Pages

Thursday, September 23, 2010

இக்பால் - சிறுகதை

தடக் தடக் என்று மும்பை எக்ஸ்பிரஸின் சத்தம் என்னை மேலும் தூங்கவிடாமல் அடிக்கடி இம்சித்தது. பக்கத்தில் இருந்தவர் வேறு என்னை எரிச்சலாக்கிக் கொண்டிருந்தார். ஆமா..தூங்கித்தூங்கி என்மேல் சரிந்து விழுந்துகொண்டிருந்தால் எரிச்சலாக இருக்காதா.. இருந்தாலும் இந்த பயணம் எனக்கு ஒரு சந்தோசத்தைதான் தருகிறது. புது அனுபவம்.

நேற்று மாலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பியது., மும்பைக்கு 36 மணிநேரமா இருந்தாலும் எப்படியும் நாளைக்கு அதிகாலையில் போய்ச்சேரும். சிலநேரம் லேட்டாகிருமோ என்ற பயம். சீக்கிரம் போகணும்.. இல்லைன்னா காரியமே கெட்டுரும். எல்லாம் நல்லபடியாக நான் நினைத்ததெல்லாம் நடக்கணும் ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு மெல்ல என் இமைகள் மூடியது.

உறங்கியும் உறங்காமலும் என்னுடைய‌ நினைவுகளும் பயணித்தது.

கஷ்டப்பட்டு படிக்கவைத்த வாப்பா எத்தனை நாள்தான் என் தேவைகளை நிறைவேற்றுவார்?.. அதற்காக நான் ஊதாரியாகவும் இருக்கவில்லை. படித்துமுடித்து வேலை தேடிக்கிட்டு இருக்கிறேன்.. வேலை என்னுடன் கண்ணாம்ப்பூச்சி ஆடிக்கிட்டு இருக்கு.. எனக்கு அடுத்து 2 தங்கைகளும் ஒரு தம்பியும் என்று அளவான குடும்பம்தான். ஆமா.. எதிலும் அளவுதான். நடுத்தர குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தானே..

"எலே.., உன்னமாதிரிதானே இஸ்மாயிலு படிச்சான்.., அவன் சட்டுபுட்டுன்னு வேலைக்கி போயி ஜம்முன்னு இருக்கான்., நீயும் இருக்கியே, நாலு இடத்துக்கு போயி பாரு.. சும்மா வீட்டிலேயே முடங்கிகிடக்காதலே" என்றார் வாப்பா.

"சும்மா சும்மா என்னையே குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காதீக.. நான் என்ன சும்மாவா இருக்கிறேன்... இஸ்மாயிலு நல்லா இருக்கான்னா அவன் வாப்பா லஞ்சம்கிஞ்சம் கொடுத்து வேல வாங்கிகொடுத்தாரு அவன் வாப்பா. இங்க இருந்தாதேனே கொடுக்கிறதுக்கு..ம்ஹும்" என்று தலையை திருப்பிக்கொண்டே அடுப்படிக்குள் சென்றேன்..

"என்னங்க.. சும்மா அவனை எதாவது ஒண்ணு சொல்ல‌லைன்னா தூக்கமே வராதே.. அவனே இப்பதான் வெளியில போயிட்டு வந்தான்.. இந்தால வாப்பா இந்த தோசைய சாப்பிடு" என்று அம்மா எனக்கு ஊட்டிவிட்டார்.

"அவனுக்கு செல்லம்கொடுத்து கெடுக்கிறதே நீதான், ஆயிஷா, பாத்திமா பசங்கள ஆளக்காணோம் எங்கே" என்று அப்பா அம்மாவை கடிந்தபடியே கேட்டார்.

"ஆயிஷா பக்கத்தூட்டுல பீடி சுத்திக்கிட்டு இருக்கா.. சின்னவ தையக்கிளாசுக்கு போயிருக்கா., பீர் பள்ளிக்கொடம் போயிருக்கான்" என்றார் அம்மா.

வாப்பாவுக்கு தன்மகன் ஒரு நல்லநிலைமைக்கு வரணுன்னு ஆசைதான். என்ன செய்ய.., அவர் பாக்குற வேலைக்கு வீட்டு செலவுக்கே பத்தமாட்டேங்குது. கடனஉடன வாங்கி கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்குகிறவருக்கு தன்மகன் வேலைக்கி போனால் கொஞ்சம் ஒத்தாசையா இருக்குமே. அதான் அவரது ஆற்றாமையை வெளிக்காட்டுகிறார். அவர குத்தம் சொல்லியும் பிரயோஜனம் இல்லை.

லொக்கு.. லொக்கு இருமல் சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்தேன். இப்போது என் பக்கத்தில் தூங்கிதூங்கி சரிந்து விழுந்து கொண்டிருந்தவனை காணவில்லை. வேறொரு வயசானவர் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு என் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கண்மூடி தூக்கத்தை வரவழைத்துக் கொண்டிருந்தேன்.

கண்அசந்த நேரத்தில் யாரோ என் தோள்பட்டையை உலுக்குவது இருந்தது. ரயில்தான் என்னை தாலாட்டுகிறது என்று இமைகள் திறக்க மறுத்தது. மறுபடியும் உலுக்கியதால் கண்திறந்து பார்த்தால் அந்த கிழவர் என் முகத்துக்கு நேராக நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தார். என்ன என்பதுபோல தலையாட்டி கேட்டதுக்கு அவர் பேசியது எதுவும் புரியல.. ஆனா அவர் ஹிந்தியில் நான் அடிக்கடி பான்பீடா போட்டு எச்சி துப்புவேன்.. இருமலா இருக்கு.. எனக்கு அந்த ஜன்னலோர இருக்கையை தா என்று சைகையில் கேட்டது ஓரளவுக்கு புரிந்தது.

தமிழ்நாட்டுக்காரங்களுக்கும் ஹிந்திக்கும் அப்படி என்ன லடாயின்னு தெரியலை.. எப்பவும் எதிரும்புதிரும்தான். அதுக்கு பெரிய வரலாறே இருக்கும்போல., அது எதுக்கு நமக்கு?.. அப்படித்தானே..

இருந்து தொலையும்வே.. சும்மா இடைஞ்சல் பண்ணிக்கிட்டு.. என்று மாறி உக்கார்ந்து மறுபடியும் தூக்கத்தை அழைத்தேன். எனக்கும் தூக்கத்துக்கும் ஒரே போட்டிதான்.

வாப்பாவும் எங்கெங்கோ, யார்ட்டயோ கேட்டுப்பார்த்தார். வேலை கிடைத்தபாடில்லை. சரி இனிமேலும் நாம் சும்மாவே இருந்தா அது வாப்பாவுக்குதான் கஷ்டம் என்று கிடைத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இன்ஷா அல்லாஹ், நமக்கு நல்ல நிலைமையை கண்டிப்பாக இறைவன் தருவான் என்ற நம்பிக்கையில் எங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதே பயணித்துக் கொண்டிருக்கிறது.

நேற்றுக்காலையில் எங்கவாப்பா அந்த செய்தியை சொன்னதும் எனக்கும் எல்லோருக்கும் சந்தோசமாக இருந்தது. "துபாயில் மெடிக்கல் பார்மஸி கம்பெனியில் வேலைக்கு ஆள் தேவை, நல்ல சம்பளம்" என்று வாப்பாவின் நண்பர் சொல்லி உன்பையனை அனுப்பி வை. இதுக்கு இன்டர்வியூ மும்பையில இருக்கு.. என்னோட சொந்தக்காரர்தான் இன்டர்வியூ பண்றார். ஒரு லட்டர் தாரேன். கொடுத்தா போதும். இன்னக்கி புதன், மும்பைக்கு ரயில் இருக்கு., இந்த ரயிலை விட்டா இனி சனிக்கிழமைதான். உடனே போகச்சொல்லு என்று சொன்னதும் ரொம்ப சந்தோசம் வாப்பாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்.

தடக் தடக் என்று ரயிலின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது. என் தூக்கமும் எக்ஸ்பிரஸ்ஸானது.

அதிகாலை, இருள் மெல்லமெல்ல விலகி சூரியன் தலைகாட்ட ஆரம்பித்திருந்தான்.

ர‌யில் இன்னும் சில நிமிடங்களில் மும்பையை நெருங்கி விடும்போல.. ரொம்ப வேகம்தான். நல்லவேளை எந்தவித தட‌ங்கலும் இல்லாமல் மும்பைக்கு வந்து சேர்ந்தேன். முகம் கழுவி பேக்கை கையில் எடுத்து ரயில் நிலையத்தில் இறங்க ரெடியாக இருந்தேன்.

காலை நேரம் இளம்வெயில் இதமாக இருந்தது. மும்பை வீதிகள் எல்லாமே புதிதாய் தெரிந்தன.

வாப்பாவின் நண்பர் காசிம் மரைக்காயர் கொடுத்த அட்ரஸை பார்த்து ஒரு டாக்ஸிக்காரரிடம் எனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் அட்ரசை கேட்டுக்கொண்டிருக்கும்போது யாரோ ஒருவன் என்மேல் வேகமாக வந்து மோதினான். மோதிய வேகத்தில் நான் நிலைகுலைந்து குப்புற விழுந்தேன். கை காலில் நல்ல அடி.. நான் எழுந்து சுதாரிப்பதற்குள் என் பேக்கை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான்.

"அய்யய்யோ.. நா என்ன செய்வேன். ஏய் நில்லுடா நில்லுடா என் பேக்கை கொடுத்திட்டுபோடா.. டேய் நாயே நில்லுடா.. " என்று கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். அவன் சந்துபொந்து எல்லாம் ஓடினான். நானும் விடலை. துரத்திகொண்டிருந்தேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் அவனை பிடிக்க முயற்சிக்கவில்லை. ஒருவேளை என் அரைகுறை ஹிந்தி புரியலியோ என்னவோ.. அவன் விடாக்கண்டனா இருப்பான்போல.. ஓடி மறைந்துவிட்டான்.

என் கால்கள் ஓடிஓடி களைத்துவிட்டது. "அய்யோ!!.. நான் இப்போ என்ன செய்வேன்.. போச்சே எல்லாம் போச்சி., யா அல்லாஹ்! இது என்ன சோதனை.. என் வாழ்க்கை போச்சி, படிப்பு போச்சி, சர்ட்டிபிகேட் போச்சி, பாஸ்போர்ட் போச்சி, காசிம் மரைக்காயர் கொடுத்த லட்டர் போச்சி, எல்லாம் ஒரு நிமிசத்துல போச்சி, எங்கவாப்பா என்மேல வச்சிருந்த நம்பிக்கை போச்சி, போச்சி, இனி நான் யார் முகத்துல முழிப்பேன்" என்று ரொம்ப வருத்தத்துடன் சிறுபிள்ளை போல நடுரோட்டில் அழுது கொண்டிருந்தேன்.

பின்னர் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்டர்வியூ நடக்கும் ஆபீஸ்க்கு போய் நம்ம நிலைமையை எடுத்துச் சொல்லுவோம். அல்லாஹ்வின்மேல் பாரத்தை போட்டு அந்த ஆபிஸுக்கு சென்றேன்.

நான் உள்ளே சென்று என்நிலையை எடுத்து விளக்கினேன். "மிஸ்டர் முகம்மது இக்பால், உங்க நிலைமையை நினைச்சா எங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு கேர்லஸ்ஸாக இருந்திருக்கீங்க, பாஸ்போர்ட், டாக்குமென்ட்ஸ் இல்லாம எங்களால ஒண்ணும் செய்யமுடியாது. சாரி, எங்களால் உங்களுக்கு உதவமுடியாது. நீங்க போயிட்டு வாங்க" என்றதும் மனதை தொலைத்துவிட்டு நடந்தேன்.

என்கால்கள் எங்கு செல்கின்றன என்று எனக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்தேன் ஒரு நடை பிணம்போல.. என்னை எல்லோரும் ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டே சென்றார்கள். அப்போது ஒரு கார் என்முன்னால் கீரிச் என்ற சத்தத்துடன் நின்றது. "ஏய் சாவுக்கிராக்கி, சாவுறதுக்கு என் வண்டித்தான் கிடைச்சதா" என்று அவன் வாய்க்கு வந்தபடி ஹிந்தியில் திட்டிவிட்டு சென்றான்.

பசிமயக்கம், தலை சுற்றியது, நிலை தடுமாறி கீழே விழுந்தேன். சுதாரித்து எழும்புவதற்குள் ஒரு கூட்டமே என்னை சூழ்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தது. அப்போது ஒருவர் கூட்டத்தை விலக்கி என்னருகே வந்தார். "என்னயிது! எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க.." காக்கி ட்ரஸ் போட்டிருந்த அவர் "போங்க போங்க" என்று எல்லோரையும் விலக்கிவிட்டார்.

என்முகத்தை உற்று நோக்கியவர் "உன் பெயரென்ன" என்றார். நான் "முகம்மது இக்பால்" என்றேன். "வா என்னோடு" என்று எங்கோ அழைத்து செல்கிறார்.

என் நிலையை அறிந்து அவர் எனக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்தார். "நீ மதராஸியா," என்று என்னிடம் விபரங்களை கேட்டறிந்தார். "உன் பாஸ்போர்ட் நம்பர் என்ன?.." என்றதுக்கு நான் சொன்னேன். உடனே அவர் "இந்தா உன் பேக், நான் ரவுண்ட்ஸ் வரும்போது ஒருத்தன் கையில் இந்த பேக்கை வைத்துக்கொண்டு திருதிருவென முழித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான். நான் அவனை மடக்கி விசாரித்து பேக்கை கைப்பற்றினேன். இந்தா பிடி உன்பேக்கை.. எல்லாம் சரியாயிருக்கான்னு பாத்துக்கோ" என்றதும் எங்கிருந்துதான் அந்த நீர் வந்ததோ கண்களிலிருந்து..

யா அல்லாஹ்! உனக்கே எல்லாப்புகழும்...

"சார், நீங்க ரொம்ப நல்லாருக்கணும்............................." மகிழ்ச்சியில் என்ன பேசினேன் என்றே தெரியல.. திக்குமுக்காடிப் போயிட்டேன். "பரவாயில்ல தம்பி.. எப்போதும் கவனமாக இரு.. உன் இறைவன் உன்னோடு இருக்கிறார். கவலை வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

25 நாட்களில் துபாய் செல்ல டிக்கெட்டும் விசாவும் வந்தது. காசிம் மரைக்காயர் பணம் கொடுத்து உதவினார்.

பிளைட்டில் ஏறி உக்கார்ந்ததும் இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்; கூூடவே என் வாழ்வும்....

  

Post Comment

25 comments:

  1. கதை அருமை, கலக்கிட்டீங்க, பின்னிட்டீங்க, அழகா எழுதறீங்க, டச் பண்ணிட்டீங்க, நீங்க எங்கயோ போய்ருவிங்க...

    அப்பாடா...எல்லா டெம்ப்ளேட் பின்னூட்டத்தையும் நானே போட்டேன்...
    ற யாராச்சும் போட்டீங்க நடக்கறதே வேற...

    (படிக்காமலே பின்னூட்டம் போடற சுகமே தனி...:)

    ReplyDelete
  2. எழுத்து நன்றாக இருக்கிறது, என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியல, என்னோட புரிதல், கடவுள் மேல் பாரத்தைப் போட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும் ன்னு சொல்லி இருப்பது போல் தெரிகிறது.

    ReplyDelete
  3. நல்லவர்க்கு, நல்லதே நடக்கும் (ஆமா இது உண்மைக்கதையா ஸ்டார்ஜன்)

    ReplyDelete
  4. நம்பிக்கை தானே வாழ்க்கை!. கதை நன்றாயிருக்கிறது

    ReplyDelete
  5. "காக்கை உட்கார பணம் பழம் விழுந்தது என்பார்கள்" கடவுளின் உதவி என்பதும் இப்படிதான்.. நாம் நம்புகிறோம் கடவுளால் நடந்தது என்று, ஆனால் உண்மையில் யாருக்கும் அப்படி நடப்பதே இல்லை...

    கடவுள் நமக்கு உபயோகமான ஒரு கருவி,, தேவைப்படும் இடத்தில் அதனை சரியாக பயன்படுத்திகொள்கிறோம்..

    ReplyDelete
  6. செந்தில் சொன்னதுபோல ஆண்டவனைக் கருவியாக்கிக்கொண்டு நல்ல மனதோடு நல்லதைச் செய்பவர்களுக்கு என்றும் நன்மையே.
    நம்பிக்கைதான் வாழ்க்கை ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  7. நம்பிக்கை தானே வாழ்க்கை!. கதை நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
  8. கதை மிகவும் அருமை!!

    ReplyDelete
  9. சார், நீங்க ரொம்ப நல்லாருக்கணும்............................." மகிழ்ச்சியில் என்ன பேசினேன் என்றே தெரியல.. திக்குமுக்காடிப் போயிட்டேன். "பரவாயில்ல தம்பி.. எப்போதும் கவனமாக இரு.. உன் இறைவன் உன்னோடு இருக்கிறார். கவலை வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    ........ ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.....

    ReplyDelete
  10. நாஞ்சில் பிரதாப் said...

    கதை அருமை, கலக்கிட்டீங்க, பின்னிட்டீங்க, அழகா எழுதறீங்க, டச் பண்ணிட்டீங்க, நீங்க எங்கயோ போய்ருவிங்க...

    அப்பாடா...எல்லா டெம்ப்ளேட் பின்னூட்டத்தையும் நானே போட்டேன்...
    ற யாராச்சும் போட்டீங்க நடக்கறதே வேற...

    (படிக்காமலே பின்னூட்டம் போடற சுகமே தனி...:)


    ......குருவை மிஞ்சும் சிஷ்யன்!

    ReplyDelete
  11. அருமையான கதை.இறைவன் ஏழைக்கு அவனது ஒட்டகத்தை காணாமல் போகச்செய்து திரும்ப கிடைக்கச்செய்து மகிழ்வை வழங்குவான் என்ற நபி மொழியை கருவாக கொண்டு எழுதபட்டது போல் உள்ளது ஷேக்.

    ReplyDelete
  12. என்னத்தைச்சொல்றது??..எல்லோருடைய பின்னூட்டத்தையும் நாஞ்சிலு போட்டுட்டார்

    ReplyDelete
  13. ///கதை அருமை, கலக்கிட்டீங்க, பின்னிட்டீங்க, அழகா எழுதறீங்க, டச் பண்ணிட்டீங்க, நீங்க எங்கயோ போய்ருவிங்க...

    அப்பாடா...எல்லா டெம்ப்ளேட் பின்னூட்டத்தையும் நானே போட்டேன்...
    ற யாராச்சும் போட்டீங்க நடக்கறதே வேற...

    (படிக்காமலே பின்னூட்டம் போடற சுகமே தனி...:)///

    ஹா ஹா ஹா... .முடியலங்க... ரொம்ப சீரியஸ்-ஆ கதை படிச்சிட்டு கமெண்ட் போட வந்தா....
    ஹையோ ஹையோ.... சான்ஸ்-ஏ இல்லங்க.. :-))))

    @ஸ்டார்ஜன்

    சுபமான முடிவு கொண்ட நல்ல சிறுகதை...
    நம்பினார் கெடுவதில்லை.. :-)) என்பது புரிந்தது.
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  14. த‌ல‌ எல்லா பின்னூட்ட‌த்தையும் போட்டுவிட்ட‌தால் ந‌ன்றி சொல்லி கிள‌ம்புறேன்..:)

    ReplyDelete
  15. கதை அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  16. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

    ReplyDelete
  17. வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  18. அருமையான பகிர்வு

    ReplyDelete
  19. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  20. பகிர்வு அருமை. ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  21. உண்மை கதை ரொம்ப அருமை.
    எல்லா புகழும் இறைவனுக்கே. தொலைந்து போன பொருள் மறுபடி கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விடயம்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்