"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா""பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்இளைப்பில்லை காண் என்று கும்மியடி"பாரதியாரின் இந்த பாடல் வரிகளை படிக்கும்போது அதற்கான உண்மையும் ஒளிந்திருக்கிறதை காணலாம். ஆம்! இந்த நூற்றாண்டில் பெண்கள் செய்துவரும் சாதனைகளை பட்டியலிட்டு காட்டலாம். அந்தளவுக்கு பெண்கள் முன்னேறிவருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?.. என்று சொன்ன காலமெல்லாம் மலையேறி விண்ணுக்கு சென்று சாதனைகள் ஆற்றிவரும் பெண்களை இன்று கண்கூடாக பார்த்து வருகிறோம்.
பெண்கள் நாட்டின் கண்கள். ஒரு சமுதாயம் முன்னேறுகிறது என்றால் அதில் கண்டிப்பாக பெண்களின் பங்கு இன்றைய சூழலில் இன்றியமையாததாகிறது. பெண்களுக்கு ஆண்டவன் நிறைய ஆற்றல்களை கொடுத்துள்ளான். பெண்கள் பலவித கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து வெற்றிநடை போடுகின்றனர். ஆண்களைவிட பெண்களுக்கு அறிவு அதிகம். வீட்டு நிர்வாகத்திலிருந்து நாட்டு நிர்வாகம்வரை திறம்பட செய்கிறார்கள். பெண்களுக்குதான் சந்ததிகளை உருவாக்குவதில் பெரும்பங்கு உண்டு.

குழந்தைகளை பத்துமாசம் சுமந்து பெற்று அவர்கள் பெரியவர்களாகும்வரை பேணிப்பாதுகாத்து வளர்ப்பது, அவர்களுக்கு தாய்ப்பாலுடன் அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்து, உலக அறிவை கற்றுக்கொடுத்து சமுதாயத்தில் நல்ல நிலமைக்கு கொண்டு வருவதுவரை பெண்களின் பாடு இருக்கிறதே அதனை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அத்தகைய பெண்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
இதேமாதிரி பொறுப்புகள் ஆண்களுக்கு கிடையாது எனலாம். பெண்களுக்குதான் நிறைய கஷ்டங்கள். சாகும்வரை அவர்களது பணி மகத்தானது. இப்படியெல்லாம் பெண்களை பற்றி பெருமைகளை சொல்லிக் கொண்டிருக்கும் நாம், அவர்கள் படும் கஷ்டங்களையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆணாதிக்கவாதிகளால் கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரத்துப் பெண்களும் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அந்த காலத்திலிருந்து சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவு மறுத்தல், ஈவ் டீசிங், பாலியல் தொந்தரவுகள், உரிமைகள் பறிக்கப்படுதல், கணவனால் கொடுமைகளுக்கு ஆளாவது இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்று மதியம் ஒரு முண்ணனி தொலைக்காட்சியில் பெண்களின் பிரச்சனைகளை அலசும் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது. அதில் குடும்பநலம், உளவியல், மனநலம் சிறப்பு பெண்மருத்துவர் கலந்து கொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளை சொல்லி, மருத்துவரிடம் அதற்கு தீர்வுகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் கேள்வி கேட்டார்கள். அவர்களில் சில பெண்களின் பிரச்சனைகள்...
* மேடம், என் கணவர் சில நாட்களாக என்னிடம் முகம்கொடுத்து சரியாகவே பேசமாட்டேங்கிறார். என் கணவர் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். எங்களுக்கு கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. கணவர் திருமணமான புதிதில் என்னிடம் அன்யோனியமாக பேசி கலகலப்பாக இருந்தவர் கடந்த 2 வருசமாக என்னை ஒதுக்குவதுபோல வேண்டாவெறுப்பாக நடந்து வருகிறார். நானும் அவரிடம் என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால் அவரோ, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை * மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒரு பெண்.,மேடம், என கணவர் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு 2 பையன்கள் இருக்கிறார்கள். அவருக்கு இத்தனை வருடங்களாலான பின்னும் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணுடன்தான் சுற்றுகிறார். அவளுடன் மணிக்கணக்கில் பேசுகிறார். எங்களிடம் எப்போதும் எரிந்துவிழுகிறார். என்னையும் என் பையன்களையும் அடிக்கிறார். நானும் பையன்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி பார்த்துவிட்டோம். திருந்தவே மாட்டேங்கிறார். ரொம்ப கஷ்டமா இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. * மேடம், நானும் என்கணவரும் ரொம்ப சந்தோசமாக குடும்பம் நடத்தினோம். எனக்கு தமிழ்நாடு, அவருக்கு கேரளா. நான் குழந்தை பெறுவதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். திரும்பி வந்து பார்க்கும்போது அக்கம்பக்கத்தினர் உன் கணவர் வேறொரு பெண்ணுடன் சுற்றுகிறார். நான் முதலில் நம்பவில்லை. பின்னர் அவரின் நடவடிக்கைகள் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எனக்கு அவர்மேல் கொள்ளை ஆசை. ஆனால் அவர் இப்படி செய்வது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதாவது வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள்.இந்த பெண்கள் கண்ணீருடன் தங்களின் பிரச்சனைகளை சொன்னபோது எனக்கும் ரொம்ப பீலிங்கா இருந்தது.
மருத்துவர் அவர்களின் பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.
இதையெல்லாம் கேட்கும்போது சே..! ஏன் இப்படி இருக்கிறார்கள்?. நம்மை நம்பிவந்த பெண்ணுக்கு இப்படியெல்லாம் துரோகம் செய்கிறோமே என்று தோன்றவில்லையே.. பெண்கள் எத்தனை பிரச்சனைகள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று நினைத்துப் பார்த்ததுண்டா..?.
இதுமாதிரிதான் சில பெண்களும் தங்கள் கணவர்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள்..
குடும்பம் என்பது கணவன் மனைவி என்ற இரண்டு தூண்களால் ஆனது. இதில் ஒன்று சரிந்தாலும் அது நம் சந்ததியினரை பாதிக்கக்கூடும். இரண்டு மனங்கள் ஒருமித்து வாழ்க்கையின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும்போது மனதுக்கு இதமாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்போது வாழ்க்கையில் ஒருபிடிப்பு, சந்தோச தருணங்கள் இவையெல்லாம் நம்மையறியாமலே வழிநடத்திச் செல்லும்.
பெண்கள் வீட்டிலே இருப்பதால் எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பல்வித சிக்கல்களை சமாளிக்கிறார்கள். நம்நாட்டில் உள்ள பெண்களுக்காவது அக்கம்பக்கத்தினர் பேச்சுத்துணைக்கு ஒரு உதவி செய்வதற்கு முன்வருவார்கள். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் குடும்பத்தோடு வசிக்கும் பெண்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் வீட்டினுள்ளேதான் இருக்க வேண்டும். பெண்களுக்கும், அவர்களின் கணவர், குழ்ந்தைகளுக்கும் என்று ஆளுக்கொரு சாவி வைத்துக் கொள்வார்கள். வீடுகள் எப்போதும் பூட்டியேதான் இருக்கும். வெளி இடங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடியாது. லீவு நாட்களில்தான் வெளியில் செல்ல முடியும். நினைத்தவுடனே ஊருக்கும் சென்றுவிடமுடியாது. ரொம்ப கஷ்டம்தான்.
நீங்கள் அனைவரும், சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சினேகா, கூட்டுக்குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த பெண் தனிக்குடித்தனம் சென்றவுடன் அவர் தனிமையினால் இறுக்கமான சூழ்நிலையை சந்தித்து மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அந்தமாதிரிதான் தனிமையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் நிலைமையும்.
பெண்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டால் குடும்பத்தில் எந்தவித குழப்பமும் வராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள். பிரச்சனைகளை மேலும் பெரிதாக்காமல் விட்டுகொடுத்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பெண்ணுக்கு பிடித்தவற்றை வாங்கிக்கொடுத்தோ அல்லது அவர்களின் வேலைகளில் பங்கெடுத்தோ பாருங்கள். ஒன்றும் வேண்டாம்., "நீ இன்னக்கி ரொம்ப அழகா இருக்கே..! நீ செய்த சமையல் ரொம்ப நல்லாருக்கு..!" இப்படி தினமும் பாராட்டுங்கள். உங்கள் மனைவி உங்களைவிட்டு செல்லமாட்டார்.
அதேமாதிரி கணவருக்கு பிடித்தவற்றை உணர்ந்து அதன்படி குடும்பம் நடத்தும் பெண்கள் வெற்றி காண்கிறார்கள். கணவரோ மனம்விட்டு பேசுங்கள். அதன்மூலமும் கணவர் திருந்தவில்லையென்றால் இருவரும் குடும்பநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்லுங்கள்.
கணவர் திருந்துவது அவர் கையில்தான் இருக்கிறது. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்மால் ஆறுதல் சொல்லத்தான் முடியும்.
*********
தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான இறுதி சுற்று முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. விருதுக்கு நான் பரிந்துரைத்த 3 இடுகைகளும் தேர்வாகியிருப்பது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.
எனது இடுகைகளையும் தேர்வு செய்த நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தினருக்கும் என் நன்றிகள்.
,
Post Comment