என்னுடைய வலைப்பூவில் இடுகை வெளியிட்டு ரொம்ப நாளாச்சி.. அக்பர் ஊருக்கு சென்றதிலிருந்து நான் ஒருவன் மட்டுமே நிர்வகிப்பதால் என்னால் பதிவு எழுத முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக சரியாகவே எழுதவில்லை. நேரம் சரியாகிவிடும். என் மனைவி இரண்டு கட்டுரைகள் எழுதி தந்தார்.
என்னால் மற்றவர்கள் இடுகைகளை படிக்க நேரம் கிடைக்காமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனாலும் என்னுடைய வலைப்பூவுக்கு தினமும் வருகைதந்து அக்கறையுடன் மின்னஞ்சலில், "என்னாச்சி எதுவும் எழுதலியா" என்று கேட்கும் நண்பர்களை நினைக்கும்போது வார்த்தைகளில் சொல்ல மொழி தெரியவில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எல்லோருக்கும் என்னுடைய மனந்திறந்த நன்றிகள்.
**********

அப்புறம் ஒரு சந்தோசமான செய்தி. நான் பதிவு எழுத வந்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து எழுத்துலகில் மூன்றாமாண்டில் பயணிக்கிறேன். உங்கள் அனைவர்களின் ஆதரவினாலும், படித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊக்கமளிப்பதாலும் என்னால் தங்கு தடையின்றி பயணிக்க முடிகிறது.
ஆம்! நவம்பர் 10, என்னுடைய வலைப்பூவான நாளையராஜாவில் எழுத தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆரம்பத்தில் எப்படி எழுதணும் என்றே தெரியாது. தமிழில் எப்படி எழுதுவது, மற்ற ப்ளாக்கில் கமாண்ட் எப்படி போடுவது, ப்ளாக் விட்ஜெட் எப்படி சேர்ப்பது, தமிழ்மணத்தில் எப்படி இணைப்பது, இப்படி சில குறிப்புகளை நண்பர்கள் சிலர் எனக்கு சொல்லித் தந்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் என் எழுத்துக்களின் மூலம் எண்ணற்ற நண்பர்களையும், அவர்கள் குடும்பங்களில் ஒருவனாக நினைக்கும்படி பெயர் சம்பாதித்துள்ளது ரொம்ப பெருமையாக உள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.
வலைச்சரத்தில் இரண்டுமுறை ஆசிரியராகவும், தமிழ்மண நட்சத்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது உங்கள் பாராட்டுக்களின் மூலம் அறிந்து கொண்டேன். சீனா அய்யா அவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
***********
நவம்பர் என்றதும் எனக்கு சென்றமுறை 2008ல் ஊருக்கு சென்றது ஞாபகத்துக்கு வருகிறது. ஆம்.. இந்தமுறையும் ஊருக்கு செல்ல வேண்டும். டிசம்பரில் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஊரில் என் மனைவி, இப்பவே நான் வரக்கூடிய நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்.
************
சமீபத்தில் சன்டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அந்த பேட்டியினை காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். விஜயசாரதியின் கேள்விகளுக்கு சூப்பர்ஸ்டாரின் அலட்டல் இல்லாத பதில்கள் என்னை மிகவும் கவர்ந்தது. தான் ஒரு பெரிய நடிகர் என்று பீத்திக்காமல் எளிமையாக, எந்தஒரு பந்தாவும் இல்லாமல் பதிலளித்தது சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று சொல்லாமல் சொல்லியது.

அவர் அந்த பேட்டியில் ஒரு சிறிய கதை ஒன்று சொல்லியிருந்தார். நீங்களும் கேட்டும், டிவியில் பார்த்தும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த கதையை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு ஊர்ல ஒரு தேசம். அங்கே ஆளும் ராஜாக்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒவ்வொரு ஆள் ராஜாவாக இருப்பார். ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்ததும் அந்த ராஜாவை பயங்கரமான காட்டு மிருகங்கள் வசிக்கும் ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு விட்டுவிடுவார்கள். கொண்டு விடப்பட்ட ராஜாவை காட்டு மிருகங்களுக்கு இரையாக்கி விடுவார்கள். இதுதான் அந்த ஊர் வழக்கம்.
இப்படி ஒவ்வொரு 5 ஆண்டும் ஒவ்வொரு ராஜாவுக்கும் இதே கதிதான். ஆட்சிக்கு வருபவர்கள் 5 ஆண்டு முழுமையாக ஆட்சி செய்ய மாட்டார்கள். இந்த கதி தமக்கும் வரும் என்றெண்ணி பயத்தில் ஒரு ஆண்டோ இரண்டாண்டிலோ பயத்தில் இறந்துவிடுவார்கள். யாரும் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.
அப்போது அந்த ஊரில் ஒருவன் தைரியமாக என்னதான் ஆகுது பார்ப்போம் என்று 5 ஆண்டுக்கு ராஜாவாக சம்மதித்தான். 5 ஆண்டும் ரொம்ப சந்தோசமாக கழித்து ரொம்ப ஜாலியாக இருந்தான். 5ம் ஆண்டு முடிவில் எல்லோரும் அவனை கட்டி காட்டினுள் கொண்டுவிட சென்றார்கள். அப்போது இவன் சிரித்துக்கொண்டே எந்த கவலையுமில்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்பதை கண்டு மக்களுக்கு ஆச்சர்யம்.
என்னவென்று விசாரிக்கும்போது அவன் சொன்னானாம். இப்படி ஆகுமென்று எனக்கு முன்பே தெரியும். அதனால் நான் முதலாமாண்டு அந்த காட்டினுள் உள்ள மிருகங்களை அழித்துவிட ஏற்பாடு செய்தேன். பின்னர் இரண்டாமாண்டில் அந்த காட்டினுள் வீடுகளை கட்டி வசதிகள் ஏற்பாடு செய்து மக்கள் வாழுவதற்கு வழிவகைகளை ஏற்பாடு செய்தேன். இப்படி ஒவ்வொரு ஆண்டும் குறைகளை நிவர்த்தி செய்து மக்கள் சந்தோசமாக இருப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அதனால்தான் இப்போது சந்தோசமாக இருக்கிறேன்.
இந்த கதை எத்தனை எத்தனை உண்மைகளை எடுத்துரைக்கிறது. திரு. சூப்பர்ஸ்டார் சொன்னமாதிரி நாம் எப்போதுமே திட்டமிடவேண்டும். பிற்காலத்தில் ஒரு காரியத்தை முடிக்கவேண்டுமெனில் இப்போதே அதற்கு தயாராகி திட்டமிட்டு உழைக்கவேண்டும்.
எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய நீதியுள்ள கதை. தலைவரிலிருந்து தொண்டன்வரைக்கும், அரசியல்வாதியிலிருந்து சாமானியன் வரைக்கும், என்று எல்லோருக்கும் பொருந்தும் உண்மை.
இது வெற்றியின் அடையாளம். நன்றி திரு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே.....
,




