நடனத்தினாலும் துறுதுறுவென நடிக்கும் சூர்யா நம்மை கவருகிறார்.

திரிஷா தன் காதலன் மாதவனை மறக்கமுடியாமலும் சந்தேகப்படும் காதலனை சமாளிக்கும் இடங்களிலும் தன் நடிப்பால் கவ‌ர்கிறார். தன்னை பிந்தொடர்ந்து வருபவர் கமல்தான் என்று தெரியாமல் படத்தயாரிப்பாளாராக வருபவர்தான் என்று தெரிந்து மொத்தி எடுப்பது நல்ல காமெடி. திரிஷா சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பது நல்லாத்தான் இருக்குது.

மாதவன் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு பொருந்தி முகத்தில் பலவித எக்ஸ்பிரசன்ஸ். எப்போதும் தண்ணியிலே இருக்கும் மாதவன் கலக்கியிருக்கிறார். தன் நண்பருக்காக பணம்கேட்கும் கமலிடம், அதான் கொடுத்த வேலையில் ஒண்ணுமே கண்டுபிடிக்கலியே.. பணம் எதுக்கு கொடுக்கணும்.. நீங்க உடனே ஊருக்கு வந்திருங்க என்று சொல்லும் இடங்களிலும் கமல் கூறும் பொய்யை உண்மையென நம்பி திரிஷாவை சந்தேகப்பட்டு டெர்ராகும் இடங்களிலும் நல்ல நடிப்பு.

பணம் கேட்கும் காட்சியில் மாதவனும் கமலும் நல்ல நடிப்பு. இதுமாதிரி தான், வீடு பார்க்கும் புரோக்கர்கள் கஷ்டப்பட்டு வீடுபார்த்து கொடுக்கும்போது வீட்டு உரிமையாளரும் வீட்டை வாங்குபவரும் சேர்ந்து பேசிவைத்துக் கொண்டு புரோக்கரை வெட்டிவிடும் காட்சி என் மனதில் ஓடியது. விசு இயக்கத்தில் வந்த குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் எஸ்வி சேகர் நடித்த காட்சி. அதேமாதிரி இயல்பான ‌தவிப்பு கமலின் முகத்தில் தெரிந்தது.

நீலவானம் பாடல் ஒரு புதிய முயற்சி. கமல் தனது ப்ளாஷ்பேக்கை பின்னாலிருந்து சொல்வது போன்று எடுக்கப்பட்ட காட்சி தமிழ்சினிமாவுக்கு புதுசு.

ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, சங்கீதா, மாதவன் அம்மாவாக வரும் பிண்ணனி பாடகி உஷாஉதூப், ஸ்ரீமன், படத்தயாரிப்பாளராக வருபவர் என்று பலர் நடித்திருந்தாலும் சங்கீதா பரவாயில்லை. மாதவனின் மாமாமகளாக வரும் களவாணி ஓவியா ஒரே ஒரு காட்சியில் தலைக்காட்டுகிறார்.

இசை தேவிஸ்ரீ பிரசாத் நீலவானம் என்ற பாடலில் மட்டுமே ஜொலிக்கிறார். பாடல்கள் சுமார்ரகம்தான்.

இயக்கம் கேஎஸ் ரவிக்குமார். கதை, திரைக்கதை, வசனம் என்ற பொறுப்புகளை கமலே எடுத்துக்கொண்டதால் கேஎஸ்ஆர் தனித்து விடப்பட்டுள்ளார். நல்ல கதையிருந்தும் சொதப்பலான திரைக்கதையினால் படம் அந்தளவுக்கு பேசப்படவில்லை. திரைக்கதையை கேஎஸ்ஆர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லையென்றால் கமல் திரைக்கதை வசனத்தை நம்ம கிரேஸிமோகனிடம் கொடுத்திருந்தால் படத்தை கலகலக்க செய்திருப்பார். குறிப்பிட்ட சில காட்சிகளை தவிர்த்து படம் ஒட்டவில்லை. இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கவேண்டிய கதை. எல்லாம் மிஸ்ஸிங்.

படம் ஆரம்பித்து சுமாராக செல்லும் கதையில் கமல் வந்ததும் விறுவிறுப்பாக செல்வது போல இருந்தாலும் இடைவேளைக்கு பின்னர் படம் ஆமைவேகத்தில் செல்கிறது. அதுவும் கடைசி அரைமணி நேரம் எப்படா படம் முடியும் என்று தோன்றவைக்கிறது.

இப்படியொரு கிளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்கலை.. மாதவனையும் சங்கீதாவையும் சேர்த்துவைப்பது கொடுமையிலும் கொடுமை. முதலிலே தெரிந்துவிடுகிறது கமலும் திரிஷாவும் ஜோடி என்று.

இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம்.

மன்மதன் அம்பு - கூர் மழுங்கியது

,

Post Comment

Thursday, December 23, 2010

கானல் நிலா..!


கானல் நிலா..!

பனிவிழும் இரவுதனில்
நீயும் அருகினில் என்னவளும்
கையிலேந்தி உன்னை ரசிக்கும்போது
அவள் மெல்லமெல்ல நாணுகிறாள்.
உன்னழகை ரசிக்கவா..!
அவளழகை ரசிக்கவா..!
போராட்டத்தில் அவளை
ஜெயிக்க வைத்தது
அவள் தந்த முத்தமன்றோ..!

மெல்ல அவள் துள்ளிதுள்ளி
ஓடும் அழகை ரசிக்கவா..!
கொஞ்சி கொஞ்சி பேசும்
அவளின் காதல்மொழியை ரசிக்கவா..!
வா அருகினில் வாவென
அழைக்கும் அவள்
இமைகளை ரசிக்கவா..!
உன்னுடைய பிரகாசத்தை
மங்கவைக்கும் அவளின்
முகத்தை ரசிக்கவா..!

சலக்கு சலக்கென அவளின்
கொலுசின் சத்தம் கேட்டு
இலைகளின் உள்ளே தூங்கி
கொண்டிருக்கும் பனித்துளியும்
எட்டிப் பார்க்கின்றதே..!

உன்னையும் மறக்கமுடியாமல்
அவள் அழகினில்
என்னை மறந்து
கவிபாடுகின்றேன்..!

விடியலைத் தேடி
கரையும் ஒவ்வொரு
நிமிடமும் உன் அருகாமையை
தேடித் தேடி...!

மறக்கமுடியாத
தருணங்கள் அவை..!

,

Post Comment

Saturday, December 18, 2010

தமிழ்மண விருதுகள் 2010

அன்புள்ள நண்பர்களே!!..

தமிழ்மண நிர்வாகத்தினர் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி பதிவர்களை ஊக்குவித்து வருகின்றனர். தமிழ்மணத்தின் இந்த சேவை மகத்தானது. பதிவர்களும் உற்சாகத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். இந்த விருது விழா இந்த ஆண்டும் தமிழ்மணம் 2010 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ம்தேதிமுதல் விருதுக்கு இடுகைகளை பரிந்துரை செய்யப்பட்டு 16ம்தேதி - 26ம்தேதி வரை முதற்கட்ட வாக்கெடுப்பு நடைபெறுகிறது.



நானும் தமிழ்மணம் 2010 விருதுக்கு 3 பிரிவுகளில் இடுகைகளை பரிந்துரை செய்துள்ளேன்.

எனது இடுகைகள்


பிரிவு: 1. அரசியல், சமூக விமர்சனங்கள்.

சாலை விதிகளை மீறாதீங்க.

********

பிரிவு: 2. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்.

யூத்புல் விகடனில் வெளியான ஏழையின் சிரிப்பினிலே.

**********

பிரிவு: 3. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்

வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?..

**********

இந்த மூன்று இடுகைகளையும் பரிந்துரை செய்துள்ளேன். இந்த இடுகைகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, December 14, 2010

கரகர மொறுமொறு - 13/12/2010

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா..

கடந்த டிசம்பர் 9ம்தேதி என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. வலையுலக நண்பர்கள், நண்பர்கள் , உறவினர்கள் அனைவரும் வாழ்த்தியது மிக மகிழ்ச்சியாக அமைந்தது. வலைப்பூ, பேஸ்புக், மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி என்னை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

*************

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தமிழ்2010 கருத்தரங்க செய்திகளை முத்துலட்சுமி மேடம் பதிவின் மூலம் படிக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதில்,

/// நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.///

வாழ்த்துகள் ஹேமா. இன்னும் பலரின் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு முத்துலட்சுமி மேடம் பதிவினை படித்துப் பாருங்கள்.

***********

ஊருக்கு கிளம்பும் சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். சில காரணங்களினால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தாயகம் திரும்புவேன் என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கின்ற ஆனந்ததுக்கு அளவே இல்லை. குடும்பம், நண்பர்கள், உறவினர்களை சந்திக்கவேண்டும் என்ற‌ ஆவல் உள்மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு போகணும் என்ற நினைப்பாவே இருப்பதால் நாட்கள் மெல்ல மெல்ல நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்கிறது. எழுதவேண்டும். உங்களிடம் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எழுத உக்கார்ந்தால் 2 வரிக்கூட தாண்ட முடியவில்லை. ‌ நண்பர் அப்துல்காதர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த கட்டுரையை பாதி எழுதினாற்போல இருக்கிறது.

************

ஒரு சிறிய ஒருபாரா கதை ஒன்றை எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே..


சில்லறைக்காசுகள்

"அய்யா.. தர்மம் பண்ணுங்க சாமி" என்றவனை ஏறிட்டுப் பார்த்தேன். "ஏம்ப்பா நல்லாதானே இருக்கே., உழைச்சி சாப்பிடலாமே" என்ற எனக்கு அவன் சொன்னது அதிர்ச்சிதான். "எனக்கு மட்டும் பிச்சை எடுக்கணுன்னு ஆசையா என்ன!!. இந்த 2150 ல எல்லாமே நகரமயமாக்கல், பொருளாதார வீக்கம், விலைவாசி ஏற்றம். இப்படியே போனா, எனக்கு பிச்சை எடுக்கக்கூட தெம்பு இருக்காது. உங்களுக்கு இந்த நிலமை வர்றதுக்குள்ள யோசிங்க சார்."

***********

Post Comment

Sunday, December 5, 2010

கடைசி பஸ்..


ஆளரவம‌ற்ற வெறிச்சோடிய சாலையை முனைடீக்கடையில் உள்ள ஒற்றைபல்பு ஒளிரூட்டிக் கொண்டிருந்தது. அந்த டீக்கடை கூரையின் ஓலைகள் டமடம.. டமடம.. என்று இடித்த இடி எங்கே தன்மேல் விழுந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தன. பளிச்.. பளிச்.. என மின்னல் வேறு கண்ணை பறித்துக் கொள்வதுபோல மிர‌ட்டியது. ரோட்டில் கிடந்த‌ குப்பைகளெல்லாம் 'நாங்கல்லாம் வேறெடத்துக்கு போறோமே..' என்றபடி பறந்தன. மாடசாமி டீக்கடை என்றிருந்த போர்டு காற்றுக்குஏற்ப தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

'அய்யயோ மழை தூத்தப் போவுதே.. இன்னக்கி யாபாரம் அம்புட்டுதேன்.. பத்தர மணிக்கே வரும் கடைசி பஸ், இன்னக்கி பார்த்து பதினோறு மணிஆகியும் காணலியே.. பஸ் வந்தாலாவது எதாவது யாபாரம் இருக்கும். மழைவேற.. சே.. பெரிய தூத்தல் வர்றதுக்குள்ள வீடுபோய் சேர்ந்திரணும்..' என்று நினைத்தபடியே எல்லாச் சாமானையும் சட்டுபுட்டுன்னு எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

முட்டாய் பாட்டலெல்லாம் அழுக்கா இருக்கு.. காலம்பர வந்து துடச்சி வைக்கணும்.. நாளைக்கி வர்ற பால்காரனுக்கு பாக்கிய 2நாளு கழிச்சி தாரேன்னு சொல்லணும். புள்ளைங்க ஆசப்படுற மாதிரி எப்படியாவது கடனஉடன வாங்கியாவது கறிச்சோறு ஆக்கிப்புடணும். எத்தன நாளைக்கிதான் கூழும் கஞ்சியையும் பச்சமுளகாய கடிச்சிக்கிட்டு குடிக்கிறது. ம்ம்ம்.. ம்ம்ம்.., என்ன செய்ய.. வருமானந்தேன் இல்ல.. கருப்பண்ண சாமி.. நீதான் அம்பட்டையும் கொடுக்கணும் என்றதுக்கு கருப்பண்ண சாமி படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

கடய சாத்திட்டு சிமிண்டு சாக்கை தலையில் போட்டபடி 2 எட்டுதான் நடந்திருப்பேன்.. கண்ணெல்லாம் கூசியது.. தூரத்தில் கடைசி பஸ் வந்துகொண்டிருந்தது. ஆட்கள் இறங்கினால் எதாவது யாபாரம் இருக்குமே என்று நினைத்தபடி கடையை நோக்கி திரும்பவும் நடந்தேன். ஒரு பயப்புள்ளயும் இறங்குனமாதிரி தெரியல.. சரி மழைத் தூத்துறதுக்குள்ள வீட்டுக்கு போயிருவோம் என்றபடி நடந்தேன். பஸ்ஸும் திரும்பி போயிட்டான்.

கொஞ்சதூரம் சென்றிருப்பேன்.. யாரோ பின்னால் "மாடசாமி அண்ணே மாடசாமி அண்ணே" என்று அழைத்தபடியே வருவது தெரிந்து திரும்பி பார்த்தேன். 'என்னடா இது கூப்பிட்டமாதிரி இருந்துதே.. ஒருத்தரையும் காணோமே.. ஒருவேள மோகினி பிசாசா இருக்குமோ' என்று மனதுக்குள் கிலி பிடித்துக் கொண்டது.

"எலேய் மாடசாமி!.. ராத்திரி வரும்போது பாத்து பரிவிச்சி வாலே.. மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. நம்ம மூக்கைய்யா தாத்தா சொன்னாருலே.. வாரபோற ஆள்களையெல்லாம் பயம்காட்டுதாம்.. மோகினிய பாத்துட்டு ரெண்டுமூணு பேரு காய்ச்ச வந்து கிடக்கானுவ.. ரத்தக்குறி பாக்காம விடாதாம்லே.. ஜாக்கிரதையா வாலே" என்று நடராஜன் சொன்னபோது நான் நம்பவில்லை. "எலே.. நா எத்தனவாட்டி ராத்திரி நேரம் தன்னந்தனியா வந்திருக்கேன்.. ஒருநாளாவது..?.. மோகினியாவது கீகினியாவது... நானாவது பயப்படுறதாவது.. நல்லா கதகட்டி விட்டிருக்கானுவ.. நீயும் நம்பிக்கிட்டு இருக்கியே.." என்ற என் வீராவசனம் தவிடுபொடியாகிரும்போல.

மனது திக்திக் என்று அடித்துக் கொண்டது. மறுபடியும் என்னை கூப்பிடுவது போல ஒரு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் யாரையும் காணல.. காற்று பலமாக ஊஊஊ..ஊஊவென இரைச்சலுடன் மரமெல்லாம் ஆடியது. ஊஊ..ஊஊவ்வ்வ்வ்... ஊஊஊ தூரத்தில் எங்கோ நாய் குலைப்பது கேட்டது. என்னை அழைப்பது போல இப்போதும் அதே குரல்.. நடையில் கொஞ்சம் வேகம் கூட்டினேன்.. பின்னால் வருபவரும் என்னைப் போல நடையில் வேகம்.

கண்ணுக்கெட்டும் தூரம்வரை யாரையும் காணவில்லை. 'கருப்பண்ண சாமி என்னைய பத்திரமா வீட்டுல கொண்டுபோய் சேத்துரு' என்று வேண்டியபடியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சே.. வீட்டுக்கு 2 பர்லாங் நடக்கணுமே. குளத்தாங்கரை பக்கம் வந்தாச்சி.. ஓடினேன்.. பின்னால் வருபவரும் ஓடிவருவதுபோல திமுதிமுவென சத்தம்.

'ஆஆ.. அய்ய்யோ அம்மா..' என்று கத்தியபடி கீழே விழுந்தேன். முட்டியிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. புள்ளைங்களுக்காக கையில் வச்சிருந்த பண்டமெல்லாம் அங்கொன்னும் இங்கொன்னுமாக சிதறிக் கிடந்தது. கீழே கிடந்தவற்றை எல்லாம் தூசித்தட்டி பையில் அள்ளிப்போட்டேன். மழைச் சாரல் முகத்தில் அறைந்தது. கண்ணுக்கெட்டும் தூரம்வரை யாரையும் காணவில்லை. முட்டி ரொம்ப வலித்தது. முன்புபோல வேகமாக நடக்க முடியவில்லை.

இப்போது அந்த உருவம் மிக அருகில்.. 'அய்யோ என்னை அடிக்காம விடாதுபோல.. இன்னக்கி நா அம்புட்டுதேன்' பயத்தில் அந்த மழைநேரத்திலும் வேர்த்துக் கொட்டியதை துடைத்தபடியே வந்தேன். "மாடசாமி அண்ணே.. மாடசாமி அண்ணே" என்று மிக அருகில் குரல் கேட்டது. என் தோள்பட்டையில் ஒரு கைவிழுந்து என்னை நிறுத்தியது.

"அய்யோ.. என்ன விட்டுரு.. விட்டுரு.. நா புள்ளக்குட்டிக்காரென்" பயத்தில் அழுகை வந்தது. அய்யோ என்ன மாடசாமி அண்ணே.. இப்படி ஆகிட்டீங்க என்றதும் திரும்பி பார்த்தால் அங்கே ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

"யாருப்பா நீயி.." என்றேன் திகைப்புடன். "அண்ணே என்னத்தெரியலியா.. நல்லா யோச்சிப்பாருங்க" என்ற அவனுக்கு "யாருன்னு தெரியலியேப்பா" என்றேன். உடனே அவன் "நாந்தான் செல்லாத்தா பாட்டியோட பேரன்., எம்பேரு முத்து. சின்னவயசுல வீட்டவிட்டு ஓடிப்போனேனே.. ஞாபகம் இல்லயா.. உங்க கடையில வந்து சல்லியம் பண்ணுவேனே.." என்றான்.

"அடப்பாவி நீயா அது" என்ற திகைப்பில் நான். "சரிண்ணே.. வீட்டுக்கு எப்படி போகணும்.. ஊருக்கு வந்து ரொம்ப வருசமாச்சா.. வழி தெரியல.. எப்படி போகணும்?." என்றானே பார்க்கலாம். "எலேய் இதுக்கா இப்படி?.. நானும் என்னவோ ஏதோன்னு பயந்து சே.. இத அங்கேவச்சு கேட்டுருக்கலாமுல்ல.. பின்னாடியே துரத்துற.." என்றேன்.

"என்னண்ணே.. நா எத்தனதடவ உங்கள்ட்ட விளாண்டிருக்கேன். சும்மா விளாட்டுக்குதாண்ணே., விளாட்டு காட்டினேனே" என்றான். "நீ விளாடுறது நாதேன் கிடைச்சேனா.. சரிசரி இந்தா இப்படியே சோத்தாங்கை பக்கமா கொஞ்சதூரம் போனீன்னா அங்க மாரியம்மன் கோவில் வரும். அதுலருந்து ரெண்டுதெரு தள்ளி குத்துக்கல் தெரு வரும். அதுல நாலாவது கிழக்க பாத்தவீடுதான் உங்கவீடு. சீக்கிரம்.. காலாகாலத்துல போய்ச்சேரு.. பத்திரமா போலே" என்று சொன்னேன்.

"சரிண்ணே" என்றபடி அவன் நடந்துபோனதை பார்த்தபடியே நான் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். 'பாவிப்பய.. என்னைய பயங்காட்டி இப்படி ஆக்கிப்புட்டானே' என்று நினைத்தபடியே வீடுபோய் சேர்ந்தேன்.

காலையில், "அண்ணே.. ரெண்டு சாயா கொடுண்ணே" என்ற குரல்வந்த திசையை பார்த்தால் அங்கே முத்து நின்று கொண்டிருந்தான். "என்னல முத்து ராத்திரி நா சொன்னமாதிரி போனீயா.. வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா., இல்ல வழி தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னியா.." என்றேன் அவனிடம்.

"மாடசாமி அண்ணே!! என்ன உளருதீரு.. நானாவது எங்கவீட்டுக்கு வழி தெரியாம நிக்கிறதாவது. நான் வந்து ஒரு வாரமாச்சே. ராத்திரி வழி கேட்டேன்னு சொல்தீரு.. காலையிலேயே தண்ணிகிண்ணி போட்டுட்டீரா" என்று சொன்ன அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து "மாடசாமி அண்ணே.. மாடசாமி அண்ணே.." என்று யாரோ கூப்பிடுவதுபோல இருந்தது.

,

Post Comment

Wednesday, December 1, 2010

உசாரய்யா.. உசாரு..

அன்புள்ள நண்பர்களே!!.. என்னுடைய நண்பர் மெயில் அனுப்பி இருந்தார். அதில் நமக்கு தெரியாமல் கேமரா மூலம் படம் எடுக்கும் கும்பல்கள் பெருகிவருகின்றனர். அதனை இணையத்தில் வெளியிட்டு காசு சம்பாரித்து வருகின்றனர். அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கெங்கெல்லாம் மறைவாக கேமராக்கள் வைத்திருப்பார்கள் என்று கீழ்கண்ட படங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நாம் பொது இடங்களுக்கு செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். பொருட்கள் வாங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வெளியிட்டுள்ளேன். எனவே கவனமாக இருங்கள். இந்த படங்களை அனுப்பிய என் நண்பர் சேக்கப்பா (எ) அஹ்மது முகைதீனுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.






















,

Post Comment

Saturday, November 27, 2010

வெளிநாட்டு அப்பா

"என்ன‌ங்க நம்ம பையன் இப்ப நல்லா நடக்கிறாங்க.. அப்பா அம்மா என்று நல்லா பேசுறான்ங்க.. பல்லெல்லாம் முளைச்சிருக்கு" என்ற என் மனைவியிடம் "அப்படியா.. பேசுறானா.. பல் முளச்சிருக்கா.. முன்னாடி தவண்டுக்கிட்டுதானே இருந்தான். இப்ப நடக்கிறானா., கொடுப்பா அவன்ட்ட போனை" என்றேன்.

"டேய் கண்ணா.. எப்படிடா இருக்கே.. என் செல்லம்., புச்சிக்குட்டி., ச்ச்சூ ச்சூ.. தங்கக்கட்டி, அம்மா என்ன சொல்றாங்க., என் கண்ணுல்ல., என் செல்லம்" என்று என் கண்ணனிடம் கொஞ்சினேன். "அப்..பா, அப்ப்..பா, அப்ப்..பா அம்ம்ம்..மா அம்மா......" என்ற குரலைக் கேட்டு கொஞ்ச நேரம் என்னை நான் மறந்தேன். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல..

"கண்ணா, உனக்கு என்னல்லாம் வேணும், சொல்லுடா என் தங்கம். அப்பா வாங்கித்தருவேனா என்ன" என்றேன் கண்ணனிடம்.

"அப்..பா நெனக்கு கா..ருரு பொம்ம.. சாக்குலேட்டு., குச்சிமுட்டாயி அம்ம்ப்பூட்டும்" என்றான் கண்ணன். "சரிடா செல்லம் அப்பா உனக்கு அம்ம்ப்பூட்டும் வாங்கி அனுப்புறேன் என்ன சமத்தா இருக்கணும் என்ன" என்றதுக்கு "என்னங்க.. எப்படி பேசுறான் பாத்தீங்களா., அங்க ஓடுறான் இங்க ஓடுறான்., சுட்டி சரியான சுட்டி.. எல்லாம் உங்களே மாதிரியேன்னு உங்கம்மா அடிக்கடி சொல்வாக‌.. அவன பாக்கும்போதெல்லாம் உங்க ஞாபகந்தான் வருது.. நீங்கதான் அங்க இருந்துக்கிட்டு., சே.. எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?.. உங்கள பிரிஞ்சி இத்தன வருசம் இருந்தாச்சி.. சீக்கிரம் வாங்க" என்றாள் என் மனைவி.

"சரிடா செல்லம்., உன்னோட பீலிங்ஸ்தான் எனக்கும்.. நானும் என்ன செய்ய., நா இங்கவந்து கஷ்டப்பட்டாதான் நாலுகாசு சம்பாரிக்க முடியும். நாமும் வாழ்க்கையில் உசரணுமில்லயா. கவலைப்படாதே கூடிய சீக்கிரம் வந்துருவேன். ஒரு நாலுமாசம் பொறுத்துக்கோ., அய்யா வந்துருவேன், சரியாடா செல்லம்" என்று என்னவளுக்கு ஆறுதல் சொன்னேன்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்து இந்த வருசத்தோட 7 வருசம் முடியப்போகுது. முதல் தரம் ஊருக்கு போகும்போது தங்கச்சிய கல்யாணம் செய்துவைத்து அந்த கடனுக்காக திரும்பவும் கஷ்டப்பட்டு வேலைசெய்து இன்னும் கடன் அடைத்துக்கொண்டிருக்கிறேன். பின்னர் லட்சுமியை பெண்பார்த்ததும் கல்யாணத்துக்காக திரும்பவும் ஒருவருடத்தில் ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.

முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கிய 4 மாதம் லீவு நாலே நாளானது. கண்ணீர் மல்க என்னவளிடம் விடைபெற்ற காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு. பின்னர் கண்ணன் பிறந்ததும் அவனை பார்க்கும் ஆவல் கூடிக்கொண்டே போனது. முதலாளியிடம் லீவு கேட்டதும் தாமதம்.. அவன் உடனே "நீ அப்படியே ஊர்ல இருந்துக்கோ.. நா வேற ஆளை பாத்துக்கிருவேன். என்ன? ஒரே லீவு.. லீவு... அதெல்லாம் முடியாது" என்று பொரிந்து தள்ளிட்டான். கண்ணீர் மல்க அவனை கெஞ்சியதில் ஒரு மாத லீவில் கைக்குழந்தையா இருந்த என் கண்ணனை பார்க்க போனது. இப்ப அவனுக்கு 3 வயசு ஆகப்போகுது. இப்ப எப்படி இருக்கானோ என் செல்லம்.

கண்ணா.. நீ எப்படிடா இருக்கே.. என் செல்லம். ‌டேய் கண்ணா.,உன் இனிமையான மழலை குரலுக்கு எத்தனை தவங்கள் செய்திருப்போம் நானும் என்னவளும். உன் மொழியின் அர்த்தம் எந்த அகராதியிலும் இல்லையடா., உன்னிடம் பேசும்நேரம் விலை மதிக்கமுடியாது. உன்னை நினைக்கும்போது கவிதைகளாய் ஆனேன். உன்னை மடியில் வைத்து தாலாட்ட ஆசை. உன்னை என் மார்பினில் தூங்கவைக்க ஆசை. நீ பெய்யும் சிறுநீருக்காக என் ஆடைகளெல்லாம் ஏங்குதடா. உன்னை கடைவீதிக்கு அழைத்து செல்ல ஆசையடா என் தங்கக்குட்டி. உன்னால் உறக்கம் எனக்கு தூரமாகிவிட்டதடா. இன்னும் எத்தனை ஆசைகள் என்னுள் புதைந்திருக்கிறதோ எனக்கே தெரியவில்லையடா. ஏங்கித் தவிக்குதடா என் உள்ளம்.. என் செல்லம்.

"வாப்பா.. எப்படி இருக்கே.. உடம்பெல்லாம் நல்லாருக்கா.. உன்ன பார்த்து எத்தன வருசமாச்சி.." என்ற‌ அப்பா, அம்மாவின் ஆனந்த கண்ணீரில் என்னை மறந்தேன். "வாங்க வாங்க" என்ற தங்கை, தம்பிகள் மற்றும் உறவினர்களின் வரவேற்பு மழையில் நனைந்தேன். "வாங்க வாங்க... என்னங்க... என்னங்க... எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா" என்று லட்சுமியின் உதடுகளில் புன்னகையும் கண்களில் நீருமாய் என்னை வரவேற்றாள். "லட்சுமி.. லட்சுமி.. நா நல்லாருக்கேன்டா.. நீ எப்படிடா இருக்கே.." என்றபடி அவளை ஆரத்தழுவி முத்தமிட்டேன்.

"லட்சுமி.. கண்ணனை எங்கப்பா.. எங்கேருக்கிறான். அவன பாக்கலியே" என்று லட்சுமியிடம் கேட்டேன். "ஆமாங்க.. உங்கள பாத்த சந்தோசத்துல.. அவன் இங்கதானே விளையாடிக்கிட்டு இருந்தான். கண்ணா டேய் கண்ணா.. நீ இங்கருக்கியா.. அப்பா வந்துருக்காரு வா" என்று லட்சுமி கண்ணனை அழைத்து வந்தாள்.

அவன் என்னை பார்த்ததும் அவன் கண்களுக்குள் ஒரு மிரட்சி. "வா வா என் செல்லம்.. அப்பா வந்துருக்கேன்டா செல்லம்" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கரம் நீட்டி அழைக்கிறேன். நான் உடனே அவனை கைகளில் தூக்குகிறேன். அவன் என் முகத்தை பார்த்ததும் கண்களில் நீருடன் "அம்மா... அம்மா.. ம்ம்ம்ம்.." என்ற அழுகையுடன் தூக்கி வைத்திருந்த என்னிலிருந்து பொலபொலவென இறங்கி அவன் அம்மாவை நோக்கி ஓடினான். "கண்ணா... அப்பா வந்துருக்காடா.. அப்பாட்ட போடா.. ஆசையா கூப்பிடுதாருல்ல.. போம்மா செல்லம்" என்று லட்சுமி கண்ணனிடம் சொன்னாள்.

நான் அருகே செல்லும்போது அவன் வீல்லென்று அழத் தொடங்கினான். எனக்கு ஒரு மாதிரி ஆனது. அம்மாவின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான். "கண்ணா.. அப்பா உனக்கு பொம்ம.. காரூரு.. சாக்குலேட்டு எல்லாம் வாங்கி வந்துருக்காக.." - லட்சுமி. "அப்பா உனக்கு நிறைய சாமான்லாம் வாங்கி வந்துருக்கேன்.. வாம்ம்மா.. செல்லம்" என்று கண்ணனை அழைத்தேன்.

"அப்பா.. அப்பா.. போன்ல நீ பேசுவில்ல.. அப்பா பேசுவியே.. அப்பா" என்று லட்சுமி கண்ணனுக்கு எடுத்துச் சொன்னாள். அவன் உடனே குடுகுடுவென வெளியில் ஓடிச் சென்று எதையோ எடுத்து வந்தான்.

"அப்ப்..பா அப்ப்ப்...பா அப்பா., ம்ம்ம்ம்..." என்று அவன் கையில் வைத்திருந்த என் மனைவியின் செல்போனை காதில் வைத்துக் கொண்டு பேசினான். உடனே அவன் எங்களை பார்த்து "அப்ப்..பா.. ஈ ஈ.." என்று செல்போனை சுட்டிக்காட்டியதும் நானும் என்னவளும் திக்கித்து நின்றோம்.

,

Post Comment

Monday, November 22, 2010

கரகர மொறுமொறு - 22/11/2010

நான் இன்று மதியம் ஒரு முண்ணனி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு நேர்காணல் (நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு கல்லூரி பேராசிரியர், மாணவர்களுக்கு என்னென்ன மேற்படிப்புகள் படிக்கலாம்?.. என்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஆண் தொகுப்பாளர், கேள்விகள் கேட்பவர்களிடம் கேள்விகளை பெற்று அந்த கேள்விகளுக்கு பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியை நான் சுவாரசிய‌மாக பார்த்துக் கொண்டிருந்தேன். கேள்வி நேரத்தின்போது அந்த பேராசிரியர் மாணவர்களுக்கு தேவையான சில‌ பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அந்த தொகுப்பாளர் மாணவர்களுக்கு "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டார். பேராசிரியர் அந்த கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையிடையே அழைப்புகள் வந்ததினால் தொகுப்பாளர் அழைத்தவர்களின் கேள்விகளை பற்றி பேராசிரியரிடம் விளக்கங்கள் கேட்டுக் கொண்டார். ஆனால் பேராசிரியர் "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றி 2 வரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து அழைப்புகள் வந்ததினால் "பாஸிட்டிவ் அப்ரோச்" பற்றிய கருத்துக்களை சொல்ல முடியவில்லை.

நானும் பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி இப்போ சொல்லுவார் அப்போ சொல்லுவார் என்று பார்த்தால், கடைசியில் தொகுப்பாளர் மீண்டும் நாளை இதே நேரம் மற்றொரு நேர்காணலில் சந்திப்போம் என்று நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

சே.. என்னடா இது.. பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் ஒன்னுமே சொல்லாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களே என்று வருத்தமாக இருந்தது. ஒண்ணு இந்த கேள்விக்கான விளக்கத்தை அந்த தொகுப்பாளர் கேட்டிருக்க கூடாது. இல்லையென்றால் இந்த விளக்கத்தை கேட்டபின்னர் நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இரண்டும் இல்லாமல் அழைப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டே பாஸிட்டிவ் அப்ரோச் பற்றி சொல்லுங்க சொல்லுங்க என்று தொகுப்பாளர் கேட்டதை நினைக்கும்போது வருத்தம்தான் மிஞ்சுகிறது.

அந்த பேராசிரியரை பார்க்கும்போது எனக்கு பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

இதிலிருந்து ஒண்ணு தெரியுது.. இந்த ஏமாற்றத்தைகூட பாஸிட்டிவ்வா எடுத்து கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி சொல்லாமல் சொல்லியது.

*************

நெல்லையில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறதாம். 2 நாட்களாக சரியான மழை. நேற்று இரவு ஊரிலிருந்து வந்த அக்பர் சொன்னபோது மழையில் நனைய கொள்ளை ஆசையா இருக்கு. ஆண்டுக்கு எப்போதாவது மழைபெய்யும் சவுதி அரேபியாவில் மழையை காண‌வே முடியாது. மழை பெய்தாலும் சிறுசிறு சாரல்தான். நான் சவுதிக்கு வந்த இந்த 5 வருடங்களில் 2 முறை மட்டுமே நல்ல மழை பெய்தது.

************

ஆம்! அக்பர் ஊரிலிருந்து வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறது.

************

அடம் பிடிக்கும் முதல்வர்

அரசாங்க நிலத்தை தன் உறவினர்களின் பெயருக்கு கையகப்படுத்திய கர்நாடக முதல் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எதிர்க்கட்சிகள் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இதனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவை பதவி விலக சொல்லியும் அடம்பிடிக்கிறாராம்.

"கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, டில்லிக்கு யாரும் செல்லவேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110ல் இருந்து, 120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என கேட்கின்றனர். எனக்கு பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை" இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடிப்பதால், பா.ஜ., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக பா.ஜ.,வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ., தலைவர்கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன கொடுமை இது!!...

நன்றி தினமலர் செய்திகள்.

***********

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ராஜா ராஜினாமா விவகாரம் மேலும் வலுவடைந்துள்ளது. ராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தபின்னரும் பார்லிமென்டில் குழப்பங்கள் நீடித்து வருகின்றது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பாலி., கூட்டு விசாரணை நடத்த உத்தரவிடும்வரை பார்லி.,யை நடத்த விட மாட்டோம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் பார்லி.,யில் விவாதிக்க தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்த பின்னரும் இதனை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்திய சமரச பேச்சுவாரத்தையும் தோல்வியடைந்தது.

இதனால் தொடர்ந்து அவைகள் முடங்கி வருவதால் அரசு என்ன செய்வதென்று சிக்கலில் தவிக்கிறது. பார்லிமென்ட்டில் இதே நி‌லை தொடருமானால் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவு்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பிரச்சனை பெரிதாகும்போல..

நன்றி தினமலர் செய்திகள்.

*************

இப்படியே ஊழல்கள் பெருகிக் கொண்டே வருகிறது. ஊழல் புகாரில் சிக்கியவரே லஞ்ச தடுப்பு கண்காணிப்பு ஆணையாராக மத்திய அரசு நியமித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையாளராக கேரளாவைச் சேர்ந்த பி.ஜெ.தாமஸ் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் மேல் பல ஊழல் குற்றச்சாட்டுகளினால் எழுந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் போது இவர் எவ்வாறு இந்த உயர் பதவியில் நியமிக்கப்பட்டார். குற்றம் புரிந்தது நிலுவையில் இருக்கும் போது இவர் எவ்வாறு நியாயமாக செயல்பட முடியும் என்றும் கேட்டுள்ளது.

கோழிக் குஞ்சுகளுக்கு காவலாக பூனை இருந்த கதையா இருக்கு..

*********

Post Comment

Saturday, November 13, 2010

முதல் போணி..

அதிகாலை பனிவிழும் நேரம்
அழகான மனைவியின்
அன்பினால் உருவான‌
சூடான முத்தமும் காபியும்
கிளர்ந்தெழச் செய்தனவே..

உசும்பிய மகனை
"தூங்குடா செல்லம்"
என தட்டிக் கொடுத்த‌
கைகள், மனைவியிடம்
கொஞ்சலில் கெஞ்சியது..

"போதும் போதும்...
பையன் முழித்துவிடுவான்
வேலைக்கு போங்க..."
என்ற மனைவியின்
செல்ல சிணுங்கல்களை
கேளாமலும் இருந்தனவே காதுகள்.

காலையின் இனிமையை
ரசித்தபடியே விருவிருவென
கால்கள் முன்னேறின
கடையை நோக்கி..

முதலாய் வந்த ஆள்
கொடுத்த பணத்தை
கண்களில் ஒற்றியபடி
மனமோ வேண்டியது
"இன்று வருமானம்
நல்லாயிருக்க வேண்டும்" என்று!!..‌

,

Post Comment

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

அன்புள்ள நண்பர்களே!!.. எல்லோரும் சுகமா.. நலம் நலமறிய ஆவல்.

அறிவியல் முன்னேற்றங்களினால் நம்நாடு பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது. உதாரணத்துக்கு போக்குவரத்து துறை, இதில் எண்ணற்ற வளர்ச்சி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக இன்றியமையாததாகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். பணி நிமித்தமாகவும் சொந்தக் காரியங்களுக்காவும் பயணம் அத்தியாவசியமாகிறது. போக்குவரத்து ஊடகங்களான‌ வான்வழி,
நீர்வழி
போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து என்று மக்களின் பயன்பாட்டில் பெரிதும் உதவுகின்றன.

அந்த காலத்தில் மக்கள் பயணப்படுவது என்பது மிகுந்த சிரமமான விசயமாகும். இன்று நமக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளினால் பயணம் இனிமையானதாகிறது. இப்போது பயணப்ப‌டவேண்டிய இடத்தை குறைவான நேரத்தில் சுகமான பயணத்தில் அடைந்து விடுகிறோம். தரைவழி போக்குவரத்தில் பேருந்து மற்றும் ரயில்வே துறைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. நம்நாட்டில் போக்குவரத்துக்கு பல நல்ல திட்டங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த இருபதாண்டில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க நமது அரசு பல தரமான சாலைகளும் பாலங்களும் கட்டிவருகிறது. ரயில்வே துறையிலும் பல முன்னேற்றங்கள். நாட்டின் எந்த இடத்துக்கும் செல்ல ரயில் மற்றும் பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இங்கே சவுதி அரேபியாவில் ரயில் போக்குவரத்து என்றால் ஒரே ஒரு வழித்தடம்தான் உண்டு. அது தமாம் - ரியாத் இடையேயான ரயில் பாதை மட்டுமே உள்ளது. மற்ற தொலைதூர இடங்களுக்கு செல்ல உயர்தர சொகுசு வால்வோ பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. சாலைகளும் பாலங்களும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் தினந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் வாகனங்கள் புதிதாக சாலைகளில் ஓடத் துவங்குகின்றன. சென்னையில் சுமார் 31 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் மொபெட், பைக், கார், லாரி, பஸ் போன்ற அனைத்து வகை வாகனங்களும் அடங்கும்.

காலை மற்றும் மாலைகளின் உச்சி நேரங்களில் பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் சாலைகளில் வாகன நெரிசல் கடுமையாக இருந்துவிடுகிறது. பல மணி நேரங்களுக்கு சாலைகள் உறைந்துவிடுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்போது நம்நாட்டில் எல்லா சாலைகளும் செப்பனிட்டு அழகான பாலங்கள் கட்டப்படு வருகின்றன.

நம்நாட்டில் உள்ள பாலங்களை பார்த்திருப்பீர்கள். சர்வதேச நாடுகளில் உள்ள சில அதிசயமான பாலங்களை பற்றிய படங்களை சில‌ நண்பர்கள் தங்களது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்கள். அதுபோன்ற அழகான பாலங்களின் படங்களை அதன் குறிப்புகளுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த படங்க‌ளை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிகள்.

1. பெடஸ்டிரியன் பாலம் டெக்ஸாஸ். Pedestrian Bridge, Texas .


இந்த அழகான ஆர்ச் வடிவிலான பாலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் ஏரியில் அமைந்துள்ளது. இதை மிரோ ரிவெர்ரா தலைமையிலான திறமைவாய்ந்த கட்டடக்கலை நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த பாலம் முக்கிய விருந்தினர் மாளிகையிலிருந்து ஏரியின் மறுகரையில் உள்ள அரசாங்க அதிகாரியின் மாளிகையை இணைக்கிறது. இதனை சுற்றிலும் அழகழகான இயற்கை காட்சிகளினால் இந்த பாலம் பார்ப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கிறது.

2. கின்டெய்க்யோ ல்வ்குனி - ஜப்பான். Kintaikyo, Iwakuni, Japan


இந்த பாலம் மிகவும் பழ‌மை வாய்ந்தது. இந்த கின்டெய்க் பாலம் 1673ல் கட்டப்பட்டது. ஆனால் உலகப்போரின் பாதிப்புக்குள்ளனான இந்த பாலத்தை 1950ல் மீண்டும் செப்பனிட்டு கட்டியுள்ளனர். நிஷிகி நதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் மிகப்பெரிய ஐந்து வளைவுகள் உண்டு. இவை அனைத்தும் மரங்களினால் கட்டப்பட்டவைகளாகும். இது உயர்தர வயர்களும் கிளாம்புகளினாலும் பிணைக்கப்பட்டுள்ளது.

3. ஜஸ்சிலினோ குபிட்செக் பாலம் - பிரேசிலியா ப்ரேசில். Juscelino Kubitschek Bridge, Brasilia, பிரேசில்


கட்டுமானத் துறையின் புதிய தொழிற்நுட்ப முறையினால் கட்டப்பட்ட இந்த பாலம் ப்ரேசில் நாட்டில் ப்ரேசிலியா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ஜேகே ப்ரிட்ஜ் (JK Bridgஎ ) என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய மூன்று வளைவுகளை இந்த பாலத்தை பார்க்கும்போது வியப்பில் ஆழ்த்துகிறது.

4. ரோலிங் பாலம் _ லண்டன் யூகே. Rolling Bridge, London, UK


பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கக்கூடிய லண்டனில் உள்ள இந்த பாலம் சுருள்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோலிங் பாலம் தாமஸ் ஹீதர்விக்ஸ் விருதினை கட்டுமானத்துறையின் புதிய தொழில்நுட்பமான கேனலுக்காக‌ பெற்றுள்ளது.

இதனை ஹைட்ராலிக் ஜாக் மூலம் கப்பலில் எடுத்துச் செல்லலாம்.

5. பெய்பாஞியங் ரயில்வே பாலம் _ ஹூச்கோ - சீனா. Beipanjiang River Railroad Bridge, Guizhou, சீனா


சீனாவில் பெய்பாஞியங் ரிவர் ரயில்வே பாலம் ஹூச்கோ என்ற இடத்தில் இரண்டு மலைகளை இணைக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் சீனாவில் உள்ள வறுமையில் வாடுபவர்கள் வசிக்கும் இடங்களை இணைக்கிறது.

இதன் உயரம் தரையிலிருந்து 918 அடியாகும். இது உயரமான பகுதியாகும்.

6. ஹென்டர்சன் வேவ்ஸ், சதன் ரிட்ஜெஸ் - சிங்கப்பூர். Henderson Waves, Southern Ridges, Singapore .


சிங்கப்பூரில் உள்ள இந்த பாலம் மிக உயரமான பெடரஸ்டியன் பாலம் சதன் ரிட்ஜெஸ் பகுதியில் அமைந்துள்ளது. 9 கி.மீ நீளமான இந்த பாலத்தை சுற்றிலும் அழகழகான மரங்களும் பார்க்குகளும் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பாலோவ் வகையான ஆயிரக்கணக்கான மரப்பலகைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி மேலும் தகவல்களை சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்கள் சொல்வார்கள்.

7. பான்ட் கஸ்டேவ் ஃப்லோபர்ட், ருவ்ன், ஃப்ரான்ஸ். Pont Gustave Flaubert, Rouen, பிரான்ஸ்


ப்ரான்ஸில் ரூவ்ன் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1200 டன் எடையை கொண்டுள்ளது. செங்குத்தான இரு உருளைகளான தூண்களை தாங்கிய இந்த பாலம் பார்க்க மிக அழகாக உள்ளது. இதன் ஒவ்வொரு பகுதியும் 180 அடி உயரமும் 405 டன் எடையையும் கொண்டுள்ளது.

8. மில்லொவ் வியடக்ட் - ப்ரான்ஸ். The Millau Viaduct –.


ஃப்ரான்ஸில் உள்ள இந்த பாலம் உலகின் அதிக உயரமான பாலம். The Millau Viaduct –ங்குற பாலம்தான். இதனோட நீளம் மட்டும் 2,460 m (8,071 ft), அகலம் 32 m (105 ft) னா பாத்துக்குங்க…

9. ஜெஜ்ஜியோ ஜார்ஜ் பாலம் ‍_ Hegigio Gorge Pipeline Bridge, Southern Highlands Province, Papua New Guinea .



அதிசயமான இந்த பாலத்தை இரண்டு பைப்லைன் குழாய்கள் தாங்குகின்றன என்றால் வியப்பாக இருக்கிற‌தல்லவா... ஒரு பைப்லைனில் கேஸ்ஸும் இன்னொன்றில் ஆயிலும் கொண்டது. இது பப்புஅ என்ற பகுதியில் உள்ளது.

தரைமட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் பைப்லைன்களை மட்டுமே கொண்டுள்ள இந்த பாலத்தின் உயரம் 1290 அடியாகும்.

மேலும் இந்த பாலங்களை பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள நண்பர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

படங்களை பெரிதாக்கி (டபுள் கிளிக் செய்து) காணுங்கள்.

இந்த தகவல்களுடன் படங்களை அனுப்பிய என் நண்பருக்கு நன்றிகள்.

நன்றியுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Tuesday, November 9, 2010

சூப்பர்ஸ்டாரின் குட்டிக் கதையும் 3ம் ஆண்டு வெற்றிவிழாவும்

அன்புள்ள நண்பர்களே!!.. எல்லோரும் நல்லாருக்கீங்களா.. நலம் நலமறிய ஆவல்.

என்னுடைய வலைப்பூவில் இடுகை வெளியிட்டு ரொம்ப நாளாச்சி.. அக்பர் ஊருக்கு சென்றதிலிருந்து நான் ஒருவன் மட்டுமே நிர்வகிப்பதால் என்னால் பதிவு எழுத முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக சரியாகவே எழுதவில்லை. நேரம் சரியாகிவிடும். என் மனைவி இரண்டு கட்டுரைகள் எழுதி தந்தார்.

என்னால் மற்றவர்கள் இடுகைகளை படிக்க நேரம் கிடைக்காமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனாலும் என்னுடைய வலைப்பூவுக்கு தினமும் வருகைதந்து அக்கறையுடன் மின்னஞ்சலில், "என்னாச்சி எதுவும் எழுதலியா" என்று கேட்கும் நண்பர்களை நினைக்கும்போது வார்த்தைகளில் சொல்லமொழி தெரியவில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எல்லோருக்கும் என்னுடைய மனந்திறந்த நன்றிகள்.

**********



அப்புறம் ஒரு சந்தோசமான செய்தி. நான் பதிவு எழுத வந்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து எழுத்துலகில் மூன்றாமாண்டில் பயணிக்கிறேன். உங்கள் அனைவர்களின் ஆதரவினாலும், படித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊக்கமளிப்பதாலும் என்னால் தங்கு தடையின்றி பயணிக்க முடிகிறது.

ஆம்! நவம்பர் 10, என்னுடைய வலைப்பூவான நாளையராஜாவில் எழுத தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆரம்பத்தில் எப்படி எழுதணும் என்றே தெரியாது. தமிழில் எப்படி எழுதுவது, மற்ற ப்ளாக்கில் கமாண்ட் எப்படி போடுவது, ப்ளாக் விட்ஜெட் எப்படி சேர்ப்பது, தமிழ்மணத்தில் எப்படி இணைப்பது, இப்படி சில குறிப்புகளை நண்பர்கள் சிலர் எனக்கு சொல்லித் தந்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் என் எழுத்துக்களின் மூலம் எண்ணற்ற நண்பர்களையும், அவர்கள் குடும்பங்களில் ஒருவனாக நினைக்கும்படி பெயர் சம்பாதித்துள்ளது ரொம்ப பெருமையாக உள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் இரண்டுமுறை ஆசிரியராகவும், தமிழ்மண நட்சத்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது உங்கள் பாராட்டுக்களின் மூலம் அறிந்து கொண்டேன். சீனா அய்யா அவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

***********

நவம்பர் என்றதும் எனக்கு சென்றமுறை 2008ல் ஊருக்கு சென்றது ஞாபகத்துக்கு வருகிறது. ஆம்.. இந்தமுறையும் ஊருக்கு செல்ல வேண்டும். டிசம்பரில் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஊரில் என் மனைவி, இப்பவே நான் வரக்கூடிய நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்.

************

சமீபத்தில் சன்டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அந்த பேட்டியினை காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். விஜயசாரதியின் கேள்விகளுக்கு சூப்பர்ஸ்டாரின் அலட்டல் இல்லாத பதில்கள் என்னை மிகவும் கவர்ந்தது. தான் ஒரு பெரிய நடிகர் என்று பீத்திக்காமல் எளிமையாக, எந்தஒரு பந்தாவும் இல்லாமல் பதிலளித்தது சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று சொல்லாமல் சொல்லியது.


அவர் அந்த பேட்டியில் ஒரு சிறிய கதை ஒன்று சொல்லியிருந்தார். நீங்களும் கேட்டும், டிவியில் பார்த்தும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த கதையை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு ஊர்ல ஒரு தேசம். அங்கே ஆளும் ராஜாக்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒவ்வொரு ஆள் ராஜாவாக இருப்பார். ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்ததும் அந்த ராஜாவை பயங்கரமான காட்டு மிருகங்கள் வசிக்கும்ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு விட்டுவிடுவார்கள். கொண்டு விடப்பட்ட ராஜாவை காட்டு மிருகங்களுக்கு இரையாக்கி விடுவார்கள். இதுதான் அந்த ஊர் வழக்கம்.

இப்படி ஒவ்வொரு 5 ஆண்டும் ஒவ்வொரு ராஜாவுக்கும் இதே கதிதான். ஆட்சிக்கு வருபவர்கள் 5 ஆண்டு முழுமையாக ஆட்சி செய்ய மாட்டார்கள். இந்த கதி தமக்கும் வரும் என்றெண்ணி பயத்தில் ஒரு ஆண்டோ இரண்டாண்டிலோ பயத்தில் இறந்துவிடுவார்கள். யாரும் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.

அப்போது அந்த ஊரில் ஒருவன் தைரியமாக என்னதான் ஆகுது பார்ப்போம் என்று 5 ஆண்டுக்கு ராஜாவாக சம்மதித்தான். 5 ஆண்டும் ரொம்ப சந்தோசமாக கழித்து ரொம்ப ஜாலியாக இருந்தான். 5ம் ஆண்டு முடிவில் எல்லோரும் அவனை கட்டி காட்டினுள் கொண்டுவிட சென்றார்கள். அப்போது இவன் சிரித்துக்கொண்டே எந்த கவலையுமில்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்பதை கண்டு மக்களுக்கு ஆச்சர்யம்.

என்னவென்று விசாரிக்கும்போது அவன் சொன்னானாம். இப்படி ஆகுமென்று எனக்கு முன்பே தெரியும். அதனால் நான் முதலாமாண்டு அந்த காட்டினுள் உள்ள மிருகங்களை அழித்துவிட ஏற்பாடு செய்தேன். பின்னர் இரண்டாமாண்டில் அந்த காட்டினுள் வீடுகளை கட்டி வசதிகள் ஏற்பாடு செய்து மக்கள் வாழுவதற்கு வழிவகைகளை ஏற்பாடு செய்தேன். இப்படி ஒவ்வொரு ஆண்டும் குறைகளை நிவர்த்தி செய்து மக்கள் சந்தோசமாக இருப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அதனால்தான் இப்போது சந்தோசமாக இருக்கிறேன்.

இந்த கதை எத்தனை எத்தனை உண்மைகளை எடுத்துரைக்கிறது. திரு. சூப்பர்ஸ்டார் சொன்னமாதிரி நாம் எப்போதுமே திட்டமிடவேண்டும். பிற்காலத்தில் ஒரு காரியத்தை முடிக்கவேண்டுமெனில் இப்போதே அதற்கு தயாராகி திட்டமிட்டு உழைக்கவேண்டும்.

எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய நீதியுள்ள கதை. தலைவரிலிருந்து தொண்டன்வரைக்கும், அரசியல்வாதியிலிருந்து சாமானியன் வரைக்கும், என்று எல்லோருக்கும் பொருந்தும் உண்மை.

இது வெற்றியின் அடையாளம். நன்றி திரு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே.....

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்