Pages

Saturday, January 8, 2011

சாலை விபத்துகளினால் இழந்தது என்ன?..

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம் என அறிவித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சாலையை கடக்கும்போதும் வாகனங்களில் செல்லும் போதெல்லாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய அவசியமாக இருக்கிறது. எப்போ என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. வெளியில் சென்றவர்கள் வீடு திரும்புவதற்கு போதும்போதும் என்றாகிவிடுகிறது. என்ன செய்ய?.. இந்த அவசரமான யுகத்தில் எல்லோரும் அவரவர் தேவைகளுக்காக அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார்மீதும் குற்றம் சுமத்தமுடியாது. விபத்து நடந்தபின்தான் அதைபற்றி யோசிக்கிறோம்.

அரசு பலவித சட்டதிட்டங்களை கொண்டு வந்தாலும் மக்கள் தங்களின் அலட்சியங்களினால் அதை மீறவேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியது. தலைக்கவசத்தின் விற்பனை அதிகரித்து போட்டாப்போட்டியான கதை நடந்தேறியதை நாம் அறிவோம். ஆனால் அதை யார் இப்போது பின்பற்றுகிறார்கள்?. இப்படி ஒவ்வொரு சட்டங்கள் கொண்டுவந்தாலும் வந்த புதிதில் ஆஹா ஓஹோன்னு இருக்கும். பின்காலப்போக்கில் வந்த சுவடே இல்லாமல் ஆகும். யாரும் முறையாக பின்பற்றுவதே கிடையாது.

அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு நாம் மதிப்பு கொடுத்து பின்பற்ற வேண்டும். டிமிக்கி கொடுக்கும் மக்களுக்கு அரசு கடுமையான விதிகளை ஏற்படுத்தி மக்களை பின்பற்ற செய்யலாம்.

இங்கே சவுதி அரேபியாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக இருக்கும். சாலைவிதிகளை எல்லோரும் பின்பற்றியே ஆகவேண்டும். மீறுவோர் மீது கடுமையான சட்டங்கள் பாயும். சாலையில் வேகமாக சென்றால் கண்காணிக்க ரேடார் பொருத்தப்பட்ட போலீஸ் கார்கள் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தவறு செய்யும் நபர்களை அடையாளம்கண்டு தண்டனை கொடுப்பார்கள். விபத்துக்கு காரணமானவர்கள் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்தே ஆகவேண்டும். இப்படி கடுமையான சாலைவிதிகளை வைத்திருந்தாலும் நம்மக்கள் அதை மீறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நம்மூரில் எல்லோரும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதைப் போல இங்குள்ளவர்கள் அனைவரும் கார் வைத்திருப்ப்பார்கள்.

இன்று மதியம் சாமான்கள் வாங்க பர்சேசிங் சென்றிருந்தோம். அப்போது சாப்பிடுவதற்காக தமிழ்நாட்டுக்காரங்க ஓட்டலுக்கு சென்றோம். அங்கே வேலை செய்யும் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நாங்களும் எங்களை அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களது பேச்சினில் சவுதி வாழ்க்கை குறித்தும், இந்திய வாழ்க்கை குறித்தும் இங்கு நாம் படும் கஷ்டங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சின்னவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

இவ்வாறாக பேசிக் கொண்டிருக்கும்போது அவரது காலைப் பார்த்ததும் அதிர்ச்சியானோம். பார்த்தால் செயற்க்கை கால்!. என்னஏது? என்று விசாரிக்கும்போது அவருக்கு ஒரு விபத்தில் கால் போய்விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். எப்படி என்று வினவியதில் அவர் சொன்னது..

"நான் 15 வருடங்களுக்கு முன் ஜித்தாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் நான் சாலையோரமாக உள்ள நடைப்பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சவுதி, காரில் சென்று கொண்டிருந்தவன் திடீரென நடைப்பாதையில் காரை செலுத்தி என் கால்மீது மோதிவிட்டான். எனது இடது கால் முறிந்து மிகவும் கஷ்டப்பட்டபோது என் கஃபில் (முதலாளி) என்னால் உனக்கு செலவழிக்கமுடியாது என்று சொல்லி 1000 ரியால்மட்டும் கொடுத்தான். அதை அவனிடமே கொடுத்து விட்டேன். மோதியவனும் கைவிட்டான். பின்னர் நான் இன்ஸூரன்ஸ் செய்திருந்ததில் அவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்."

இதே கேட்டதும் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

சென்ற வருடம் என்று நினைக்கிறேன். ஹசா டூ தம்மாம் நெடுஞ்சாலையில் ஊருக்கு செல்லும் பயணிகள் அடங்கிய டிராவல்ஸ் வேன்மீது ஒரு கார்மோதி 8 பேர் உயிரிழந்தனர். எதிர் முனையில் வேகமாக காரை ஓட்டிச் சென்ற சவுதி கட்டுப்பாட்டை இழந்து டிராக் மாறி தடுப்புகளையும் மீறி டிராவல்ஸ் வேனில் மோதியதில் வேன் கவிழ்ந்தது. எவ்வளவு வேகமாக வந்திருந்தால் அப்படிபோய் மோதியிருப்பான் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

**********

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஊரில் இருக்கும்போது டிவிஎஸ் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலக வேலையாக தூத்துக்குடிக்கு அடிக்கடி செல்வேன். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் பெரும்பாலும் ஃபுல்லாகித்தான் செல்லும். வண்ணார்ப்பேட்டை ரவுண்டானாவிலிருந்து ஏறும்போது உக்கார்ந்து செல்ல முடியாததால் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் செல்லமுடியும்.

ஒருநாள் மதியம், தூத்துக்குடி செல்வதற்காக வண்ணார்பேட்டையிலிருந்து பஸ் ஏறி சென்றேன். பஸ் எங்கும் நிற்காததால் பயணம் சுகமாகவே சென்றது. பஸ் வாகைக்குளத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு டாட்டா சுமோ வேகமாக எங்களது பஸ்ஸை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. டாட்டா சுமோவில் இருப்பவர்கள் எங்கள் பஸ்ஸை முந்துவதற்கு முயற்சித்தார்கள். அப்போது எதிரில் ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென டாட்டா சுமோக்காரர் எங்கள் பஸ்ஸை வேகமாக வந்து கட் அடித்து முந்தினார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் எங்கள் பஸ் டிரைவரும் எதிரே வந்த பஸ்டிரைவரும் சமயோசிதமாக பிரேக் அடித்து விபத்திலிருந்து காப்பாற்றினார்கள். இதனால் எல்லோரும் திகைத்தோம்.

இம்மியளவில் ஒரு விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து எல்லோரும் டிரைவரை பாராட்டினோம். சிறிது நேரத்தில் பஸ் தூத்துக்குடியை நெருங்கி அவுட்டரில் உள்ள கோரம்பள்ளம் என்ற இடத்தை அடைந்தது. அப்போது கோரம்பள்ளத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று விசாரித்ததில் ஒரு டாட்டா சுமோவும் பஸ்ஸும் விபத்துக்குள்ளானது என்று தெரிவித்தார்கள். அடடா.. சே..! டாட்டா சுமோவைப் பார்த்தால் அது எங்களை முந்திச் சென்ற டாட்டா சுமோ. ரொம்ப வருத்தமாக இருந்தது.

டாட்டா சுமோக்காரர் எதிரே வந்த அரசு டவுண் பஸ்ஸில் மோதி அந்த இடத்திலேயே இறந்து போனார். அவர் கூட வந்தவருக்கு பலத்த அடி. டவுண் பஸ் டிரைவருக்கும் பலத்த அடி. பஸ்ஸில் முன்பக்கம் இருந்த பெண்களுக்கும் தலை, முகம், கைக்கால்கள் எல்லாம் நல்ல அடி. பார்க்க ரொம்ப வருத்தமாக இருந்தது. சே..! ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் நாம் பார்த்த ஆள் இப்போது பிணமாகி விட்டாரே என்று எல்லோருக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.

இறந்தவரை பற்றி விசாரித்ததில் அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வடமாவட்டத்தில் (அவருடைய பெயரும், வேலைப்பார்த்த மாவட்டம் பெயரும் நினைவில்லை) ஒரு ஊரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர், பொங்கல் லீவுக்காக தன்னுடைய குடும்பத்தை காண தூத்துக்குடிக்கு வரும்போது இந்த துயர சம்பவத்தால் உயிரிழக்க நேர்ந்தது. இப்படியொரு சம்பவத்தால் அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை.

கொஞ்ச நேரம் பொறுமையாக வந்திருந்தால் இப்படி உயிரிழந்திருக்க வேண்டாமே!. சே..! எல்லாம் அவசரம். பொறுமையாக இருந்ததிருந்ததால் இப்படி நடந்திருக்குமா..!. சாலையில் வாகனத்தில் செல்பவர்களுக்கு பொறுமையும் நிதானமும் கண்டிப்பாக தேவை. இதுதான் அடிப்படையாக இருக்கமுடியும். இதனை கவனத்தில் கொண்டால் விபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாமே.

,

Post Comment

8 comments:

  1. பொறுமை இருந்தால் விபத்துக்களை தவிர்க்கலாம் நண்பா.
    அவசியமான நல்ல பதிவு.

    ReplyDelete
  2. விழிப்புணர்வை ஊட்டும் பகிர்வு.பகிர்தலுக்கு மிக்க நன்றி.இப்போதெல்லாம் தம்பி ஸ்டார்ஜனின் பதிவுகளில் நிறைய சமூகநோக்கு தெரிகின்றது.பாராட்டுகள்.

    ReplyDelete
  3. //விழிப்புணர்வை ஊட்டும் பகிர்வு.பகிர்தலுக்கு மிக்க நன்றி.இப்போதெல்லாம் தம்பி ஸ்டார்ஜனின் பதிவுகளில் நிறைய சமூகநோக்கு தெரிகின்றது.பாராட்டுகள்.//

    ஊர்ல போய் எலெக்ஷன்ல நிற்க போறது தெரியாதா ?!

    சமூக விழிப்புணர்வுள்ள பதிவு.

    ReplyDelete
  4. விழிப்புணர்வூட்டிய பகிர்வு சகோ.சவூதி ஹோட்டலில் சந்தித்தவரின் தன்னம்பிக்கை அவரை இந்தளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது.

    டாடா சுமோக்காரரின் விதி அன்று முடியனும்னு இருக்கு போல,அதான் யாராலும் காப்பாற்ற முடியலை.இப்படியும் தங்கள் முடிவை தாங்களே அவசர புத்தியால் தேடுபவர்களை என்ன்வென்பது?

    ReplyDelete
  5. அவசியமானதொரு நல்ல பதிவு.

    நல்லாயிருக்கீங்களா!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. விழிப்புணர்வை ஊட்டும் பகிர்வு.

    ReplyDelete
  7. இங்கு சென்னையில் தினம் ஒரு இடி அல்லது ஒரு முறைப்பு என்று நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கு. சிக்னல் போடும் முன்பே ஹாரன் அடித்து வெருப்பேத்தும் வண்டிகள்,எங்கே நிறுத்த வேண்டும் என்ற நியதியில்லாத ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள்.சாலை விதி முறை என்ற ஒன்று இல்லாதது போல் அதிகாரி முன் நடக்கும் அத்துமீறல்கள்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.திருந்த சான்சே இல்லை என்ற நிலையை நோக்கி அட்டகாசமாக ராஜ நடை போட்டு செல்கிறோம். :-(

    ReplyDelete
  8. சாலை விழிப்புணர்வு மிக மிக அவசியம்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்