Pages

Saturday, October 30, 2010

நெல்லை எக்ஸ்பிரஸ்

"சீக்கிரம் வாங்க..சீக்கிரம் வாங்க.. நெல்லை எக்ஸ்பிரஸ் கிளம்பபோகுது" என்று சொல்லியபடியே ஓடிக்கொண்டிருந்த அப்பாவுக்கு பின்னால் நானும் குடுகுடுவென ஓடினேன். அம்மாவும் அக்காவும் மூச்சிறைக்க ஓடிவந்து கொண்டிருந்தனர். ரயிலில் ஏறியதும், "அம்மா தண்ணி" என்ற அக்காவை பார்த்தபடி அம்மா, "என்னங்க.. தண்ணி பாட்டில் வாங்கிட்டுவாங்க.. தண்ணி எடுத்துவர மறந்திருச்சி.." என்று அப்பாவிடம் சொன்னாள். "ஆமா உனக்கு வேறவேலையே இல்லியா.. எப்பப்பாரு அவசரம்தான்.. ட்ரெயின் கிளம்பபோவுது.. இப்ப எப்படி வாங்கமுடியும்.. இருஇரு அடுத்த ஸ்டேசன்ல வாங்கிரலாம்" என்ற அப்பாவை அம்மா பார்த்தாள்.

"சரிசரி வாங்கிட்டுவாரேன்.. முறைக்காதே" என்றபடி அப்பா ரயிலிருந்து இறங்கி தண்ணி வாங்கச் சென்றார். தண்ணி வாங்கிட்டுவர்றதுக்குள்ள ரயில் கிளம்பிருச்சி. அப்பா உடனே மீதிகாசை வாங்கிக்காம ஓட்டமும் நடையுமாக ஓடிவந்துக் கொண்டிருந்தார். "அப்பா சீக்கிரம் வாங்கோ.. என்னங்க சீக்கிரம் வாங்க" என்று ரயிலிருந்து நாங்கள் கத்திக்கொண்டிருந்தோம்.

அப்பா ஒருவழியாக எங்கள் பெட்டிக்குவந்து ரயிலில் தொத்தி ஏறினார். "அப்பாடா.. அப்பா வந்தாச்சி" என்ற சந்தோசம் எங்களுக்கு. "சந்தோசமா இப்போ சந்தோசமா.. நா தான் அப்பவே சொன்னேன்ல அடுத்த ஸ்டேசன்ல வாங்கிக்கிரலாமுன்னு.. கேட்டாத்தானே.. ரயில் போயிருந்ததுன்னா தெரியும் சங்கதி.. இந்தா புடி தண்ணிய.." அப்பாவுக்கு கோபமா இருந்தது. அம்மா அருகில் இருந்துகொண்டு, "ஏ.. அப்பாவுக்கு கோவத்த பாரேன்.. அழகா இருக்குல்ல., அந்த மூக்கப்பாரேன்.. நல்லாருக்குல்ல" என்றபடி தண்ணிய அம்மா குடித்தபடி, "ஏட்டி.. அப்பாவுக்கு தண்ணி வேனுன்னா குடிச்சிட்டு கொடுடி" என்றாள் அம்மா அக்காவிடம்.

"ஆனாலும் உனக்கு ரொம்ப குசும்புதாம்மா.. நீயே அப்பாவுக்கு கொடுத்துக்கோ..உங்க ரெண்டுபேரோட சங்கதியில என்னய இழுக்கிற.. அடிவிழவா.. ம்ஹுக்கும் ம்ஹுக்கும்" என்று அக்கா தலையை வெடுக்கென திருப்பினாள்.

நான் இதையெல்லாம் கண்டுக்காம ரயிலில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தேன். ரயிலில் போவதென்றால் கொள்ள ஆசைதான். கூகூ.. கூக்கூ.. குச்சி..குச்சி..குச்சிகுச்சி.. கூ என கூவிக்கொண்டே தடக் தடக் என்ற சத்தத்துடன் போகும்போது ஜாலிதான். இப்ப நாங்க எங்க மாமி வீட்டுக்கு தின்னவேலிக்கு போயிக்கிட்டு இருக்கோம். அங்க மாமி, மாமா, கார்த்திக் அத்தான், வித்யா, ரவி இருக்காங்க.

அங்க, கார்த்திக்கூடயும், ரவிக்கூடயும் விளையாடிக்கிட்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது. அப்புறம் அந்த குட்டச்சி வித்யா இருக்காலே.. பயங்கரமான ஆளு, என்ன பண்ணுவா தெரியுமா.. எப்பப்பார்த்தாலும் சண்டபோடுவா, ஒரே போட்டிதான் எங்களுக்குள்ள. ஆனா அவ என்னையே குறுகுறுன்னு பாக்கும்போது என்னவோ ஒரு மாதிரியா இருக்கும்.

பக்கத்து வீட்டு ராஜ்க்கு நாங்க தின்னவேலிக்கு ரயில்ல போறது, அவனுக்கு ஒரே பொறாமையா இருக்கும். ஹே ஹே.. நாளைக்கு நாங்க தின்னவேலிக்கி போறோமேன்னு சொன்னதும் "ரொம்ப கோலி வுடாதடா, நாங்களும் எங்க மாமி வீட்டுக்கு போவோமில்ல.. உட்றா., உட்றா.. நல்லா வுட்றா கோலி" என்றதும் எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியல. ஆனா அவங்க மாமி வீடு எதோ ஒரு ஊருன்னு சொன்னான். பேரு தெரியல..

ர‌யில் தாம்பரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. "டேய்..டேய் குரு.. என்னடா ஒரு இடத்துல இருக்க மாட்டியா.. அங்கேயுமிங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கே.. கீழ விழுந்துடாதடா" என்று என்னை கைபிடித்து இழுத்துச் சென்றாள் அம்மா.

"அம்மா விடுமா..விடுமா" என்று நான் சொன்னதை கண்டுக்காம அம்மா இழுத்துச் சென்றாள். "டேய் என்னடா.. எங்கடா போனே.." அப்பா சத்தம் போட்டார். நான் உம்மென்று கீழே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பாவும் அம்மாவும் எதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அக்கா ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஹை.. அக்கா நா அங்க, அடுத்த கேரேய‌ஜ் வரைக்கும் போனேனே.. எத்தன எத்தன பேரு.. ரொம்ப ஜாலியா இருக்குது. வாரியா நாம போவோம். ஜாலியா இருக்கும்" என்று சொல்லியபடி அக்காவை அழைத்து சென்றேன். "டேய் டேய் இங்க இருடா.. எங்க போறீங்க.." என்று அம்மா சொன்னதை கண்டுக்காமல் நானும் அக்காவும் குடுகுடுவென ஓடினோம்.

ஒவ்வொரு பெட்டியா சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் சென்றதும் அக்கா, அம்மா இருக்கும் பெட்டிக்கு ஓடிவிட்டாள். சே.. அக்கா ஓடிட்டாளே என்று நினைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். அப்போது ரயில் நின்றது. சிலர் இறங்கினார்கள். சிலர் ஏறினார்கள். நான் அம்மா இருக்கும் பெட்டியில் சென்று பார்த்தால் அங்கே..

அங்கே நான் உக்கார்ந்திருந்த ஜன்னலோரத்தில் வேற ஒருத்தி உக்கார்ந்திருந்தாள். எனக்கு பயங்கர கோபம். "உன் இடம் போச்சா., போச்சா.. வெளிய போனில்ல.. உன் இடம் போச்சே" என்று எதிர் ஜன்னல் இருக்கையிலிருந்து அக்கா சொன்னதும் மேலும் கோபம் கோபமா வந்தது. என் இடத்தில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப‌வளை நெருங்கி அவளது தோளை திருப்பினேன் கோவத்துடன்.

உக்கார்ந்திருந்தவள் திரும்பி என்னை பார்த்து, கண்களால் என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். நான் அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தேன். டேய் என்னடா, எங்கபோனே.. இவன் எப்போதும் இப்படிதாங்க.. துருதுருன்னு இருப்பான்; பேரு குரு, செகண்ட் கிளாஸ் படிக்கிறான். பெரியவ காயத்ரி., ஃபோர்த் படிக்கிறாள் என்று அம்மா, அந்த பொண்ணோட அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"எங்களுக்கு ஒரே பொண்ணு., இவ பேரு மகாலட்சுமி. ரெண்டு படிக்கிறாள். நாங்க லீவுக்கு எங்கம்மா வீட்டுக்கு வருசாவருசம் போவோம்............" இருவரும் பேசியதில் தோழிகளாயினர்.

நான், ஆண்டி மடியில் இருந்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னவென்று தெரியவில்லை. உடனே அவள் என்னை திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள். "என் பேரு குரு; உன் பெயரென்ன" என நான் கேட்க, அவள் மெல்ல, "மகாலட்சுமி" என்றாள். "வாரியா விளையாடுவோமா.," என்றதும் அவள் "ஓ விளையாடுவோமா" என்றபடி என் கையை பிடித்தபடி வந்தாள். நாங்கள் இருவரும் நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அவள், "அம்மா தேடுவாங்க., போவோமா" என்றாள். நானும் எதுவும் சொல்லாமல் அவள் பின்னே சென்றேன்.

அவளுக்கு என்னை ரொம்ப பிடித்துப்போனது. என் அருகிலே இருந்தாள். சில மணி நேரங்கள் கழிந்திருக்கும், "அப்போ நாங்க போயிட்டுவாரோம். நீங்க ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க.. பக்கத்துலதானே ஒரு தடவை எங்க வீட்டுக்கு வாங்க.. கிளம்புறோம்" என்றபடி மகாலட்சுமியின் அம்மா எங்கம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எங்கம்மாவும், "கண்டிப்பா உங்க ஊருக்கு வாரேன். போன் பண்ணுங்க" என்றாள்.

அவளும் அவங்கம்மாவும் அப்பாவும் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். எதோ என்னில் மாற்றம். நானும் அவர்கள் பின்னால் சென்றேன் என்னையும் அறியாமல்.

"டேய்.. டேய் குரு இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க.. வாசல்ல நிக்கிறியே., வாடா உள்ள" என்றபடி அம்மா என் கையை பிடித்து இழுத்து வந்தாள்.

கூகூ.. கூக்கூ.. குச்சி..குச்சி..குச்சிகுச்சி.. கூ என கூவிக்கொண்டே சென்றது ரயிலுடன் என் மனமும்.

,

Post Comment

Tuesday, October 19, 2010

குழந்தைகளின் மனசு - மனைவி எழுதிய கட்டுரை

சின்ன வயசிலேருந்தே நமக்கு ஒரு விசயத்தில் பயம் இருக்கும். அது நமக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அப்போது தெரியாது. சிறு குழந்தைகள் அதுவேணும் இதுவேணும் என்று அடம்பிடிக்குமபோது பெற்றோர்கள் சிலர் அதட்டி வைத்திருப்பார்கள். உடனே குழந்தைகள் சமாதானமாகி விடுவார்கள்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து குழந்தைகளின் ஆசையை நிவர்த்தி செய்வார்கள். ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்கும் பொருள்களை வாங்கிக்கொடுக்க முடியாத சூழ்நிலைகளில் இருப்பார்கள். அதனால் குழந்தைகளை சாக்குபோக்கு சொல்லி சமாளிப்பார்கள். சிலர் சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லி புரியவைப்பார்கள். குழந்தைகள் அதையும் மீறி கேட்கும்போது சிலர் அதட்டி வைப்பார்கள்.

அடம்பிடிக்கும் சேட்டை செய்யும் குழந்தைகள் பயம்காட்டி வைப்பார்கள். எல, நீ சேட்டை பண்ணினா அந்த பூச்சாண்டி சாக்கு (கோணிப்பை) வச்சிருக்கான்பாரு.. அதுல புடிச்சிட்டு போயிருவான்.. புள்ள புடிக்கிறவன் நம்ம தெருவுல அலையுறான். கவனமா இருந்துக்கோ.., அந்த பல்லு நீண்டுருக்குமே ஒத்தக்கண்ணு தாத்தாக்கிட்ட‌ பிடிச்சி கொடுத்திரவா.. முக்கூட்டு லெப்ப புடிச்சிக்கிட்டு போயிருவாரு., மோதினாரு வந்துருவாரு.. இப்படியெல்லாம் சேட்டை பண்ணுற பிள்ளைகளை சமாளிப்பதற்கு சொல்லி வச்சிருப்பாங்க..

வெங்காயத்தை தட்டி கண்ணுல ஊத்திருவேன் அப்படின்னு சொல்லி பயங்காட்டுவார்கள். நான் சிறுவயதில் எங்க நன்னி (அம்மம்மா) வீட்டுக்கு போயிருக்கும்போது சேட்டை பண்ணும்போது இப்படித்தான் வெங்காயத்தை தட்டி கண்ணுல ஊத்திருவேன் என்று பயங்காட்டும்போது அத கண்ணுல ஊத்தும்போது கண்ணு தெரியாம போயிருமோ என்று நான் பயப்படுவதுண்டு. ஆனா ஆக்சுவலா வெங்காயம் கண்ணுக்கு ரொம்ப நல்லது என்று பெரிய பையனான‌தும் தெரியவரும்போது அடடா.. சே.. இது தெரியாம நாம பயந்துல்ல இருந்திருக்கிறோம் என்று அசடு வழிவதுண்டு.

அதுபோல அங்கே பள்ளிவாசல்ல உள்ள மோதினாருக்கு கழுத்து சரிந்து இருக்கும். அது பிறவியிலே இருந்ததா..இல்லையான்னு எனக்கு தெரியாது. அவரை கண்டாலும் எனக்கு பயம்தான். அதேமாதிரி எங்க வீட்டுக்கு வரும் சலவைத் தொழிலாளிக்கும் பயம்தான். ஏன்னா அவர், வெத்தலை பாக்கு பொட்டியில் பாக்குவெட்டி வச்சிருப்பார். நான் சேட்டை பண்ணும்போது பாக்குவெட்டியை கொண்டு மூக்கை வெட்டிருவேன்னு பயம்காட்டுவார். எங்கப்பா, நன்னி வைத்திருக்கும் வெத்தலைபொட்டியிலும் பாக்குவெட்டி இருக்கும். பயப்பட மாட்டேன். ஆனால் சலவைக்காரர் வச்சிருக்கிற பாக்குவெட்டியும் அவர் கண்ணை உருட்டி பயம் காட்டும்போது ஆட்டோமெட்டிக்கா எனக்குள் பயம் தொத்திக்கும்.

சேட்டை பண்றவங்களை சமாளிக்கத்தான் இந்தமாதிரியெல்லாம் பயங்காட்டுவாங்க. ஆனால் அவையெல்லாம் குழந்தைகளின் நன்மைக்காகத்தான். ஆனால் குழந்தைகள் அவற்றையெல்லாம் மனதில் போட்டு குழப்பிக்கொண்டு அதையே நினைத்துக் கொண்டு இருப்பார்கள். மேலும் சில குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தங்களை பயங்காட்டி அடிக்கிறார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு பெற்றோரை வெறுக்கும் குழந்தைகளும் உண்டு.

குழந்தை மனசு என்பது பசுமரத்தாணிபோல. அதில் நாம் என்னவெல்லாம் எழுதுகிறோமோ அதெல்லாம் ஆழமாக பதிந்து விடும்.

பயம் என்பது எல்லோர் மனதிலும் இருக்கும். ஆனால் சிலர் எதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உள்ளூர பயம் இருக்கும். சிலருக்கு சின்ன சின்ன விசயங்களிலும் பயம் இருக்கும். பல்லி, கரப்பான்பூச்சி, யானை, ரயில்பூச்சி, நசுக்கோட்டான் (கம்பளிப்பூச்சி) இப்படி நிறைய இருக்கும். பாம்பு இதில் விதிவிலக்கு.. ஏன்னா பாம்பைக்கண்டால் படையே நடுங்கும். பாம்புக்கு பயப்படாதவ‌ங்க யாரும் கிடையாது. யானை 2 தெருவுக்கு முன்னாடி வந்துக்கிட்டு இருக்கு என்றால் இங்க உள்ளூற பயம் எட்டிப்பார்க்கும்.

சில பேர் எல்லா விசயங்களுக்கும் பயப்படுவாங்க.. எதுக்கெடுத்தாலும் பயப்படுவாங்க.. உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் நம்ம தெனாலி கமலஹாசன் போல..

என் மனைவி, அவங்க சின்ன வயசுல பயந்த அனுபவத்தை பற்றி குறிப்பிடும்போது....

இதோ அவங்களே தொடருகிறாங்க..

எனக்கு ஒரு சில விசயங்களில் பயம் ஏற்படுவதுண்டு. எங்க ஊர்ல ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழா நடைபெறுவதுண்டு. விதவிதமா மாறுவேடங்கள் போட்டுக்கொண்டு பவனி வரும்போது பார்க்க நல்லாருக்கும். பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு வேண்டிக்கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்ற பல மாறுவேடங்களில் பவனி வருவார்கள். ஆனால் முகமூடி போட்டுக்கொண்டு அருகில் வரும்போது நமக்கு பயமாக இருக்கும்.

சின்ன வயசுல தசரா பார்க்க எங்க வாப்பா என்னையும் எங்க அக்காவையும் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது நாங்க ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, எங்கவாப்பா பக்கத்திலிருந்த கடைக்கு டீக்குடிக்க சென்றுவிட்டார். பின்னாடியே எங்க அக்காவும் ஓடிவிட்டாள். நான்மட்டும் மெய்மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது புலிவேசம் போட்ட ஒருவர் என் பக்கம்வந்து கையை தொட, நான் வீல் என்று கத்தி மயங்கி கீழே விழுந்துவிட்டேன்.

எனக்கு ஒருவாரம் கடும்காய்ச்சல்.

பயம் என்பது ஒருவித உணர்வு. அது நம் மனதை பொறுத்து அமைகிறது.
நம் மனதை பயம் தொற்றிக் கொள்ளும்போது அதிகப்படியான ஆற்றல் நம் உடம்பில் தேவைப்படுகிறது. உதாரணமாக, பயப்படும் நேரங்களில் இதயம் வேகமாக துடிக்கிறது. இதயத்துக்கு அதிகப்படியான ரத்தம் தேவைப்படும்போது உடம்பில் உள்ள மூளை உட்பட எல்லா உறுப்புகளும் சுறுசுறுப்பாகிறது. இதனால் ரத்தஓட்டம் மேலும் அதிகரிக்கிறது. இதயம் ஸ்தம்பித்து விடுகிறது.

அதிகமாக‌ பயப்படும் சூழ்நிலைகளில், சிலருக்கு ஹார்ட்அட்டாக்கே வந்துவிடுகிறது.


பிள்ளைகளுக்கு சிறுவயதிலே நல்ல சிந்தனைகளையும் நல்ல நல்ல கதைகளை சொல்லலாம். தியானங்களை கற்றுக் கொடுக்கலாம். மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள் என்று அறிவுறுத்த வேண்டும். கஷடமான சூழ்நிலை ஏற்படும்போது தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையை சொல்லி புரியவைக்கலாம். அதேமாதிரி அந்த சூழ்நிலைகளுக்கு அவர்களையே தீர்வு காண சொல்லலாம்.

பிள்ளைகளும், பெற்றோர்கள் அடிக்கிறார்கள், பயமுறுத்துகிறார்கள் என்று நினைக்கக் கூடாது. தங்களது பெற்றோர்கள் நம் நன்மைக்குத்தான் சொல்றாங்க என்று நினைத்து பெரியவர்களின் வழிகாட்டலில் செல்லலாம். அது நமக்கு முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னால் பெரியவங்களானதும் நம்முடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும்.

**************

அன்பு நண்பர்களே!!.. இந்த கட்டுரை என் மனைவி எழுதிய கட்டுரை.

,

Post Comment

Thursday, October 14, 2010

சிவா - (சவால் சிறுகதை)

"அம்மா சீக்கிரம் வாம்மா., நா கிளம்பணும், நேரமாச்சி" என்று அம்மா லட்சுமியை சிவா அழைத்தான். "இருடா, செத்த நேரம் பொறு, ராகு காலம் முடியட்டும். அப்புறமா கிளம்புப்பா" என்றாள். "என்னம்மா இதெல்லாம் பாத்துக்கிட்டு., இன்னும் அந்த காலத்துலேயே இருக்கீங்களே.. சே" என்று சிவா சொன்னான்.

"போடா உனக்கெங்க இதெல்லாம் தெரியப்போவுது.. சரி சரி.. பாத்து பத்திரமா போயிட்டு வா. புது இடம் புதுபுது ஆளுங்க; எல்லாத்தையும் அனுசரிச்சி நடந்துக்கணும். யார்க்கிட்டயும் கோவப்படக்கூடாது. உடம்ப பாத்துக்கோ.. எப்போதும் கவனமா இருக்கணும். உன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணனும். வீட்டுக்கடனையெல்லாம் அடைக்கணும். நாங்கெல்லாம் உன்னநம்பித்தான் இருக்கிறோம். சரிப்பா நீ போயிட்டுவா, அடிக்கடி போன் பண்ணிக்கோ சரியா போயிட்டுவா" என்று லட்சுமி சொன்னதை சிவா கேட்டு தலையாட்டினான்.

"அம்மா சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டியா.. நல்லபடியா போயிட்டுவாப்பா.." என்று அப்பா மூர்த்தி சொன்னார்." போயிட்டு வாரேன் ப்ரியா, காயத்ரி.. அப்பா அம்மா சொல்படி கேட்டு நல்லாருக்கணும். அப்பா அம்மாவ கவனமா பாத்துக்கோங்க" என்று சொல்லியவாறே தங்கைகளிடம் விடை பெற்றான் சிவா.

சிவா ஒரு வேலையில்லா பட்டதாரி.. எம்எஸ்சி கம்யூட்டர் சயன்ஸ் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறான்.

சென்னை நகரம் அப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருந்தது. என்ன இனிமையான காலைப்பொழுது. அந்த இனிமையை அனுபவித்தபடி பஸ்ஸிலிருந்து இறங்கினான்.

************

"ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்.." போன் அலறிக்கொண்டிருந்தது. யாரு இந்த நேரத்துல.. சே காலைத்தூக்கம் போயிருச்சே.. - கணேஷ் பெட்சீட்டை உதறியபடி எழுந்தான்.

"ஹலோ யாரு.. இந்த நேரத்துல போன் பண்றீங்க.." என்றவனுக்கு "டேய் நாந்தான்டா பரந்தாமன் பேசுறேன்.. என்னடா இன்னும் தூக்கம்.. சீக்கிரம் கிளம்பிவாடா.. இன்னக்கி நியூ அப்பாயிண்ட்மென்ட்ஸ் எல்லாம் இருக்கு.. நா வேற போர்டு மீட்டிங்குக்கு போகணும்.. நிறைய வேல இருக்கு.. சீக்கிரம் வரல.. தேடி வந்து உதப்பேன்.. " என்று பரந்தாமன் சொன்னார்.

"பாஸ்.. இதோ வந்துடுறேன் பாஸ்.. இன்னும் அரைமணி நேரத்தில அங்க இருப்பேன்" என்று சொல்லியபடி அரக்க பரக்க கிளம்பினான். கணேஷ் பரந்தாமனுக்கு உதவியாளராக வேலை செய்கிறான். மாதம் பதினைந்து ஆயிரம் சம்பளம். மனைவி, ஒரே செல்ல மகன் என்று அளவான குடும்பம்.

"என்னங்க என்னங்க காபி சாப்பிடுங்களேன்.. " - பரந்தாமனின் மனைவி காமாட்சி.

"இன்னக்கி நிறைய வேலைகள்.. நினைச்சி பார்க்கும்போது டென்சனா இருக்கு.. இந்த கணேஷ் வருவதற்கு லேட்டாக்கிட கூடாதே., ஆமா காமினி என்ன இன்னும் எழுந்திருக்கலியா.. " - பரந்தாமன்.

"பாவம்ங்க கணேஷ்.. நல்ல பையன்., கல்யாணமாகி 2 வருசம்தான் ஆகுது. ஆனாலும் நீங்க இப்படி பண்ணக்கூடாது. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளையுறான். காமினி எழுந்திருக்க இன்னும் ஒரு மணி நேரமாகும்." - காமாட்சி.

"உம்பொண்ணுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கிறே.. பாத்துக்கோ., பின்னாடி வருத்தப்படுவே.." என்று சொல்லியபடியே ரூமுக்குள் சென்றார் பரந்தாமன்.

"ஹலோ யார் பேசுறது.. "
"அய்யா நா மாரிமுத்து பேசுறேன். "
"என்னப்பா விசயம்.."

"அய்யா.. நாம அன்னக்கி ஒரு இடத்தை பார்த்தோமில்ல.. அந்த இடத்துக்கு சொந்தக்காரன் மசியமாட்டேங்குறான். நானும் பேசிப் பாத்துட்டேன். நம்ம வழிக்கி வரமாட்டேங்குறான். என்ன செய்யலாம் அய்யா.. "

"டேய் என்னடா இது சின்னப்புள்ளத்தனமா சொல்லிக்கிட்டு இருக்கே.. வழிக்கு வரலைன்னா நம்ம ஆள்களோட போயி ரெண்டு தட்டு தட்டிரு.. அப்புறம்பாரு தன்னால வழிக்கு வந்துருவான். ‍‍"

************

சே.. வருகிற பஸ்லாம் கூட்டமாயிருக்கே.. சரி சரி இந்த பஸ்ல ஏறிருவோம். அப்போதான் கம்பெனி இன்டர்வியூக்கு சீக்கிரம் போகமுடியும் என்று நினைத்தபடியே சிவா கூட்டமாக இருந்த 12பி பஸ்ஸில் அடித்துபிடித்து ஏறினான்.

ஏம்ப்பா படியில நிக்கிறவங்கெல்லாம் உள்ள ஏறிவாங்க.. டிக்கெட் டிக்கெட் கேட்டு வாங்குங்க என்று கண்டக்டர் குரல் கொடுத்து கொண்டிருந்தார்.

சிவா படியிலிருந்து மேலேறினான். கால் வைக்க இடமில்லை. ஆட்கள் ஒருவருக்கொருவர் ஒட்டிக்கொண்டு மேலே உள்ள கம்பியை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தனர். அந்தளவுக்கு நெருக்கடி.

தேனாம்பேட்டை நாலாவது சிக்னல் எது என்று சிவா கண்டக்டரிடம் கேட்டுக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினான்.

சிறிது தூர நடைபயணத்தில் உள்ள அந்த பெரிய பில்டிங் உள்ளே, பரந்தாமன் எக்ஸ்போர்ட் அன்ட் இம்போர்ட் கம்பெனி சிவாவை வரவேற்றது.

"ஐ யம் சிவா, ப்ரம் திருநெல்வேலி. இன்டர்வியூக்காக வந்திருக்கிறேன்" என்று அங்குள்ள ரிசப்சனிஸ்ட்டிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"பிளீஸ் டேக் யுவர் சீட்., கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இப்ப கூப்பிடுவாங்க" என்றாள் ரிசப்சனிஸ்ட் புன்னகை மாறாமல். அவள் போனில் பேசும் அழகை ரசித்தபடியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான் சிவா.

இன்டர்வியூவில் சிவாவின் நேர்த்தியான பதில்களும் அவனுடைய நடவடிக்கைகளும் பரந்தாமனுக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்தது.

"சிவா., உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. நீங்க நாளைக்கே வேலையில சேந்திருங்க.. அப்புறம் தங்குவதற்கு வசதிகள், வேலை எப்படி என்று எல்லாம் பிஏ கணேஷ்க்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. எதுவும் சந்தேகமென்றால் கேட்கலாம்."

"ரொம்ப தேங்க்ஸ் சார்.." என்றவனுக்கு "தேங்க்ஸ் எல்லாம் எதுக்குப்பா., வேலையில சின்சியரா இருங்க, அது போதும்.. ஹா ஹா ஹா" என்று சிரித்தார் பரந்தாமன்.

***********

ஹைய்யா, வேலை கிடைச்சிருச்சி.. இனி கவலையில்லை என்று மனதில் மகிழ்ச்சி பொங்க வந்த சிவா எதிரே வந்த ஆளை கவனிக்காமல் மோதிவிட்டான். இருவரும் கீழே விழுந்தனர். சுதாரித்து எழுந்த சிவா எதிரே நிற்பவளை பார்த்து சொக்கிப்போய் மதிமயங்கி நின்றான்.

"ஏய் மிஸ்டர் கண்ணு தெரியல..............."என்று காமினி சிவாவை பார்த்து திட்டிக்கொண்டே இருந்தாள். எதுவுமே காதில் வாங்காதவன்போல அவளையே பார்த்தபடியே நின்றிருந்த சிவாவின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளை கேட்டு பிரமித்து நின்றாள் காமினி.

"ஐ லவ் யூ... ஐ லவ் யூ.."

காமினி சிவாவை முறைத்துப் பார்த்தபடியே சென்றதும் சுயநினைவுக்கு வந்தவனாக அவள் போகும் திசையை பார்த்த சிவாவுக்கு தூக்கிவாரி போட்டது.

ஆஹா.. அவள் எம்டி ரூமுக்குள்ள போறாளே.. வசமா மாட்டிக்கிட்டோமே.. என்று நினைத்தபடியே சென்றவன் எதிரில் கணேஷ் நின்று கொண்டிருந்தான். "என்ன பாஸ் பார்த்தஉடனே லவ்வா.. அதுவும் எம்டி பொண்ணுக்கிட்டே லவ்வ சொல்லிருக்கீங்க.. ரொம்ப தைரியம்தான்., ம்ம்ம்.. நடக்கட்டும்.. பார்த்து நடந்துக்கோங்க.. பெரிய இடம்......." என்று கணேஷ் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் சிவா.

ஒரு பத்துநிமிடம் கழித்து எம்டி ரூமிலிருந்து காமினி வெளிப்பட்டாள். கோபமாய் சிவா அருகினில் வந்தாள்.

"ஹலோ உங்க பேரு சிவாவா.. உங்கள பத்தி அப்பா சொன்னாரு. வேலைக்கி சேர்ந்த அன்னக்கே தகிடுதத்தம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா.. இருங்க அப்பாட்ட சொல்லிக்கொடுக்கிறேன்." என்றாள் சிவாவிடம் கோபமுடன்.

"சாரி, நீங்க எம்டி பொண்ணுன்னு தெரியாது. உங்கள முதன்முதல்ல பார்த்ததுமே எனக்குள்ள ஒரு மாற்றம். எதோ பத்துவருசம் பழகினமாதிரி ஒரு பிலீங். உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. என் மனசுல நீங்கதான் நிறைஞ்சிருக்கீங்க.. காதல் என்பது ஜாதி, மதம், அந்தஸ்து பாக்காம வரக்கூடியது. உங்கள முதல்ல பாக்கும்போதே காதல் வந்திருச்சி.. என்னோட மனசுல இருந்ததை சொல்லிட்டேன். என்னை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம்" என்று சிவா காமினியிடம் சொன்னான்.

அதற்கு விடையாய் காமினியிடமிருந்து புன்முறுவல் கிடைத்ததை அறிந்த சிவா சந்தோசத்தில் துள்ளினான். "சிவா, ஒரு நிமிசம்!!.. நானும் உங்க நிலமையில்தான் இருக்கிறேன்" என்று காமினி சொன்னதும் இருவர் மனதும் ரெக்கைக் கட்டி பறந்தது.

************

"டேய் மாரி.. நம்ம ஆளுகளையெல்லாம் எங்கடா.. நாளைக்கி ஒரு பார்ட்டி சிங்கப்பூர்ல இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திக்கிட்டு வாரான். அவனை எப்படியாவது மடக்கி அந்த தங்கத்தை அடிச்சிக்கிட்டு வந்துருங்க.. ஒரு நாலுபேர் மட்டும் போங்க.. ராயப்பேட்டைல சங்கர் ரொம்ப ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். அவன நேரம் பாத்து தூக்கிருங்க.. எந்த மிஸ்டேக்கும் இல்லாம பாத்துக்கோங்க நம்ம பேர் ரிப்பேர் ஆகிடக்கூடாது. காரியம் கச்சிதமாக இருக்கணும். எதாவது மிஸ் ஆச்சி.. தொலைச்சிடுவேன் தொலைச்சி.." என்றார் பரந்தாமன்.

"அதெல்லாம் தப்புஎதும் நடக்காம பாத்துக்கிறோம்.. அய்யா அதுவந்து... அதுவந்து..." என்று மாரிமுத்து தலையை சொறிந்தபடியே சொன்னான்.

"என்னடா அதுவந்து இதுவந்துன்னு சொல்லிக்கிட்டு.. பணம்தானே, நீ இதெல்லாம் செஞ்சி முடிச்சிட்டுவா, உனக்கு நிறைய தாரேன்" என்றார் பரந்தாமன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்கய்யா.. நா சொன்னா கோவிக்ககூடாது......" என்று மாரிமுத்து இழுத்தான்.

"என்னன்னு சொல்லித் தொலையேன்டா.. உசிர வாங்குதே" - பரந்தாமன்.

"அதுவந்து, நம்ம காமினியும் புதுசா வேலைக்கு வந்தானே சிவா., அவனும் லவ் பண்றாங்க‌ய்யா" - மாரிமுத்து

இதைகேட்ட பரந்தாமனுக்கு கண்கள் சிவந்தது.

"என்ன தைரியம் அவனுக்கு.. எங்கிட்ட வேலை பாத்துக்கிட்டு.. எம்பொண்ணயே லவ் பண்றானாக்கும். சரி அவன் கதையை நா பாத்துக்கிறேன்" - பரந்தாமன்.

"சரி அய்யா நா போயிட்டு வாரேன்" என்றபடி மாரிமுத்து சென்றான்.

சே என்ன செய்யலாம் இவனை.. இப்படி பண்ணிட்டானே., எவ்வளவு நம்பிக்கை அவன்மேல வச்சிருந்தேன்.

"ஹலோ யாரு கஜாவா.. எம்பொண்ணு பின்னாடி சிவான்னு ஒருத்தன் சுத்திக்கிட்டு இருக்கான். அவன நீ ரெண்டு தட்டு தட்டிரு" என்றார் பரந்தாமன் போனில் யாரையோ அழைத்து.

"சரிங்கய்யா.. நா பாத்துக்கிறேன்" என்றது மறுமுனையில் ஒரு குரல்.

மாரிமுத்துவும் பரந்தாமனும் பேசியதை ஒரு உருவம் திரைக்கு பின்னாலிருந்து கேட்டு அதிர்ச்சியானது.

*************

"சிவா நீ இன்னக்கி சாயங்காலம் பெசன்ட்நகர் பீச்சு பக்கத்துல இருக்கிற பார்க்கு வந்துடுவியா.. உன்ன பாக்கணும்போல இருக்கு.. உங்கிட்ட நிறைய பேசவேண்டியிருக்கிறது". என்றாள் காமினி சிவாவிடம்.

"வழக்கமா வர்ற இடம்தானே வந்துருவேன் காமினி" என்றான் சிவா.


"டேய் அதோ பாருங்கடா அதோ போறானே அவன்தான்.. தூக்கிரு" என்று கஜா சொன்னதும் ட்ரைவர் சீட்டில் இருந்தவன் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினான்.

"சிவா... சிவா.. தள்ளிப்போ.. கார் வேகமா வருகிறது.." என்று சிவா வரும் திசைக்கு எதிர் ரோட்டிலிருந்து காமினி கத்தியபடியே ஓடிவந்தாள்.

சிவா சுதாரிப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி எறியப்பட்டனர். ஏற்றிய கார் மின்னல் வேகத்தில் காணாமல் போனது.

"நா எங்கிருக்கேன் எங்கிருக்கேன்" என்று சுயநினைவுக்கு வந்தவளாய் கண்விழித்தாள் காமினி.

"மேடம் உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி இப்போ ராயபுரம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல இருக்கீங்க.. ஸ்ரைன் பண்ணிக்காதீங்க.. ஃபுல் ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லியபடி நர்ஸ் சென்றாள்.

"அய்யோ சிவாவுக்கு என்னாச்சின்னு தெரியலியே.. என்னால்தானே இப்படி ஆச்சி.. இப்போ என்ன செய்வேன். சிவா நீ எங்கிருக்க.." என்று காமினி கத்தியதும் நர்ஸும் டாக்டரும் ஓடிவந்தனர்.

"ஹலோ.. ஸ்ரைன் பண்ணாதீங்க., காம் டவுன். தூங்குங்க" என்று நர்ஸ் காமினியை சமாதானப்படுத்தினாள்.

"அதெல்லாம் முடியாது.. என் சிவாவுக்கு என்னாச்சின்னு தெரியல, நா போகணும்.. என்ன விடுங்க டாக்டர்.." என்று கூச்சலிட்டாள்.

டாக்டர் நர்ஸிடம் "இவங்களை பாத்துக்கோங்க" என்றபடி பக்கத்து வார்டுக்கு சென்றார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

**************

"அய்யா.. ஒரு சின்ன தப்பு நடந்துப்போச்சி.. நா சிவாவை தூக்கும்போது காமினி குறுக்கே வந்து விழுந்துட்டாள். அவளை லட்சுமி ஆஸ்பிட்டலில் சேத்திருக்காங்க.." என்றான்.

"அட சூப்பரா சொன்னவேலையை செஞ்சிருக்கியே.. வெல்டன். இந்தமாதிரி அடியாள் இருக்கிறவரைக்கும் என்னை யாராலும் அசைச்சுக்கமுடியாது ஹா ஹா ஹா ஹா.." என்று பலமாக சிரித்தார் பரந்தாமன்.

"அய்யா என்ன மன்னிச்சிருங்கய்யா., நா அடுத்த தடவ ஒழுங்கா செய்வேன். என்ன விட்டுருங்கய்யா" என்று கஜா பரந்தாமன் காலில் விழுந்து கதறினான்.

"தடிமாட்டு பசங்களா.. நீங்கெல்லாம் சோத்தை திங்கிறதுக்குதான் லாயக்கு.. சொன்னவேலையை அரைகுறையா செய்வீங்கன்னு தெரிஞ்சிதான் நானே சிவாவை அடிச்சி இங்க இழுத்துட்டு வந்துட்டேன். என் துப்பாக்கிக்கு வேலை கொடுத்திட்டீங்களேடா" என்று பரந்தாமன் சொல்லியபடி துப்பாக்கியை எடுத்து கஜாவையும் அவன் கூட்டாளியையும் சுட்டார்.

"டேய் மாரிமுத்து.. இத கிளீன் பண்ணிருடா.." என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது காமினி அங்கு வந்து சேர்ந்தாள்.

காமினியை அங்கே பார்த்ததும் "அய்யோ காமினி.. உனக்கு என்னாச்சி.. யாரோ கார் ஏத்திட்டாங்க என்றதும் பதறிவிட்டேன். ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்குள்ள நீயே...." என்று பரந்தாமன் சொல்லி முடிக்குமுன்னே காமினி கையை காட்டி நிறுத்தினாள்.

"என்ன வேஷம் கலைஞ்சிருச்சேன்னு பதறுகிறீங்களா அப்பா.. சே.. அந்த அப்பா என்ற வார்த்தையை சொல்றதுக்கே கேவலமா இருக்கு.. போதும் உங்க போலி பாசமெல்லாம்.. சொந்த மகளையே கார் ஏத்தி கொல்லப் பாத்திருக்கீங்களே.. நீயெல்லாம் ஒரு அப்பா.. தூ..." என்று காமினி சொன்னாள்.

"சரிதான் நிறுத்துடீ.. உட்டா பேசிக்கிட்டே இருக்க.. நா இப்படித்தான்.. சின்னவயசிலேருந்து கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லாத்தையும் கவுத்திட்டுதான். உன்ன பணத்தோட அருமை தெரியாமலே வளர்த்திருக்கேன் பாரு.. நீ இதுவும் பேசுவே இதுக்கு மேலயும் பேசுவே.. டேய் இவளையும் பிடிச்சி கட்டுங்கடா" என்று பலமாக சிரித்தார் பரந்தாமன்.

"சார் சார்,, எங்கள விட்டுருங்க சார்.. நாங்க எங்காவது கண்காணாம போயிருகிறோம்.. எங்கள சேத்து வையுங்க சார், பிளீஸ்" என்றான் சிவா.

"ஆமாம்பா.. எங்க காதலை பிரித்துவிடாதீங்க" என்றாள் காமினி.

சில நேர யோசனைக்கு பின்னர், "சரி சரி.. உங்க ரெண்டு பேரையும் விட்டுறேன். ஆனா.. நாளைக்கு கோகினூர் வைரம் கண்காட்சிக்கு வருது. சிவா நீ அதை எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் உங்கள விட்டுறேன்" என்றார் பரந்தாமன்.

"இல்ல நா போறேன் அப்பா" ‍- காமினி என்றதுக்கு சிவா, "நாந்தான் போவேன்" என்றான். "இல்ல முடியாது நாந்தான் போவேன் சிவா" என்றாள் காமினி.

அருகில் நின்றிருந்த பரந்தாமனின் கைகளில் இருந்த துப்பாக்கியை தட்டிவிட்டு சிவா கையிலெடுத்து,

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஹா ஹா ஹா ஹா.. ரெண்டு பேரும் சண்டையிடவேண்டாம். உன் காதலன் உயிரோட வேணுமென்றால் காமினி நீயே போ.." என்றார் பரந்தாமன்.

காமினி வைரத்தை எடுத்துவர மாரிமுத்துவுடன் கிளம்பினாள். மறுபடியும் சிவாவை கட்டிப்போட்டார்கள்.

**************

"ஹா ஹா ஹா ஹா.. இனி நாந்தான் இந்தியாவுலே பெரிய பணக்காரன். என்னையாரும் அசைக்க முடியாது.. ஆஹா என்ன அற்புதமா இருக்கு.. என் ராசா செல்லம்.. டேய் மாரி இங்கபாரேன்.. எவ்வளவு அழகா இருக்கு.." என்ற பரந்தாமனின் கைகளில் கோகினூர் வைரம் பளபளத்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"புலிக்கு பிறந்தது பூனையாகாதுன்னு நிரூபிச்சிட்டே காமினி. எனக்கு தப்பாம பிற‌ந்துருக்கே காமினி.. எவ்வளவு நாளா இதுமேல ஆசை.. தெரியுமா" என்ற பரந்தாமனின் கண்களில் ஆசை வெறி மிளிர்ந்தது.

காமினியை கட்டியணைக்க ஆசையோடு பரந்தாமன் வந்தார். திடீரென டமால் சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். காமினி கையில் வைத்திருந்த துப்பாக்கி பரந்தாமனின் மூளையோடு விளையாடியது.

பரந்தாமனின் உயிரற்ற உடல் மண்ணில் சரிந்தது.

*************

அன்பு நண்பர்களே!!.. இந்த சிறுகதையை நண்பர் பரிசல்காரன் நடத்தும் சிறுகதை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

,

Post Comment

Sunday, October 10, 2010

உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?.. (தொடர் பதிவு)

நேற்று நண்பர் "மங்குனி அமைச்சரிடமிருந்து" அவசர ஓலை! அதிலிருந்த சாரம்சம் கீழே!

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)

முஸ்கி : நண்பர்களே நேற்று "சந்தோஷ் பக்கங்கள்" இந்த பதிவை போட்டு இருந்தார், "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார், ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

For your quick referance:

http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால்...

"இந்த சுட்டியில்"

https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0

உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க பிளீஸ்!!

இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஐந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!

(நன்றி : சந்தோஷ் பக்கங்கள் + மங்குனி அமைச்சர்)


-------------------

டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த,
உடைந்த பொருட்களை தருகிறார்கள், உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை, கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து,
அயன் செய்து உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள்.
இல்லையென்றால் சும்மா இருங்கள். யாரும் உங்களை குறை
சொல்ல மாட்டார்கள்.
----------
உங்களின் அவசர வேலையின் நேரத்திலும், சில நிமிடத் துளிகள் ஒதுக்கி படித்து மனதால் புரிந்து கொண்டமைக்கு நன்றி!!

,

Post Comment

Saturday, October 9, 2010

கண்ணாடி வளையல்


அன்று உடைந்தபோது
மனதில் சந்தோசம் குடி கொண்டது..
காரணம் கேட்டால்
சொல்லத் தெரியவில்லை.

இன்று உடைகின்றபோது
மனதும் சேர்ந்து வலித்தது
காரணம் கேட்ட 2 1/2 வயது மகனுக்கு
சொன்னால் புரியுமா...

,

Post Comment

Thursday, October 7, 2010

இசை எனும் இன்பவெள்ளத்தில்...


ச..ரி..க..ம..ப..த..நீ.. சரிகமபதநீ.. என்ன இது ஸ்டார்ஜன் இசை கத்துக்கிறாரா என்று நீங்க கேட்பது எனக்கு கேக்குது.. ஆஹா! என்னப்பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்.. என்பது போல தமிழருக்கும் இசைக்கும் அப்படி ஒரு பொருத்தம். இசை என்பது இனிமையான ஒலி. இசை, மனதை லயிக்கவைத்து தன் வசப்படுத்தும். இசைக்கு மயங்காதோர் யாரும் கிடையாது என்றுகூட சொல்லலாம். நாம் மட்டுமில்லாமல் அந்த காலத்திலே சங்ககால தமிழர்களும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இசை அனைவரையும் கட்டிப்போடும் ஒரு வசீகரன்.

சங்ககால இலக்கியங்களிலும் இசை முக்கிய இடத்தை பிடித்திருந்தது. அதனால்தான் சங்ககால இலக்கியங்களை இயல் இசை நாடகம் என்ற மூன்று வகைகளாக பிரித்திருந்தனர். இசையை இனிமையாக வெளிப்படுத்தும் கருவிகள் இசைக்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இசை ஆய்வாளர்களின் கருத்துப்படி இசைக்கு ஐந்து கருவிகளால் உரிய ஓசைகள் உண்டாகின்றன. அந்தகால இசைக்கருவிகளை ஐந்து வகையாக பிரிக்கலாம்.

அவைகள்: தோல்கருவிகள், துளைக்கருவி, நரம்புகருவி, கஞ்சக்கருவி, மிடறு என்பனவாகும்.

தோல் கருவிகள்:

இந்த வகை இசைக்கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்டவை.

பெரும்பறை, சிறுபறை, பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வலையம், மொந்தை, முரசு, நிதாளம், கண்விடுதூம்பு, துடுமை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை.

மத்தளம்

இதற்குத் தண்ணுமை என்றும், மிருதங்கம் என்றும் பெயர்கள் உள்ளன. மத்து என்பது ஓசைப்பெயர். தளம் என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. ஆதலால் மத்தளம் என்று பெயர் பெற்றது.

குடமுழா

தோற்கருவிகளில் ஒன்றாகக் கூறப்படும் குடமுழா என்பது ஐந்துமுக வாத்தியம் என்று இப்போது கூறப்படுகிறது.இது இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல் மறைந்து விட்டது.

தவுல்

இது நாதசுரத்துடன் வாசிக்கப்படுகிற தோற்கருவி. அந்த காலத்தில் இதன் பெயர் மட்டூகம் என்றும் சொல்வார்கள்.

பதலை

இது தோற்கருவி இன்றைக்கு தபலா என திரிந்து வழங்குகிறது. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டு பிற்காலத்தில் மறைந்துவிட்டது. ஆனால் வடநாட்டில் தபலாவாக புகழ்சூடி இன்றும் இருக்கிறது.

முரசு

இது ஒரு ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல்கருவி. அந்தகாலத்தில் அரசர்களின் ஆணையை மக்களுக்கு அறிவிக்க பயன்பட்ட ஒரு தோல்கருவி. இன்றும் சில ஊர்களில் இருக்கிறது. பள்ளிவாசல்களில் மின்சாரம் இல்லாத நேரத்தில் முரசு அறிவித்து மக்களை தொழுகைக்கு அழைப்பார்கள்.

துளைக்கருவிகள்

இந்த வகை இசைக்கருவிகள் துளைகளின்மூலம் காற்றின் வழியாக இசையை தருவிக்கும் கருவிகள் துளைக்கருவிகள் எனலாம்.

* புல்லாங்குழல்
* முகவீணை
* மகுடி
* சங்கு
* தாரை
* கொம்பு
* எக்காளை
* எஆசருஅம்

புல்லாங்குழல்

இது மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது.

புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி.

இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.


நரம்புக் கருவிகள்

* யாழ்
* வீணை
* தம்பூரா
* கோட்டுவாத்தியம்
* சாரங்கி9

யாழ்

இது மிகவும் பழமையான இசைக்கருவி. இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது.

வேட்டைக்கு செல்லும் மக்களின் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம் என்று சொல்கிறார்கள். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.

சங்ககால இலக்கியங்களில் யாழுக்கு முக்கிய இடம் உண்டு. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

யாழில் 4 வகைகள் உண்டு.... பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ்.

வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன.

வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வீணையின் பாகங்கள்

குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

கஞ்சக்கருவிகள்

* கரம்

மிடறு கருவிகள்

* கற்தூண்கள் இசை.

அந்தகாலத்தில் இந்த மாதிரியான இசைக்கருவிகள் மக்களிடையே பயன்பட்டிருக்கின்றன. இப்போது அவை காலத்தால் மறைந்து விட்டன. சில வகையான இசைக்கருவிகள் இன்றும் பல ஊர்களில் இருக்கலாம்.

அவை நம்ம தாத்தா பாட்டி கால பொக்கிஷங்கள். ஆனால் இன்று அதன் இருப்பிடமோ பழைய சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம் என்று சொல்லப்படும் அரங்கு வீட்டில் தூசியோடு தூசியாக இருக்கின்றன.

இப்போவெல்லாம் மேற்கத்திய இசைகள் நம்மை ஆட்டிவைக்கின்றன. அதிலிருந்து வரும் இரைச்சல் தான் நம் காதை அதிரவைக்கின்றன. நம்முடைய காது 120 டெசிபல் அளவு சத்தத்தைதான் உள்வாங்கும் என்று சொல்லப்படுகிறது. இசையென்ற பெயரால் வரும் இரைச்சல் ஒலிகள் நம் காதுகளை தாக்காதவண்ணம் நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

நம்முடைய அருகாமையில் நிறைய அந்தகால பொக்கிஷங்கள் இருக்கலாம். அவற்றை பாதுகாத்து இனிமையான இசையினை கேட்டு மகிழுங்கள்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்